செவ்வாய், 30 ஏப்ரல், 2024

புரட்சியாளர் அம்பேத்கர்: தொழிலாளர் சமூகம் ஏந்த வேண்டிய அறிவாயுதம்.

ஸ்டாலின் தி 

புரட்சியாளர் அம்பேத்கர் இந்திய தொழிலாளர்களின் வரலாற்றில் முக்கிய பாத்திரம் வகித்தவர் என்பதை கடந்த கால வரலாறு பதிவு செய்துள்ளது. குழந்தைப் பருவத்திலேயே கிராமப்புற சாதிய சூழலையும் நகர்ப்புற தொழிலாளர்களின் வாழ்க்கை நெருக்கடிகளையும் கண்டு உள்வாங்கிக் கொண்டவர் அவர். பார்ப்பனியத்தாலும் சுரண்டல்வாதத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக கடைசிவரை களம் நின்ற தலைவராக அவர் உருவானதற்கு அவருடைய இளம்பருவகால சமூக அனுபவங்களுக்கு முக்கிய இடமுண்டு என்பதை அவருடைய வரலாற்றை அறிந்தவர்கள் அறிவார்கள்.

1930 களில் வட்டமேசை மாநாடுகளில் தம்முடைய ஆழமான சமூக விடுதலைக்கான சிந்தனையை பதிவு செய்த அண்ணல், தலித்துகள், பெண்கள் உள்ளடங்கிய உழைக்கும் மக்களுக்கான தீர்வுகளை நோக்கியும் அதேநேரத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தார். பிராமணியத்தால் மனிதர்களின் மதிப்பு மட்டுமல்ல, அவர்களின் உழைப்பும் சுரண்டப்படுவதை எடுத்துறைத்தார். அந்நிலையில் 1935 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தின்படி மாநில சுயாட்சிகளுக்கான தேர்தல் 1937 இல் நடத்தப்படுவதற்கான வேலைகள் துவங்கியிருந்தன. அதன்படி, அண்ணல் ஒரு அரசியல் கட்சியை நிறுவ எண்ணினார். தலித்துகள், பெண்கள், நிலத்திலும், தொழிற்சாலைகளிலும் உழைக்கும் அனைத்து மக்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் கட்சியாக அது இருக்க வேண்டும் என்கிற பார்வையை அவர் கொண்டிருந்தார். அதன் படியே, 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று 'சுதந்திர தொழிலாளர் கட்சி (Independent Labour Party-ILP)' என்னும் அரசியல் கட்சியை துவக்கினார். சுதந்திர தொழிலாளர் கட்சியனது இந்தியா முழுவதுமுள்ள தொழிலாளர் நலனை நோக்கமாகக் கொண்டே நிறுவப்பட்டது. கட்சியின் சிவப்பு நிறக் கொடியின் 'இடது' மேல் புறத்தில் பதினோரு நட்சத்திரங்கள் இடம் பெற்றன. அவை, அன்றைய பதினோரு இந்திய மகாணங்களைக் குறித்தன. 

தொழில் மயமாக்கலில் அரசு முதன்மையாக செயல்படுவதே பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறிய சுதந்திர தொழிலாளர் கட்சி, தொழிற்சாலை தொழிலாளர்களின் நலனை பாதுகாத்தல், தொழில்சார்ந்த கல்வியை வளர்த்தெடுத்தல், தொழில்நுட்பங்களை பெருக்குதல், நடுத்தர-சிறு குத்தகைக்காரர்களின் உரிமைகளை பாதுகாத்தல் போன்றவற்றையும் வலியுறுத்தியது. தொழிலாளர்களின் பிரச்சனையாக இருப்பது பொருளாதார காரணிகள் மட்டுமல்ல, சமூகத்தில் வேரூன்றியுள்ள சாதியக் காரணிகளும்தான் என்பதை அண்ணலும் அவருடைய சுதந்திர தொழிலாளர் கட்சியும் எடுத்துரைத்தது இந்திய தொழிலாளர் அரசியலில் முக்கியமான தடமாகும். சமூகக் காரணிகளை பின்னால் தள்ளி பொருளாதார காரணிகளை மட்டுமே முன்னிறுத்திவந்த அன்றைய இடதுசாரிகளுக்கு இது ஒருவகையிலான ஒவ்வாமையை ஏற்படுத்தியது. ' சோசியலிசத்தை நிறுவ விரும்பும் சோசியலிஸ்டுகள், சோசியலிசத்திற்கு சமூக சீர்த்திருத்தமே அடிப்படையானது என்பதை உணர வேண்டும். சமூக சீர்திருத்ததை முன்னெடுப்பதிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது' என்கிற அண்ணலின் வார்த்தைகள், அன்றைய சோசியலிஸ்டுகளின் பார்வையும் செயல்பாடும் என்னவாக இருந்தன என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்திய தொழிலாளர்களின் எதிர் தரப்பு முதலாளித்துவம் மட்டுமல்ல, பார்ப்பனியமும்தான் என்பது அண்ணலின் அழுத்தமான முடிவாகும். அதனால்தான், 'பிராமண் ஷாஹி(பிராமணியம்)யும், பந்த்வால் ஷாஹி(முதலாளித்துவம்)யும் இந்திய தொழிலாளர்களின் இரட்டை எதிரிகள்' என்று அவர் முழங்கினார். அண்ணலின் இந்த வாதம் தொழிலாளர்களிடம், குறிப்பாக தலித் தொழிலாளர்களிடம் பெரும் தாக்கத்தை அன்று உருவாக்கியது. கட்சி ஆரம்பித்த சிறிது காலத்திலேயே பெருமளவுக்கான தொண்டர்கள் ஈர்க்கப்பட்டனர். சுதந்திர தொழிலாளர் கட்சியை துவக்குவதற்கும் முன்பாகவே, 1935 இல் பம்பாய் நகராட்சி பணியாளர்களை ஒருங்கிணைத்து 'பம்பாய் நகராட்சி காம்கர் சங்கம்' என்ற சங்கத்தை அண்ணல் துவக்கியிருந்தார். சுதந்திர தொழிலாளர் கட்சியின் வருகைக்குப் பிறகு இச்சங்கத்தில் பம்பாய் நகராட்சி பணியாளர்களில் ஐந்து சதவீதம் பேர் அச்சங்கத்தின் உறுப்பினர்களா இருந்தனர். இவ்வாறு, மக்கள் செல்வாக்குப் பெற்ற சுதந்திர தொழிலாளர் கட்சி, அது சந்தித்த முதல் தேர்தலில் அதற்கான பலனையும் கண்டது.

 1937 ஆம் ஆண்டு பம்பாய் தேர்தலில் மத்திய சட்ட மன்றத்திற்காக 13 தனித் தொகுதிகளிலும் 4 பொது தொகுதியிலும் போட்டியிட்ட சுதந்திர தொழிலாளர் கட்சி, 11 தனித்தொகுதிகளிலும் 3 பொதுத் தொகுதிகளிலும் என மொத்தம் 14 இடங்களில் வென்றது. வெற்றி பெற்ற 14 பேர்களில் அண்ணல் அம்பேத்கரும் ஒருவராக சட்டமன்றத்திற்குள் சென்றார். 

1937 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல், பம்பாய் சட்டமன்றத்தில் வாட்டன் முறை என்னும் அடிமை முறையை ஒழிக்கும் வகையில் ஒரு மசோதாவை அண்ணல் தாக்கல் செய்தார். வாட்டன் என்னும் பண்ணையடிமை முறையை அரசே அங்கீகரித்து வந்ததை அண்ணல் கடுமையாக சாடினார். அதுபோலவே, பிராமணர்களையும், சாதி இந்துக்களையும் இடைத்தரர்களாக நியமித்து வரிவசூல் செய்யப்படும் கோட்டி முறையின் மூலம் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற ஏழை மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை ஒழிக்கும் நோக்கில், கோட்டி முறை ஒழிப்பு சட்ட மசோதாவையும் அவர் தாக்கல் செய்தார். மராத்தாக்களும் பிராமணர்களும் கோட்டிகளாக இருந்ததால், அவர்களை பகைத்துக்கொள்ளுவதை விரும்பாத காங்கிரஸ் ஆட்சி, அண்ணலின் மசோதா மீது பத்து மாதங்களாகியும் எந்த வாக்கெடுப்பையும் நடத்தாமல் தட்டிக்கழித்தது. இதைத்தொடர்ந்து அண்ணலின் சுதந்திர தொழிலாளர் கட்சி மக்களிடம் கோட்டி முறைக்கெதிரான பிரச்சார இயக்கத்தை நடத்தியது. கோட்டி முறையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிற சாதி இந்துக்களும், கம்யூனிஸ்டுகளும் இதற்கு ஆதரவுகளைக் கொடுத்தனர். கோட்டி முறையை ஒழிக்கக்கோரி அண்ணல் அம்பேத்கர் தலைமையில், 1938 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாளில், பம்பாய் நகரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் சுமார் இருபதாயிரம் பேர் பங்கேற்றனர். ஆனாலும், காங்கிரஸ் அரசு பிராமணர்கள் மற்றும் மராத்தா போன்ற சாதி இந்துக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டக் கூடிய கோட்டி முறையை ஒழிக்க மறுத்துவிட்டது. சுதந்திரத்திற்கு பிறகு, 1949 இல்தான் கோட்டி முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், அதற்கான விதையை தூவியதும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததும் அண்ணலின் சுதந்திர தொழிலாளர் கட்சிதான். 

