சனி, 19 அக்டோபர், 2024

உடன்கட்டை ஏற்றப்பட்ட நீதி.




ஸ்டாலின் தி 

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகிலுள்ள தியோராலோ என்னும் கிராமத்தில் உடன்கட்டை ஏற்றப்பட்டார் ரூப் குவர்பா கன்வர் என்னும் இளம்பெண். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. திருமணம் ஆகி எட்டே மாதங்கள் ஆகியிருந்தன. தியோராலோவைச் சார்ந்த மால்சிங் செகாவத் என்பவர்தான் அப்பெண்ணின் கணவர். தம்முடைய 24 ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு அவர் இறந்தார். அவரை தகனம் செய்வதற்கான இறுதி சடங்கில் ரூப் கன்வரை உடன்கட்டை ஏற்ற அவரை அழைத்துக்கொண்டு மால்சிங்கின் உறவினர்களும் சாதியினரும் ஊர்வலம் (உடன்கட்டைக்கான இந்த ஊர்வலம் (shobha yatra) ஷோபா யாத்திரை என்று அழைக்கப்படுகிறது)
சென்றனர். இறுதியாக ரூப் கன்வர் அவருடைய கணவனின் உடல் எரியும் சிதையில் ஏற்றப்பட்டார்; துடிதுடிக்க நெருப்பில் தள்ளப்பட்டு கொல்லப்பட்டார். இறுதி சடங்கில் கூடியிருந்த ஆயிரம் பேர்களும் அந்தக் கொடூரத்தை தங்களுடைய பண்பாட்டுக் கடமையாக கண்டுகளித்து விட்டு கலைந்து சென்றனர். ரூப் கன்வரை உடன்கட்டையில் ஏற்றி கொலை செய்தவர்கள் தீவிர சாதிய-சனாதன காப்பாளர்களான ராஜ்புத்திர‌ சாதியினர். 

1829 ஆம் ஆண்டு உடன்கட்டை ஏற்றப்படுவதை தடை செய்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால், சுதேசிகளின்‌ ஆட்சியில் ரூப் கன்வர் உடன்கட்டைத் தீயில் தள்ளி கொல்லப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட உடன்கட்டை கொடுமைகளின் எண்ணிக்கை 40. நாற்பத்தி ஓராவது பெண்தான் ரூப் கன்வர். ரூப் கன்வர் உடன் கட்டை கொலையின் போது, காங்கிரஸ் ஆட்சியின் பிரதமராக ராஜீவ்காந்தி இருந்தார். ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ்தான் ஆட்சி செய்தது; ஹரிதேவ் ஜோஷி முதல்வராக இருந்தார். ரூப் கன்வர் உடன் கட்டை கொலையைப் பற்றி கேள்வி எழுந்த போது முதல்வராக பதில் சொல்ல வேண்டிய ஹரிதேவ் ஜோஷி, "மக்களின் வழிபாடுகளை தடுக்க முடியாது" என்று பார்ப்பனராக பதில் கூறி உடன்கட்டையை நியாயப்படுத்தினார். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகே 'ரூப் கன்வரின் மாமனார், கொழுந்தனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

அடுத்த ஆண்டில் ரூப் கன்வரை உடன்கட்டை ஏற்றிய முதலாவது ஆண்டை பலர் கூடி புனித சடங்குகளை நடத்திக் கொண்டாடினர். அதே ஆண்டில்(1988)‌ தான் 'உடன்கட்டையை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல, அதை அங்கீகரிப்பதுவும், புனிதப்படுத்துவதும் கூட கடுங்குற்றம்தான். அப்படி செய்வோருக்கு ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை' என்கிற சட்டத்திருத்தம் தேசம் முழுமைக்கும் நடைமுறைக்கு வந்தது. அச்சடத்தின்கீழ் ரூப் உடன்கட்டை கொலையை புனித சடங்கு மூலம் கொண்டாடியவர்களில் 45 பேர்கள் மட்டும் கைது செய்யப்பட்டார்கள். 

ரூப் உடன்கட்டை கொலையில் நேரடியாக தொடர்புடைய அவரின் மாமனார் சுமர்சிங் மற்றும் கொழுந்தனார் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று 1996 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டனர். ரூப் உடன்கட்டை கொலையை புனிதப்படுத்திய 45 பேர்களில் 25 பேர்களை ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்களில் 6 பேர் சிறையிலேயே இறந்துவிட்டனர். பிணையில் வெளியே வந்த 6 பேர் தலைமறைவாகிவிட்டார்கள் என்று காவல்துறை கூறிவிட்டது. எஞ்சிய 8 குற்றவாளிகளான 'மகேந்திர சிங், ஷ்ரவன் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தஸ்ரத் சிங், லக்ஷ்மண் சிங் பன்வர் சிங்' ஆகியோரை கடந்த 9/10/2024 அன்று 
ஜெய்ப்பூர் சதி நிவாரண சிறப்பு நீதிமன்றம் (நீதிபதி அஷி கன்சால்) 'போதிய ஆதாரம் இல்லை' என்று கூறி விடுதலை செய்தது. சுதந்திர இந்தியாவில் கடைசியாக பதியப்பட்ட உடன்கட்டை கொலை வழக்கில், 37 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆதாரங்கள் இல்லை என்று எளிதாக கூறி குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்படுவது சனாதன சக்திகளின் பிடியில்தான் சுதந்திர இந்தியாவும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான பேர் ஓர் பெண்ணை ஊர்வலமாக இழுத்துச்சென்று தீயில் தள்ளி 'ஜெய் சதி மாதாகீ ஜே' என முழக்கமிட்டு செய்த கடுங்குற்றத்தை நிரூபிக்க வக்கில்லாத, துணிவில்லாத, நேர்மையில்லாத அரசு நிர்வாகங்களும், பாதுகாப்புத் துறைகளும், விசாரணை அமைப்புகளும், நீதித்துறையும் நம்மை ஆண்டுகொண்டிருப்பதை நினைத்தால் வெட்கம் தான் வருகிறது. ரூப் கன்வர் கொல்லப்பட்டதற்கோ அந்த கொலையை புனிதமாக கொண்டாடியதற்கோ ஆதாரம் இல்லை என்கிறது நீதிமன்ற தீர்ப்பு. அதேவேளை, இதே தீர்ப்புதான் ரூப் கன்வர் கொலையை நடைமுறைப்படுத்திய சனாதனம் இன்னும் நாட்டை ஆளுகிறது என்பதற்கான ஆதாரமாகவும் இருக்கிறது.‌ சாதிய படிநிலையை திருமண உறவால் பாதுகாத்திடும் உத்திகளில் உடன்கட்டை ஏற்றப்படுவது ஒன்று என்பார் அண்ணல் அம்பேத்கர். இன்றைக்கு பரவலாக நடக்கும் சாதிய ஆணவக்கொலைகளும் கூட உடன்கட்டையின் சக வடிவம்தான். அன்றைக்கு ரூப் கன்வர் உடன்கட்டைக் கொலையை நடத்தியவர்களும் அதை புனிதமாக்கி கொண்டாடியவர்களும், இன்றைக்கு ஆணவக்கொலையை கொண்டாடுபவர்களும்‌ ஒரே வகையினத்தவர்கள்தான்; சாதிய-சனாதனிகள். 

ஆணவக்கொலை மலிந்துவிட்ட இக்காலத்தில் முந்தைய ஆணவக்கொலை குற்றவாளிகள் விடுதலை ஆவது குற்றச் சமூகத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதுதான் இதிலுள்ள கவலைக்குரிய உண்மையாகும்.



ஞாயிறு, 13 அக்டோபர், 2024

தீட்சா தின குறிப்புகள்.



ஸ்டாலின் தி


1
 1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில் “நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்” என்று அண்ணல் அறிவித்தார். அந்த பேச்சு வெறும் கோபத்தின் வெளிப்பாடு என்று கூறினார் காந்தி. மாநாட்டுக்கும் முன்னதாக, இயாலோ நகராட்சி மன்றம் அண்ணலுக்கு வரவேற்புப் பட்டயம் வழங்கி கவுரவித்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் உரையில், “நெடுங்காலமாக தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்களை குறித்த அவர்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லையென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்துகொள்ளப் போவதுமில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, சுய உதவி, சுயமேம்பாட்டுக்கான போராட்டம் இவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவெடுத்துள்ளோம்” என்று பேசினார் அண்ணல். ஆக, அண்ணல் இந்துவாக சாகமாட்டேன் என்கிற அறிவுப்பு காந்தி சொன்னதைப்போல் வெறும் கோபச்சொல் அல்ல. தீர்க்கமான இலக்கை நோக்கிய துவக்கம். ஆனாலும் அப்போது அண்ணல் இந்துமதத்திலிருந்து வெளியேறி எந்த மதத்தில் இணைவது என்கிற முடிவை எடுக்கவில்லை. இயாலோ மாநாட்டு உரைக்கு காந்தி தெரிவித்திருந்த எதிர்வினைக்கு அண்ணல் (அக்டோபர் 15-1935) அளித்த பதிலில், “நாங்கள் எந்த மதத்தில் இணையப்போகிறோம் என்று என்பது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை;எந்தெந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்கப்போகிறோம் என்பதையும் முடிவு செய்யவில்லை;ஆனால், நாங்கள் தீர்க்கமாய் கலந்து ஆலோசித்து உறுதியாக முடிவு செய்திருப்பது ஒன்றுதான்; அதாவது இந்து மதத்தால் எங்களுக்கு நலன் எதுவும் கிடையாது” என்று கூறினார்.

1907 இல் அண்ணல் மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சியடைந்ததை முன்னிட்டு அவருக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் ஆசிரியர் கெலுஸ்கர் வழங்கிய ‘கௌதம புத்தர் வரலாறு’ நூலின் மூலம் புத்தரை அறிந்த அண்ணல் 1930 களுக்குப் பிறகு தலித்துகளின் தீண்டப்படாத நிலைக்குறித்த ஆய்வுகளை ஆழமாக செய்தபோதுதான் பௌத்தமே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்ததையும் பௌத்தர்களே தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்பதையும் கண்டறிந்தார். இதே ஆய்வு முடிவை முன்னவே கண்டடைந்த பண்டிதர் அயோத்தி தாசர் வழியில் அண்ணல் பௌத்தம் நோக்கி பயணிக்கத்துவங்கினார். பண்டிதர் மற்றும் அவரது சகாக்களால் களப்பணியாற்றப்பட்ட சென்னை, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பௌத்த மறுமலர்ச்சி இடங்களுக்கு சென்று வரலாற்றாய்வு செய்தார் அண்ணல். முடிவாக பௌத்தத்தின் உன்னத நிலையான ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் பண்பாட்டுத் தத்துவத்தை இலட்சியமாகக் கொண்டு பௌத்தம் தழுவும் முடிவுக்கு வந்தார். இதற்கிடையில் சுமார் 15 ஆண்டுகள் அண்ணல் மதங்களைக்குறித்தும் மதங்களின் எதிர்காலம் குறித்தும் விரிவாக அலசி ஆராய்ந்திருந்தார். கடும் ஆய்வுக்கும் சிந்தனைக்கும் பிறகே அவர் பௌத்தம் ஏற்றார். இவ்வாறு, இந்துவாக சாகமாட்டேன் என்று கூறியதை வெறும் சபதமாக இல்லாமல், அதை இலட்சியமாக ஆக்கி, அதன் மூலம் ஒரு சமூகத்தின் எதிர்கால நலனை எடுத்துக்காட்டிச் சென்றிருக்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

