வெள்ளி, 24 ஜனவரி, 2025

புதுப்பிக்கப்படும் பழைய பொய்.

ஸ்டாலின் தி.

புதுப்பிக்கப்பட்ட 'தாளமுத்து-நடராசன் நினைவிடம்' இன்று (25/1/2025) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது. மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனைப் பெற்ற போராளி நடராசன் அவர்கள் 1939 ஆம் ஆண்டு ஜனவரி 15 இல் உயிரிழந்தார்‌‌. அதே மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனையில் இருந்த மற்றொரு போராளி தாளமுத்து அவர்கள் 1939 மார்ச் 11 இல் உயிரிழந்தார். அதாவது, நடராசன் உயிரிழந்த பிறகு, சுமார் 50 நாள்களுக்கும் பின்னரே தாளமுத்து அவர்கள் உயிரிழந்திருக்கிறார். ஆனால், இவர்களைப் பற்றிய அரசு அறிவுப்புகளிலும் , பெயர் சூட்டல்களிலும் எப்போதும் உயிர்நீத்த முதல் போராளி நடராசன் பெயர் இரண்டாம் இடத்திலேயே வைக்கப்படுகிறது. நடராசன் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்; தாளமுத்து சாதி இந்து சமூகத்தில் பிறந்தவர் என்பதுதான் இங்கே குறிப்பிடத் தக்கது. 

தாளமுத்துவின் தியாகத்தை நாம் மறுக்கவில்லை. ஆனால், மொழிப்போராட்டத்தில் முதல் களப்பலி ஆன பட்டியல் சமூகத்தைச் சார்ந்த நடராசனின் பெயர் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவதில் உள்ள 'சாதிய சூத்திர'த்தையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம்‌. 

குறிப்பாக திமுக இந்த பெயர் வரிசையில் அறத்தைக் கடைப்பிடிக்க விரும்புவதாக தெரியவில்லை. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி காலத்திலிருந்தே இந்த பிடிவாதம் அவர்களிடம் தொடர்கிறது.1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் 'நியாயத்தராசு.' இந்த படத்தில் நாயக கதாபாத்திரத்தின் பெயர் தாளமுத்து. தம்முடைய பெயரை நாயகியிடம் அறிமுகம் செய்யும் போது, 'மொழிப்போராட்டத்தில் முதல் முதலாக செத்துப்போன தியாகிப் பெயரை எனக்கு வைத்திருக்கிறார்கள் ' என்பார் நாயகன். இதன் மூலம், முதல் களப்பலியாளர் நடராசன் பெயர் வெகுமக்களுக்கு அறிமுகம் ஆகாமல் ஆக்கப்பட்டது. இப்படத்திற்கு திரைக்கதை- வசனம் எழுதியவர் மு.கருணாநிதி அவர்கள். படத்தின் துவக்கத்தில் தோன்றி பேசும் அவர், 'எனக்கு மனநிறைவை தந்த படம் இது' என்று குறிப்பிடுவார். அவர் மனம் நிறைந்து எழுதிய திரைப்படம், ஒரு வரலாற்று பிழையை அங்கீகரிக்கும் காட்சியை மட்டும் அல்லாமல், தலித் தியாகத்தை மறுக்கும், மறைக்கும் தன்மையையும் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சிதான் இன்றளவும் தொடர்கிறது. 

எனவே, இதெல்லாம் எதோ கவனக்குறைவாக நடைபெறவில்லை. கவனமாகவே நடத்தப்படும் பாரபட்சம் இது. இந்த பாரபட்சம் ஒருவகையான தீண்டாமை என்பதுதான் உண்மையான சமூக நீதி பார்வையாக இருக்க முடியும். இதை ஏற்காமல், எத்தனை முறை நினைவு கட்டடங்களை புதுப்பித்தாலும், அது புதுப்பிக்கப்பட்ட பழைய பொய்யின் சாட்சியாகவே இருக்கும்.

செவ்வாய், 24 டிசம்பர், 2024

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.


ஸ்டாலின் தி 

கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்களால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் குழந்தைகள், 22 பேர் பெண்கள். இப்படுகொலை 'இந்தியாவின் அவமானம்' என்றன பத்திரிக்கைகள். இந்தியாவில் மட்டுமல்ல உலகின் நல்லமனம் கொண்டவர்கள் அனைவரையும் உலுக்கிய படுகொலை இது. வெண்மணியில் நடந்தது என்ன? அதன் காரணம் என்ன? வர்க்கமா? சாதியா? நிறைய பேசப்பட்டவைதான். இன்றைய நினைவு நாளிலும் பேசலாம்தான். 

தஞ்சை பகுதி நெற்களஞ்சியமாக விளங்கும் பகுதி. இந்திய அளவில் நெல் உற்பத்தியில் தஞ்சை பிரதானமான நிலம். அவ்வுற்பத்தி வெறும் தண்ணீராலும் வண்டல் மண்ணாலும் மட்டும் சாத்தியமாக்கப்படவில்லை. நிலத்தில் உழைப்பாளிகள் ஆற்றிய பெரும் பங்கே தஞ்சையை நெற்களஞ்சியமாக ஆக்கியது. ஆனால் உழைப்பாளிகள் உற்பத்தியாளர்களாக பார்க்கப்படவில்லை. அவர்களை அடக்கியாண்ட பண்ணைச் சாதிக்கும்பலே 'உற்பத்தியாளர்' என்ற இடத்தையும் கைப்பற்றியிருந்தனர். அதனால்தான் பண்ணையாளக் கும்பல் தங்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய சங்கத்துக்கு 'நெல் உற்பத்தியாளர் சங்கம்' என்று பெயரிட்டன. அப்படியானால் உற்பத்தியில் உழைத்தவர்கள் யார்? அவர்களை அடிமைச் சாதிகளாகப் பார்த்தார்கள். சாட்டையடியும், சாணிப்பாலும் அடிமைச்சாதியாகப் பார்க்கப்பட்டவர்களுக்கு தாராளமாக வழங்கியது பண்ணைச் சாதிக் கும்பல். ஆனால் ஒரு படி நெல் கூலி உயர்த்திக்கேட்டபோது கோபம் கொண்டது அக்கும்பல். வெறியேறிய பண்ணைக் கும்பல் துப்பாக்கியால் சுட்டது, பாதுகாத்துக்கொள்ள குடிசைக்குள் புகுந்தவர்களைத்தான் நெருப்பால் சுட்டது.
இப்படுகொலையின் வரலாற்றுப்பின்னணி என்ன? வர்க்கமா? சாதியா? என்ற கேள்வி எப்போதும் எழுகின்றன. வரலாற்று அறிவோடு அனுகும்போது இக்கேள்விக்கு கிடைக்கும் பதிலென்ன?  