1938 ஆம் ஆண்டு செப்டம்பரில் 'தொழில்சார் சச்சரவு மசோதா' என்னும் மசோதாவை பம்பாய் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொண்டுவந்தது. வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொழிலாளர் உரிமையை அந்த மசோதா பறித்தது. 'வேலை நிறுத்தம் கூடிக்கொண்டே போவதை இனி அனுமதிக்க முடியாது' என்று ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி வாதிட்டது. அந்த மசோதாவைக் கண்டித்து அண்ணல் கடுமையாக எதிர் வாதம் செய்தார். 'வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. அதை தடை செய்வது அனுமதிக்கவே முடியாது' என்று முழங்கிய அண்ணல் அம்பேத்கரை நோக்கி கம்யூனிஸ்டுகளும் வரத்துவங்கினர். இந்த சட்ட மசோதாவை எதிர்த்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தை துவக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் அறைகூவல் விட்டபோது அதை ஆதரித்து களம் இறங்கினார் அண்ணல். தொழில்சார் சச்சரவு மசோதாவை எதிர்த்து 1938 நவம்பர் ஆறாம் தேதி மாபெரும் கண்டன கூட்டத்தை சுதந்திர தொழிலாளர் கட்சியும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து நடத்தினர். சுமார் எண்பதாயிரம் பேர் இதில் பங்கேற்றனர். அதற்கு அடுத்த நாள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றது. அதைத் தொடர்ந்து சுமார் ஒரு இலட்சம் பேர் பங்கேற்ற மற்றொரு கண்டனக் கூட்டமும் நடத்தப்பட்டது. அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கேவும் அண்ணலும் விமர்சனங்களைக் கடந்து தொழிலாளர் நலனுக்காகக் கைக்கோர்த்து செயல்பட்டனர். தொழில்சார் சச்சரவு மசோதாவை விடாப்பிடியாக காங்கிரஸ் நிறைவேற்றினாலும் அண்ணலின் தொழிலாளர் நல சிந்தனையை இப்போராட்டங்களும் செயல்பாடுகளும் வெளிப்படுத்தியன.

1941 இல்‌ வைசிராய்‌ தமது நிர்வாகக்‌ குழுவை விரிவு படுத்தினார்‌. அதில்‌ எட்டு உறுப்பினர்கள்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட்டனர்‌. அவர்களில்‌ தலித் சமூக பிரதிநிதிகள் என எவருமில்லை. இதைக்‌ கண்டித்து இங்கிலாந்து அமைச்சரவையில்  
இந்தியாவுக்கான அமைச்சரான அமெரி அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தந்தி அனுப்பினார். இந்தியாவின் நிர்வாகத்தில் இவ்வாறு ஒரு பூர்வ சமூகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தொடர்ந்து மக்கள் மத்தியிலும் அண்ணல் குரல்கொடுத்தார். அதன் நல் விளைவாக, வைஸ்ராய் அமைச்சரவையில் இணைக்கப்பட்டு, 1942 ஆம் ஆண்டில் 'தொழிலாளர் நலத்துறை அமைச்சராக' பதவியேற்றர் அண்ணல் அம்பேத்கர். ஒரே வேலையில் ஊதியத்தில் நிலவிய பாலின பேதம், அதிக வேலை நேரச் சுமை, சேம நல ஊதியம், காப்பீடு திட்டம், வேலை நிறுத்த உரிமை, பெண் தொழிலாளர் உரிமை போன்ற அடிப்படைகளைக் கொண்டு, (1)சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம், (2)தொழிலாளர்களில் 12 மணி நேரம் வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேரம்,(3)முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை நடத்தி அந்த திட்டத்தை அமல்படுத்துதல்,
(4)சுரங்க பெண் தொழிலாளர்கள் மகப்பேறு நலத்திட்டம்,
(5)பெண் தொழிலாளர் நலநிதி,
(6)பெண்கள் மற்றும் குழந்தைகள்,
(7) தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்,
(8)பெண் தொழிலாளர் மகப்பேறு நலத்திட்டம்,
(9)நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலை திட்டத்தில் பெண்கள் வேலை வாய்ப்பு குறித்த தடை மீட்பு,
(10)தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல்,
(11) தேசிய வேலை வாய்ப்பு மையங்கள்,
(12)ஊழியர் அரசாங்க காப்பீட்டுத் திட்டம்
குறைந்த பட்ச ஊதிய திட்டம்,
(13)நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள், வருங்கால வைப்பு நிதித்திட்டம்,
(14)தொழிலாளர் சேம நல நிதித் திட்டம்,
(15)தொழில்நுட்பப் பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர் திட்டம்,
(16)மகப்பேறு நலச் சட்டம், 
(17)அகவிலைப் படி,
(18)தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்,
(19)தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதாரக் காப்பீடு,
(20)சட்டபூர்வ வேலை நிறுத்தம், 
(21)வருங்கால வைப்பு நிதி திட்டம்,
(22)ஊழியர்கள் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்,
(23) இந்திய தொழிற்சாலை சட்டம்,
(24) இந்திய தேயிலை கட்டுப்பாட்டு மசோதா,
(25)இந்திய தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான வீட்டு வசதி திட்டம்,
(26)மோட்டார் வாகனங்கள் (ஓட்டுநர்) மசோதா,
(27)தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டம்,
(28)தொழிலாளர் இழப்பீடு (திருத்த) சட்டம், ஆகிய 28 மசோதாக்களை அண்ணல் அம்பேத்கர், தொழிலாளர் நல அமைச்சாரக கொண்டுவந்தார். இதன் மூலம், நாட்டின் சுதந்திரத்திற்கும் முன்பாகவே தொழிலாளர் உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவரானார் அண்ணல் அம்பேத்கர். 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தொழிலாளர் சமூகத்திற்கான தலைவரான அவரை, இந்திய தொழிலாளர் சமூகம் 'தீண்டாமல்' விட்டது இந்திய தொழிலாளர் நல வரலாற்றில் நேர்ந்துவிட்ட துயரமாகும். 1938 ஆம்‌ ஆண்டில்‌ மன்மாட்‌ என்னுமிடத்தில்‌, சுமார் இருபதாயிரம் பேர் பங்கேற்ற இரயில்வே தொழிலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது, ' சமூகச்‌ சமத்துவத்திற்கு மட்டுமல்லாமல்‌, எல்லோருக்குமான பொருளாதார வாய்ப்புகள்‌ கிடைப்பதற்கும்‌ பிராமணியம் தடையாக இருப்பதை' அண்ணல் சுட்டிக்காட்டிப் பேசினார். இதை அவர் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளார். ஆனால், அந்த உண்மையை இன்றளவும் கூட இந்திய தொழிலாளர் சமூகம் உணரவில்லை. உணர்ந்திருந்தால், பிராமணியத்தையும் அதன் சாதிய அமைப்பு முறையையும் தூக்கியெறிந்துவிட்டு அவர்கள் 'தொழிலாளர் வர்க்கம்' என்னும் நிலையையும் பல வெற்றிகளையும் அடைந்திருப்பார்கள். 

இன்றைக்கும், தொழிலாளர் நலன்கள் கடுமையாக நசுக்கப்படுகின்றன.தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் வேறுபாடின்றி இன்று தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர் முறை, ஊதிய உயர்வுக்கும் ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதமற்ற நிலை, பணி நிரந்தரமில்லாத சூழல், இட ஒதுக்கீடுகளை பூர்த்தி செய்வதில் உள்ள பாகுபாடுகள், பணிச்சுமைகளை தொழிலாளர் மீது திணித்தல், தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குதல், தனியாருக்கு அரசு துறைகளை ஒப்படைத்தல், தொழிலாளர்களிடம் நிலவும் சாதி பாகுபாடுகளை பாதுகாத்தல் போன்றவற்றின் மூலம் ஒன்றிய-மாநில அரசுகளே தனியார் ஆதிக்க நிறுவன பாணியில் தொழிலாளர்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றன, ஒடுக்கிக் கொண்டிருக்கின்றன. எண்பது ஆண்டுகளுக்கும் முன்பாக, ஏகாதிபத்திய ஆங்கிலேயர் ஆட்சியில் பன்னிரெண்டு மணி நேர வேலை என்கிற வதை முறையை நீக்கி, எட்டுமணி நேர வேலை என்பதை உறுதி செய்தார் அண்ணல் அம்பேத்கர். ஆனால், சுதந்திர இந்தியா, சமூக நீதி மண் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்போர்கள் 'முதலீட்டார்களை திருப்திபடுத்த' என வெளிப்படையாக அறிவித்து வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக ஆக்குகிறார்கள் எனில், தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் மோசமான சூழலும், அச்சூழலை எதிர்கொள்ளுவதற்கான அரசியலுக்கு அண்ணல் அம்பேத்கரின் இன்றியமையாத் தேவை எத்தகையது என்பதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவையாகும்.

 தொழிலாளர்களின் அறிவாயுதமாக இந்திய தொழிலாளர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை கைக்கொள்ளும்போது, இந்திய சமூக-அரசியல் மாற்றங்களுக்கு வரலாறு இடமளிக்கும் என்பதை நினைவில் நிறுத்துவது, ஒவ்வொரு தொழிலாளருக்கும் தொழிலாளர் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்ட ஒவ்வொருவருக்கும் கடமையாகும்.

(மே 1: தொழிலாளர் தினம்)


திங்கள், 29 ஏப்ரல், 2024

பௌத்தம் காட்டும் நிர்வாணப் புரட்சி.

ஸ்டாலின் தி 

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆடையற்ற உடல்களின் படங்களைப் பகிர்ந்து, நிர்வாணப் புரட்சி என்று சிலர் கூறிவருகிறார்கள். ஆடையானது மனித சமூக வரலாற்றில் அதன் பாதியளவு காலத்திலிருந்து, அதாவது, சுமார் ஒரு இலட்சத்து ஏழாயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இலைகளாலும், பிற மரப்பொருட்களாலும்,  விலங்குகளின் தோல்களாலும், அணிகலன்களாலும் நிரம்பிய உடையின் வரலாறு அதன்  நெடுகிலும் பல்வேறு சமூக தடயங்களையும் பதிந்துவிட்டுதான் வந்திருக்கிறது. இயற்கைச் சூழல்கள் மற்றும் பிற உயிரினங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்ட உடை, அறிவு ரீதியான வளர்ச்சியின் காலத்தில் நாகரீக அடையாளமாக ஆக்கப்பட்டது.  யாருக்கு எந்த உடை, யாருக்கு எந்த உடையை அணியத் தடை, யாருக்கு உடையணிவதே தடை என்பவையெல்லாம் உலக மனித நாகரீகங்களின்  பக்கங்களில் பரவிக்கிடக்கின்றன. 