2

இந்துவாக இறக்கப்போவதில்லை என்று 1935 இல் அண்ணல் அறிவித்த பிறகு அனைத்து மதத்தினரும் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அவருடைய வரலாற்று அறிவும், சமூக விடுதலை உணர்வும் அவரை பௌத்தம் நோக்கி அழைத்து வந்தன. 1950 களின் துவக்கத்திலேயே அண்ணல் பௌத்தம் தழுவப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துக் கொண்டிருந்தது. அதற்கும் முன்னவே அவர் தம்மை பௌத்த சிந்தனையாளராக செயல்படுத்திக் கொண்டிருந்தார். அவரது பேச்சு,செயல் என சகலத்திலும் பௌத்தமே வெளிப்பட்டது. 1945 இல் அவர் மக்கள் கல்வி இயக்கத்தின் சார்பாக துவங்கிய கல்லூரிக்கு 'சித்தார்த்தா கல்லூரி' என்று புத்தர் பெயரை சூட்டினார். 1950 இல் டெல்லியில் பௌத்தப்பேரணியை நடத்தினார். அதே ஆண்டு மே மாதம் 25 ஆம்தேதி இலங்கை கண்டியில் புத்தரின் பல் இருக்கும் விஹாரையில் நடைப்பெற்ற சர்வதேச பௌத்த மாநாட்டில் ‘பௌத்தம் மதத்தின் தோற்றமும் வீழ்ச்சியும்’ பற்றி உரையாற்றினார். 1954 இல் இந்திய பௌத்த சங்கத்தை நிறுவினார். அதே ஆண்டில் பர்மாவில் நடைப்பெற்ற சர்வதேச பௌத்த மாநாட்டில் பங்கேற்றார். இப்படி அவரின் 1950 கள் காலக்கட்டம் பௌத்தத்தைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்ததால் அவரது பௌத்த ஏற்பு நிகழ்வும் அது எப்போது, எங்கே நடக்கும் என்றும் எதிர்பார்ப்புகளைக் மக்களிடம் உருவாக்கியது. இந்நிலையில் அண்ணல் 1954 ஆண்டில், தமது பௌத்தம் ஏற்பு நிகழ்வு மும்பையில் நடைபெறலாம் என்று அறிவித்தார். ஆனால், மும்பையில் மதமாற்றம் நிகழாமல் நாக்பூரில் நடைபெற்றது. 

3

அண்ணல் மும்பையில் மதமாற்ற நிகழ்வு நடக்க வாய்பிருப்பதாக கூறியதைத்தொடர்ந்து இடத்தேர்வு குறித்த விவாதம் எழுந்தது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வொன்று நிகழும் இடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக இருந்தால் நல்லது என்கிற வாதம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. நாக்பூர் பகுதியிலிருந்து அண்ணலுக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்தை எழுதியவர் வாமன் ராவ் காட்போல் என்கிற பௌத்த ஆய்வாளரும் அண்ணலின் சீர்மிகு தளபதியுமாவார். அக்கடிதத்தில் ‘பம்பாய்க்கு பௌத்த வரலாற்றில் முக்கிய இடமில்லை’ என்றும் ‘நாக்பூரே சிறந்த தேர்வாக இருக்கமுடியும்’ என்றும் கூறி, இடம் குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் ‘இதுவரை தேதியை தேர்வு செய்யாமலிருந்தால் அக்டோபர் 14 ஐ தேர்வு செய்யுங்கள்’ என்றும் அக்கடிதத்தில் கோரியிருந்தார் வாமன்ராவ். அக்டோபர் 14 ஆம் தேதியை வாமன்ராவ் குறிப்பிட்டுக்கூறியதற்கு முக்கியக்காரணமும் இருந்தது. பகவான் புத்தர் உயிர் துறந்து மகாபரிநிப்பாணம் அடைந்த காலத்தைக் கணக்கிட்டு அந்த தேதியைக் குறிப்பிட்டார் வாமன்ராவ். இதற்கு ஆதாரமாக அவர் எடுத்துக்காட்டிய நூல் ஈ.ஜே.தாமஸ் எழுதிய ‘புத்தரின் வாழ்க்கை’ என்னும் நூலாகும். இந்நூலில் புத்தர் பரிநிப்பாணம் அடைந்த போது அவரது உடல் மீது பூக்கள் பொழிந்ததைப்பற்றி முக்கியக் குறிப்பு இருந்தது. அதன்படி, புத்தரின் உடல் மீது பொழிந்த பூக்கள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிதான் பூக்கும். அவற்றையெல்லாம் கணித்த ஈ.ஜே.தாமஸ் புத்தரின் பரிநிப்பாணம் அக்டோபர் 13 ஆம் நாள்தான் நடைப்பெற்றது என்று அந்நூலில் கூறினார். எனவே புத்தரின் பரிநிப்பாண நாளுக்கும் மறுநாள் அக்டோபர் 14 ஐ முன்னிறுத்தினார் வாமன்ராவ். அதாவது பரிநிப்பாணத்திற்கு பிறகு நிகழும் மறுமலர்ச்சியை இந்த தேதி குறிக்கிறது எனலாம். சாம்ராட் அசோகரும் இதே தேதியில்தான்(விஜய தசமி) பௌத்தம் தழுவினார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

வாமன்ராவ் அவர்களின் கடிதத்திற்கு பிறகு, அண்ணல் நாக்பூரையும் அக்டோபர் 14 ஆம் தேதியையும் தேர்வு செய்தார். நாக்பூரை தேர்வு செய்தவுடன் திட்டமிட்டே ஒரு பதற்றநிலை உருவாக்கப்பட்டது. ஏனெனில் இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் நாக்பூரில் இருந்தது. எனவே, ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் மோதலை உருவாக்குவதற்காகவே அண்ணல் அந்த இடத்தை தேர்வு செய்தார் என்று ஒரு நச்சுக்கருத்து பரப்பப்பட்டது. இதனால் பதற்றமும் உருவானது. பௌத்த ஏற்பு உரையில், ‘பௌத்ததை வளர்த்தெடுத்த நாக மக்கள் செழித்து வாழ்ந்த நிலம் நாகபுரி. நாங்கள் நாக வம்சத்தினர். எனவேதான் நாகபுரியை தேர்வு செய்தோமே தவிர, ஆர்.எஸ்.எஸ்.எல்லாம் எங்கள் மனதில் துளியிடத்திலும் இல்லை’ என்று பதிலளித்து விளக்கினார்.

4

நாக்பூரில் அக்டோபர் 14 ஆம் தேதியில் தீட்சை நாளை வைத்துக்கொள்ள அண்ணல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வாமன் ராவ் தலைமையிலான குழுவினர் விழா ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கினார்கள். நாக்பூர் கோத்தாரி மாளிகையில் ஒரு அறை அலுவலகமாக செயல்பட வாடகைக்கு எடுக்கப்பட்டது. வாமன்ராவ் அந்த அலுவலகத்திலிருந்து செயல்பாட்டாளர்களை இயக்கினார். நாக்பூர் பர்திப்பகுதி இளைஞர்கள் வாமன்ராவின் தீவிர செயல்பாட்டாளர்களாக ஓடி ஓடி உழைத்தனர். விழா நடக்கப்போகும் இடம் விசாலமாக இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டு தேடிய குழுவினர் ஷிராதாந்த் பேத்தில் இருந்த அம்மை நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்திற்கருகிலிருந்த நிலப்பரப்பை ஏற்பாடு செய்தனர். அன்றிலிருந்தே அது தீக்‌ஷா பூமி என்று அழைக்கப்பட்டது. விழாவுக்கான பணிகள் இப்படி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த நிலையில் வாமன்ராவ் அவர்களுக்கு ரேவ்ராம்காவ்தே ஒரு தந்தியை அனுப்பியிருந்தார். ‘விழா ஏற்பாடுகளை நிறுத்த வேண்டுமென்றும் உடனடியாக பாபாசாகேப்பை வாமன்ராவ் சந்திக்கவேண்டுமென்றும்’ அந்த தந்தியில் இருந்தது. "பணிகள் எதுவும் தடைப்பட வேண்டாம், தொடருட்டும்" என்று செயல்பாட்டாளர்களிடம் கூறிவிட்டு வாமன்ராவ் அண்ணலை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றார்.

5

டெல்லிக்கு சென்ற வாமன்ராவ் தனக்கு தந்தி அனுப்பிய ரேவ்காவ்தேவை சந்தித்து ‘ஏன் விழா ஏற்பாடுகளை நிறுத்தவேண்டும்?’ என்று வினவினார். “பாபு அரிதாஸ் ஆவ்லே மற்றும் அக்கந்த் மேதே ஆகியோர் வேறு இடத்தை தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறினார் காவ்தேவ். பிறகு, அண்ணலிடம் சென்றார் வாமன்ராவ். அங்கு அண்ணலுடன் பாபு அரிதாஸும் இருந்தார். அவரிடம் “ஏன் நாங்கள் தேர்வு செய்த இடத்தில் விழாக் கூடாது?’’ என்ற கேள்வியை முன்வைத்தார். “முதல் காரணம், விழா நடக்கவுள்ள இடத்தைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வசித்து வருகிறார்கள். இரண்டாவது காரணம் நீங்கள் விழாவுக்காக நடத்திய பூஜையானது பவானிசங்கர் நியோகி என்னும் பார்ப்பனரால் நடத்தப்பட்டிருக்கிறது” என்று பாபு அரிதாஸ் ஆவ்லே வாமன்ராவிடம் காரணங்களைக் கூறினார். அண்ணல் அனைத்தையும் கேட்டபடி இருந்தார். மேலும், பார்ப்பனரால் பூஜை செய்யப்பட்டதா? என்று அண்ணல் அதிர்ச்சியுமடைந்தார். அரிதாஸ் ஆவ்லேவுக்கும் அண்ணலுக்கும் பூஜையில் நடந்த விஷயத்தை இவ்வாறு விளக்கினார் வாமன்ராவ்: “தீக்‌ஷா பூமியில் நாங்கள் பூஜை நடத்தியது உண்மைதான். ஆனால், ஒரு பௌத்த மதத்தினரால்தான் அந்த பூஜை நடத்தப்பட்டது. அப்போதுதான் ஷிராமனீர் பதவியேற்றிருந்த லக்‌ஷ்மன் காவ்தே அவர்கள்தான் பூஜையை நடத்திய பௌத்தர். அவ்வழியாக நடந்து வந்துகொண்டிருந்த பார்ப்பனரான நியோகி பூஜை நடப்படைக் கண்டு ஆர்வத்தில் நின்றுகொண்டு கலந்து கொண்டார். அவர் கைகளால் எந்த பூஜையும் நடத்தப்படவில்லை”.
மேலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் ஆபத்து வரவாய்ப்பில்லை. பாப்சாகேப்பின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் முழுத்தயாரிப்பில் இருக்கிறோம் என்றார் வாமன்ராவ். உடனே குறுக்கிட்ட அண்ணல் “என் உயிரைப்பற்றியக் கவலை எனக்கில்லை” என்று கூறிவிட்டு, முடிவை பிறகு சொல்கிறேன், காத்திருங்கள் என்று கூறினார். அன்று பருவமழையின் தீவிரம் உச்சத்தில் இருந்தது. அந்நிலையில் மாலை நேரத்தில் அண்ணல் தமது துணைவியாருடன் காரில் புறப்பட்டு பயணமானார். கடுமழையால் ஓட்டுநருக்கு தடுமாற்றம் ஏற்பட, தமது கட்டுப்பாட்டை இழந்தார். தறிக்கெட்டு ஓடிய அண்ணலின் கார் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு மின்கம்பத்தில் மோதி நின்றது.