இந்தியாவில் பௌத்தம் பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்ட பிறகு தேசமும் அதன் வளமும் பார்ப்பனியத்தின் கட்டுக்குள்கொண்டுவரப்பட்டன. தமிழத்தில் களப்பறையர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு நிலைப்பெற்ற பார்ப்பனிய சாதிய ஆதிக்கத்தை வலுப்படுத்திய அரசுகளில் சோழர் அரசு முக்கியமானது. நிலங்களெல்லாம் இந்துக்களுக்கும், இந்துக்கோயில்களுக்கும் தாரைவார்க்கப்பட்டன. இந்துக்கோயில்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களையும் இந்துக்களே ஆண்டானர். இந்துக்களால் ஒடுக்கப்பட்ட பூர்வ பௌத்தர்களான தலித்துகள் நிலத்தில் உழைக்கவைக்கப்பட்டனர். அதாவது பௌத்த மக்கள் பண்ணை அடிமைகளாகவும், இந்துக்கள் பண்ணையார்களாகவும் ஆக்கப்பட்டனர். இங்கே பண்ணை அடிமைகளையும் பண்ணையாளர்களையும் உருவாக்கியது உற்பத்திச் சூழலல்ல. இரண்டு மதங்களுக்கிடையேயான மோதல். பார்ப்பனியத்துக்கும் பௌத்தத்திற்குமான மோதலே இங்கு உற்பத்தி உறவுகளை தீர்மாணித்தது. ஆக, கீழ்வெண்மணியில் நடந்தது வர்க்க மோதலோ பெரியார் கூறியதுபோன்ற அரசியல் மோதலோ அல்ல. அது, சுரண்டலையும் ஆதிக்கத்தையும் அடித்தளமாகக் கொண்ட பார்ப்பனியத்துக்கும், உரிமையையும் சுதந்திரத்தையும் அடித்தளமாகக் கொண்ட பௌத்தத்திற்கும் இடையிலான போராட்டத்தின் தொடர்ச்சியேயாகும்.

(டிசம்பர் 25- வெண்மணி படுகொலை நாள்.) 

திங்கள், 23 டிசம்பர், 2024

விடுதலை 2: சில குறிப்புகள்.




ஸ்டாலின் தி

1

விடுதலை திரைப்படத்தை சுமார் 8 மணி நேர படமாக  எடுத்திருப்பதாகவும் 
(இன்னும் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் இருக்கலாம்) இன்னும் இரண்டு பாகங்கள் வரும் என்றும் வெற்றி மாறன் கூறியிருக்கிறார். முழுமையான பாகங்கள் அனைத்தையும் பார்த்து விரிவாக பேசலாம் என்று நினைக்கிறேன்.
விடுதலை 2 ஆம் பாகம் பற்றி நான் சொல்ல  நினைக்கும் சில; 

அரசியல்-குறிப்பாக மாற்று அரசியல்- பார்வை கொண்டவர்களுக்கு முக்கிய வரவாக அமையும் வகையில் வந்துள்ளது விடுதலை 2 ஆம் பாகம். கடவுள், அரவிந்தன் போன்ற சில படங்களில் மட்டும் பேசப்பட்ட 'தமிழ்நாடு விடுதலைப்படை' சார்ந்த கதைக்களம் என்று பரவலாக  கூறப்படும் படம் என்பதாலும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. 

படத்தின் முக்கிய பலமாக உள்ளவை இசைஞானியின் இசையும், விஜய் சேதுபதியின் தேர்ந்த நடிப்புத் திறனும். ஒளிப்பதிவும் சிறப்புதான். திரைப்படத்தை உருவாக்குவதில் வெற்றிமாறன் தேர்ந்தவர். ஆனால், முதல்பாதி திரைக்கதையை 'எடுக்கப்பட்ட காட்சிகளை' வைத்து அமைத்துக்கொண்டாரா என்று தெரியவில்லை.

இப்படம் ஜெயமோகனின் சிறுகதையை தழுவியது என்கிறார்கள். ஆனால், எல்லோரும் தமிழ்நாடு விடுதலைப் படையை ஒட்டியே இப்படத்தை பற்றி பேசுகிறோம். விடுதலைப்படையை பற்றி இவ்வளவு பேசுகிறதா  அந்த சிறுகதை என்று தெரியவில்லை. அல்லது இதுதான்(தமிழ்நாடு விடுதலைப் படை தான்) கதைக்கான உண்மையான கரு என்று இயக்குநர் உண்மையை போட்டு உடைத்கிருக்க   வேண்டும். புரட்சிகர இயக்கத்தின் வரலாறு அதற்கு நேரெதிரான நபரின் எழுத்தின் அடையாளாக   ஆகும் அபத்தத்தை படத்தைக் கொண்டாடும் இடது தோழர்கள் கூட உணர்ந்தார்களா தெரியவில்லை.   பொதுவாக, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் திரைப்படங்களின் துவக்கத்தில் 'இது ஒரு கற்பனைக் கதை' என்று போடுவார்கள். விடுதலை 2 உண்மைக்கதை  என்று பேசப்படும் கற்பனைக் காட்சிகள் என்றும் கூறலாம்.  கதைக்களம், காட்சி உருவாக்கம் என 'நல்ல கற்பனை' வளம் தெரிகிறது.  சர்க்கரை ஆலை முதலாளி மகள் கம்யூனிஸ்டாக இருப்பதுவும், அவரோடு நக்சலைட் தலைவர் திருமணம் செய்வதும் பழைய கற்பனைதான் என்றாலும் காட்சி அமைப்புகளும், இசைஞானி இசையும் அந்த காதலும் ரசிக்க வைக்கிறது. 

இது போன்ற கதைக்களத்தில் வசனங்களின் பாத்திரம் முக்கியமானது. சிவப்பு மல்லியில் விஜயகாந்தும், சந்திர சேகரும் பேசும் வசனங்களும், கண் சிவந்தால் மண் சிவக்கும் பட வசனங்களும் மக்களின் பாவனையிலேயே இருக்கும்.  ஆனால், இதில்   கம்யூனிஸ்ட் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் இடதுசாரி நூல்களை அப்படியே வாசிப்பதைக்  கேட்பதைப் போல உள்ளன. சிறந்த நடிகர்களான விஜய் சேதுபதியும் கிஷோரும் கூட பல இடங்களில் வசனங்களை பேசாமல் ஒப்பிக்கிறார்கள்.

பெருமாள் வாத்தியார் மற்றும் தோழர் TA கதாபாத்திரத்திற்கான நடிகர்களை  ஏறத்தாழ சரியாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால், சாரு மஜூம்தார் பாத்திரத்திற்கு அனுராக் காஷ்யப்(அவர் நல்ல நடிகர்தான் என்றாலும்) பொருத்தமில்லை. சாரு மஜூம்தார் படங்களை யாரும் வெற்றி மாறனுக்கு காட்டவில்லையோ என்று தோன்றுகிறது. நக்சல்பாரி வரலாற்றில் சாரு மஜூம்தார் அடையாளம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தவர்களுக்கு இந்த கேள்வி எழவேச் செய்யும். 