இந்தியாவில் உடைப்பிரச்சனைகளில் சாதி முக்கிய பங்காற்றியுள்ளது. எந்தெந்த சாதியினர் எந்தெந்த உடைகளை உடுத்த வேண்டும், எந்தெந்த சாதியினர் உடையை உடுத்தக் கூடாது என்கிற வரைமுறைகளை சாதியம் இங்கே வகுத்து வந்துள்ளது.

தலித்துகள், பெண்கள் மீது உடையை முக்கியமாகக் கொண்டு பல்வேறு வன்கொடுமைகளை இங்கே சாதி நடத்தியிருக்கிறது. இன்று, உடையை நீக்குவதை புரட்சி என்று பேசுவதை பார்க்கிறோம். உடையை உடுத்துவதற்காக நடத்தப்பட்ட எத்தனையோப் போராட்டங்களையும் இதே மண்ணின் வரலாற்றிலும் காண்கிறோம்.  இவ்வாறு, உடை அவரவர் பார்வையிலிருந்து வெவ்வேறு அர்த்தங்களால் கருதப்பட்டன. மற்றவற்றைப் போலவேதான், பார்வைகள் தான் உடைகளையும் தீர்மானிக்கின்றன. காங்கிரஸ் மேட்டுக் குடிகளின் அமைப்பாக இருந்ததை மாற்றி, அதை பாமரர்களுக்கான கட்சியாக மாற்ற வேண்டியத் தேவையை உணர்ந்த காந்தி  பாமர உடைக்கு மாறினார்;  சாதியத்தால் தலித்துகள் உடையணிவதும் கூட தடுக்கப்பட்டச் சூழலில், அன்றைய நாகீரக உடையாக கருதப்பட்ட உடையில்  அண்ணல் அம்பேத்கர்  வந்தார். இந்திய உடையரசியலில் பேசவும் எழுதவும் இப்படி நிறைய உள்ளன. 

மேலும், தமிழகத்தில் இந்த உடைநீக்க புரட்சி செய்பவர்கள் பெரும்பாலும் பெரியாரை துணைக்கு அழைத்துக்கொள்ளுவதை காணமுடிகிறது. ஜெர்மனியில் இயங்கிய நிர்வாண சங்கத்தினரோடு பெர்லின் அருகில் நிர்வாணமாக நின்ற பெரியார் அதையே தமிழ் மண்ணில் வலியுறுத்தியது இல்லை என்பதையும், தமது மனைவியைக் கூட ஆண்களின் உடைகளை போன்ற உடைகளை அணியத்தான் சொன்னவர் அவர் என்பதையும், நிர்வாணத்தை யாருக்கும் அவர்  பரிந்துரைக்கவில்லை என்பதையும் இவர்கள் கவனிக்க வேண்டும். 

நிற்க.

நிர்வாணப் புரட்சி என்பதை பற்றி பௌத்தர்கள் பார்வை என்ன என்பதாக சகோதரர் ஒருவரின் பதிவு அமைந்ததால் சில கருத்துகளை சுருக்கிக் கூற இந்த பதிவை இங்கே ஏற்றுகிறேன்.

நிப்பாணம் என்னும் பாலிச் சொல்லின் மற்றொரு வடிவம்தான் நிர்வாணம். நிப்பாணம் என்பது பௌத்தம் அளித்தச் சொல்லாகும். பற்றறுத்தல் என்பது இதன் விளக்கப் பொருளாகும். பற்றறுத்தல் என்பது பேராசைகளையும், பேராசைகளை வளர்க்கும் செயல்களையும் துறத்தல் என்பதாகும்.

அதாவது பௌத்தத்தின் விளக்கத்தில் நிர்வாணம் என்பது வெறும் உடல் தொடர்புடையதல்ல. அது மனம் சார்ந்தது. மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும் கசடுகளை நீக்கி அகத்தூய்மை பெறுவதே முக்தி என்கிறது பௌத்தம். முக்தியின் இன்றைய சொல்தான் விடுதலை. அந்த விடுதலை நிலைதான் பௌத்தத்தின் மொழியில் நிர்வாணம் என்பதாகும்.

அதாவது, மனக்கேடுகளை அறுத்து, மனக்கேடுகளால் உண்டாகும் பாவங்களைத் துறந்து கண்டடைவதே மெய்ஞானமாகும். மெய் ஞானத்தின் உருவகமே திரையற்ற/உடையற்ற உடலாகும். அதனாலேயே உடலுக்கு மற்றொரு பெயர் மெய் என்பதாகும். மெய்ஞானத்தின் உருவகம் உடலென்பதால், மெய்ஞான நிலையான நிர்வாணத்தின் உருவகமாகவும் உடலே ஆனது. ஆதலால்தான் உடல் நிர்வாணம் என்கிற அடையாளத்தையும் அடைந்தது. அதாவது,  உடையற்ற உடலல்ல, மாசற்ற மனமே நிர்வாணம் ஆகும்.

எனவே, நிர்வாணப் புரட்சி என்பது உடைகளை துறப்பதல்ல; மனதை ஆட்கொள்ளும் மாசுடைய சிந்தனைகளை துறப்பதுதான். இதுவே, பௌத்தம் காலம் காலமாக போதித்து வரும் நிர்வாணப் புரட்சியாகும்.

(முகநூலில் 30/4/2021 அன்று ஏற்றப்பட்ட பதிவு.)

திங்கள், 22 ஏப்ரல், 2024

கூட்டன்பர்க் அச்சுக்கும் முன்னவே அச்சாகி வந்த பௌத்த நூல்கள்.



     வஜ்ர சூத்திர நூல் அட்டைப்படம்


ஸ்டாலின் தி 

ஜெர்மனியைச் சார்ந்த கூட்டன் பர்க், நகரும் எழுத்துருக்களை உருவாக்கி கி.பி.1450 இல் நவீன அச்சுக்கூடத்தை நிறுவினார். அந்தக் கூடத்தின் மூலம் 1455 பிப்ரவரியில் முதல் முதலாக பைபிளை அச்சில் கொண்டுவந்தார் அவர். இதுதான் அச்சில் வந்த முதல் நூல் என்று கூறப்படுகிறது. 

நவீன அச்சு வடிவில் வேண்டுமானால் அப்படி கூறலாம். ஆனால், அதிலும் கூட ஒரு உண்மை மறைந்துள்ளது. கூட்டன் பர்க் தமது அச்சகத்தில் ஜெர்மனிய கவிதையைத் தான் முதலில் அச்சிட்டார்(1450). அதன் பிறகு, ஐந்தாவது ஆண்டில்(1455)தான் பைபிளை அச்சிட்டு வெளியிட்டார்.

ஆனால், அதற்கும் முன்னவே அச்சில் சீனர்கள் பௌத்த நூட்களை கொண்டுவந்துள்ளனர். சீனர்கள் பௌத்தத்தை கடைப்பிடிப்பதிலும், அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதிலும் தீவிரமாக செயற்பட்டார்கள்; அறிவு சேகரிப்பிலும், விரிவாக்கத்திலும், பரவலாக்கத்திலும் அயராது பாடுபட்டார்கள். அதன்பொருட்டுதான் அங்கே புதிய வகையான காகிதங்களின் உருவாக்கம் தொடங்கியது, பெருகியது. அதைத் தொடர்ந்து கையெழுத்து முறையிலிருந்து அச்சு முறைக்கு அவர்கள் நகர்ந்தார்கள். பலகைகளின் மூலம் அச்சு முறையை அவர்கள் உருவாக்கினார்கள். அந்த முறையில் பௌத்த நூல்களை அச்சிட்டார்கள். இப்பணியை சீன பௌத்தர்கள் கி.பி.620களிலேயே துவங்கிவிட்டார்கள். அதாவது நவீன அச்சுக்கூடத்தை கூட்டன்பர்க் நிறுவுவதற்கும் சுமார் 800 ஆண்டுகளுக்கும் முன்னவே பௌத்த கொள்கைகளை சீனர்கள் அச்சாக்கத் துவங்கிவிட்டனர். அப்படித்தான், கூட்டன் பர்க் அச்சுக் கூடம் நிறுவப்படுவதற்கும் 582 ஆண்டுகளுக்கும் முன்பு, சீனாவில் அச்சிடப்பட்ட நூலொன்று 1899 ஆம் ஆண்டில், சீனாவின் கான்சு மகாணத்தின் டான் ஹூவாங் என்கிற குகையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த நூலின் பெயர் வஜ்ர சூத்திரம்(டைமண்ட் சூத்திரம்); அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்ட தேதி கி.பி.868, மே 11.

வஜ்ர சூத்திர நூலின் ஒரு பிரதியை வைத்திருக்கும் பிரிட்டன் நூலகம், "இது, உலகின் பழமையான, முழுமைப்பெற்ற, தேதியிடப்பட்ட முதல் நூல்" என்று  குறிப்பிடுகிறது. மேலும், இந்நூலின் அட்டைப் படம்தான், உலகின் முதல் அட்டைப்பட ஓவியம் என்கிற அடையாளத்தையும் பெற்றிருக்கிறது. 

வஜ்ர சூத்திரம் மட்டுமல்ல, கொரியாவிலும் கூட கூட்டன் பர்க் அச்சு முறைக்கு 78  ஆண்டுகளுக்கும் முன்னதாக உலோக எழுத்துருக்களைக் கொண்ட அச்சு முறையில் பௌத்த கொள்கை நூல் அச்சிடப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

உலக புத்தக வரலாற்றில், பௌத்தத்திற்கும், பௌத்தர்களுக்கும் முக்கிய இடமுண்டு என்பதையே இத்தகைய தகவல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

.

ஏப்ரல்23:உலக புத்தக நாள்.)


பூர்வ பௌத்தர்களும் புத்தகங்களும்.


ஸ்டாலின் தி 

நவீன அச்சுக்கலை ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தமிழில் அச்சு நுல்கள் வரத்துவங்கின. சுமார் 150 ஆண்டுகளுக்குமுன் வளரத்துவங்கிய நூல்வடிவக் கலையில் தலித்துகளும் துவக்கம் முதல் பங்கேற்றுள்ளனர். பௌத்த பொற்காலத்தில் எழுத்துக்கலையில் சிறந்து விளங்கிய தலித்துகளுக்கு அச்சு வடிவம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அதன் காரணமாக தலித்துகள் நூல்களையும் பத்திரிக்கைகளையும் சிறந்த கருத்துக்களுடன் கொண்டுவந்தனர்.

