சனி, 17 பிப்ரவரி, 2024

தமிழக முதல் சபாநாயகர் ஜே.சிவசண்முகம் பிள்ளையின் நினைவு தினம் இன்று.



ஸ்டாலின் தி 


மெட்ராஸ் சேரி ஒன்றில், தலித்(பறையர்) குடும்பத்தில், 1901 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்த சிவசண்முகம் பிள்ளை அவர்கள், பட்டப்படிப்பை படித்த சமூக முன்னேற்ற சிந்தனையாளராவார். இளமையிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிவர். 1937 ஆம் ஆண்டு, அவருக்கும் சந்திரா அம்மையாருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியர்க்கு முன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.

1938 ஆம் ஆண்டு, முதன் முதலாக தலித் சமூகத்திலிருந்து மெட்ராஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டார் தலைவர் சிவசண்முகம் பிள்ளை அவர்கள். மாநகராட்சித் தந்தையாக அவர், சிறந்த முறையில் கடமையாற்றினார். அவரின் சிறப்பான அரசியல் செயல்பாடுகள் அவரை தலைவராக உயர்த்தியது. 

1951 இல் மெட்ராஸ் மகாணத்தின் சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டார். "உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறாதா?" என்று அவரை ராஜகோபாலச்சாரி கேட்டவுடன், "மேயராக இருந்த அனுபவம் எனும் தகுதி தனக்கிருக்கிறது" என்று கம்பீரமாக கூறினார் சிவசண்முகம் பிள்ளை அவர்கள். அதைத் தொடர்ந்து அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், 'சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் சட்டமன்ற அவைத் தலைவர்' என்கிற அடையாளத்தையும் அவர் பெற்றார். 

1951 முதல் 1955 வரை சிறந்த சபாநாயகராக செயல்பட்ட அவர், 1955 முதல் 1961 வரை மத்திய பணியாணையத்தின் (Union public service commission)உறுப்பினராகவும் கடமையாற்றினார். 1962 இல் இந்திய பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபாவிற்கும் தேர்வு செய்யப்பட்டார்.

அரசியல் செயல்பாட்டில் மட்டுமல்லாமல், வரலாற்று திரட்டல்களிலும், எழுத்துப் பணியிலும் அவர் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்.
இந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவப்படையில் இருந்த, பறையர்களின் வீரவரலாற்றை ஆவணத்துடன் அச்சிலேற்றிக் கொண்டுவந்தார். ஆதிராவிடர்களின் வரலாற்றைக் கூறும் 'The History Of The Adi -Dravidas' எனும் நூலை இயற்றினார். மேலும், பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் வாழ்வையும் சிந்தனை, செயல்பாடுகளையும் சிறந்த ஆவணமாகக் கூறும், 'THE LIFE, SELECT WRITINGS AND SPEECHES OF Rao Bahadur M.C.Rajah, M.L.A (ராவ்பகதூர் எம்.சி.ராஜாவின் வாழ்வும், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள் மற்றும் உரைகள்)' எனும் நூலை, 1930 ஆம் ஆண்டில் 'THE INDIAN PUBLISHING HOUSE' மூலம் எழுதி வெளியிட்டார். 

தம் வாழ்க்கையை மேன்மையானதாக கடந்து வந்த சிவசண்முகம் பிள்ளை அவர்கள், தான் பிறந்த அதே பிப்ரவரி மாதத்தின் 17 ஆம் தேதியில், 73 ஆம் வயதில்இயற்கையடைந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...