தோழர் TA (தமிழரசன்) கதாபாத்திரம் அடுத்த பாகங்களில் நாயக பாத்திரமாக வரும் என்று நினைக்கிறேன். ஆனால், TA கதாபாத்திரத்தின் முக்கிய வாழ்க்கை நிகழ்வை-அழித்தொழித்தல் எனும் களப்பணி-  (கலிய) பெருமாள் வாங்கியார் கணக்கில் எழுதிவிட்ட பிறகு TA பாத்திரத்திற்கு என்ன செய்வார் வெற்றி மாறன்‌.ஒருவேளை கற்பனை வளம் இருக்க பயமேன் என்று நினைத்திருக்கலாம். 
பல வருடங்களாக தமிழ்நாட்டில் நிலவும் புரட்சிகர  வறட்சிக்கு சற்றே வடிகால் நீராக வந்திருக்கிறது விடுதலை 2 என்று கூறலாம். ஆனால்,  வர்க்க-மொழி இன தேசிய  அரசியலின் போதாமைகளை     புரிந்துகொள்ள  இன்னும் நிறைய உண்மைகளை பேசவேண்டும். இந்த புரிதலுடன்தான் இத்தகைய படைப்புகளை வரவேற்க வேண்டும். நானும் வரவேற்கிறேன்.

2
விடுதலை 2: சு என்னும் வாத்தியார் 


சு என்னும் சுந்தரம் நினைவு கூரத்தக்க வாத்தியார். வாத்தியார் என்றாலும்  கலியபெருமாள் புலவர் என்று அழைக்கப்பட்டாரே தவிர, வாத்தியார் சுந்தரம் தான். அவர்தான் 'வகுப்புகளை அதிகம் நடத்திய தலைமறைவு வாத்தியார்.' இதை புலவரும் ஒத்துக்கொள்ளுவார்‌.  ஆனால், சுந்தரத்தின் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்படுவதை 'தோழர்களே வேடிக்கை பார்க்கிறார்கள்.' சுந்தரம் என்னும் தலைமறைவு போராளிக்கு புரட்சிகர மார்க்கெட் இல்லை என்று கருகிறார்கள் போலிருக்கிறது.

தோழர் சு என்னும் சுந்தரம் அவர்கள் இயற்கை அடைந்தபோது(9/6/2017), அவரிடம் பயின்ற க.திருவள்ளுவன் முகநூலில் பதிவேற்றிய இரங்கல் செய்தி இது:


"1980. அப்போழ்து நான் சிபிஎம் கட்சியில் விவசாயப்பிரிவில் வட்டார துணைச் செயலாளராக இருந்தேன். அப்போழ்து தமிழகத்தில்  எழுந்து கொண்டிருந்த நக்ஸல்பாரி இயக்கத்தின்பால் ஆர்வம் வந்தது. நக்ஸல் தோழர்கள் தலைமறைவு வாழ்வில் இருந்த காலக்கட்டம் அது. யாரைச் சந்திப்பது, யாரிடம் பயில்வது என்ற தேடல் ஒருவரை அடையாளம் காட்டியது. அவரது பெயர்தான் அறிமுகமானதே தவிர அவரை சந்திக்க முடியவில்லை. சுமார் மூன்று மாதங்கள் தேடி அலைந்து அவரைக் கண்டடைந்தேன். அவர்தான் தோழர் சு என்கிற சுந்தரம்.  எளிமையான தோற்றம். மக்கள் மொழியில் அரசியல். மக்கள் கொடுப்பதே உணவு. இதுதான் அவர் தேர்ந்தெடுத்த பாதை. அவரிடம் பயின்றுதான் நக்ஸல் அமைப்பில் நான் செயல் பட்டேன். காலம் ஓடியது. அவருக்கு தமிழ்தேசியப் பார்வையும் எனக்கு தலித்திய பார்வையும் கிடைக்க அவரவர் பாதையில் பயணித்தோம். அரசியல் விமர்சனங்களைக் கடந்து அவர் நல்ல மனிதர். தன்னலம் இல்லாதவர். அர்ப்பணிப்பு சிந்தனை உள்ளவர். அவரிடமும் அவரைப் போன்றவர்களிடமும்தான் அர்ப்பணிப்பு சிந்தனையை நான் கற்றுக் கொண்டேன்.  அதுதான் என்னை இன்னமும் இயக்கிக் கொண்டுமிருக்கிறது."

3
'விடுதலை 2: ஏ.எம்.கே. எனும் வாத்தியார்.


விடுதலை 2 திரைப்படத்தில்,  நடிகர் கிஷோர் ஏற்ற  கதாபாத்திரம் 'தோழர் கே.கே.'  வாத்தியாருக்கு வாத்தியாராக காட்டப்படும்  இக்கதாபாத்கிரம்  ஏ.எம்.கே என்று அழைக்கப்பட்ட தோழர் ஏ.எம்.கோதண்டராமன் அவர்களை சார்ந்திருக்கும். அன்றைய காலத்தில் தமிழ்நாட்டில் ஆழமாக மார்க்ஸியத்தை கற்றவரான கோதண்டராமன் வேலூர் மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஆணைமல்லூர் ஊரில் நிலவுடைமை சாதி  குடும்பத்தில் பிறந்தவர். இளநிலை பட்டமும் சட்டப் படிப்பும் படித்தவர். இளமையிலேயே பெரியாரின் இயக்கத்தில் ஆர்வம் கொண்டாலும், அவருடைய  வேட்கையால்  இடதுசாரியாக உருவானவர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் பின்னர் அதிலிருந்து உருவான மார்க்ஸிஸ்ட் கட்சியிலும் இயங்கினார். விரைவிலேயே வழக்கறிஞராகவும் உருவானார். மோகன் குமாரமங்கலத்தின் வழிகாட்டுதலில் வழக்கறிஞராக இருந்து தொழிற்சங்க வழக்குகளை நடத்தினார். அதுவே அவரை தொழிற்சங்கவாதியாகவும் ஆக்கியது. தொழிற்சங்க தலைவராக அவர் உருவெடுத்த காலத்தில் நக்சலைட் பாதை உருவானது.  கோதண்டராமன் அதில் தம்முடைய பயணத்தை துவக்கினார். 'மக்கள் யுத்தக் குழு'வில் தலைமை பாத்திரம் வகித்த அவர் ஐந்தாண்டு சிறை தண்டனையும் பெற்றவர். நீதிமன்றத்தில் வாதாட மாட்டோம், சிறையை(அதன் கட்டுப்பாட்டை) உடைத்தே வெளியே வருவோம் என்று நக்சல்கள் இருந்த போது, சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்காடுவதை  பின்பற்றினார். அதன் பிறகே நீதிமன்றங்களுக்கு சென்று 'காவல் துறை நெருக்கடிகளை' தோழர்கள் சமாளிக்க முடிந்தது. உண்மையில் தோழர்  கோதண்டராமன் 'தீவிரவாத கம்யூனிஸ்ட்' ஆக பார்க்ப்பட்டாலும்  அழித்தொழிப்பு அரசியலை அவர் விரும்பவில்லை. மக்களை திரட்டி நடத்தப்படும் புரட்சியே வழி என்பதே அவருடைய வழி. அதையே தம்முடைய அரசியல் மாணவர்களுக்கும் போதித்தார்.பின்னாளில்  தலித் அரசியல் களத்தில் முக்கிய பங்கெடுத்த க.திருவள்ளுவன், இடதுசாரிய  களத்தில் நின்ற கோவை ஈஸ்வரன், கருத்தியல் மற்றும் மனித உரிமை களத்தில் நின்ற  பேரா.அ.மார்க்ஸ், 
பேரா.கல்யாணி, ரவிக்குமார்  போன்றவர்கள்  ஒரு காலத்தில் கோதண்டராமனின் தலைமையில்  பயணித்தவர்கள்தான். அவரிடமிருந்து விலகி  அவரவரின் சிந்தனைக்கேற்ற  பாதையில் பயணித்த இவர்களில் பலரும் அவர்மீதான  மதிப்பையும் அன்பையும் எப்போதும் விடவில்லை. ஆனால், மக்கள் யுத்தக் குழுவிலிருந்து வெளியேறிய 'தனித் தமிழ்நாடு ' அரசியல் நோக்கர்கள் பலர், தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அவரை  மொழிசார்ந்து  வெறுத்தனர்.  அவருடைய அர்ப்பணிப்பும் வர்க்க விடுதலை சிந்தனையும் கணக்கில் கொள்ளுவதைவிட அவரை 'தேசிய இன விரோதியாகவே' பலர் பார்த்தனர். விடுதலை 2 திரைப்படத்தில் வரும் கே.கே.கதாபாத்திரம் கூட தமிழை 'வேறொரு மொழிக்காரர்' பேசுவதை போல பேசுவதை கவனிக்க முடியும்.