6

அண்ணலின் கார் தறிக்கெட்டு ஓடி மின்கம்பத்தில் கடுமையாக மோதியது. அண்ணல் தூக்கியெறியபடும் நிலைக்கு தள்ளப்பட, சரியான நேரத்தில் அண்ணலின் துணைவியார் மாய்சாகேப் அவரைத்தாங்கிக் கொண்டார். நொடிப்பொழுதில் உயிர்தப்பிய அண்ணல் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். அவரின் உயிர் போய்விடும் என்கிற அதிர்ச்சியோ அச்சமோ அவருக்கு இல்லை. உயிரைப்பற்றிய கவலை அவருக்கு எப்போதுமே இல்லை. அவருக்கு கவலையெல்லாம் தானொரு இந்துவாகவே சாக நேரிடுமோ என்பதுதான். இந்த விபத்தில் அண்ணல் தன்னை மரணம் பின் தொடர்வதை உணர்ந்திருக்கவேண்டும். எனவே, இனியும் பௌத்த ஏற்பை தள்ளிப்போடவோ, வரும் இடையூறுகளுக்கு இடம்கொடுக்கவோ அவர் விரும்பவில்லை. விபத்திலிருந்து மீண்ட அண்ணல் நேராக வீடு வந்து அங்கு தங்கியிருந்த வாமன்ராவை உடனடியாக அழைத்தார். வாமன்ராவும் அண்ணலின் முன் வந்து நின்றார். “நீங்கள் உடனே நாக்பூர் செல்லுங்கள். ஏற்கனவே ஏற்பாடு நடந்துகொண்டிருக்கும் இடத்திலேயே மதமாற்ற விழா நடக்கும். இனி என் உயிரைப்பற்றியக் கவலை எனக்கில்லை” என்று வாமன்ராவிடம் கூறியதைத்தொடர்ந்து நாக்பூருக்கு திரும்பி வேலைகளை துரிதப்படுத்தினார் வாமன்ராவ்.

வாமன்ராவிடம் தீர்க்கமாக இடத்தை மாற்றவேண்டாம் என்று அண்ணல் கூறியவுடன், நாக்பூர் வந்தடைந்த வாமன்ராவ் பெரும் இளைஞர் பட்டாளத்தைக் கொண்டு வேலைகளை முடுக்கினார். விழா நடக்கவிருந்த பெரும் மைதானத்தில் புதர்கள் மண்டிக்கிடந்தது. விழா நடக்க ஓரிரு நாட்களே இருந்த நிலையில், மகர்புரா,தரம்பேத்,கர்னல் பூங்கா உள்ளிட்ட சேரிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் இரவில் பெட்ரோமாஸ் விளக்குகளின் வெளிச்சத்தில் தூய்மைப்படுத்தினர். இரவென்றும் பாராமல் கற்களையும் முட்களையும் அப்புறப்படுத்திய இளைஞர்களுடன் வாமன்ராவ், வசந்த் மூன், பிரகலாத் மேதே உள்ளிட்டவர்களும் பங்கேற்று பணிசெய்தனர்.
அக்டோபர் 11 ஆம்தேதி டெல்லியிலிருந்து விமானத்தின் மூலம் வந்து சேர்ந்தார் அண்ணல். பர்தியில் வலுவான சேரியாக இருந்த மகர்புராவின் முன்னால் இருந்த விடுதியில் அண்ணல் தங்கினார். கர்னல் பூங்கா பகுதி சமத்துவ தொண்டர் படையினர் வெள்ளுடை அணிந்து காவல் பணியாற்றினர். மகர்புரா மக்களும் அண்ணலுக்கு பாதுகாப்பாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இன்னொரு பக்கம் விழா நடக்கவிருந்த மைதானம் சிறப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. மைதானத்தை, சுத்தப்படுத்தி, சமதளமாக்கி, குடிநீர்,கழிவறை வசதிகளை நகராட்சியின் சார்பாக உதவி மேயர் சாதாநந்த் புல்ஜிலே செய்துக்கொடுத்தார்.
மைதானம் தொண்டர் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. வாயில் அருகில் கடைகள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேடையும் தீவிரமாக தொண்டர் படையால் கண்காணிக்கப்பட்டது. விழா மேடை 30*50 என்ற அளவில் அமைக்கப்பட்டது. மேடையின் முன்புறம் சுமார் 50 அடிதூரத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. பாதுகாப்பு வேலியில்ருந்து மேலும் 20 அடி தூரம் இடைவெளி விடப்பட்டு, அதற்கு அடுத்ததாகவே மக்கள் உட்கார இடம் ஒதுக்கப்பட்டது. துப்பாக்கி சுடும் தூரத்தைக் கணக்கிட்டு இந்த தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. வலதில் ஆண்களுக்கும் இடதில் பெண்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது. விடுதில் அண்ணலுக்கு பாதுகாப்பளித்த கர்னல் பகுதி தொண்டர்படையே விழா மேடைப்பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டது.

தம்ம தீட்சை விழா அன்று சுமார் 5 இலட்சம் மக்கள் பங்கேற்றனர். காலை 90.30 மணிக்கு பிக்கு சந்திரமணியுடன் அண்ணல் மேடைக்கு வந்துசேர்ந்தார். இவ்விழாவில் பிக்குகள் தெரோ பன்னாட்டிஸ்(போபால்), எச்.சித்தாதிஸ்ஸ(இலங்கை), எம்.சௌகரத்னா(காசி), ஜி.பிரித்னியானந்த்(இலட்சமணபுரி), நெர் ஷிரம்னெர்(மே.வங்கம்), அருட்டிரு பரம்சாந்தி உள்ளிட்ட பிக்குகள் பங்கேற்றனர்.
வணக்கத்திற்குரிய பிக்கு மகாஸ்தவீர் சந்திரமணி அவர்கள் திரிசரணங்களையும் பஞ்சசீலங்களையும் போதித்து அண்ணலுக்கும் அண்ணலின் துணைவியாருக்கும் தீட்சையளித்து புத்த மதத்தில் இணைத்தார். பாபாசாகேப்பும் துணைவியாரும் புத்தரின் சிலையின் முன் மும்முறை வணங்கி புத்தம் சரணடைந்தனர். அங்கே கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் பௌத்தம் ஏற்று மும்மணிகளை முழங்கினார்கள். அண்ணல் 22 சூளுரைகள் முழங்கினார். கூட்டமும் அவற்றை திருப்பி முழங்கியது. அந்த 22 உறுதி மொழிகளையும் அண்ணல் தன் கைப்படவே பெரிய எழுத்தில் தனித்தனி 22 தாள்களில் எழுதியிருந்தார். கண்ணாடி அணியாமல் படிக்கவே இப்படி செய்திருந்தார். ஏனெனில் ‘எந்த வண்ணக்கண்ணாடியும் போடாமலே-எந்தவொரு முன்கருதுகோளும் இல்லாமலே-தம்ம தீட்சையை அவர் எடுத்துக்கொள்ள நினைதிருக்கலாம் என்கிறார் விழா செயல்பாட்டாளர்களில் ஒருவரான வசந்த் மூன்.

7

அண்ணல் தீக்‌ஷா விழாவினை நிகழ்த்திய விழாக்குவினரில் ஒருவராக விளங்கினார் தளபதி வசந்த் மூன். விழா மேடைகளைக் கவனிக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. விழா துவங்கும் சமயத்தில்தான் அவர் மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளைக் கவனித்தார். அண்ணல் வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த அந்த சமயத்தில் அண்ணலுக்கு போடப்பட்டிருந்த இரும்பு மடக்கு நாற்காலி அவ்வளவு சரியாகப்படவில்லை. ரேவாரம் காவ்தே அவர்களிடம் இதுக்குறித்து வசந்த் மூன் அவர்கள் கேட்டபோது, ‘நகராட்சி லாரியில் பெரிய நாற்காலிகள் வந்துகொண்டிருக்கின்றன’ என்று காவ்தே அவர்கள் கூறினார். ஆனாலும் அண்ணல் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்பதை உணர்ந்த வசந்த் மூன் அவர்கள் மைதானத்துக்கு வெளியே ஓடிவந்தார். மைதானத்தில் வெளிப்பகுதியில் இருந்த முக்கிய சாலையோரத்தில் ஒரு வீட்டில் ஒருவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதை வசந்த் மூன் கண்டார். அவரிடம் சென்று வசந்த் மூன் விஷயத்தை விளக்கினார். அந்த வீட்டுக்காரர் இஸ்லாமியராக இருக்கலாம் என்கிறார் வசந்த் மூன். அண்ணலுக்கு நாற்காலி வேண்டுமென்று கேட்டவுடன் ‘மகிழ்ச்சியுடன் எடுத்து செல்லுங்கள்’ என்று சொல்லி நாற்காலியைக் கொடுத்தார் நாற்காலியின் உரிமையாளர். கனமாக இருந்த பழைய மர நாற்காலிகளை தூக்கிக்கொண்டு வசந்த் மூனும் அவரது சகாக்களும் மேடைக்கு விரைந்தனர். மேடையில் நாற்காலியை வைத்துக்கொண்டிருக்கும் போது ‘அம்பேத்கர் வாழ்க’ என்ற முழக்கங்களுக்கிடையே மேடையேறினார் அண்ணல். பிறகு, வசந்த் மூன் கொண்டு வந்திருந்த நாற்காலியில் அமர்ந்தார். விழா முடிந்த பிறகு, நாற்காலியின் உரிமையாளரிடம் சொல்லியபடி நாற்காலிகள் ஒப்படைக்கப்பட்டன.
விழா முடிந்து சிலமாதங்கள் கழித்து வசந்த மூன் விழா நடந்த மைதானத்திற்கு சென்றார். விழாவின் போது நிகழ்ந்த நிகழ்வுகள் அவரது மனதில் தோன்றின. மக்கள் வெள்ளம் கண்முன்னே வந்து போனது. அப்படியே அந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் அண்ணல் அமர்ந்திருந்த அந்த நாற்காலியும் நினைவில் வர, அதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி அந்த நாற்காலியை எப்படியும் வாங்கிவிடவேண்டுமென்று அந்த நாற்காலியை பெற்ற வீட்டிற்கு விரைந்தார் வசந்த மூன். ‘இங்கே வசித்தவர்கள் மத்திய பிரதேசம் சென்றுவிட்டார்கள்’ என்கிற பதில்தான் அவருக்கு கிடைத்தது. “அவர்களின் முகவரியாவது கிடைக்குமா?” என்று விசாரித்தபோது “தெரியாது” என்கிற பதிலே வந்தது.
அது வெறும் நாற்காலியல்ல. ஒரு சமூகம் கொடும் நிலையிலிருந்து சீர்நிலைக்கு செல்லுவதற்கிடையில் சற்று இளைப்பாறிய தடம் அது.