இந்துக்கள் புராணக்கதைகளையும் மூடத்தனத்தையும் நூல்களாக கொண்டுவந்த அந்த காலக்கட்டத்தில் கல்வி, அறிவியல், பகுத்தறிவு நூல்களைக் கொண்டுவந்தனர் தமிழக தலித்துகள். குறிப்பாக, இதில் பெரும் பங்குவகித்தனர் பறையர்கள். சுமார் 25 ஆண்டுகள் 'மகாவிகடத்தூதன்' இதழை நடத்திவந்தவர் புலவர் பா.அ.அ. இராசேந்திரம் பிள்ளை. இவர் இப்பத்திரிக்கையின் மூலம் பல தொகுப்பு நூல்களைக் கொண்டுவந்தார். 'உலகம் ஒரு நீதிக்கதை(1868), இராணி எஸ்தர்(1870), இன்பமும் துன்பமும்(1875), இன்பக்கதைகள்(1875), இளமையில் கல்(1889), உழைப்பே செல்வத்தினும் பெரிது(1884), ஊதாரியின்கதை(1876), ஈசா ரேபகா திருமணம்(1895)' போன்ற தொகுப்புகளை சுமார் 120 ஆண்டுகளுக்கும் முன்னவே கொண்டு வந்தவர்தான் புலவர் இராசேந்திரம் பிள்ளை அவர்கள். 

பூஞ்சோலை முத்துவீர நாவலர் என்கிற தலித் அறிஞரும் பலதொகுப்புகளை இந்நூற்றாண்டுக்கும் முன் கொண்டுவந்திருக்கிறார்.

1893 முதல் 'பறையன்' இதழை சுமார் ஏழாண்டுகள் நடத்திவந்த தாதா ரெட்டமலை சீனிவாசனார் பலக் கட்டுரைகளை எழுதினார். 'ஜீவிய சரிதம்' என்ற சுயசரித நூலையும் தாத்தா எழுதியுள்ளார்.

துவக்கத்தில் மருத்துவ தகவல்களை எழுதிவந்த சித்த மருத்துவரும் பண்டிதருமான அயோத்திதாசர், 1880 முதல் சமூக எழுத்துகளை எழுதத்து வங்கினார். 1907 இல் இவர் துவங்கிய 'தமிழன்' இதழ் பல ஆக்கப்பூர்வமான தரவுகளைத் தாங்கி வந்ததது. சமூக, அரசியல், சமயம், இலக்கியம், வரலாறு, பகுத்தறிவு, தொழில் என பல்துறைக் குறித்தும் நூல்கள் பல பண்டிதரால் எழுதப்பட்டது. 'வேஷபிரமண வேதாந்த விவரம், யதார்த்த பிராமண வேதாந்த விவரம், மோசோயவர்களின் மார்க்கம், ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம், மாளிய அமாவசை எனும் மாவளி அமாவசி தன்ம விவரம், நூதன சாதிகளின் உற்சவ பீடிகை, அம்பிகையம்மன் சரித்திரம், இந்திரதேச பௌத்தர்கள் பண்டிகை விவரம், விவாக விளக்கம், அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம், நந்தன் சரித்திர தந்திரம், முருக கடவுள் வரலாறு, கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி, திரிக்குறள் கடவுள் வாழ்த்து, அரிச்சந்திரன் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, புத்த மார்க்க வினா விடை, சாக்கிய முனிவர் உள்ளிட்ட சுமார் 25 ஆராய்ச்சி நூல்களை பண்டிதர் அயோத்திதாசர் எழுதியுள்ளார்.

1862 இல் மாது சல்லாபம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் தஞ்சை வைரக்கண் அழகப்ப வேலாயுத புலவர் ஆவார். 1886 இல் வெளிவந்த இவரது 'மகா பாரத நச்சுப் பொய்கை விலாசம்' என்னும் நாடக நூலானது சிறந்த தத்துவ நாடக நூல் என்று அக்காலத்திலேயே புகழப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் வாழ்ந்து ஞான மார்க்க வழிசென்ற
பரங்கிமலையில் உயிர் துறந்த, சாங்கு சித்த சிவலிங்க நாயனார் 1870 இல் 'பூர்ணானந்தோதயம்' என்னும் நூலை வெளியிட்டார். மற்றொரு ஞான மார்க்கவாதியான ஓம்பிரகாச சாமிகள் 1915 இல் 'சத்சம்பாஷிணி' என்னும் நூலை எழுதினார்.அருட்கவி கங்காதர நாவலர் 1899 இலிருந்து 1928 வரை 36 நூல்களை எழுதியுள்ளார்.
பண்டிதரின் ஆசிரியரான கவிராஜ பண்டிதர் அயோத்திதாசருடைய மகனான ராமசந்திர புலவர் 1890 இலிருந்து 1910 வரை 7 நாடக நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார். 'புரூர்வ சக்ரவர்த்தி நாடகம், 'துரியோதன சபா' 'அமரநீதி நாயனார்' போன்றவை இவரது புகழ்ப்பெற்ற நாடக நூல்கள்.

பண்டிதரின் தமிழன் பத்திரிக்கையை 1926 இலிருந்து 1935 வரை நடத்திவந்தவர் புலவர் ஜி.அப்பாதுரையார் அவர்களாவார். பண்டிதருடன் நேரடி தொடர்பிலிருந்த இவர், கோலார் தங்கவயல் தலித் அறிஞர்களுடன் இணைந்து சித்தார்த்தா புத்தக சாலை மூலம் பல நூல்களை வெளியிட்டார். 1914 'மருட் துவேஷ சங்குல தர்ப்பாணா' என்னும் நூலை எழுதினார். இது புத்தரை மறுப்பவர்களுக்கான மறுப்பு நூலாக விளங்கியது. 1950 இல் வெளிவந்த இவரது 'புத்தர் அருளறம்' நூல் மிகச்சிறந்த பௌத்த பயிற்சி மற்றும் விளக்க நூலாக இன்றும் விளங்குகிறது.

பெரும்தலைவர் எம்.சி.ராஜா 1915 இலிருந்து 1928 வரை மாணவர்களுக்கான பல நூல்களை எழுதியுள்ளார். சமூக, அரசியல் கட்டுரைகளையும், அறிக்கைகளையும் ஏராளமாக எழுதிய எம்.சி.ராஜா 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்னும் நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய அனைத்து நூலுமே ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டன என்பது முக்கியமானது.
1922 இல் திரிசிபுரம் அ.பெருமாள் 'ஆதிதிராவிடர் வரலாறு' என்னும் நூலை எழுதினார்.


(ஏப்ரல் 23-சர்வதேச புத்தக தினம்)

புத்த பௌர்ணமியும் சித்ரா பௌர்ணமியும்.

ஸ்டாலின் தி


புத்தர் பிறப்பை அனுசரிக்கும் வகையில் நெடுங்காலமாக சித்திரை மாத பௌர்ணமி பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது. அதே நாளை பௌத்தமல்லாத இந்துச் சாதியினரும் கொண்டாடுகிறார்கள். இரண்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்கலாம் என்று தோன்றுவது இயல்புதான். ஏனெனில் பௌத்தர்களின் பல திருநாள்கள் இங்கே திரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பௌத்த பௌர்ணமிக்கும் சித்ரா பௌர்ணமிக்குமான சில தொடர்புகளை பரிசீலிப்பதில் தவறில்லை. 

பௌத்தர்கள் புத்தர் பிறந்தார் என்று சித்திரை மாத பௌர்ணமியை அனுசரிக்கிறார்கள். இந்துச் சாதியினரிடம் இத்தகைய காரணமெதுவுமில்லை. அவர்கள் கூறுவது வழக்கம்போல புராணக் கதைதான். அந்தக் கதையையும் உடைத்துப் பார்த்தால் புத்தருக்கான நெருக்கம் புலப்படுகிறது. 

இந்துக் கதையின்படி பாவக் கணக்குகளை எழுதும் சித்திர குப்தர் அவதரித்த நாள்தான் சித்ரா பௌர்ணமி. இந்த சித்திர குப்தர் கதாபாத்திரமே புத்தரை திரித்து உருவாக்கப்பட்டதாகத்தான் தெரிகிறது. 

புத்தரிடம் தம்மம் கேட்க வருவோர் தம் பாவ குணங்களை கூறி, தீர்வை கேட்டு நின்ற பல கதைகளை நாம் அறிந்திருக்கிறோம். அவ்வகையில் அவரிடம் வருவோர்களில் யாவர் என்னென்ன நற்காரியங்களை, தீய காரியங்களை செய்தோர் என்பதை அவர் அறிவார். நற்காரியங்களுடையோர்க்கு நல்வாழ்வும்(சுவர்கம்), தீய காரியங்களை தொடர்கிறவர்களுக்கு துக்க வாழ்வும்( நரகம்) கிடைக்கிறது என்பதைத்தான் புத்தர் தமது அறவுரைகளில் தொடர்ந்து கூறிவந்தார். இதைத்தான் தமது வழமையான கட்டுக்கதை உத்தியின் மூலம் எமலோக சித்திர குப்தன் என்கிற கதாபாத்திரத்தை பௌத்த எதிர்ப்பு இந்துக்கள் உருவாக்கியிருக்க வேண்டும். 

சித்திரக் குப்தருக்கு தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் முக்கிய கோயில்கள் உள்ளன. ஒன்று தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில்; இன்னொன்று காஞ்சீவரத்தில். காஞ்சீவரம் பௌத்த தளம் என்பதை வரலாறுகள் கூறுகின்றன. மேலும், புராணங்களில் சித்திர குப்தருக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது, 'சித்திர புத்தர்.' 

வட மொழியில் சித்ரம் என்றால் கவனம் என்றும் பொருள். புத்தரின் கவனம் என்பது மெய்பொருளை கண்டறிவது ஆகும். சித்ரம் என்பதற்கு இன்னொரு அர்த்தமாக வருவது 'காண்பது' என்பதாகும். மெய்யறிவைக் கண்டவர் என்கிற அர்த்தத்தில் சித்ரபுத்தர் என்கிற பெயர் பொருந்துகிறது. 