4
விடுதலை 2 -மூத்த வாத்தியார் அயோத்திதாசர்.

விடுதலை போன்ற இடதுசாரிய கதைக்களம் சார்ந்த திரைப்படங்களில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் படங்கள் காட்டப்படுவது இயல்பானது. அண்ணல் அம்பேத்கர் படத்தைக் கூட காட்டுவது அரிது. ஆனால், விடுதலை 2 ஆம் பாகம் திரைப்படத்தின் ஒரு காட்சியில் (கே.கே.கொல்லப்பட்ட பிறகு நடக்கும் ஒரு ஆலோசனைக் காட்சி) பண்டிதர் அயோத்திதாசர் படம் சுழற்றில் இருப்பது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ்நாடு விடுதலைப் படையினர் அவரை அந்தளவுக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான் எதார்த்தம். அறிந்தே இருந்தாலும் அவருடைய படத்தை 'இயக்க அலுவகத்தில் வைக்க வாய்ப்பேயில்லை. பொதுவாக முண்டாசு பாரதியை பிடித்த அளவுக்கு முண்டாசு கட்டிய பண்டிதரை பிடிக்காது நம் இடது தோழர்களுக்கு. அதிலும் அன்றைய காலகட்டத்தில் ஆயுத அரசியல் பேசுபவர்களை கடந்து எவரையும் ஏற்பதில்லை.  ஆனாலும் வெற்றி மாறன் பண்டிதர் படத்தை பயன்படுத்த இரண்டு காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. ஒன்று, 'தமிழன்' என்னும் அடையாளத்தை முன்னெடுத்த முன்னோடியாக பண்டிதர் அயோத்திதாசர் இருக்கிறார். குறிப்பாக, 'சாதியற்றத் தமிழன்' என்பது அவருடைய முன்னெடுப்புகளில் ஒன்று. தமிழரசன் அவர்களும் சாதியற்ற தமிழர் என்பதை அவருடைய கோணத்தில் முன்வைத்தார். அதை அவருடன் பயணித்தவர்கள் எந்தளவுக்கு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள் என்கிற கேள்வியை காலம் உருவாக்கியிருந்தாலும் தமிழரசனுக்கு 'சாதியற்ற தமிழன்' என்பதே நோக்கமாக இருந்தது என்பது உண்மைதான். சாதியற்ற தமிழர் என்பதை அடைவதற்கான  வழியாக பௌத்த அறத்தை பண்டிதர் அயோத்திதாசர் முன்வைத்தார், இடதுசாரிய புரட்சியை தமிழரசன் முன்வைத்தார் என்பதுதான் அடிப்படை வேறுபாடு. இவ்வேறுபாட்டை கடந்து  'சாதியற்ற தமிழர் கோட்பாட்டுக்கு தமிழரசன் குழுவினருக்கு முன்னோடியாக பண்டிதர் அயோத்திதாசரை  சத்தமில்லாமல் முன்வைத்துள்ளார் வெற்றி மாறன்' என்பதைத்தான் அக்காட்சி உணர்த்துகிறது. அடுத்து, விடுதலைப் படையில் தலித்துகளின் பங்களிப்பு இருந்ததை சுட்டிக்காட்டும் வகையிலும் அக்காட்சி பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளது.


சனி, 7 டிசம்பர், 2024

அஞ்சலி: கவிஞர் கலைமாமணி பாரதி வசந்தன்.



ஸ்டாலின் தி 

சமகால புதுச்சேரி- தமிழ்நாடு இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான கவிஞர் பாரதி வசந்தன் அவர்கள் நேற்று(7/12/2024) காலமானார் என்கிற செய்தி வருத்தத்தை கொடுக்கிறது.

கவிஞர் தமிழ் ஒளியின் வழியில் வந்த கவிஞராக அறியப்பட்டவர் பாரதி வசந்தன். கவிதை, கட்டுரை, கதைகள் என  சுமார் 70 நூல்களை இயற்றியுள்ளார். புதுவை அரசு கலைமாமணி பட்டம் அளித்து அவரை சிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2022 இல் அவருடைய 'பெரிய வாய்க்கால் தெரு' நூலுக்கு சிறந்த நூல் விருது அளிக்கப்பட்டது. மேலும், புதுவை கம்பன் கழக விருதும் பெற்றவர் அவர். பாரதியார் வாழ்க்கையில் நடைப்பெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பாரதி வசந்தன் அவர்கள் எழுதிய 'தம்பல' சிறுகதை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் துவக்க காலத்தில் புதுவையில் பெரிதும் துணையாக இருந்த குடும்பங்களில் பாரதி வசந்தன் குடும்பமும் ஒன்று என்பதை நேரில் பார்த்தவன் நான்.

