வியாழன், 3 அக்டோபர், 2024

ராஜகோபாலாச்சாரியின் மதுவிலக்கு அரசியலும் வேடதார பிராமணியமும் .

ஸ்டாலின் தி 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் ராஜகோபாலாச்சாரி என்னும் ராஜாஜியின் உருவத் தட்டி(Cutout) வைக்கப்பட்டது பேசுபொருளாக ஆகியுள்ளது. விசிகவை ஆதரிப்பவர்களில் பலரும் கூட இதை ஏற்கவில்லை என்பது தெரிகிறது. 'ராஜாஜி மதுவிலக்கு என்பதில் உறுதியாக இருந்தவர் ' என்பதாக விசிகவின் பதிலாக உள்ளது. 1937 இல் சேலம் மாவட்டத்தில் முதன் முதலில் மதுவிலக்கை கொண்டுவந்தார் அன்றைய சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி. அதன் பிறகு இரண்டாவது முறையாக முதல்வரானபோது(1952) தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டுவந்தார் ராஜாஜி. 1971 இல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி மதுவிலக்கை நீக்கும் வரை ராஜாஜி கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம் இருந்தது. இவற்றை வைத்துப் பார்த்தால் ராஜாஜி முற்போக்கான அரசியல்வாதியாக தெரியலாம். ஆனால், ராஜாஜியின் அசலான சனாதன முகத்தை மறைக்கவே அவருடைய மதுவிலக்கு அரசியல் அவருக்குத் தேவைப்பட்டது. உண்மையில் அவருடைய மதுவிலக்கு சிந்தனை என்பது 'பிராமண ஆச்சாரம் ' என்கிற பண்பாட்டிலிருந்தே வந்தது. 

மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தத்தை சிதைக்கும் நோக்கில் வைதீக பார்ப்பனர்கள்(வேஷ பார்ப்பனர்கள்) தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள அதுவரை அவர்களால்-மிக விருப்பப்பட்டு- கடைப்பிடிக்கப்பட்டு வந்த சிலவற்றை கைவிட நேர்ந்தது. அவற்றில் இறைச்சியும் மதுவும் முக்கியமானவை. பசுக்கறியையும் மது(சுரா) பானத்தையும் சுவைத்துக் களியாட்டம் ஆடிவந்த வேஷ பார்ப்பனர்கள் பசுவை புனிதமாக்கி மாட்டுக்கறி உண்பதை தவிர்த்தார்கள்; மதுவை கைவிட்டு ஒழுக்க சீலர் வேடம் பூண்டார்கள். தங்களால் கைவிடப்பட்ட மாட்டுக்கறியை உண்டவர்களை தீண்டப்படாதவர்களாக அறிவித்தார்கள். மது/கள் உண்டவர்களை காணக்கூடாதவர்களாக ஆக்கினார்கள். தீண்டாமையில் மாட்டுக்கறியும் மதுவும் முக்கிய கருவிகளாக பார்ப்பனர்களால் ஆக்கப்பட்டன. பார்ப்பனர்கள் வணங்கும் தெய்வங்களுக்கு பாலும் நெய்யும் படைக்கப்பட்டன; பார்ப்பனரல்லாத சூத்திரர்/தலித்துகள் வணங்கும் தெய்வங்களுக்கு சாராயம் திணிக்கப்பட்டது;குடிசாமிகள் குடிகாரசாமிகளாக ஆக்கப்பட்டன. 'மதுவிலிருந்து விலகி இரு' என்று போதித்த பௌத்தத்தை சிதைத்த பார்ப்பனியம் விலக்கப்பட்டவர்களின் அடையாளமாக மதுவை ஆக்கியது.

இந்த வரலாற்றிலிருந்துதுதான் ராஜாஜியின் மதுவிலக்கு எண்ணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் ராஜாஜியால் மதுவிலக்கு (1937) கொண்டுவரப்படுவதற்கு முன்னரே சென்னை மாகாண சட்டமன்றத்தில் மது எதிர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் தாதா இரட்டமலை சீனிவாசன். வெகுமக்களின் நலனுக்காக மது எதிர்ப்பில் கவனம் செலுத்திய இரட்டமலை சீனிவாசன் அவர்கள் 'விடுமுறை தினங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும்' என்று 1929 செப்டம்பர் 24 அன்று சென்னை மாகாண சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். மது எதிர்ப்பில் ராஜகோபாலாச்சாரியின் நோக்கம் வேறு, இரட்டமலையாரின் நோக்கம் வேறு. மக்களை சீர்கேட்டிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மீட்க வேண்டும் என்பது இரட்டமலையாரின் நோக்கம். பிராமண பண்பாட்டை ஒழுக்கத்தின் பெயரில் நிறுவிட வேண்டும் என்பது ராஜகோபாலாச்சாரியின் நோக்கம். இரட்டமலையாரின் கொள்கை வாரிசாக தம்மை ஆக்கிக் கொண்ட தொல்.திருமாவளவன் அவர்களின் நோக்கம் ராஜாஜியின் நோக்கமாக இருக்க முடியாது என்பதை நம்மால் உறுதியாக கூறமுடியும். எனவேதான் சொல்ல வேண்டியிருக்கிறது, 'நாம் யாரை வழிகாட்டியாக முன்னிறுத்துகிறோம் என்பது யாருடைய நோக்கத்தை முன்னிறுத்துகிறோம் என்பதாகவும் ஆகிவிடுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தீட்சா தின குறிப்புகள்.

ஸ்டாலின் தி 1  1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில்...