தீக்‌ஷா தின குறிப்புகளுக்காக உதவிய நூல்கள்:
1.ஒரு தலித்திடமிருந்து-வசந்த் மூன். விடியல் பதிப்பகம்.
2.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல்தொகுப்பு 37, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன்.

(14/10/2016 அன்று முகநூலில் நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு)

வியாழன், 3 அக்டோபர், 2024

ராஜகோபாலாச்சாரியின் மதுவிலக்கு அரசியலும் வேடதார பிராமணியமும் .

ஸ்டாலின் தி 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் ராஜகோபாலாச்சாரி என்னும் ராஜாஜியின் உருவத் தட்டி(Cutout) வைக்கப்பட்டது பேசுபொருளாக ஆகியுள்ளது. விசிகவை ஆதரிப்பவர்களில் பலரும் கூட இதை ஏற்கவில்லை என்பது தெரிகிறது. 'ராஜாஜி மதுவிலக்கு என்பதில் உறுதியாக இருந்தவர் ' என்பதாக விசிகவின் பதிலாக உள்ளது. 1937 இல் சேலம் மாவட்டத்தில் முதன் முதலில் மதுவிலக்கை கொண்டுவந்தார் அன்றைய சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி. அதன் பிறகு இரண்டாவது முறையாக முதல்வரானபோது(1952) தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டுவந்தார் ராஜாஜி. 1971 இல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி மதுவிலக்கை நீக்கும் வரை ராஜாஜி கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம் இருந்தது. இவற்றை வைத்துப் பார்த்தால் ராஜாஜி முற்போக்கான அரசியல்வாதியாக தெரியலாம். ஆனால், ராஜாஜியின் அசலான சனாதன முகத்தை மறைக்கவே அவருடைய மதுவிலக்கு அரசியல் அவருக்குத் தேவைப்பட்டது. உண்மையில் அவருடைய மதுவிலக்கு சிந்தனை என்பது 'பிராமண ஆச்சாரம் ' என்கிற பண்பாட்டிலிருந்தே வந்தது. 

மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தத்தை சிதைக்கும் நோக்கில் வைதீக பார்ப்பனர்கள்(வேஷ பார்ப்பனர்கள்) தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள அதுவரை அவர்களால்-மிக விருப்பப்பட்டு- கடைப்பிடிக்கப்பட்டு வந்த சிலவற்றை கைவிட நேர்ந்தது. அவற்றில் இறைச்சியும் மதுவும் முக்கியமானவை. பசுக்கறியையும் மது(சுரா) பானத்தையும் சுவைத்துக் களியாட்டம் ஆடிவந்த வேஷ பார்ப்பனர்கள் பசுவை புனிதமாக்கி மாட்டுக்கறி உண்பதை தவிர்த்தார்கள்; மதுவை கைவிட்டு ஒழுக்க சீலர் வேடம் பூண்டார்கள். தங்களால் கைவிடப்பட்ட மாட்டுக்கறியை உண்டவர்களை தீண்டப்படாதவர்களாக அறிவித்தார்கள். மது/கள் உண்டவர்களை காணக்கூடாதவர்களாக ஆக்கினார்கள். தீண்டாமையில் மாட்டுக்கறியும் மதுவும் முக்கிய கருவிகளாக பார்ப்பனர்களால் ஆக்கப்பட்டன. பார்ப்பனர்கள் வணங்கும் தெய்வங்களுக்கு பாலும் நெய்யும் படைக்கப்பட்டன; பார்ப்பனரல்லாத சூத்திரர்/தலித்துகள் வணங்கும் தெய்வங்களுக்கு சாராயம் திணிக்கப்பட்டது;குடிசாமிகள் குடிகாரசாமிகளாக ஆக்கப்பட்டன. 'மதுவிலிருந்து விலகி இரு' என்று போதித்த பௌத்தத்தை சிதைத்த பார்ப்பனியம் விலக்கப்பட்டவர்களின் அடையாளமாக மதுவை ஆக்கியது.

இந்த வரலாற்றிலிருந்துதுதான் ராஜாஜியின் மதுவிலக்கு எண்ணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் ராஜாஜியால் மதுவிலக்கு (1937) கொண்டுவரப்படுவதற்கு முன்னரே சென்னை மாகாண சட்டமன்றத்தில் மது எதிர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் தாதா இரட்டமலை சீனிவாசன். வெகுமக்களின் நலனுக்காக மது எதிர்ப்பில் கவனம் செலுத்திய இரட்டமலை சீனிவாசன் அவர்கள் 'விடுமுறை தினங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும்' என்று 1929 செப்டம்பர் 24 அன்று சென்னை மாகாண சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். மது எதிர்ப்பில் ராஜகோபாலாச்சாரியின் நோக்கம் வேறு, இரட்டமலையாரின் நோக்கம் வேறு. மக்களை சீர்கேட்டிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மீட்க வேண்டும் என்பது இரட்டமலையாரின் நோக்கம். பிராமண பண்பாட்டை ஒழுக்கத்தின் பெயரில் நிறுவிட வேண்டும் என்பது ராஜகோபாலாச்சாரியின் நோக்கம். இரட்டமலையாரின் கொள்கை வாரிசாக தம்மை ஆக்கிக் கொண்ட தொல்.திருமாவளவன் அவர்களின் நோக்கம் ராஜாஜியின் நோக்கமாக இருக்க முடியாது என்பதை நம்மால் உறுதியாக கூறமுடியும். எனவேதான் சொல்ல வேண்டியிருக்கிறது, 'நாம் யாரை வழிகாட்டியாக முன்னிறுத்துகிறோம் என்பது யாருடைய நோக்கத்தை முன்னிறுத்துகிறோம் என்பதாகவும் ஆகிவிடுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.'

தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமை: பேசப்படுவதிலும் மறைக்கப்படுவதிலும் உள்ள வஞ்சகங்கள்.



ஸ்டாலின் தி


சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் (2/10/2024) நடைப்பெற்ற காந்தி பிறந்தநாளை ஒட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'கடந்த மூன்று ஆண்டுகளில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது' என்று பேசியிருக்கிறார். அதை மறுக்கும் வகையில் 'தமிழகத்தில் அனைவரும் அண்ணன் தம்பிகளாக பழகுகிறார்கள்.சாதி-மதம் பார்க்காமல் தமிழர் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள். இந்தியாவில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. புள்ளி விவரங்களை சேகரிக்கும்போது சாதிகள் அடிப்படையில் அவை கிடைத்திருக்கலாம். ஆதிதிராவிடர்கள் என்பதாலேயே தாக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆதிதிராவிடர் மக்களை தாக்க வேண்டும் என்று யாரும் முயற்சித்ததே இல்லை' என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக பின்புலம் உள்ளவர். பொய்யும் புரட்டும் அவர்களுக்கு கைவந்த கலை. ஆனால், இந்த விவகாரத்தில் அவர் கூறியிருப்பது உண்மையான தகவல். சதவீதக் கணக்குகளில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அட்டவணைச் சமூகங்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என்பது கண்கூடான உண்மை. அரசு தரப்பிலான தகவல்களே அந்த உண்மையை கூறுகிறது. ஆளுநர் கூட மத்திய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் மூலம் கிடைத்த தகவல் என்றே தம்முடைய குற்றச்சாட்டை முன்வைக்கிறார். பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சாதிய வன்கொடுமைகள் பற்றி ஆர்.என்.ரவி பேசப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன என்பது அப்பட்டமான உண்மை. சமயம் பார்த்து திமுக அரசை கண்டிக்கும் நோக்கில் ஆர்.என்.ரவி பேசியிருந்தாலும் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இதை ஆர்.என்.ரவி மட்டுமல்ல, தலித் களச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால், ஆர்.என்.ரவிக்கு பதில் கூறினால் போதும் அல்லது அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்தால் போதும் என்று ஆளும் திமுக தரப்பு நினைக்கிறது. அப்படித்தான், திமுக ஆட்சியின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பேச்சு இருக்கிறது. 

அண்மையில் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெற்ற தகவலின்படி,
கடந்த மார்ச் வரையில் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் 394 கிராமங்களில் அதிகம் உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 29 கிராமங்கள், திருச்சி மாவட்டத்தில் 24 கிராமங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 கிராமங்கள், தேனி மாவட்டத்தில் 20 கிராமங்கள் என இம்மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன(செய்தி: விகடன் இணையதளம் 27/9/2024). 

இதெல்லாம் அரசு கணக்கில் வந்த தகவல்கள். ஆனால், ஆயிரக்கணக்கான கிராமங்களில் சாதிய பாகுபாடும், வன்முறைகளும் நடைமுறையில் உள்ளன என்பதே எதார்த்தம். இரட்டைக் குவளை, பாதையில் தீண்டாமை, வேளாண் கூலியில் பாகுபாடு, பிணங்களை கொண்டுசெல்லும் பாதைகளில் தடை, முடிவெட்டிக்கொள்ளுவதில் தீண்டாமை, நிலவுரிமையில் தீண்டாமை, தலித் ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி தலித் உறுப்பினர்கள் ஆகியோரிடம் காட்டப்படும் வன்மம் என பலவகையிலான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் அன்றாடம் நடந்துகொண்டுதான் உள்ளன. ஆணவக்கொலை, சாதியக் கொலை என கொடுக்கும் மக்களும் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றன. தலித் கொலைகளை நடத்துவதற்காகவே கூலிப்படைகளை நிறுவும் அளவுக்கு சாதிவெறியர்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். வன்கொடுமை வழக்கை பதிவுசெய்யவும் தலித்துகளுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் காவல்துறை காட்டும் அலட்சியம் கொஞ்சமும் குறையவில்லை. காவல்துறையில் மட்டுமல்ல அரசின் பல்வேறு துறைகளிலுமே தலித் விரோதப் போக்கு கடுமையாக தொடர்கிறது. மொத்தத்தில், சமூகத்திலும் அரசுத் துறைகளிலும் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் சாதிபார்க்காமல் அண்ணன் தம்பியாகத்தான் அனைவரும் வாழ்கிறார்கள், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்கிறார் சட்டத்துறை அமைச்சர். வெற்று சவடால்களால் ஆளுநரை எதிர்கொள்ள முயற்சிக்கும் அவர் அதன்மூலம் சாதிய வன்முறைகளை மறைக்கவும் பார்க்கிறார். ஆளுநர் பேசுவது திராவிட அரசியலுக்கு எதிராக இந்துத்துவ அரசியலை வளர்ப்பதற்குத்தான் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் சாதிய வன்முறைகளே இல்லை, தீண்டாமை வன்கொடுமைகளே கிடையாது என்று திமுக அரசு அப்பட்டமாக பொய்க்கூறுவதை எப்படி ஏற்க முடியும். 'ஆதிதிராவிடர்கள் என்பதாலேயே தாக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆதிதிராவிடர் மக்களை தாக்க வேண்டும் என்று யாரும் முயற்சித்ததே இல்லை' என்று இத்தனை வன்கொடுமைகளுக்கு மத்தியிலும் மாநில சட்டத்துறை அமைச்சரே கூறுவது எவ்வளவு பெரிய வன்கொடுமை. இதெல்லாம் எந்த வகையில் சமூக நீதி அரசியலில் சேரும்.