பாரதி வசந்தன் அவர்களின் சகோதரர் அண்ணன் அமுதவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் 90 களிலிருந்தே இருப்பவர். தற்போது முதுவை மாநில அமைப்புச் செயலாளராக உள்ளார். அநேகமாக எனக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும் போது எனக்கிருந்த தொண்டை சதை(Tonsils) பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள புதுவைத்         தோழர்களிடம் அப்பா அனுப்பி வைத்தார். அப்போது ஒருவார காலம் அமுதவன் அண்ணனுடன் அவருடைய வீட்டில் தங்கியிருந்தேன். கூரை வேய்ந்த இரண்டு வீடுகள். ஒன்றில் அமுதவன் அவர்களும் மற்றொன்றில் பாரதிவசந்தன் அவர்களும் தங்கியிருந்தார்கள். இருவருக்கும் அப்போது திருமணம் ஆகவில்லை. அவர்களின் அம்மா அப்போது இருந்தார். மாலை வேளைகளில் இருவரையும் பார்க்க அவரவரின் தோழர்கள் வந்து கொண்டிருப்பார்கள். பாரதி வசந்தன் வாசலில் இலக்கிய பேச்சுகளும் அமுதவன் அறையில் அரசியல் பேச்சுகளும் நடக்கும். நான் இரண்டு இடத்திலும் மாறி மாறி உட்காருவேன்.    அவ்வப்போது அவரிடமிருந்த தொலைக்காட்சியை பார்க்க செல்லுவேன். அவர் என்னைப் பார்ப்பார், ஆனால் எதுவும் கேட்க மாட்டார். நான் அங்கு சென்ற நான்கைந்து நாள் ஆனபோது, பாகூர் கமலா நேரு மண்டபத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அமுதவன் அழைத்துச் சென்றார். பல இயக்கங்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் சார்பில் அண்ணன் புதுவை  பழனிவேல் (இன்றைய விசிக புதுவை மாநில இணைப்பொதுச் செயலாளர் பாவாணன்) உரையாற்றினார். கூட்டம் முடிந்து கடைசி பேருந்தில் புதுவை வந்து  நள்ளிரவில் வீடு சேர்ந்தோம். காலையில் அமுதவன் வேலைக்கு( புதுவை அரசு அச்சகம்) சென்ற‌ பிறகு என்னை அழைத்தார் பாரதி வசந்தன். அப்போதுதான் என்னை யாரென்று விசாரித்தார். 'தோழரின் மகனா நீ. ஆஸ்பிடலுக்கு  வரவச்சுட்டு டாக்டர்கிட்ட போகாம உன்ன இழுத்துக்கிட்டு சுத்துறானா' என்று கேட்டார். மாலை அமுதவனிடம்  'அண்ணன் சத்தம் போட்டதை' சொன்னேன். அன்று இரவே காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஒருவரிடம் சென்றோம்.  வீடு திரும்பியதும் அவரிடம் சென்று மருத்துவரை பார்த்துவிட்டு வந்ததை தெரிவித்தேன். சிரித்தார். போய் சாப்பிடுங்க என்றார். கடையில் சாப்பிட்டு வந்ததால் நான் சாப்பிடவில்லை. 'ஆக்குனதை சாப்பிடலனா அம்மா திட்டும்' என்று கூறி அமுதவன் சாப்பிட முற்ற்ததில் அமர்ந்தார். பாரதி வசந்தனும் சரி, அமுதவனும் சரி. அம்மாவுக்கு மிகுந்த பயம் கலந்த  மரியாதையை கொடுத்ததை பார்த்தேன். அம்மாவும் சிறுபிள்ளைகளை  அழைப்பதைப்  போலவே சோறாக்கி  வைத்து சாப்பிட அழைப்பார். 

மறுநாள், அப்பா வந்திருப்பதாக கூறி என்னை அழைத்துப் போக மூத்த தோழர் முனுசாமி அவர்கள் வந்திருந்தார். அண்ணன் அமுதவன் வேலைக்கு சென்றுவிட்டதால் அம்மாவிடம் கூறிவிட்டு, பாரதி வசந்தன் அவர்களிடம் சொல்ல சென்றேன். சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்தவர் என் கையில் நூல் ஒன்றை அளித்தார். அவர் எழுதிய கவிதை நூல் அது. 'தனி மரம் தோப்பாகாது' என்பது தலைப்பு. 

2000 ஆவது ஆண்டில் கடலூர் மத்திய சிறையிலிருந்து பிணையில் வந்த அப்பாவை அழைக்க சென்றிருந்தோம். அழைக்க வந்தவர்களை  ஊருக்கு அனுப்பிவிட்டு புதுவைக்கு வண்டியை விட்ச்சொன்னார் அப்பா. போய் இறங்கிய இடம் அமுதவனின் வீடு. தோழர்கள் கூடியிருந்தார்கள். எழுத்தாளர் ரவிக்குமார் வந்துவிட்டு சென்றார். நாங்கள் புறப்படும் போது பாரதி வசந்தன் இருக்கிறாரா என்று பார்த்தேன். வெளியே போயிருக்கிறார் என்றார்கள். அதன் பிறகு சிறுபத்திரிக்கைகளில் அவருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். 2007 வாக்கில் இதழியலாளர் கவிதாச்சரண் அவர்களோடு ஒருநாள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, 'உங்களுக்கு பாரதி வசந்தனை தெரியுமா?' என்றார். 'அண்ணன்தான்' என்றேன். 'உங்களுடைய கட்டுரையை (சாதி ஒழிப்புக் கல்வி) பற்றி கேட்டார். இன்னார் எழுதியது என்று சொன்னேன். உங்களை தெரியும் என்று சொன்னார்' என்றார் கவிதாச்சரண். ஆகச்சிறந்த எழுத்தாளரின் நினைவில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். கடந்த ஆண்டு மக்கள் பாடகர் தலித் சுப்பையா நினைவேந்தல் நிகழ்வுக்காக அப்பா புதுவை சென்றார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அன்றிரவு அண்ணன் அமுதவன் வீட்டில் தங்கியதாக வீடு வந்த போது கூறினார். பாரதி வசந்தன் அண்ணனை பார்த்தீர்களா என்றேன். 'அவரை பார்க்க முடியல' என்றார். புன்னகையும் சொல்லழகும்  கொண்ட அந்த கவிஞரை இனி அவருடைய எழுத்தில்தான்  பார்க்க முடியும் என்பதை நினைத்தால் மனம் பாரமாகிறது.

8/12/2024

வியாழன், 5 டிசம்பர், 2024

தலைவர் வை.பாலசுந்தரம் நினைவு நாள்: டிசம்பர் 6..




