வியாழன், 3 அக்டோபர், 2024

தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமை: பேசப்படுவதிலும் மறைக்கப்படுவதிலும் உள்ள வஞ்சகங்கள்.



ஸ்டாலின் தி


சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் (2/10/2024) நடைப்பெற்ற காந்தி பிறந்தநாளை ஒட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'கடந்த மூன்று ஆண்டுகளில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது' என்று பேசியிருக்கிறார். அதை மறுக்கும் வகையில் 'தமிழகத்தில் அனைவரும் அண்ணன் தம்பிகளாக பழகுகிறார்கள்.சாதி-மதம் பார்க்காமல் தமிழர் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள். இந்தியாவில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. புள்ளி விவரங்களை சேகரிக்கும்போது சாதிகள் அடிப்படையில் அவை கிடைத்திருக்கலாம். ஆதிதிராவிடர்கள் என்பதாலேயே தாக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆதிதிராவிடர் மக்களை தாக்க வேண்டும் என்று யாரும் முயற்சித்ததே இல்லை' என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக பின்புலம் உள்ளவர். பொய்யும் புரட்டும் அவர்களுக்கு கைவந்த கலை. ஆனால், இந்த விவகாரத்தில் அவர் கூறியிருப்பது உண்மையான தகவல். சதவீதக் கணக்குகளில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அட்டவணைச் சமூகங்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என்பது கண்கூடான உண்மை. அரசு தரப்பிலான தகவல்களே அந்த உண்மையை கூறுகிறது. ஆளுநர் கூட மத்திய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் மூலம் கிடைத்த தகவல் என்றே தம்முடைய குற்றச்சாட்டை முன்வைக்கிறார். பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சாதிய வன்கொடுமைகள் பற்றி ஆர்.என்.ரவி பேசப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன என்பது அப்பட்டமான உண்மை. சமயம் பார்த்து திமுக அரசை கண்டிக்கும் நோக்கில் ஆர்.என்.ரவி பேசியிருந்தாலும் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இதை ஆர்.என்.ரவி மட்டுமல்ல, தலித் களச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால், ஆர்.என்.ரவிக்கு பதில் கூறினால் போதும் அல்லது அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்தால் போதும் என்று ஆளும் திமுக தரப்பு நினைக்கிறது. அப்படித்தான், திமுக ஆட்சியின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பேச்சு இருக்கிறது. 

அண்மையில் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெற்ற தகவலின்படி,
கடந்த மார்ச் வரையில் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் 394 கிராமங்களில் அதிகம் உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 29 கிராமங்கள், திருச்சி மாவட்டத்தில் 24 கிராமங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 கிராமங்கள், தேனி மாவட்டத்தில் 20 கிராமங்கள் என இம்மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன(செய்தி: விகடன் இணையதளம் 27/9/2024). 

இதெல்லாம் அரசு கணக்கில் வந்த தகவல்கள். ஆனால், ஆயிரக்கணக்கான கிராமங்களில் சாதிய பாகுபாடும், வன்முறைகளும் நடைமுறையில் உள்ளன என்பதே எதார்த்தம். இரட்டைக் குவளை, பாதையில் தீண்டாமை, வேளாண் கூலியில் பாகுபாடு, பிணங்களை கொண்டுசெல்லும் பாதைகளில் தடை, முடிவெட்டிக்கொள்ளுவதில் தீண்டாமை, நிலவுரிமையில் தீண்டாமை, தலித் ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி தலித் உறுப்பினர்கள் ஆகியோரிடம் காட்டப்படும் வன்மம் என பலவகையிலான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் அன்றாடம் நடந்துகொண்டுதான் உள்ளன. ஆணவக்கொலை, சாதியக் கொலை என கொடுக்கும் மக்களும் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றன. தலித் கொலைகளை நடத்துவதற்காகவே கூலிப்படைகளை நிறுவும் அளவுக்கு சாதிவெறியர்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். வன்கொடுமை வழக்கை பதிவுசெய்யவும் தலித்துகளுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் காவல்துறை காட்டும் அலட்சியம் கொஞ்சமும் குறையவில்லை. காவல்துறையில் மட்டுமல்ல அரசின் பல்வேறு துறைகளிலுமே தலித் விரோதப் போக்கு கடுமையாக தொடர்கிறது. மொத்தத்தில், சமூகத்திலும் அரசுத் துறைகளிலும் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் சாதிபார்க்காமல் அண்ணன் தம்பியாகத்தான் அனைவரும் வாழ்கிறார்கள், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்கிறார் சட்டத்துறை அமைச்சர். வெற்று சவடால்களால் ஆளுநரை எதிர்கொள்ள முயற்சிக்கும் அவர் அதன்மூலம் சாதிய வன்முறைகளை மறைக்கவும் பார்க்கிறார். ஆளுநர் பேசுவது திராவிட அரசியலுக்கு எதிராக இந்துத்துவ அரசியலை வளர்ப்பதற்குத்தான் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் சாதிய வன்முறைகளே இல்லை, தீண்டாமை வன்கொடுமைகளே கிடையாது என்று திமுக அரசு அப்பட்டமாக பொய்க்கூறுவதை எப்படி ஏற்க முடியும். 'ஆதிதிராவிடர்கள் என்பதாலேயே தாக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆதிதிராவிடர் மக்களை தாக்க வேண்டும் என்று யாரும் முயற்சித்ததே இல்லை' என்று இத்தனை வன்கொடுமைகளுக்கு மத்தியிலும் மாநில சட்டத்துறை அமைச்சரே கூறுவது எவ்வளவு பெரிய வன்கொடுமை. இதெல்லாம் எந்த வகையில் சமூக நீதி அரசியலில் சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தீட்சா தின குறிப்புகள்.

ஸ்டாலின் தி 1  1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில்...