எனவே, சித்திர புத்தர் சித்தார்த்த புத்தர்தான் என்று நாம் கருதமுடிகிறது. அதன்படி, புத்தரின் பிறந்த நாளை கொண்டாடும் மக்களிடம் குழப்பத்தை உருவாக்கிடவே, புத்தரையே வேறோரு கதாபாத்திரமாக திரித்து அவருடைய பிறந்த நாளையே அந்த கதாபாத்திரத்தின் பிறந்தநாள் என்றாக்கி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் இந்துக்கள் என்கிற நிலைபாட்டிற்கு நாம் வரமுடிகிறது.

(போதி முரசு 2022 ஏப்ரல் இதழில் வந்த கட்டுரை) 

புதன், 17 ஏப்ரல், 2024

அரசை ஆக்கிரமிக்கும் பிராமண-புரோகித நடைமுறையும், அரசுகளின் சமரசப் போக்கும்.


ஸ்டாலின் தி 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணியை துவக்கும் விதமாக, தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகர்கள் , இந்து பிராமண புரோகிதரைக் கொண்டு பூஜை நடத்திக்கொண்டிருந்த போது, அங்கே வந்த தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக உறுப்பினரான மருத்துவர் செந்தில்குமார் அவர்கள்,  பூஜையை தடுத்து, அரசு அலுவலகர்களைக் கண்டித்து 'இது திராவிட மாடல் ஆட்சி; இது அனைவருக்குமான ஆட்சி' என்று கூறியதை காணொளியாக காணமுடிந்தது. உண்மையில், இது எங்கோ நடந்துவிட்ட ஒரு நிகழ்வாக கடந்துபோக முடியாது. உண்மையில், இப்படி ஒரு பூஜையை இப்போதுதான் நாம் பார்க்கிறோம் அல்லது கேள்விப்படுகிறோம் என்று கூறிவிடவும் முடியாது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இத்தகைய பிராமண புரோகித அல்லது இந்து வழிபாட்டு சடங்குகள் நடத்தப்படுகின்றன என்பதை கண்கூடாகவே காணமுடியும்.  கடந்த திங்கள் கிழமை(11/7/2022) அன்று,  கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றத்தின் மேற்புறத்தில் இந்திய சின்னமான நான்முக சிங்க உருவச் சிலையை(அதன் உன்னத வடிவத்தை சிதைத்த கோர வடிவத்தில்) திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அப்போது, அவ்விடத்தில் பிராமண புரோகிதர்களைக் கொண்டு பூஜை செய்யப்பட்டதையும் செய்திகளில் கண்டோம். இதுவெல்லாம் வெறும் 'ஆன்மீக நம்பிக்கை'யிலிருந்து நடக்கும் சடங்கு என்று நாம் நம்பிவிடுவதுதான் இதிலுள்ள முக்கியமான மூட நம்பிக்கைக் கூறாகும். இதன் பின்னணியில், இந்து சனாதனத்தின் சூழ்ச்சிகளும் கொடூரங்களும் நிறைந்த வரலாறுகள் உள்ளன. 
பௌத்த-சமண அறிஞர்களின் பகுத்தறிவின்படியான ஆலோசனைகளில் அரசுகள் நடத்தப்பட்ட இம்மண்ணில் தலைத்தூக்கிய வேஷ பிராமணியம் என்னும் வைதீகக் கூட்டம், முதலில் குறிவைத்ததே அரசுகளைத்தான்.  சூழ்ச்சிகள், பொய்கள், வன்முறையான நடத்தைகள் போன்றவற்றின் துணைகொண்டு அரசுகளோடு இணங்கிய வேடதார பிராமணர்களும் அவர்களின் சேவகர்களும் அரசுகளோடு நட்புறவாய் இருந்த பௌத்த-சமணர்களை வீழ்த்திவிட்டு   வேஷ பிராமணியத்தை அரசு மயமாக்கினார்கள். அரசுக்கு மேலானவர்களாக காட்டிக்கொண்ட வேஷ பிராமணியர்கள், நாளடைவில் கடவுளுக்கும் மேலானவர்களாக தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர். அதற்கு உகந்த புரட்டுகளை வடித்து அவற்றை கேள்விகளுக்கப்பாற்பட்ட வேதங்களாக ஆக்கி அதையே இயற்கையான நியதியாக நிறுவினர். அதன் சட்ட வடிவமாகவே மனுசாஸ்திரம் உருவாக்கப்பட்டது.   இந்த சூழ்ச்சி வலையில் அகப்பட்ட மன்னர்கள் வேஷ பிராமணிய புரோகிதர்களின் கைப்பாவைகளாக ஆனார்கள். இவ்வரசர்கள்தான், நிலங்களையும், வளங்களையும் கிராம கிராமங்களாகவும், கால்நடைக் கூட்டங்களையும் உழைக்கும்  மனிதர்களையும், தேவதாசி போன்ற இழிவேலைகளுக்கான பெண்களையும் வேஷ பிராமணியர்களுக்கு தனி உடைமைகளாக அளித்தனர். 
 இந்த அடாவடியான கொள்ளையை பிரம்மதேயம் என்றும் கன்னி தானமென்றும் இன்னும் பல தானவகைகளின் பெயர்களிலும்  ஆன்மீக வர்ணம் பூசி மெழுகினார்கள். ஆங்கிலேயர் ஆட்சி வரும் வரை மிக உச்சத்தில் இருந்தது இந்த வேஷ பிராமணியத்தின் ஆதிக்கம். ஆங்கிலேயர் ஆட்சியில் முற்றிலும் ஒழிந்துவிடாவிட்டாலும், சற்றுக் குன்றித்தான்  போயிருந்தது இந்த கூட்டத்தின் ஆதிக்கம். ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல்வேறு சுகபோகங்களை வேஷ பிராமணர்கள் அனுபவித்தாலும் கூட, ஆட்சியின் தலைக்கு மேல் உட்கார்ந்து கபளீகரம் செய்யும் புரோகித ஆட்சிமுறையை ஆங்கிலேயர்களிடம் கையாள முடியவில்லை. எனவேதான், 'சுதந்திர தாகம்' இக்கும்பலுக்கு திடீரென மேலோங்கியது. உண்மையில், அது சுதந்திர தாகமல்ல; அது வேஷ பிராமணியத்தின் புரோகித ஆட்சிக்கான பேராசையாகும். 

இந்திய சுதந்திரம் என்கிற நோக்கத்தில் பாடுபட்ட பல்லாயிரக்கணக்கான வெகுமக்கள் இந்தித சுதந்திர நாளை எதிர்கொண்டு காத்திருந்த சமயத்தில், இந்தியா சுதந்திரமடைப் போகும் நாளாக 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாளை மவுண்ட் பேட்டன் அறிவித்த போது  பதறியவர்கள் பிராமணிய புரோகிதக் கூட்டம்தான். உண்மையில், இந்திய சுதந்திரம் என்பது இடையில் விடுபட்டு போன புரோகித மேலாதிக்க அரசின் மீட்சியாகவே இக்கூட்டம் பார்த்ததால், இந்திய சுதந்திர நாளை பிராமணிய பஞ்சாங்கத்தின்படி குறிக்க காத்திருந்தது. ஆனால், இந்திய தலைவர்களிடம் கூட ஆலோசிக்காமல் தேதியை அறிவித்துவிட்டார் மௌண்ட் பேட்டன். கடைசி நேரத்திலும் பிரிட்டிஷ் அரசு புரோகித ஆட்சிக்கு இடையூறாக இருக்கிறதே என்று மனம் புண்பட்ட புரோகிதர்கள் 'ஆகஸ்ட் 15 நல்ல நாள் இல்லை. அதனால், சுதந்திரத்தை தள்ளிப் போடுங்கள்' என்று ஆங்கிலேயரிடம் கோரிக்கையே வைத்தார்கள். ஆங்கிலேயர்கள் அசைந்து கொடுக்கவில்லை என்பதால், பல்வேறு யாகங்களையும், பூஜைகளையும் பரிகாரங்களாக நடத்தி 'சுந்திர இந்தியாவானது புரோகித கட்டுப்பாட்டில் தொடரும் நாடாக இருக்கும்' என்று பறை சாற்றினார்கள்  வேஷ பிராமணியர்கள். 'காங்கிரஸில் இருந்தாலும் கூட  சோசலிசவாதி, பழமைத்தனங்களை அறவே வெறுக்கக் கூடிய நவீனகாலத் தலைவர்' என்றெல்லாம் இன்றளவும் போற்றப்படும் ஜவகர்லால் நேரு அவர்கள், பிராமண புரோகிதர்களின் மந்திர முழக்கங்களும் சடங்குகளும் சூழத்தான் சுதந்திர இந்திய நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றார் என்கிற செய்தியை அறிந்தவர்களால்  இந்து புரோகித ஆட்சி வரலாற்றின் வலிமையை உணர்ந்துகொள்ள முடியும். இன்றைய பழைய நாடாளுமன்றத்திலிருந்து நாளைய புதிய நாடாளுமன்றம் வரை  இந்து புரோகித ஆதிக்கம்தான் நிலவிக் கொண்டிருக்கிறது என்பதையே இன்றைய சூழலில் நம்மால் அறியவும் முடியும். 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியருகில் உள்ள ஒரு ஏரிக்கரையில் நடைப்பெற்ற புரோகித- அரசு கூட்டு பூஜையை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் தடுத்து நிறுத்திவிட்டார். ஐயத்திற்கிடமின்றி, பாராட்டுக்குரிய செயல்தான் இது. நாமும் பாராட்டுவோம். அரசு நிகழ்ச்சியில் எப்படி குறிப்பிட்ட மதத்திற்கு இடமளிக்கலாம் என்கிற அவருடைய கேள்விக்கு நாம் துணை நிற்பதுதான் நேர்மையானது. 
ஆனால், இங்கே உள்ள பல பல அரசு அலுவலங்களும் அரசு இடங்களும் இந்து சனாதனக் களங்களாகவே இருப்பதை நாம் மறைத்துவிட முடியுமா? யாரும்தான் மறுத்துவிட முடியுமா?