ஸ்டாலின் தி 


திமுகவின் துவக்ககாலத்தில் சென்னை சேரிகளின் துடிப்பான பல செயல்வீரர்கள் செயற்பட்டார்கள். அவர்களில் ஒருவராகவும் செல்வாக்கும் கொண்ட இளைஞராகவும் திகழ்ந்தவர் வை.பா. என்று மக்களால் அழைக்கப்பட்ட தலைவர் வை.பாலசுந்தரம் அவர்கள். சென்னையின் முக்கிய வணிகமாக அன்று விளங்கிய சுண்ணாம்பு விற்பனையில் ஈடுபட்ட குடும்பம் வை.பா.வின் குடும்பம். எனவே, பொருளாதார ரீதியாகவும் வலுவான பின்னணியைக் கொண்டிருந்த குடும்பமாகவும் அவருடைய குடும்பம் இருந்தது. அன்றைய சூழலிலேயே சென்னை மௌண்ட் ரோடு, தி.நகர் உள்ளிட்ட சில இடங்களில் இடமும் கட்டடங்களையும் கொண்டிருந்தது வை.பாவின் குடும்பம். செனையில் திமுகவின் வளர்ச்சிக்கு வை.பா.குடும்பத்தின் பொருளாதார பின்னணியும் துணையாக இருந்தது. அன்றைய காலத்தில் சென்னையில் நடந்த பல கூட்டங்களுக்கு அண்ணாதுரையும், கருணாநிதியும் வந்துசென்றது வை.பா.வீட்டுக் காரில்தான். சென்னை மக்களிடம் வை.பாவுக்கு இருந்த மதிப்பும், திமுகவில் அவருக்கிருந்த இடமும் அவரை 1969 இல் சென்னை மேயராக ஆக்கியது. 

1971 இல் அவர் அச்சரப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாக நின்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அவர் திமுகவில் இருந்தாலும் தான் சார்ந்த தலித் சமூகத்தின் நலன் மீதும் அவருக்கு மிக்க அக்கறையிருந்தது. அதன்காரணமாக அவருக்கு சென்னை தலித்துகளிடம் மட்டுமில்லாமல் சென்னைக்கு வெளியே மாநில அளவிலான தலித்துகளிடமும் உறவும் மதிப்பும் கிடைத்தன. அதன் விளைவாக, ஆயிரக்கணக்கான டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றங்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் மாநாட்டை சென்னையில் நடத்தி பெரும் கவனத்தை உருவாக்கினார் வை.பா. அதன்தாக்கம் அவரை தனித்தன்மையான இயக்கத்தை உருவாக்க உந்தியது. மேலும், அவரின் தலித் அணித்திரட்டளை திமுகவின் தலைமையும் விரும்பவில்லை. அதைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு உருவானதுதான் 'அம்பேத்கர் மக்கள் இயக்கம்.' பிறகு, அதுவே அம்பேத்கர் மக்கள் கட்சியாகவும் ஆனது.

 அண்ணல் அம்பேத்கரின் படத்தை மையமாகக் கொண்ட நீலக்கொடி அன்றய தலித் இளைஞர்களை கவனிக்கவைத்தது; ஈர்த்தது. வை.பா.எனும் ஆளுமையை ஏற்று, அதுவரை கிராமங்களில் இயங்கிய டாக்கர் அம்பேத்கர் மன்றங்கள் வை.பா.தலைமையிலான அம்பேத்கர் மக்கள் இயக்கத்தில் இணைந்தன; வை.பா.தமிழகத்தின் முக்கிய தலித் தலைவராக எழுந்தார். 

1980களில் தலித் சமூக இயக்கங்களை ஒருங்கிணைக்கும் சிந்தனை வளர்ந்தது. தனித்தனி இயக்கங்களாக இருந்தாலும் ஒருகிணைந்து செயல்பட வேண்டுமென்கிற செயற்திட்டம் பெரியவர் இளையபெருமாள் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு முக்கிய துணையாகவும் தூணாகவும் இருந்த தலைவர் டி.எம்.மணி என்கிற டி.எம்.உமர் ஃபாருக். அவர்களின் முன்னெடுப்பால் தமிழக தலித் இயக்கங்கள் பல ஒருங்கிணைப்பில் இணைந்தன. 'ஷெட்யூல்ட் இன விடுதலைக் கூட்டமைப்பு' என்று பெயரிடப்பட்ட அந்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டவர் தலைவர் வை.பா. அவர்களாவார். அந்தளவுக்கு சக தலித் இயக்கங்களாலும், தலித் தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர் அவர்.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் வை.பா. அவர்கள் வயது முதிர்வால் சிலகாலமாக உடல் நலிவுற்று இருந்தார். இந்நிலையில்தான் அவர் இன்று இயற்கையடைந்துள்ளார் என்கிற செய்தி கிடைக்கிறது.

அண்ணல் அம்பேத்கரின் படம் தாங்கிய நீலக்கொடியை தாங்கியும், அண்ணலின் பெயரிலேயே கட்சியை நடத்தியும் பாடுபட்ட தலைவர் வை.பாலசுந்தரம் அவர்கள், அண்ணலின் நினைவு நாளிலேயே(2019 டிசம்பர் 6) இயற்கையடைந்தார்.

 தலைவர் வை.பா.அவர்களுக்கு நினைவஞ்சலி!

திங்கள், 18 நவம்பர், 2024

இந்திரா அம்மையாருக்கு அரசியல் திருப்பம் கொடுத்த ஒன்பது தலித் உயிர்கள்.


ஸ்டாலின் தி 


இந்திரா காந்தி அவர்கள், தமது 'அவசரகால நடவடிக்கை'யின் மூலம் கடுமையான பின்னடைவை சந்தித்திருந்த காலம் அது. 1977 இல் நடந்த  தேசிய தேர்தலில் அவரும் காங்கிரஸும் ஏறத்தாழ அரசியலை விட்டே விலக்கப் பட்டிருந்தார்கள். அவரும் அவருடைய அரசியல் வாரிசான சஞ்சயும் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. முந்தைய தேசிய தேர்தலில் வென்றதைவிட 200 க்கும் அதிகமான தொகுதிகளை காங். அப்போது இழந்திருந்தது. அவருடைய எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடி அமைத்த ஜனதா அணி, மொரார்ஜி தேசாய் தலைமையில் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. எங்கும் இந்திரா எதிர்ப்பு அலை.  அந்தப் பேரலையில் மூச்சுத் திணறிப் போயிருந்தார் இந்திரா. ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில்,  அரசியலை விட்டே விலகிச்சென்று, இமைய மலையடிவாரத்துக்கு சென்றுவிடலாம் என்று அவர் முடிவெடுத்திருந்தார். அப்படியோர் சூழலில்தான் பீகார் மாநிலத்தின், பெல்ச்சி எனும் கிராமத்தில், 1977 மே 27 ஆம் தேதி ஒரு பெருங்கொடுமை,  சாதி வெறியால் நடத்தப்பட்டது.

அன்றைய தினம்தான், அந்த கிராமத்தில்,  சாதிவெறிக் கும்பல் ஒன்று, ஒன்பது அப்பாவி தலித்துகளை உயிரோடு எரித்துக் கொன்றது. தேசத்தை கடும் அதிர்ச்சிக்காட்படுத்திய இந்த சாதியப் படுகொலையைப் பற்றி விசாரணை செய்வற்காக,  ஜனதா அணித் தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஒய்.பி.சவான்   அங்கே செல்வதாக அறிவித்தார். ஆனாலும் உடனடியாகச் செல்லவில்லை. 