செவ்வாய், 1 அக்டோபர், 2024

காந்தியக் குழப்பங்களும் அண்ணல் அம்பேத்கரின் தெளிவும்.




ஸ்டாலின் தி 

1939 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 17 ஆம்தேதி அன்று பம்பாய் சட்டமன்றத்தில் தலித் உறுப்பினரான கெய்க்வாட் அவர்கள் "திரு.காந்தியால் 1932 இல் ஆலய பிரவேச இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து பம்பாய் மாகாணத்தில் எத்தனை கோவில்கள் தீண்டப்படாதவர்களுக்கு திறந்துவிடப்பட்டன?" என்று ஒரு கேள்வியை முன்வைத்தார். அதற்கு காங்கிரஸ் அமைச்சர் கொடுத்த பதிலின்படி, பம்பாய் மகாணத்தில் ஏழாண்டுகளில் தலித்துகள் ஆலயபிரவேசம் நடந்த கோயில்களின் எண்ணிக்கை 142 ஆகும். அவற்றில் 121 கோயில்கள் உரிமையாளர்களற்ற, கேட்பாரற்ற சாலையோரக் கோயில்கள் ஆகும். அதுவரையிலும் கூட, குஜராத்தில் காந்தி பிறந்த மாவட்டத்தில் ஒரே ஒரு கோயில்கூட ஆலயபிரவேசத்திற்கு திறக்கப்படவில்லை. இப்படிதான் 'தீண்டாமைக்கெதிரான' காந்திய இயக்கத்தின் வேகம் இருந்தது. 

இன்னொருபக்கம், தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் கிடையாது என்று முழங்கிக்கொண்டிருந்த காந்தி காங்கிரஸை அப்படி வழிநடத்துவதற்கு பெரிதாக செயற்படவுமில்லை. ஆலய நுழைவு மசோதாவை கொண்டுவர வேண்டுமென்று கவர்னர் ஜெனரலை நிர்பந்தம் செய்த காந்தியால், அந்த மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்க மறுத்த போது காங்கிரஸுக்கு எந்த நிர்பந்தத்தையும் கொடுக்க முடியவில்லை. 1921 திலகர் சுயராஜ்ய நிதி எனும் பெயரில் காங்கிரஸின் பணிகளுக்காக திரட்டப்பட்ட 1 கோடியே 25 இலட்ச ரூபாயில் வெறும் 43 ஆயிரம் மட்டுமே 'தீண்டப்படாதோருக்கான பணிகளுக்கு' செலவிடப்பட்டதாக காங்கிரஸ் கணக்கு காட்டியது. சுயராஜ்யத்திற்கு தீண்டாமை ஒழிப்பை முன்நிபந்தனையாக பேசிய காந்தி சுயராஜ்யத்தின் பணிகளுக்கான திரட்டப்பட்ட நிதியில் இப்படி குறைவாக தலித்துகளுக்கான பணிகளில் செலவிடப்பட்டதைப் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. வட்டமேசை மாநாடுகளின் போது காந்தி நடந்துகொண்டவிதத்தை எந்த ஜனநாயகவாதியாலும் அங்கீகரிக்க முடியாது. 

காந்தி துவக்கத்தில் சாதியமைப்பை பெரிதும் போற்றினார். பிறகு அப்படி அதிகம் அவர் பேசவில்லை எனினும் அவர் தீண்டாமை என்பதை மட்டுமே தீர்க்கவேண்டியதாக கருதினார். ஆனால், சாதியை ஒழிக்காமல் தீண்டாமை ஒழியாது என்கிற தெளிவான பதிலடியை காந்தியின் குழப்ப அரசியல் மீதுக் கொடுத்தார் அண்ணல் அம்பேத்கர். காந்தியின் குழப்பமான அரசியலை அவருடைய காலத்தில் எதிர்த்துக் கொண்டேயிருந்தார் அண்ணல். அவர் காந்தியிடமிருந்த குழப்பத்தை மட்டுமல்ல, காந்தியத்திடமிருந்த குழப்பங்களையும் அம்பலப்படுத்தினார்.

அண்ணல் ஏதோ தலித் மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தியே காந்தியத்தை மறுத்தார் என்கிற வகையில்தான் இங்கே பலரும் பேசிவருகிறார்கள். ஆனால், உண்மை இன்னும் விரிவானது. 

காந்தியத்தின் மொத்தக் குழப்பங்களையுமே அண்ணல் கேள்விக்குட்படுத்தினார். "காந்தியம் வர்க்க கட்டமைப்பை வலியுறுத்துகிறது; சமூகத்தின் வர்க்க கட்டமைப்பையும் வருமானக் கட்டமைப்பையும் காந்தியம் புனிதமானவையாக கருதுகிறது; இவற்றின் விளைவாக ஏற்படும் ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவர், முதலாளி-தொழிலாளி போன்ற பாகுபாடுகளை சமூக ஒழுங்கமைப்பின் நிரந்தர அம்சங்களாகவும் அது பாவிக்கிறது" என்று காந்தியத்தின் வர்க்க பார்வையின் குளறுபடிகளை எடுத்துக்காட்டினார் அண்ணல். 

காந்திய பொருளாதாரத்தின்படி பொருளாதார சீர்கேட்டுக்கு எந்திரமயமும் நவீன நாகரீகமும்தான் காரணங்கள். ஆனால் அதை அண்ணல் கடுமையாக மறுத்தார். தனியார் சொத்துரிமையையும், தன்னலத்தின் மீது பேராசைக் கொள்வதையும் புனிதமானவையாக, மீறமுடியாததாக ஆக்கியுள்ள இச்சமூக அமைப்பே பொருளாதார சீர்கேட்டுக்கான முக்கிய காரணங்கள் என்று தெளிவுபடுத்தினார். 

இப்படி, காந்தியத்தை விரிவான விசாரணைக்குட்படுத்திய அண்ணல், "காந்தியம் எவ்வகையிலும் ஒரு புரட்சிகரமான தத்துவமல்ல. அது உள்ளடக்கத்தில் பழமையை பேணும் தத்துவம்" என்று கூறியதோடு, "ஜனநாயகத்தை தமது குறிக்கோளாக கொண்டிருக்காத சமூகத்திற்கு வேண்டுமானால் காந்தியம் பொருத்தமாக இருக்க முடியும்" என்றும் தெளிவுபடுத்தினார்.

காந்தியத்தின் குழப்பங்களை அறிய அண்ணலின் பார்வையை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அண்ணலின் நூலைத் தொட்டாலே தீட்டென்று இருப்பவர்களுக்கு அந்த பார்வையை புரிந்து கொள்ளவே முடியாது. அந்த புரிதல் வரும்வரை, மறுக்கவே முடியாத சித்தாந்தமாகத்தான் காந்தியம் ஊதிக்காட்டப்படும்.

(2019 அக்டோபர் 2 இல் எழுதப்பட்ட முகநூல் பதிவு) 

புதன், 4 செப்டம்பர், 2024

நினைவில் நிற்கும் ஆசிரியப் பெருமக்கள்.


ஸ்டாலின் தி 

1
எங்கள் ஊர் டேனிஷ் மிஷன் பள்ளிதான் இறையூர், பெண்ணாடம் அம்பேத்கர் நகர் ஆகியபகுதியினருக்கும் அப்போது பள்ளியாக இருந்தது. இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவருமே 'பறைக் கிறுத்துவர்' என்பதால் அதுவொரு ஆதிதிராவிடர் நலப்பள்ளியாகவே இருந்தது. அதன் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உறவினர்களாக நடந்துகொள்வார்கள். கண்டிப்பதிலும் கண்காணிப்பதிலும் அக்கறை இருக்கும். நான் பள்ளியில் சேர்ந்தபோது ஒன்றாம் வகுப்பு டீச்சராக இருந்தவர் ரோசி டீச்சர். கதைகளைச் சொல்லியே மாணவர்களை கட்டிப்போடுவார். சேர்ந்த புதிதில் பள்ளிக்கு செல்லவே பிடிக்காத (என்னைப்போன்ற!) மாணவர்களை கதைச் சொல்லியே வரவழைத்து விடுவார். எல்லோரிடமும் பாசமாகவே பழகுவார். அவரைப் பிடிக்காத மாணவரென்று அப்போது யாருமில்லை. அவர் பெண்ணாடத்திலிருந்து வருவார். அவர் வரும் 'ஆசியா பஸ்' பள்ளிக்கு முன் நிறுத்தி அவரை இறக்கிவிட்டுச் செல்லும். ஒரு கூட்டமே பஸ்ஸை நோக்கி ஓடி அவரது பைகளைப் பற்றிக் கொண்டு அவரை அழைத்துவரும். எல்லா நாட்களிலும் இப்படித்தான் அவரின் வருகை இருக்கும்.அவர் வந்ததும் ஓடி வரும் அந்த கருப்பு நிற நாய் ஒன்று. அந்த நாய் அவரது வகுப்புக்கு வெளியேயே கிடக்கும். மதியம் உணவு நேரத்தில் மர நிழல்களில் உட்கார்ந்து சாப்பிடும் எங்களிடம் 'ஒரு ரவுண்ட்' வரும். சோற்று உருண்டையை தூக்கி மேலே போடுவோம். அவ்வளவுக் கச்சிதமாக அதைக் 'காட்ச்' பிடிக்கும். திடீரென டீச்சர் மாறுதலாகிப் போனார். எல்லோருக்கும் வெறுமையாகவே இருந்தது. மதிய நேரத்தில் வந்த அந்த நாய்க்கு நாங்கள் சோறு தூக்கிப்போட்டபோது நாய் கண்டுகொள்ளவே இல்லை. சோற்றுருண்டை தரையில் விழுந்து சிதறியது. தினமும், காலையில் பள்ளிக்கு எதிரே நிற்காமல் செல்லும் அந்த ஆசியா பஸ்ஸை துரத்திக்கொண்டே ஓடும் அந்த நாய். நாங்கள் அந்த நாயையும் ஆசியா பஸ்ஸையும் வெறித்துப் பார்த்தபடியே நிற்போம்.
*
2
இரண்டாம் வகுப்புக்கு வந்தபோது 'குண்டு டீச்சர்'. பெண்ணாடம் அம்பேத்கர் நகரைச் சார்ந்தவர். எங்களுக்கு உறவினரும் கூட. அருள்மணி ஜோதிபாய் என்பது அவரது பெயர். ஆனால் ரெண்டாப்பு டீச்சர் என வெளிப்படையாகவும். குண்டு டீச்சர் என கமுக்கமாகவும் குறிப்பிட்டே வந்ததால் அவரது பெயரே மறந்து போனது. என்னை அழைத்து குடும்பத்தைப்பற்றி அடிக்கடி விசாரிப்பார். 'ஒழுங்கா படி. ஒப்பன மாதிரி சமுதாயம் வெங்காயமுன்னு வீணாப்போயிடாத' என்ற சொல்லை அவரிடம் நான் வாங்காத நாளே இல்லை. என்னுடைய அம்மாவிடம் ஒருநாள் 'அந்த குண்டம்மா திட்டிக்கிட்டே இருக்கு'ன்னு சொல்லிவைத்தேன். தன்னுடைய மகளை தையல் கற்றுக்கொள்ள என் அம்மாவிடம் விட்டார் டீச்சர். அப்போது நான் சொன்னதை அப்படியே என் அம்மாவும் சொல்லிவிட அந்த வாரமுழுக்க நான் பள்ளிக்கே செல்லவில்லை. 