 'இது திராவிட மாடல் ஆட்சி. இங்கே தனிப்பட்ட மதத்திற்கு அரசு இடத்தில்/அரசு நிகழ்வில் இடமில்லை' என்கிற கருத்தை செந்தில் குமார் அவர்கள் ஆலாபுரம் ஏரிக்கரையில் பேசியதைப் போல ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சென்று பேச வேண்டிய நிலைதான் இருக்கிறது. நவீன இந்தியாவை அரசமைப்பு சாசனத்தால் செதுக்கிய  அண்ணல் அம்பேத்கர் படத்தை வைக்க மறுக்கும் அல்லது அலட்சியப்படுத்தும் அரசு அலுவலகங்கள் இதே தமிழகத்தில்  நிறைய உள்ளன. ஆனால், பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் இந்து கடவுள்கள் எனப்படும் உருவப்படங்கள் மதிப்புக்குரிய படங்களாக தொங்கிக்கொண்டிருக்கின்றன.  மாநில, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், நீதிமன்றங்கள்,  காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு பேருந்துகள் என எதிலும் இதில் விதிவிலக்கு அல்ல. இந்து தெய்வ உருவப்படங்கள் மட்டுமல்ல பிள்ளையார் சிலைகள் கோலோச்சும் அரசுத் துறை வளாகங்கள் இங்கே ஏராளம். ஏறத்தாழ அனைத்து அரசுத்துறைகளிலுமே ஆயுதபூஜை, பிள்ளையார் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகள் வசூல், விருந்து என மிகத் துள்ளிய திட்டமிடல்களுடன்  எவ்வித தடங்கள்களோ தயக்கங்களோ இன்றி வெளிப்படையாகவே நடத்தப்படுகின்றன. இவையெல்லாம் அரசு சார்பில் நடத்தப்படக் கூடாதவை என்று கூற சட்ட விதிகள் பல  உள்ளனதான். ஆனால், இந்து சனாதனத்தின் விதிகள் பாமர மக்களிடம் மட்டுமல்ல, மக்களாட்சி என்று கூறிக்கொள்ளும் நம் மத்திய-மாநில அரசுகளிடமும் கூட இன்னமும் வலிமையாக உள்ளன என்பதையே  சடங்குகள், பண்டிகைகள், நம்பிக்கைகள் என பல்வேறு வடிவங்களில் நடக்கும் இந்த புரோகித ஆதிக்கச் செயற்பாடு நமக்குக் காட்டுகிறது. இந்தியாவை, எப்போதும் அச்சுறுத்திக்  கொண்டிருப்பது இந்து சனாதன-புரோகித ஆதிக்கத்தோடு  இந்திய அரசுகள் மேற்கொண்டிருக்கும் இந்த சமரசப்  போக்குதான்.

(முகநூலில் ஜூலை 17/2022)

அக்னி பாத் எனும் இராணுவத் திட்டமும் பாஜகவின் பாசிச நோக்கமும்.

ஸ்டாலின் தி 


மோடி தலைமையிலான மத்திய அரசு, இராணுவத்துறையில் 'அக்னி பாத்' எனும் புதிய திட்டத்தை கொண்டுவருகிறது. ஆங்கிலத்தில் 'Tour of Duty' என்று கூறப்படும் இத்திட்டத்தின் படி, 17.5 வயது முதல் 21 வயதுவரை உள்ள இளைஞர்களில் ஆண்டுக்கு 45 ஆயிரம் பேர்களை ஒப்பந்த அடிப்படையிலான வீரர்களாக இராணுவ முப்படைகளில் சேர்க்கப்படுவார்கள். இவர்களின் பணிக்காலம் நான்கு ஆண்டுகள் மட்டும்தான். நான்காண்டுகளில் இவர்களில் தகுதியுடையவர் என்று 25 சதவீதத்தினர் மட்டும் 15 ஆண்டுகாலத்திற்கு பணியில் அமர்த்தப்படுவார்கள். 75 சதவீதத்தினர் வீட்டுக்கு அனுப்பப்படுபவர்கள். பணிக்காலத்தில் இவர்களுக்கு, மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை தொகுப்பூதியமாகக் கொடுக்கப்படும். நான்காண்டுகளில் திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு ஓய்வூதியம் எதுவுமில்லை. அவர்களின் மாத ஊதியத்தில் சுமார் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை பிடித்தம் செய்து, அதே அளவுக்கு அரசும் தொகை செலுத்தி, நான்காண்டு முடிவில் ரூ.12 இலட்சம் வரை தொகை அளிக்கப்படும். பணி காலத்தில் ரூ. 45 இலட்சம் அளவில் காப்பீடும், பணிகாலத்தில் உயிரிழந்தால் ரூ.44 இலட்சம் இழப்பீடும் அளிக்கப்படும். நான்காண்டுகளுக்கு பிறகு பணியிலிருந்து திரும்புகிறவர்களுக்கு ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கான எந்த உரிமையும் அளிக்கப்படாது. வழக்கம் போல, இத்திட்டம் வேலைவாய்ப்புத் திட்டமாகவும், நாட்டுப்பற்றை இளைஞர்களுக்கு ஊட்டும் திட்டமாகவும் பாஜகவினராலும், பாஜக ஆட்சியை ஆதரிப்பவர்களாலும் வரவேற்கப்படுகிறது.

இன்னொரு பக்கம், இத்திட்டத்தை எதிர்க்கும் பலரும் இராணுவத்தை ஒப்பந்த பணியாக ஆக்குவதை எதிர்க்கிறார்கள். ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பணியாளர் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் எதிர்க்கிறார்கள். திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுவதைப் போன்று இது அரசுப்பணியை ஒப்பந்தப்பணியாக ஆக்குகிறதுதான். பணியாளர்களின் உரிமையையும் மறுக்கிறதுதான். ஆனால், இத்திட்டத்தில் உள்ள பிரச்சனை இவை மட்டுமே அல்ல. நாட்டின் எதிர்காலத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தல் சூழலை உருவாக்கும் வகையிலேயே இத்திட்டம் உருவாக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. இதன் பின்னணி பல்லாண்டு கால பாசிச வரலாற்றில் உள்ளது.

வன்முறை வழியிலான இந்து தேசியத்தை கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்து மகாசபையினர் வன்முறையை வழிநடத்தும் இயக்க வடிவத்தை பல்வேறு வகையில் உருவாக்கி வந்தனர். அந்நேரத்தில்தான், இத்தாலியில் பாசிச ஆட்சியை 1922 இல் நிறுவினார் முசோலினி. பாசிச மனநிலையை இயல்பாகவே கொண்டிருந்த இந்து மகாசபையினரின் பார்வை இத்தாலிக்கு திரும்பியது. அப்போது இந்து மகாசபையின் தலைவராக சவார்க்கர் இருந்தார். இந்து மகாசபையின் ஆதரவு பத்திரிக்கையான கேசரியில் இத்தாலியின் பாசிச வடிவத்தையும், முசோலினியையும் சிலாகித்தும், பரப்பும் நோக்கிலும் கட்டுரைகளும், தலையங்கங்களும் தொடர்ந்து எழுதப்பட்டன. பாசிச இயக்க வடிவத்தில் அதீத ஆர்வம்கொண்ட ஒரு குழு இந்து மகா சபையிலிருந்தபடி 1925 இல், ராஷ்டிர சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) தனி இயக்கத்தை துவக்கியது. இந்து மகாசபையின் முக்கியத் தலைவரான டாக்டர் மூஞ்சேவின் வழிகாட்டுதலில், மூஞ்சேவின் சீடரும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவருமான டாக்டர் ஹெக்டேவர் ஆர்.எஸ்.எஸ்.இன் முதல் தலைவரானார். 

1931 இல் முதல் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற மூஞ்சே, இலண்டனிலிருந்து திரும்பும் வழியில் இத்தாலிக்குச் சென்றார். அங்கே, முசோலினியின் பாசிச அரசால் நடத்தப்பட்ட இராணுவப் பள்ளிகளை, இராணுவ கல்லூரிகளையும், பாசிஸ்டுகளின் உடற்பயிற்சிக் கூடங்களையும், கல்வி நிறுவனங்களையும் பார்வையிட்டார் மூஞ்சே. ஆறு வயதிலிருந்து பதினெட்டு வயது வரையிலான சிறார்களை தேர்வு செய்து ஆயுதப் பயிற்சிகளையும் வன்முறை சிந்தனையையும் கொடுத்துக் கொண்டிருந்த முசோலினியின் பாசிச இயக்கத்தையும் பாசிச அரசையும் பார்த்து வியந்த மூஞ்சே, இதுதான் சரியான இயக்க வடிவம் என்று உறுதியாக முடிவெடுத்தார். வன்முறையான இந்து அடிப்படைவாதத்திற்கு இந்தியாவிலேயே நீண்ட வரலாறு இருப்பினும், அதை திலகர், சவார்க்கர், ஹெட்கேவர் உள்ளிட்ட பலரும் இயக்கமாக வடிவமைத்திருந்தாலும், மூஞ்சேவிற்கு நவீன இராணுவன மிடுக்குடன் கூடிய இத்தாலியின் பாசிச வடிவமும் உருவாக்கமுமே மிகவும் பிடித்துப் போயின. இத்தாலி பாசிச வடிவத்தை இந்திய இந்துவ செயற்பாட்டில் இணைப்பதன் மூலம் புதிய இந்துத்துவ இராணுவ தேசிய உருவாக்கம் சிறப்பாக அமையும் என்று மூஞ்சே கருதினார். 