உண்மையில்  பாபு ஜகஜீவன் ராம் அவர்களுக்கு முக்கியத்துவம்  கொடுத்திருந்தாலும்,  ஜனதா அரசு சாதியப் பிரச்சனைகளை,  அலட்சியமாகவே கையாண்டது. இந்திராவை ஜனநாயக விரோதியாக பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஜனதா ஆட்சியில் சாதிக் கலவரங்கள் அதிகமாக நடத்தப்பட்டன. ஜனதா ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் தேசத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சாதிக் கலவரங்கள் நடத்தப்பட்டு, தலித்துகள் ஒடுக்கப்பட்டனர். ஆனால், ஜனநாயகம் பேசிய ஜனதா ஆட்சியோ, அலட்சியமாக இருந்தது.  பெல்ச்சி படுகொலையையும் அந்த அரசு அப்படியே அணுகியது. இந்நிலையில் தான் இந்திரா யாரும் எதிர்பாராமல் பெல்ச்சி எனும் குக்கிராம சேரிக்கு புறப்பட்டார். 

விமானத்தின் மூலம் பாட்னா வந்திறங்கிய இந்திரா, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டார். சேரும்  சகதியுமான பாதையில்  ஜீப்புக்கு மாறி பயணப் பட்டார். ஜீப்பும் செல்ல முடியாத வழியில் யானை சவாரி மூலம் அந்தக் குக்கிராம சேரிக்குச்  சென்று, சாதிவெறியால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளித்தார். இந்த பயணம் அவரை 'எளியோரின் தலைவி'யாக உருவமைத்தது என்பதை அவருடைய எதிரணியினரே ஒத்துக் கொண்டார்கள்.  மனதில் ஏற்பட்ட வலியால் அடைப்பட்டுக் கிடந்த, இந்திராவின் அந்த பயணம் மீண்டும் அவரை அரசியலில் தீவிரமாக இயங்க வைத்தது. அவரது தொண்டர்களும் கூடவே புத்துணர்வோடு எழுந்தார்கள். தொடர்ந்த சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருந்த தலித்துகளின் ஆதரவு இந்திராவுக்கு பெருகியது. சில மாதங்களில்(1978 ஜனவரி) புதிய காங்கிரஸ்(இ) உதயமானது. அடுத்த மாதமே அது கர்நாடகா, ஆந்திரா மாநில தேர்தல்களில் வெற்றிகளைகக் குவித்தது. 

கர்நாடக சிக்மகளூர் தொகுதியில் வென்று மீண்டும் பாராளுமன்றம் நுழைந்தார். அடுத்த இரண்டே ஆண்டுகளில்(1980) வந்த  தேசிய தேர்தலில் இ.காங். 353 இடங்களில் வென்று, இந்திரா தலைமையில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. அந்த மாபெரும் வெற்றியின்  பின்னணியில் இந்திராவுடன் தலித்துகளும் இருந்தார்கள்.

(2017நவம்பர் 19, இந்திராகாந்தியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் எழுதப்பட்ட என்னுடைய பதிவு.-‌ஸ்டாலின் தி.) 

புதன், 13 நவம்பர், 2024

மருத்துவர் மீதான தாக்குதல்: மருத்துவ மனை சீர்த்திருத்தம் குறித்தும் பேசப்படவேண்டும் .

ஸ்டாலின் தி 

தென்காசி அரசு மருத்துவமனையில் கை எலும்பு முறிவுக்கு சிகிச்சைக்கு சென்ற நோயாளியிடம் அவருடைய எக்ஸ்-ரே பதிவை  வெள்ளைத்தாளில்  நகல் எடுத்துக் கொடுத்து அனுப்பிய செய்தியை சில நாள்களுக்கும் முன்பாக ஊடகங்களில் பார்த்தோம். கடந்த மாதம், திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய தம்பி ஒருவர் எக்ஸ்-ரே படத்தை செய்தித்தாளால் மூடி எடுத்துவந்ததைக் கண்டு 'கவர் இல்லையா' என்றேன். 'இல்லையாம். இதோ மாத்திரைகளுக்கும் கூட கவர் இல்லை என்று கூறிவிட்டார்கள் ' என்று கையில் இருந்த ஓருமாதத்திற்கான மாத்திரை அட்டைகளை காட்டினார் என்னிடம். திருச்சி மருத்துவமனை சுமார் பத்து மாவட்டங்களிலிருந்து வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் 'பெரியாஸ்பத்திரி' ஆகும்.  சிகிச்சையும் கூட சிறப்பாகவே இருக்கிறது,பெரிய குறையில்லைதான். அப்படித்தான் மற்ற அரசு மருத்துவமனைகளும் உள்ளன. ஆனால், இப்படி நுகர்வோர் மீதான அலட்சியம் மட்டும் அரசு மருத்துவமனைகளில் தொடர்வது ஏன் என்கிற கேள்வி முக்கியமானது. இது வெறும் அலட்சியம் மட்டுமா அல்லது ஒருவகையிலான அதிகாரத்துவமா என்பதையும் நாம் விசாரணைக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது 25 வயதுடைய இளைஞன் விக்னேஷ் என்பவர்  கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. நிச்சயமாக அது கண்டிக்கத் தக்கச் செயல்தான். சட்டப்பூர்வ பார்வையில் தண்டிக்கப்பட வேண்டிய செயலும்தான். கத்தி எடுப்பதே பிரச்சனைகளை தீர்க்க வழி என்கிற பார்வைக்கு  மனித நாகரீகத்தில் இடமளிக்கக் கூடாது. அதே வேளை மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டோர் களை(நோயாளிகள் மற்றும் அவர்களின் தரப்பினர்களை)  அதிகம் சோதிக்கின்றன என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது. மருத்துவர் பாலாஜி அவர்கள் தமக்கு அளித்த சிகிச்சையில் அலட்சியம் காட்டியதாகவும், தம்மை மிக மோசமான வார்த்தைகளால் அவமதிப்பு செய்ததாகவும் மரணப்படுக்கையில் கிடக்கும் புற்று நோயாளியான ஐம்பது வயதைக் கடந்த பிரேமா கூறுகிறார். பிரேமாவின் மகன்தான் மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷின்  தாய். சிகிச்சை குறித்த குற்றச்சாட்டை விசாரணையின் வழியேதான் நாம் பேச முடியும். ஆனால், மருத்துவமனைகளில் வெகுமக்கள் மீது தொடரும் அவமதிப்புகள்  பற்றி பேசித்தான் ஆக வேண்டும். 