ஆனால் மிகுந்த பாசமும் பரிவுமிக்கவர் அருள்மணி டீச்சர். நான் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு(அது அப்போது நடுநிலைப் பள்ளியாக இருந்தது.) வெளியேறும் போதும் உன் அப்பா பாதையில் போகாதே என்று சொன்னார். நான் எதுவும் பேசாமல் நிற்க, வாயத் தொறக்கிறானா பாரு என தலையில் கொட்டி சிரித்தார்.  

ஓரிரு ஆண்டுகள் கழித்து பெண்ணாடத்தில் விடுதலைச்சிறுத்தை இயக்க போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த போது, சரியாக அவரிடம் சிக்கினேன். பசைக் கையாலேயே வணக்கம் வைத்த என்னைப் பார்த்து 'நீ எங்க உருப்பட போற' என்று சொல்லிவிட்டுப்போனார். அதன் பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை. அண்மையில் என் அப்பாவிடம் என்னை விசாரித்திருக்கிறார். பக்கத்து ஊர்தான். உறவினர்தான். சென்று பார்க்கலாம்தான். ஆனால் 'உருப்படாதவனை' டீச்சரிடம் காட்ட மனமில்லையே!🙂
*
3
"மூனாப்பு சார்" என எங்களால் அழைக்கப்பட்டவர் பால் பிச்சை. கமலஹாசன்னும் சொல்லுவோம். அவர் கலர் அப்படி. எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான குடும்பம் அவருடையது. பெண்ணாடம் அருகில் உள்ள ஆதமங்களம்தான் ஊர். பால் பிச்சைக்குடும்பம் மட்டுமல்ல, இப்பகுதியின் ALC பிரிவுக் குடும்பங்கள் பலவும் எங்களுக்கு நெருக்கமானவையே. தாத்தா வேதமாணிக்கம் அதற்கு முக்கியக்காரணம். என் அப்பாவின் தாய்மாமனான வேதமாணிக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சுயேச்சையாக வென்றவர். ALC பிரிவு கிறித்தவர்களிடம் இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. வேதமாணிக்கத்தின் தங்கையான ரஞ்சிதம் தான் என் பாட்டி, அதாவது அப்பாவின் அம்மா. அதனால் இப்பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு எங்கள் குடும்பத்தின் நட்பு இருந்தது. 

பால்பிச்சை சார் என் தாத்தாவிடம் திண்ணையில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருப்பார். அந்தசமயத்தில் அந்த தெருவில் ஒருத்தனும் விளையாடமாட்டோம். பால்பிச்சை அவ்வளவுக் கண்டிப்பானவர். பாடம் நடத்துவதிலும் சிறந்தவர். ஆனால், கட்டுப்பாடு வேண்டுமென்பதில் அதிக கவனமெடுத்துக்கொள்வார். நாங்கள் அப்போது பள்ளியின் பின்னால் உள்ள மதுரைவீரன் கோயிலில் பொய்க்கால் குதிரை சண்டை விளையாடுவோம். ஒருவரின் முதுகில் இன்னொருவர் ஏறிக்கொண்டு, இருக்குழுக்களாக பிரிந்து சண்டையிடவேண்டும். கையால் அடிக்கக்கூடாது. உதைமட்டும்தான். உதைத்து கீழே தள்ளவேண்டும். உதை முதுகிலும் விழும் முகத்திலும் விழும். வாய், மூக்கில்  ரத்தம் கூட வழியநேரிடும். ஆனால் எல்லாவற்றையும் தாங்கி நிற்கவேண்டும். கீழே விழாத அணி வென்றது. 

இந்த விளையாட்டை விளையாடும் போது பால்பிச்சை சாரிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். அவர் கையில் இருக்கும் குச்சி நார் நாராக ஆகும் வரை அடி நிற்காது. என்னை பலமுறை இந்த விளையாட்டில் பார்த்திருக்கிறார். ஆனால் அடித்ததே இல்லை. 'உன்ன அப்பாக்கிட்ட சொல்றேன்' என்பதுதான் அவரின் மிரட்டலாக இருக்கும். எங்களை கண்டிப்பதாக காட்டிக்கொண்டாலும், 'நம்ம பசங்க படிக்கனும்டா' என மென்மையாக, அக்கறையாக கூறியும் கேட்டிருக்கிறோம். அவரது மனைவி ஷீலா டீச்சரும் எங்கள் பள்ளியில் பணிசெய்தார். பள்ளிக்கு வந்த புதிதில்  விருதாச்சலத்தில் இருந்த என் அத்தை விமலா டீச்சருக்கும் இவரதுக் குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தைக் கூறி 'நீ எங்க சொந்தம்தான்' என்றார் ஷீலா டீச்சர். ஷீலா டீச்சர் பால்பிச்சை சாருக்கு நேர் எதிரானவர். டீச்சர் சத்தமாக பேசியும், கோபப்பட்டும் நாங்கள் பார்த்ததே இல்லை. எதோ ஒரு சமயம் தலைமையாசிரியர் ஷீலா டீச்சரை முறைத்துவிட இவர் அழுதேவிட்டார். நாங்கள் அவரைத் தேற்றினோம். அவ்வளவு மென்மையானவர். பெண்பிள்ளைகள் அவரை செல்லப்பிள்ளைகளாக பார்த்துக்கொள்ளுவார்கள். அவ்வளவு பாசமாக டீச்சரும் இருப்பார். சிலவருடங்களுக்கு முன் ஷீலா டீச்சரின் கணவரான பால்பிச்சை சாருக்கு சர்க்கரை நோய் பிரச்சனையால் இரண்டு கால்களும் எடுத்துவிட்டார்கள் என்று அறிந்தபோது பாரமாக இருந்தது. அவர் வேகமாக நடந்ததும், சைக்கிளில் பள்ளிக்கு வந்ததும் கண்முன்னே வந்து போயின. கடந்த மாதம் தம்பி ஒருவன் வந்து, 'பால் பிச்சை இறந்துட்டாராம், நாளைஞ்சு நாளாகுதாம்' என்றான். பொய்க்கால் குதிரைபோலவே நொண்டியடித்து விழுந்தது மனது.
*
4
கலாவதி டீச்சர் எங்கள் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றியவர். பெண்ணாடம் அம்பேத்கர் நகரைச் சார்ந்தவர். மாணவர்களை தம் பிள்ளைகளாகவே பார்க்ககூடியவர். மாணவர்களை அருகில் உட்காரவைத்து அவரவர் குடும்பநிலைகளை அக்கறையுடன் கேட்பார். வீட்டில் நடக்கும் அப்பா-அம்மா சண்டை முதற்கொண்டு அவரிடம் பேசிக்கொண்டிருப்போம்.

ப்ரேயரில் 'அழைக்கிறார்....அழைக்கிறார்' என்று உரக்கப்பாடும் அவரைப் பின்தொடர்ந்து நாங்கள் பாடுவோம். அவருடைய மூன்று பிள்ளைகளும் எங்களோடு சகோதரமாகவே இருப்பார்கள். அவர்களில் மூன்றாவது பிள்ளையான ஜூலி அக்கா எங்கள் பள்ளியில்தான் படித்தார். போலியோவால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு உதவுவதற்காக நாங்கள் ஒரு பட்டாளமே இருந்தோம். அவ்வளவு அன்பானவர். அவருடைய பேக்கிலிருந்து பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு நாங்கள் ஓடுவோம். 'டேய் திருடனுங்களா' என சிரித்தபடியே கத்துவார் ஜூலி அக்கா, அதை சிரித்துக்கொண்டே பார்ப்பார் எங்கள் கலாவதி டீச்சர். என்னை 'வள்ளுவனண்ணன் மவனே' என்றே அழைப்பார். அப்பாவையோ அம்மாவையோ எங்கேனும் பார்த்தால் 'ஸ்டாலின் நல்லாபடிக்கிறான்'என்பாராம். 

ஒரு முறை நான் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் பள்ளி வந்துவிட்டேன். சாப்பாட்டுடன் அம்மா பள்ளிக்கு வந்துவிட்டார். டீச்சரிடம் பஞ்சாயத்து.'இந்த வயசுல உனக்கென்னடா இவ்வளவுக் கோவம்' என்று டீச்சர் சிரித்தார். சரி சாப்பிடு என்று அவர் சொன்னபோதும் நான் மசியவில்லை. நீங்க போங்க என என் அம்மாவை அனுப்பிவிட்டு இரண்டு மாணவிகளை அழைத்து தன் வீட்டு சாவியைக் கொடுத்து அங்கேயிருக்கும் சாப்பாட்டை எடுத்துவரச்சொல்லி என்னை சாப்பிடவைத்தார். அந்த வெண்டைக்காய் குழம்புச்சோறு இன்னமும் நிறைந்திருக்கிறது மனதில்.
*

5
அறிவியல் டீச்சராக எங்கள் பள்ளிக்கு வந்தவர் ஜான்சி டீச்சர். அறிவியலில் ஆர்வம் வந்ததற்கு ஜான்சி டீச்சர் முக்கியக்காரணம். ரெக்கார்ட் நோட்டென்பதையெல்லாம் இவர்தான் எங்களுக்கு அறிமுகம் செய்தார். மதிய நேரத்தில் மாணவர்களுடன் இணைந்து உணவு உண்ணுவார். என்னை 'ஸ்டான்லி' என்றுதான் அழைப்பார். ஏன் டீச்சர் எனக்கேட்டால் அப்படித்தாண்டா வருது, விடு என்பார்.  

ஆசிரியர்களின் விடுமுறைக்காலத்திலும் பயிற்சிக்காகவும் அவ்வப்போது புதியவர்கள் வருவார்கள். நெய்வேலியிலிருந்து ஷீலா டீச்சர், நெல்லிக்குப்பம் ரவிசார், ராபர்ட் சார், சாமுவேல் சார், ஸ்டீபன் ராஜ் சார், சம்பூர்ணம் சார் என அப்படி வந்தவர்களும் எங்களை வளர்த்தெடுத்தார்கள். இவர்களில் ஸ்டீபன்ராஜ் சாரை நான் உள்ளிட்ட பலரும் அண்ணன் என்றே அழைப்போம்.அவரும் எங்களுடன் ஓடிப்பிடித்தெல்லாம் விளையாடுவார். 

எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தவர்கள் எங்களுக்கு வந்த தலைமையாசிரியர் டேனியல் ஜேம்ஸ் அவர்களும் அவருடைய மனைவி மணி டீச்சர் அவர்களும். நெல்லிக்குப்பத்தைச் சார்ந்தவர்கள். மணி டீச்சர் மூன்றாம் வகுப்பு ஆசிரியையாகவும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் வகுப்புகளுக்கு (6-8) வரலாறு ஆசிரியையாகவும் இருந்தார். வரலாறு பாடத்தில் ஆர்வமுள்ள நான் அவருக்கு இயல்பாகவே பிடித்துவிட்ட மாணவனாகிவிட்டேன். ஒருமுறை, அன்றைய தமிழக அமைச்சர்களை சொல்லச் சொல்லி மாணவர்களைக் கேட்டார் மணி டீச்சர். முதல்வர் பெயரை மட்டும் எல்லோரும் சொல்ல நான் அனைத்து அமைச்சர்களின் பெயரையும் அவர்களின் துறைகளையும் கடகடவெனச் சொல்லியதை மற்ற ஆசிரியர்களிடம் கூறி பாராட்டுவார். அப்போதுதான் 'ஹவாலா மோசடி' என்னும் பிரச்சனை பரபரப்பாக இருந்தது. அதைப்பற்றி ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்த போது நானும் கலந்துகொள்ள 'இதெல்லாம் எப்படிடா உனக்கு தெரியுது' என்று தட்டிக்கொடுத்தார் (அதெல்லாம் வீட்டில் அப்பா யாரிடாமவது பேசும் போது கேட்டதுதன்!). 

மணி டீச்சர் போலவே அவரது கணவரும் தலைமையாசிரியருமான டேனியல் சாரும் மிக அன்பானவர். அவர் என்னை 'சாக்கிரடீஸ்' என அவ்வப்போது கூப்பிடுவார். அது ஏன் என நானும் கேட்டதில்லை. அப்பாவுக்கு நண்பராக இருந்த டேனியல் சார் ஊரில் பலருக்கும் நண்பராகவே நடந்துகொண்டார். பாடங்களை அவர் நடத்தும்போது நகைச்சுவைகளையும் பழைய பாடல்களையும் துணைக்கு வைத்துக்கொள்வார். அவர்கள் வாடகைக்கு இருந்த  வீடும் எங்கள்  வீட்டுக்கருகில்தான் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்குதான் டிவி பார்க்க செல்லுவோம். புதிய படங்களை வீடியோவில் போடும்போது வரச்சொல்லுவார்கள். சில ஆண்டுகளுக்கும் முன் டேனியல் சாரையும் மணி டீச்சரையும் கடலூரில் ஒரு தனியார் மருத்துவமணையில் சந்தித்ததாக என் சித்தி பையன் சொன்னான். பிறகு டேனியல் சார் இறந்துவிட்டார் என்றும் தகவல் கிடைத்தது. 'படிக்கலைன்னா உங்க அப்பா அம்மா மாதிரி கரும்புவெட்டத்தான் போகனும்' என ப்ரேயர்களில் அடிக்கடிச் சொல்லுவார் டேனியல் சார். அதை அவர் எங்கள் அப்பா அம்மா இடத்திலிருந்துதான் சொன்னார் என்பதை தாமதமாகத்தான் புரிந்துகொண்டோம்.
*

6

எனக்கு நெருக்கமாக இருந்த ஆசிரியர்களின் இறப்பில் நான் பங்கேற்றதேயில்லை. புற்றுநோய் தாக்கி கலாவதி டீச்சர் இறந்தார்; உடல் நலக்குறைவால் டேனியல் சார் இறந்தார்; அதேபோலவே பால்பிச்சை சாரும் இறந்தார். இவர்களுடைய  இறப்புகளெப்போதும் தாமதமாகவே எனக்குத் தெரியவந்தது. ஆனால் ஒரு ஆசிரியரின் மரணத்தின் கொடியத்துவக்கத்தை கண்முன்னே கண்டேன். 

எட்டாம் வகுப்புவரை உள்ளூர் டேனிஷ் மிஷனில் படித்த நான், பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளியில் சேர்க்க அப்பாவெல்லாம் வரவில்லை. எங்கள் வீட்டில் தங்கியிருந்த அண்ணன் பிலிப்குமாரை உடன் அனுப்பினார் அப்பா. தற்போது விசிக வின் கடலூர் மாவட்ட செயலாளர்(மேற்கு) தயா தமிழன்பன் தான் அன்று பிலிப்குமார். அங்கு பள்ளியில் என்னைச் சேர்த்தவர்கள் ஆசிரியர்கள் தங்க.வீரப்பன் மற்றும் பாரி அவர்கள்தான்.

பாரி ஆசிரியர் என்னுடைய சித்தியின் கணவர், உள்ளூர்தான். தங்க.வீரப்பன் பெண்ணாடம் சோழன் நகரைச் சார்ந்தவர். இருவரும் பள்ளியின் தலித் பிரதிநிதிகள் போலசெயல் பட்டவர்கள். தலித் மாணவர்கள் இவர்களைத்தான் அணுகுவார்கள். அந்தளவிற்கு ஈடுபாடுள்ளவர்கள். வீரப்பன் சார் எனக்கு சிறுப்பிள்ளையிலிருந்தே நல்ல பழக்கம். அப்பா RYL(மக்கள் யுத்தக் குழு)யில் இருந்தபோதே வீட்டுக்குவந்தவர். சமூக பிரச்சனைகளில் முன்னிற்பவராகவே வீரப்பன் சார் இருந்தார். விசி இயக்கத்தின் வளர்ச்சியில் அப்பாவுக்கு துணையாக இருந்தவர்களில் வீரப்பன் சாரும் முக்கியமானவர். எங்கள் குடும்பத்தின் மீது எப்போதும் அக்கறையானவரான வீரப்பன் சார் மோட்டார் சைக்கிள் வாங்கியபோது அதுவரை அவர் பயன்படுத்திய சைக்கிளை எனக்கு கொடுத்தார். சில நாட்களில் ஒரு பொதுக்கூட்டத்துக்குப் போகவேண்டுமென அப்பா அந்த சைக்கிளை விற்றுவிட்டார் (அந்த சைக்கிளை விற்றுவந்து பணம் கொடுத்தவர் பெண்ணாடம் சோழன் நகரைச் சார்ந்த  அண்ணன் ந.இராமு அவர்கள். 2001 இல் இவர் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.) அப்பா சிறையில் ஓராண்டுக்குமேல் இருந்தபோது அவர் வரும் வரை வீட்டுக்கு மாதாமாதம் வந்து உதவினார்கள் வீரப்பன் சாரும் அவருடன் வரும் வீரராகவன் ஆசிரியரும் (வீரராகவன் திருமாவளவன் அவர்களின் மாமா மகன்.).

என்னுடைய  தமிழாசிரியரான சுந்தரம் அய்யா அவர்களும், உறவினர்தான். இவர் பாடம் நடத்துகிறாரா பசங்ககூட அரட்டை அடிக்கிறாரா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருக்கும் இவரது வகுப்பு. அவ்வளவு ஜாலியானவர். இப்போதும் எங்கேனும் பார்த்தால் டக்கென கலாய்த்துவிடுவார். நரசிங்கமங்களம் பெருமாள் அய்யா  எனக்கு பாட ஆசிரியராக இல்லையானாலும் பாசமாக விசாரித்துக்கொண்டே இருப்பார். விலங்கியல் ஆசிரியர் கிளிமங்களம் இளாங்கோவன் சாரும் தாவரவியல் செல்வராஜ் சாரும் உயிரியலை உயிரிலேயே கரைத்துவிட்டவர்கள். ஆங்கில ஆசிரியர் சுப்பிரமணியன், தமிழாசிரியர்  தங்கசாமி அய்யா, வேதியியல் ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோரும் என்மீதும் அப்பாமீதும் பாசமான விசாரிப்புகளை நடத்திக்கொண்டே இருப்பார்கள். 

தலைமையாசிரியர் பத்ரு அவர்கள் குறித்து நிறையப்பேசலாம். அப்பா சிறையிலிருந்த போது, "ஜாமின் கிடைச்சுதா" என அடிக்கடி விசாரிப்பார். இந்தப்பள்ளியில் என்னை மிகவும் பாதித்தவர்தான் என் இயற்பியல் ஆசிரியர் ஜெய்சங்கர். மாற்றுத்திறனாளியான  அவருக்கு ஒரு கை சிறுத்து காணப்படும். ஆனால், ஆள் சபாரிகோட் சூட்டில் கம்பீரமாக இருப்பார். அவரை அந்த உடையில்தான் வெளியில் பார்க்கமுடியும்.

தமிழ்நாடு விடுதலைப்படை தமிழரசனின் முக்கியத் தளமான வல்லம் கிராமத்தைச்சார்ந்தவர் ஜெய்சங்கர். அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அப்பாவிடம் வந்து மார்க்ஸியத்தைக் கற்றதாக ஜெய்சங்கர் சார் என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் அப்போது குழந்தையாக இருந்ததையும் இரவில் தோட்டத்தில் வீதி நாடகங்களுக்கு ஒத்திகை நடக்கும் போது அம்மா உப்புமா செய்துகொடுத்ததையும் நினைவுகூர்வார். பெண்ணாடம் பள்ளிக்கு அவர் வந்தபிறகு மீண்டும் தோழமை தொடர்ந்தது. வன்னியரான ஜெய்சங்கர் சார் வகுப்பில் 'தலித்துகள்தான் தலைமை தாங்கனும்' என்று பேசுவார். வன்னிய மாணவர்களுக்கு அதனாலேயே அவரைப்பிடிக்காமல் போனது. அப்பா சிறைக்கு சென்றபிறகு எங்களுக்குத் துணையாக இருந்தவர்களில் ஜெய்சங்கர் சாரும் ஒருவர். ஒருமுறை நான் வகுப்பில் அண்ணலின் படம்போட்ட சிறு நூலொன்றை வைத்திருப்பதைப் பார்த்த அவர், 'நிறைய படிப்பியா?' என்றார். நான் புன்னகைக்க, 'படி..படி..' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார். 

ஆனால் அவர் தமிழ் தேசியத்தில் உறுதியாக இருந்தார். தலித் தலைமையில் தமிழ்தேசியம் வேண்டும் என்பார்.  அவரிடம்  துப்பாக்கி இருந்ததாக ஒரு செய்தி உண்டு. அவர் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அது தென்படுகிறதா என நோட்டமிடுவேன். அவரை காவல்துறை ஆசிரியராகப் பார்க்கவில்லை. அவரும்  ஆசிரியராக மட்டும் இருக்கவில்லை. தலைமறைவு தமிழ்தேசியர்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். அந்த சமயத்தில் அத்தகையவர்கள் தங்களுக்குள் வெட்டி சாய்த்துக் கொண்டனர். இவர் ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்தார். அவருக்கு எப்போதுவேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்பதை அவர் அறிந்திருந்ததாகவே தெரிந்தது. 