 1931 மார்ச் 19 இல், இத்தாலி பாசிச அரசின் சர்வதிகாரி முசோலினியை சந்தித்த மூஞ்சே, "உயர்வை விரும்பும், வளர்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், தாங்கள் வழிநடத்துவதைப் போன்ற பாசிச அமைப்புகள் தேவை" என்று துதிபாடிவிட்டு பாசிச இந்துவ இந்நியாவை கனவு கண்டபடியே இந்தியா வந்தார். அதைத் தொடர்ந்துதான், இந்துக்களை இராணுவ மயமாக்க வேண்டும் என்கிற செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.இன் செயல்திட்டமாக தமது சீடர் ஹெட்கேவர் மூலம் செயல்படுத்தினார் மூஞ்சே. இந்து மகா சபையிடம் ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகள் இருந்தாலும் கூட, ஆர்.எஸ்.எஸ்.தான் அதை முசோலினியின் இராணுவ பள்ளி மாதிரியில் நடைமுறைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான், இன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால், ஷாகா எனும் வகுப்புகள் உள்ளிட்ட பலவிதமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

தற்போது, மோடி அரசால் கொண்டுவரப்படும் அக்னி பாத் இராணுவ பயிற்சியும் ஷாகா வகையிலானதுதான் என்பதுதான் இங்கே முக்கியமானது. " இத்தாலி பாசிசம் சிறார்களுக்கு இராணுவ பயிற்சி கொடுப்பதை கண்டு நான் ஆர்வம் கொள்கிறேன்" என்று அன்றைக்கு முசோலினியிடம் கூறினார் மூஞ்சே. இன்றைக்கு பதினேழரை வயது சிறார்களை இராணுவ பயிற்சிக்கு அழைக்கிறது பாஜக அரசு. பதின்பருவத்திலிருப்பவர்களுக்கு அரசு செலவில், ஆயுதப் பயிற்சிகளைக் கொடுத்து, இராணுவ சிந்தனையை புகட்டுவது என்பது ஜனநாயக முறைக்கு எதிரானதும், பாசிசத்திற்கு வழிகோலுவதும் ஆகும் என்பது வெளிப்படையானவையாகும். 

நான்காண்டுகள் இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்ட இளைஞர்கள், வேலை வாய்ப்பை இழந்து வெளியேறும் போது, அவர்களை இந்துத்துவ அரசியலுக்குள் எளிதாக இழுத்து வந்து, இந்துத்துவ- பாசிச தனியார் இராணுவத்தை வலிமையாக கட்டமைத்து, இந்தியாவை முழுமையான இந்து- பாசிச நாடாக ஆக்க பாஜக திட்டம் தீட்டுகிறது. அதற்கான ஒரு திட்டம்தான், இந்த அக்னி பாத் இராணுவத் திட்டமாகும்.

(முகநூலில் 16 ஜூன்/2022 எழுதப்பட்டது.) 

ஊழலுக்கு எதிரான கட்சியா பாஜக?



ஸ்டாலின் தி 

தேர்தல் பரப்புரையில், ஊழலுக்கு எதிராக இருப்பதால் தன்னை ஊழல்வாதிகள் மிரட்டுகிறார்கள் என்கிறார் மோடி. கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் கூட, 'ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சமரச அரசியல்” ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டுமென்று பிரகடனம் செய்தார் மோடி. அமித்ஷா, நிர்மலா சீதாராமன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பாஜவை ஆதரிக்கும் போலி தேசபக்தர்களும் பாஜகவை ஊழலுக்கு எதிரான கட்சி என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். 
உண்மையிலேயே பாஜக ஊழலுக்கு எதிரான கட்சியா? பாஜகவின் ஆட்சிகள் ஊழலற்ற தூய்மையான ஆட்சிகளாகத்தான் இருந்தனவா? 

பாஜகவின் ஒரே நல்ல மனிதர் என்று புகழப்பட்ட வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய ஆட்சி
'இந்தியா ஒளிர்கிறது' என்று விளம்பரப்படுத்தப்பட்டது..‌ ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் ஊழல்கள் மலிந்திருந்தன .‌ 1998 இலிருந்து 2004 வரையிலான வாஜ்பாய் அரசில் பல்வேறு ஊழல்களும் முறைகேடுகளும் நடந்தன. வாஜ்பாய் ஆட்சியின் வீரப்பெருமிதமாக சங்பரிவார கும்பலால் கூறப்படுவது கார்கில் போர். அந்த கார்கில் போரில் மரணமடைந்த சுமார் 500 இராணுவ வீரர்களின் உடல்களை அவரவர் ஊருக்கு கொண்டு செல்ல அமெரிக்காவைச் சார்ந்த விக்டர் பைசா என்பவரின் 'பியூட்ரான் அண்ட் பைசா கேஸ்கெட்ஸ் அண்ட் ஃபுனரல் சப்ளைஸ்' என்னும் நிறுவனத்திடமிருந்து அலுமினிய சவப்பெட்டிகள் வாங்கப்பட்டன. சவப்பெட்டியின் உண்மையான விலையைவிட பன்மடங்கு தொகையில் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு பல இலட்ச ரூபாய் நட்டமானது. அன்றைய வாஜ்பாய் அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இதில் பங்கெடுத்தாக பேசப்பட்டது.‌ ஆனாலும், குற்றப்பத்திரிக்கையில் அவருடைய பெயர் தவிர்க்கப்பட்டது. மூன்று இராணுவ அதிகாரிகள் மீதும் விக்டர் பைசா மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது. 2013 இல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் அரசு மேல்முறையீடு செய்தது. மோடி ஆட்சி வந்த பிறகு, 2015 இல் உச்ச நீதிமன்றமும் அவர்களை விடுதலை செய்தது. வாஜ்பாய் அரசின் இராணுவத் துறையில் சவப்பெட்டி வாங்கியதில் மட்டுமல்ல, இராணுவத்திற்கான சுகாய் ஜெட் விமான பேர் ஊழல்(20 ஆயிரம் கோடி ரூபாய்), டி-90 வாங்குங்கள் பேர ஊழல், பாரக் ஏவுகணை எதிர்ப்புக் கருவி பேர ஊழல், தொலைநோக்கி கருவி வாங்கியதில் ஊழல், கண்ணிவெடி நீக்கும் கருவிகள் வாங்கியதில் ஊழல், தென்னாப்பிரிக்கா நிறுவனத்திடம் இராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் என பலவகையான ஊழல்களில் பாதுகாப்புத் துறையை சந்தி சிரிக்க வைத்தது வாஜ்பாய் அரசு.

1999 வாக்கில் கைபேசித் துறை ஊழலை துவக்கி வைத்தார் வாஜ்பாய். கைபேசி நிறுவன உரிமம் வழங்குவதில் வாஜ்பாய் அரசு முறைகேடாக நடந்துகொண்டது. குறிப்பாக, உரிமம் பெறுவதற்கான ஏலமுறையை வாஜ்பாய் அரசு நீக்கியது. அதை ஒப்புக்கொள்ளாத தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜக்மோகனை நீக்கிவிட்டு பிரதமரின்(வாஜ்பாயின்) நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது அந்தத் துறை. அதைத் தொடர்ந்து பாஜகவை 'கவனித்த' தனியார் நிறுவனங்கள் அலைபேசி உரிமம் பெற்றன. மேலும், நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்காமல் சமரசம் செய்துகொண்டார் வாஜ்பாய்‌. இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு 43 ஆயிரத்து 523 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஏலம் விடும் முறையை நீக்கியதிலும் அரசுக்கு 43,523 கோடி இழப்பீட்டை உருவாக்கியதிலும் அன்றைய பாஜக 'கொள்ளை இலாபம் ' கண்டது. இந்த ஊழலில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்திய தலைமை அரசு வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) சோலி சொராப்ஜி ஆகியோர் நேரடியாகவே குற்றம்சாட்டப்பட்டனர். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜிக்கு பத்ம விபூசண் விருது கொடுத்து மரியாதை செலுத்தியது வாஜ்பாய் அரசு.மேலும், வாஜ்பாய் அரசு 'ஏலம் விடும் முறையை ஒழித்துக்கட்டியது'தான் பிற்காலத்தில் நடந்த '2 ஜி குளறுபடிகள்' நடக்கவும் இன்றையவரை ஊழல் மலிந்த துறையாக தகவல் தொடர்புத் துறை தொடர்வதற்கும் காரணமாகவும் அமைந்தது. 

வாஜ்பாய், அத்வானியை அடுத்து பாஜகவில் தேசிய அளவில் முக்கிய இடத்தில் இருந்தவர் பிரமோத் மகாஜன். மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த பிராமணர் அவர். பாபர் மசூதியை இடிக்கப் புறப்பட்ட அத்வானி ரதயாத்திரையை முன்னின்று நடத்தியவர். பாஜகவின் மகராஸ்டிரா மாநிலத் தலைவர், தேசிய பொதுச் செயலாளர் என கட்சிப் பதவிகளை வகித்தவர் பிரமோத் மகாஜன். 1996 மற்றும்1998 முதல் 2004 வரையிலான, வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய ஆட்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர்(1996 இல் 13 நாள்கள்), பிரதமர் ஆலோசகர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், உணவுப்பதப்படுத்தல் துறை அமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் என பல கட்டங்களில் பதவிகளை வகித்த பிரமோத் மகாஜன் குடும்பத் தகராறில் சொந்த சகோதரனாலேயே 2006 இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த போது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொண்டதால் ரிலையன்ஸ் அவரும் கட்சியும் அம்பானியிடம் நிறைய பலன்களை பெற்றார்கள். குறிப்பாக, ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு கோடி ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் பிரமோத் மகாஜன் குடும்பத்திற்கு கிடைத்தன. ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட '2ஜி ஊழலை' முறையாகச் செய்தவர்கள் வாஜ்பாயும் பிரமோத் மகாஜனும்தான் என்பதை பாஜக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை. வாஜ்பாயும் பிரமோத் மகாஜனும் துவக்கி வைத்த தகவல் தொடர்புத் துறை முறைகேடுகளை பிரமோத்துக்கு அடுத்ததாக தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக வந்த அருண் ஷோரியும் பின்பற்றினார்.‌இவர் டாடா நிறுவனத்தோடு பங்குபோட்டு நடத்திய முறைகேடுகளால் பல கோடிரூபாய் அரசுக்கு நட்டம் ஆனது.