சிறைக்கூடங்களும்   மருத்துவமனைகளும் சாராம்சத்தில் ஒரே வகையிலான ஒடுக்குமுறை கூடங்களாக இயக்கப்படுவதை ஃபூக்கோ  போன்ற பின்னை நவீனத்துவ அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள்.   
சிறைக்கைதிகள் மீது சிறை அதிகாரிகள் அதிகாரம் செலுத்துவதைப் போலவே நோயாளிகள் மீது மருத்துவர்கள் அதிகாரம் செலுத்துவதை பல்வேறு சான்றுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்குவார்கள்  அவ்வறிஞர்கள். அதையே நாம் நேரிலும் காணமுடிகிறது. பல மருத்துவர்கள் (அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பலரும் கூட) தங்களை 'சிறை அதிகாரிகள்' என்றே கருதுகிறார்கள். அவர்களை பொருத்தமட்டில் நோயாளிகள் கைதிகள். சிறைச்சாலையில் கைதிகளை சந்திக்கும் நேரத்திலும் மருத்துவமனைகளில் நோயாளிகளை சந்திக்கும் நேரத்திலும்  நடைமுறைப்படுத்தப்படும் நடைமுறைகளை ஒப்பிட்டு பாருங்கள். கைதிகள், நோயாளிகள், பார்வையாளர்கள் ஆகியோர் மீது  ஏறத்தாழ ஒரே வகையிலான கெடுபிடிகள், கண்காணிப்புகள், அச்சுறுத்தல்கள்.‌ சரி, மருத்துவமனைகளில் கட்டுப்பாடுகள் கூடவே கூடாதா என்கிற 'பொது புத்தி கேள்வி' வரும். நலன் சார்ந்த கட்டுப்பாடுகள் அதிகாரம் சார்ந்த கட்டுப்பாடுகளாக நடைமுறைப் படுத்தப்படுவதுதான்  இங்கே பிரச்சனை என்கிறேன். அந்த அதிகார தொணியும் அவமதிப்பும்  பலகோடி பாமரர்களாலும் சகித்துக்கொள்ள முடிகிறது. அப்படி சகித்துக்கொள்ளச் செய்யும் வகையில் அவர்கள் மீது அதிகாரமும் செலுத்தப்படுகிறது. இந்த அதிகாரத்தை சமூகத்தில் நிலவும் சொல்லாடல்கள் மூலமும் உருவாக்க முடிகிறது. மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக்  கண்டித்து அறிக்கை அளித்துள்ள மருத்துவரும் பாமக தலைவருமான அன்பு மணி,  'மருத்துவர்களை கடவுள்களாக பார்க்க வேண்டும் ' என்று கூறியுள்ளார். மருத்துவர்கள் அதிகாரிகளாக இருப்பதே மக்கள் மீதான வன்முறை . ஆனால், இப்படி கடவுளின் பீடத்தை அளிக்க 'சமூக நீதி பேசுபவர்களே' விரும்புகிறார்கள் எனில் என்ன சொல்லுது. இதெல்லாமும்தான்‌  மருத்துவமனைகளை அதிகார மையங்களாக ஆக்கிவிடுகின்றன. 
சில வேளைகளில் அதுவே எதிர் விளைவை உருவாக்கியும் விடுகிறது, கிண்டியில் நடந்த கத்திக்குத்தைப் போல. இத்தகைய எதிர்விளைவு  சரி என்று வாதிட ஒன்றுமில்லை. ஆனால், இத்தகைய எதிர்விளைவுகளை பக்கவிளைவுகளாக உருவாக்கும் காரணிகளை யார் கண்டுகொள்கிறோம் என்பதுதான் கேள்வி.‌ மருத்துவமனையிலேயே வைத்து ஓர் மருத்துவ நிபுணரை கத்தியால் தாக்கிய வன்செயலை தலைவர்கள் முதல் யாவரும் பரவலாக கண்டிக்கிறோம். மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று போராட்டத்திலும் இறங்கியுள்ளனர். மருத்துவர்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதுபோலவே மருத்துவமனைகளில் நுகர்வோரின் சுயமரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். உயிருக்கு இணையானதுதான்  சுயமரியாதையும். அதனால்தான் சுயமரியாதைக்கான   போராட்டங்களில் எத்தனையோ போராளிகள் உயிரைக் கொடுத்துச் சென்றுள்ளனர். 

மேலும், மருத்துவமனை சீர்த்திருத்தங்கள் குறித்து இனியாவது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும். மக்களின் உயிரை பணயமாக வைத்து நடத்தப்படும் அதிகாரமும் அத்துமீறலும் சுரண்டலும் ஒழிக்கப்பட வேண்டும். அதேபோல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைப் போலவே நோயாளிகளை பராமரிப்பவர்களுக்கான வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும். கிண்டியில் தாக்குதல் நடத்திய விக்ணேஷுக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வயதுடைய ஒரு இளைஞன் அவர். அண்மையில் அவருடைய தந்தை காலமாகி யுள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட தம்முடைய தாயாரின் மலத்தை அள்ளுவது முதற்கொண்டு அனைத்து பராமரிப்பு பணிகளையும் அந்த இளைஞர்தான் செய்துள்ளார். அரசு மருத்துவமனையிலும் பணம் செலவழிக்க வேண்டியதை எண்ணி ஒருபக்கம் கலக்கம்.  இத்தனை,  மனநெருக்கடியில் ஏதேனும் ஐயம் கேட்டால் 'நீ டாக்டரா நான் டாக்டரா?' போன்ற அதிகார தொணி சொற்கள் வேறு அவரை சிறுமைப் படுத்தியுள்ளது. 'முந்தைய தவறான சிகிச்சையே உன் தாயின் இன்றைய வலிநலிக்கு முக்கிய காரணம் ' என்று தனியார் மருத்துவமனை அவரிடம் கூறியிருக்கிறது. ஒரு சராசரி இளைஞன் மீது இத்தனை அழுத்தங்கள் விழும் போது அவனை வழிநடத்த யாருமில்லை. கத்தியை தூக்கி பழிதீர்க்க வாழ்க்கை ஒன்றும் திரைப்படக் காட்சியல்ல என்று அவருக்குப் போதிக்க எவருக்கும் நேரமில்லை. அவரின் குற்றச்சாட்டை செவிக்கொடுத்துக் கேட்கவேண்டிய  அரசும் அதன் துறைகளும் மற்றுமோர் அதிகார அமைப்புகளாக அச்சுறுத்துகின்றன.  இதெல்லாமும் சேர்ந்துதான் அந்த இளைஞனை குற்றத்தில் தள்ளியுள்ளன‌. குற்றம் மட்டுமல்ல குற்றத்தின் சூழலும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நீதியின் நிபந்தனை. எனவே,  விக்னேஷ் மீதான குற்றச்சாட்டைப் போலவே, சிகிச்சை மீதான குற்றச்சாட்டும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை துயர நிகழ்வைத்  தொடர்ந்தாவது  மருத்துவமனைச் சீர்த்திருத்தங்களுக்கான பாதையை  திறந்துவிட அரசு மனம் திறக்க வேண்டும்.

புதுப்பிக்கப்படும் பழைய பொய்.

ஸ்டாலின் தி. புதுப்பிக்கப்பட்ட 'தாளமுத்து-நடராசன் நினைவிடம்' இன்று (25/1/2025) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திற...