ஒரு நாள் மதியம் திடீரென மாணவர்கள் கூச்சலுடன் ஒரு திசையில் ஓடினார்கள். நாங்கள் வகுப்பிலிருது பார்த்து ஓடினோம். ராஜா தியேட்டர் எதிரில் கும்பலாக இருந்தது. ஏதோ விபத்துதான் என ஓடிப்போய் கூட்டத்தை விலக்கி நுழைந்த போது அங்கே வெட்டுப்பட்டு உட்கார்ந்திருந்தார் எங்கள் ஜெய்சங்கர் சார். அவருகு அருகில் அவர் ஒருகையால் பிடித்தபடி ஒட்டிவரும் சிறிய சைக்கிள் கிடந்தது. சைக்கிள் ஹேண்ட் பார் இடுக்கில் அவர் விரும்பி படிக்கும் 'சிந்தனையாளன்' இதழ் சொருகியிருந்தது. என்ன நடந்திருக்குமென எனக்கு புரிந்துவிட்டது. சுற்றிலும் மாணவர்கள் கதறிக் கொண்டிருந்தார்கள், அவர்களை புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் சார். மாணவர்களிடமிருந்து கைக்குட்டைகளை வாங்கி விலங்கியல் ஆசிரியரும் நாங்களும் ரத்தம் வரும் இடங்களில் கட்டுப்போட்டோம். கடுமையா வெட்டு. ரத்தம் நிற்கவே இல்லை.வீரப்பன் சார் கார்கொன்டுவர அதில் ஏற்றி அனுப்பினோம். என்னை புன்னகையுடன் பர்த்துக்கொண்டே போனார். ஆத்திரம் மனதை முட்ட பெண்ணடம் நகரத்திலிருந்த அத்தனைக் கடைகளையும் நாங்களே மூடினோம். பேருந்தை நிறுத்தினோம். காவலர்கள் எதுவும் செய்யமுடியாமல் எங்கள் கூடவே வந்தனர். 'உங்க வாத்தியார் தீவிரவாதிப்பா, அவங்க ஆளுங்களே பன்னிருக்காங்க' என்றனர் காவலர். ஆனாலும் சுமார் மூன்று மணிநேரம் மாணவர்களின் கட்டுக்குள்தான் பெண்ணாடமிருந்தது. 

இரவு உணவு உண்ண உட்காரும் நேரத்தில் சரியாக செய்தி வந்தது. "சார் செத்துட்டார்". சோற்றை தள்ளிவிட்டு படுத்துக்கொண்டேன். கொல்லப்படுவதற்கு  சிலமாதங்களுக்கும் முன் தனது கிராமத்தில் வீடு குடிபோனார் ஜெய்சங்கர் சார். 'அப்பாவை வச்சுதான் திறக்கனும்னு இருந்தேன். அவர் சிறைக்கு போகவேண்டியதாச்சு. நீ கட்டாயம் கலந்துக்க' என்றார். நானும் போயிருந்தேன். அங்கே அவரது சகோதரர்கள், தோழர்களிடம் "தோழர் திருவள்ளுவன் பையன்" என அறிமுகம் செய்தார். அவர் வீட்டின் மீது 'சிந்தனையாளன் இல்லம்' என்று பொறிக்கப்பட்டிருந்தது. சிந்தனையாளர்கள் மீது அவ்வளவு பற்றுக்கொண்டவர் எங்கள் ஜெய்சங்கர் சார்.

(2015/செப்டம்பர் 5 இல் முகநூலில் எழுதிய பதிவுகள்.)

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

முருகன் என்னும் பூர்வ பௌத்தர்.




ஸ்டாலின் தி 

முத்தமிழ் முருகன், தமிழ்க் கடவுள் முருகன் என்கிற பெயரில் இந்துத்துவ அரசியலுக்கு துணை போகிறார்கள் பலர். மக்களின் பூர்வ பண்பாட்டை எடுத்துக் கூறமுடியாத கோழைகள் இந்துமய பண்பாட்டு அரசியலுக்கு பலியாகிவிடுவது வரலாற்றில் புதிது அல்லதான். இத்தகைய கோழைகள்தான் பூர்வ பௌத்த வரலாற்றையும் பண்பாட்டையும் தேடிக்கண்டடையும் எம்மைப் பார்த்து 'எதையும் பௌத்தமாக்குகிறார்கள்' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நாம் எதையும் பௌத்தமயாக ஆக்கவில்லை. பௌத்தத்தை திரித்த வரலாற்றையே பேசுகிறோம். இன்னும் பேசுவோம். 

இந்து புராணம் கூறும் முருகனைத்தான் இவர்கள் தமிழ்க் கடவுள் என்கிறார்கள். தமிழ்க் கடவுள் என்று இவர்கள் கூறிவிடுவதால் முருகன் வேறு ஒரு அடையாளத்தை அடையவில்லை. முருகனின் அறுபடை வீடுகளின் கருவறைகளிலிருந்து பிராமணர்கள் வெளியேறவும் இல்லை. வழிபாடு இந்து வழிபாடு. வழிபாட்டை நடத்துபவர்கள் இந்து வர்ணாசிரம முறையிலானவர்கள். ஆனால், கடவுள் மட்டும் தமிழ்க் கடவுள். நகைப்பாக இருக்கிறது இவர்களின் இராஜதந்திரம். 

முருகன் பற்றிய வேறுபட்ட கதைக் கூறலை நூற்றாண்டுகளுக்குப் முன்னரே முன்வைத்திருப்பவர் பண்டிதர் அயோத்தி தாசர். பண்டிதரின் கதையாடலில் முருகன் சிவனின் மைந்தனுமில்லை, அவதாரக் கடவுளுமில்லை, தமிழ் ஒரு மொழிக்குரிய கடவுளுமல்ல. மாபெரும் தத்துவத்தை பின்பற்றி, மற்றவர்களுக்கும் அத்தத்துவத்தை‌‌ போதித்து, தன்னலத்தை முற்றிலும் துறந்த ஆண்டியாக (பிக்குவாக) ஆகி வாழ்ந்தவர் முருகன். அவர் பின்பற்றிய தத்துவம் தம்மம். 

இன்றைக்கு பழனி என்று அழைக்கப்படும் அன்றைய 'பூங்குறிஞ்சி' மலையை ஆண்டு வந்த பௌத்த அரசனான மருகனுக்கும், அவருடைய மனைவியான ராணி கங்கையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முருகன். முருகனின் மனைவி தெய்வானை. மயில் உருவில் செய்யப்பட்ட வாகனத்தில் வலம் வந்த முருகன், புத்த பள்ளியில் பயின்று, அறவாழ்வை மேற்கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றான். முருகன் புத்த தம்மத்தில் பயணித்து, வாழ்க்கையை கடந்து சென்ற பௌத்த சிரமணர் ஆவார். சிரமணன் என்பதே சரவணன் என்று ஆனது. இதுவே பண்டிதரின் பார்வையிலான முருகனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமான வடிவமாகும். அதாவது, முருகன் என்பவன் பௌத்த இளவரசன். அவர் தம்ம நெறியில் வாழ்ந்து, ஞான மார்க்கத்தை மக்களுக்கு போதித்தமையால் போற்றுதலுக்குரியவராக ஆனார், தெய்வமானார். வழிபடப்பட்டார். பௌத்தத்தில் தெய்வ நிலை என்பது பற்றற்ற மனநிலையைக் குறிக்கும் என்பதை நாத்திக இந்துக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்து அருக வழிபாட்டில் இணைக்கப்பட்ட முருக வணக்கம் பற்றியும் பார்ப்போம். அருகர், அருகன் என்பவை புத்தரின் ஆயிரம் பேர்களில் உள்ளவை. 'புத்தன், மால், அருகன், சாத்தன்' எல்லாம் புத்தரின் பெயர்களே என்று, நிகண்டுகளைக் கொண்டு எடுத்துக்கூறியிருக்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். அருகன் மேடு, அருகேரி, அருங்குணம், போன்ற ஊர்களின் பெயர்கள், இன்றளவும் பௌத்த மரபுகளையும் அடையாளங்களையும் கொண்டிருக்கின்றன. புத்த வழிபாடான அருக வழிபாட்டோடு, பூங்குறிஞ்சி மலை மக்கள், அருக நெறியாளன் முருகனையும் இணைத்துக் கொண்டதால், இன்றைக்கும் 'வைசாக கால' வழிபாடு பழனியில் நடக்கிறது. பழனிக்கு சென்று மொட்டை போடும் வழக்கத்தில், புத்த தீட்சை சடங்கு கலந்திருப்பதையும் இத்தோடு இணைத்துக் காணலாம். முருகனின் இன்னொரு பெயர், ஆறுமுகம். முருகனின் உடல் முகத்தோடு, பஞ்ச சீலமான ஐங்குணங்களையும் முகமாகக் கொண்டதால்தான் அவர் ஆறுமுகம். 

முருகனோடு அடையாளப் படுத்தப்படுபவற்றில், 'வேல்' முக்கியமானது.முருகனுக்கு சரியாகப் பொருந்தக் கூடிய அடையாளம் வேல் அல்ல வேள்தான். பௌத்தப் பார்வையில் அதுதான் சரி.
முருகன் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவன். அவனின் அரண்பணியை அடையாளப்படுத்த 'வேல்' தேவைப்படுகிறதுதான். மேலும் சூரசம்காரம் என்பது, 'சுரா பானமருந்திய' சுரர்களுடனான, புத்த அசுரனான(சுரா×அசுரா)முருகன் மோதியதையேக் குறிக்கிறது. இதன்படி சம்கார போர் வீரனாக அடையாளப்படுத்தவும் வேல் அடையாளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதேவேளை, முருகனைப் போற்றும் பெயராக 'வேள் முருகன்' என்பதுவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

வேள் என்றால் கொடை என்று அர்த்தம். கொடை வள்ளல்கள் வேளிர் எனப்பட்டனர். கொடைக்குப் பெயர் பெற்ற மன்னர்களின் பெயருக்கு முன் 'வேள்' என்று இடுவது சங்க இலக்கியங்களிலும் வழக்கமாக இருந்துள்ளது. பாரியை 'வேள்பாரி'என்று கூறியிருக்கிறார் கபிலர். புத்த தன்மத்தைக் கடைப்பிடித்ததால் கொடை வள்ளலாகவும் இருந்த முருகன் 'வேள் முருகன்' என்றும் அழைக்கப்பட்டார். வேளன் என்பது கொடையாளியை அடையாளப்படுத்துவதால், முருகனுக்கு வேலன் என்பதைவிட, வேளன் என்பதே சரியான அடையாளத்தைக் கொடுக்கும்.

 சரி.முருகன் கதையாடலில் வருகின்ற வள்ளி என்பவர் யார்? 
முருகனின் இரண்டாவது மனைவியே வள்ளி என்பார்கள். இதுவும் திரிபுதான் என்றே எண்ணத் தோன்றுகிறது. வள்ளல் என்பதன் பெண்பால்தான் வள்ளி என்பதாகும். வள்ளியம்மை என்றால் தயாளக் குணம் கொண்டப் பெண் என்று பொருள். முருகன் 'வேளன்' என அழைக்கப்பட்டதால், முருகனின் மனைவியான தெய்வானை 'வள்ளி' என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பிற்கால பௌத்த விரோத திரிபுவாதக் கும்பல், 'ரெண்டு கல்யாணக்'கதையை இட்டுக் கட்டிவிட்டது.

இவ்வாறான மாற்று விளக்கங்களைக் கொண்டே நாம் இந்துப் பெருங்கதையாடலை உடைக்க வேண்டும். அதில்லாமல், சமரசம் செய்துகொண்டு, உண்மைகளை மறைத்துக்கொண்டு, பகுத்தறியும் திறனை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு இந்துத்துவத்தை ஒருவழி செய்கிறோம் பாருங்கள் என்பது ஏமாற்றுத்தனம்.

உடன்கட்டை ஏற்றப்பட்ட நீதி.

ஸ்டாலின் தி  1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகிலுள்ள தியோராலோ என்னும் கிராமத்தில் உடன்கட்டை ஏ...