அருண் ஷோரி வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பங்கு விலக்கல் துறை அமைச்சராகவும் வாஜ்பாய் அரசில் பதவி வகித்தபோது, அரசு விடுதிகளை(Hotel's) விற்பதில் ஊழல் செய்தார். பெரிதாக பேசப்பட்ட 'ஜூகி சென்டார் விடுதி ஊழல் மற்றும் உதய்ப்பூர் லட்சுமி விலாஸ் விடுதி ஊழல்' ஆகியவற்றில் நேரடியாக பங்குவகித்தார். அரசுக்கு சொந்தமான மும்பை ஜுகி சென்டார் விடுதி (ஹோட்டல்) சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புடையது. அதை அஜீத் கோர்க்கரால் என்கிற நபருக்கு 150 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் கொடுக்கப்படுகிறது. அவரிடம் அந்த பணமும் இல்லை. தொகையை கட்டுவதற்கு கால அவகாசத்தை அருண் ஷோரி வழங்குகிறார். அஜீத் கோர்க்கராலும் தொகையை செலுத்தாமல் தாமதம் செய்துகொண்டே இருக்கிறார். அருண் ஷோரியே நேரடியாக வங்கியில் அஜீத் கோர்க்கராலுக்கு கடன் கிடைக்க வழி செய்கிறார். கால தாமதமத்திற்கான வட்டி வசூலிக்கப்படவில்லை. சுமார் நூறு கோடிரூபாய் விலையை குறைத்து, அமைச்சர் அருண் ஷோரி மூலம் 150 கோடி ரூபாய் வங்கி மூலம் கடன் பெற்று அரசு விடுதியை வாங்கிய அஜீத் கோர்க்கரால், அந்த விடுதியை குறுகிய காலத்திலேயே சுமார் 400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். அதாவது, எந்த பணமும் இன்றி வந்து சுமார் 250 கோடி ரூபாயை எடுத்துச் சென்றார் அஜீத் கோர்க்கரால். இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டார் அருண் ஷோரி.

அருண் ஷோரி ஈடுபட்ட மற்றொரு விடுதி ஊழல் உதய்ப்பூர் விடுதி ஊழல்‌. இராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் அரசு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியான 'இலட்சுமி விலாஸ் பேலஸ்' ஐ பாரத் ஹோட்டல் லிமிடெட் என்னும் தனியார் நிறுவனத்திற்கு ரூ.7.52 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால் 2014 ஆகஸ்டில் மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணைக்கு விடப்பட்டது. அந்த விசாரணையில், இலட்சுமி விலாஸ் பேலஸ் விடுதியின் உண்மையான மதிப்பு 252 கோடி என்றும், இந்த முறைகேடான விற்பனையால் அரசுக்கு ரூ 244 கோடி இழப்பு என்றும் கண்டறியப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில், 'முதற்கட்ட விசாரணையிலேயே முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அருண் ஷோரி மற்றும் விடுதி விற்பனை செய்யப்பட சமயத்தில் முதலீட்டுத்துறை செயலராக இருந்த பிரதீப் பைஜால் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு உதய்ப்பூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது; ஊழலுக்கு எதிரானவராகப் பேசிவந்த அருண் ஷோரியின் ஊழல் முகத்தை குறிப்பிட்டு 'அருண் ஷோரியின் இரட்டை நிலைப்பாட்டை' எடுத்துக் கூறினார் வழக்குப்பதிய உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூரன் குமார் சர்மா. விடுதிகளை விற்றதில் மட்டுமல்ல, அரசு இடங்களை தனியாருக்கு ஏலம் விட்டதிலும் பல்வேறு முறைகேடுகளை வாஜ்பாய் அரசு செய்தது. ஊவலுக்கு எதிரான பத்திரிக்கையாளராக அறியப்பட்ட அருண் ஷோரியும் அதற்கு துணை போனார்.

தெஹல்கா ஊடக நிருபர்கள் தங்களை இராணுவ ஆயுத தரகர்களாக கூறிக்கொண்டு, வாஜ்பாய் அரசில் ஆதாயம் பெற உதவுமாறு இரகசிய காமிராவுடன் அணுகிய போது, அவர்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு 'முடித்துத் தருகிறோம்' என்று வாக்குறுதிக் கொடுத்து சிக்கியவர்கள், பாஜக தலைவர் பங்காரு இலட்சுமணன், சமதா கட்சியின் ஜெயா ஜெட்லி, துலிப் சிங் ஆகியோர் ஆவர். இவ்வாறான ஊழலால் மலிந்த ஆட்சியை நடத்திக் கொண்டுதான் வாஜ்பாய் அரசு 'இந்தியா ஒளிர்கிறது ' என்று விளம்பர செய்தது. அந்த விளம்பரத்திற்கு அரசு பணம் சுமார் 400 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டதும் கூட ஒருவகையான ஊழல் தான். விளப்பரத்திற்கு இவ்வளவு செலவு செய்த வாஜ்பாய் அரசில்தான் ஒடிசா, பீகார் மக்கள் பசியில் செத்து மடிந்தனர். 

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு செய்த சுரங்க ஊழலும் முறைகேடுகளும் நாடறிந்த கதை. இதே எடியூரப்பா மீண்டும் முதல்வராக வந்த போது, கொரோனா ஊழல் செய்தார். ஆம், கொரோனா காலத்தில் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த போது, எடியூரப்பாவின் கர்நாடக மாநில பாஜக அரசு அதே கொரோனாவை வைத்தே சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்தது. ரூ.45 ரூபாய் மதிப்புடைய ஒரு முகக்கவசத்திற்கு ரூ 485 கணக்குக் காட்டிய எடியூரப்பா அரசு, ஒவ்வொரு கொரோனா நோயாளிகளுக்கும் சுமார் 8 இலட்சம் ரூபாய் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை பொய்க்கணக்குக் காட்டியது.

மத்திய பிரதேசத்தில் அரசு பணி நியமனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பில் சுமார் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்ததது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில பாஜக அரசு. 'வியாபம் ஊழல்' எனப்படும் இக்குற்றத்தில் பாஜகவின் தீவிர இந்துத்துவ முகங்களில் ஒருவரான உமாபாரதி, அன்றைய மாநில பாஜக அமைச்சர்களான லட்சுமிகாந்த் சர்மா, ஒ.பி.சுக்லா உள்ளிட்ட பலரும் பங்கெடுத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சுமார் 40 பேர் 'மர்மமான முறையில் மரணித்தனர்.'

இவை எல்லாவற்றையும் விட, அட்டகாசமான, உலகமே வியக்கும் 
'அகண்ட ஊழல்' ஆட்சியை தேசிய அளவில் கொடுத்தவர்தான் மோடி ஜி. 
2014 இல் 'ஊழலுக்கு எதிரான நாயகனாக' பாஜகவாலும் அன்னா ஹசாரே போன்ற பாஜகவின் தரகர்களாலும் முன்னிறுத்தப்பட்டார் மோடி. ஆனால், அதற்கும் முன்னரே அவர் குஜராத்தை ஊழல் கூடாமாகத்தான்‌‌ ஆட்சி செய்து வந்தார் என்பதுதான் உண்மை. அதானிக்கு வாரிக் கொடுத்து ஊழலில் திளைத்த உத்தமரான மோடி, குஜராத் மாநில எரிபொருள் ஒப்பந்தங்களை அலுவலகமே இல்லாத போலி நிறுவனங்களுக்கு வழங்கி ஊழல் செய்த வரலாறு உண்டு. கர்நாடகாவில் சுரங்க ஊழலில் சிக்கிய பாஜக முதல்வர் பதவி வகித்த காலத்தில் 'குஜராத் மாடல் ' என்னும் பெயரில் ஊழல் மலிந்த ஆட்சியை ஆர்எஸ்எஸ் இன் செல்லப்பிள்ளை மோடி நடத்திக் கொண்டிருந்தார். குஜராத்தில் சிங்கங்களின் வாழ்விடமாக உள்ள கிர் காட்டுப்பகுதியில் சுண்ணாம்பு சுரங்கத்தை முறைகேடாக தனியார் நிறுவனத்திற்கு மோடி தாரை வார்த்ததை எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர் அமீத் ஜெத்வா என்பவரை குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே சுட்டுக் கொன்றது பாஜக கும்பல். இக்கொலையில் நேரடியாக ஈடுபட்டவர் பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டினு சோலாங்கி. இத்தகைய பகீர் இரக ஊழல் எதிர்ப்பு புலியான மோடியைத்தான் ஊழலின் எதிர்ப்பு பிம்பமாக காட்டி பிரதமராக ஆக்கியது பாஜக. 

ஏழையின் மகனென்கிற விளம்பரத்துடன் வந்த மோடி, அதானி, போன்ற பெருமுதலாளிகளின் வளர்ப்பு மகனாகவே தம்மை நிறுவிக்கொண்டதோடு அரசையும் தம்முடைய பிரதமர் பதவியையும் அதானிகளின் காலடியில் வைத்துவிட்டு கைக்கட்டி, வாயைப் பொத்தி நின்றார். அதானிக்கு பன்மடங்கு சொத்து பெருகியது, மோடி அரசின் ஊழலும் பெருகியது. நிலக்கரி இறக்குமதி, துறைமுகங்கள் தாரை வார்ப்பு, மின்சார திட்டங்களில் அதானியை அனுமதிப்பது, அரசு ஒப்பந்தங்களை வாரிக் கொடுப்பது, என அதானியே‌ போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு கரசேவை செய்தார் மோடி. கடல் கடந்து இலங்கையிலும் அதானிக்கு காற்றாலை மின் உற்பத்தி தொழிலில் ஒப்பந்தம் கிடைக்க 'அழுத்தம்' கொடுத்தார் மோடி. போலவே, அம்பானி உள்ளிட்ட பிற முதலாளிகளும் மோடியின் கரசேவையைப் பெற்று பெருத்துக் கொண்டிருக்கிறார்கள்.மோடி மற்றும் முதலாளிகளுக்கிடையிலான உறவின் பின்னணியில் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய ஊழல்கள் மறைந்துள்ளன. 

5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை அரசு தொலைதொடர்புத்துறையின் நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-க்கு அளிக்காமல், அம்பானியின் ஜியோ, அதானி, வோடாபோன் , ஜடியா‌, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அலைக்கற்றையின் மொத்த மதிப்பு 4.3 லட்சம் கோடி என்று ஒன்றிய அரசே மதிப்பிட்டிருந்தது. ஆனால், மோடி அரசு தம்முடைய எஜமான்களான அதானி, அம்பானி உள்ளிட்டவர்களுக்கு விற்றதோ வெறும் 1.50 லட்சம் கோடிக்குதான். இதன் மூலம், 2.80 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 

அவ்வப்போது மோடி இராணுவ உடையில் ஃபோட்டோ ஷூட் செய்வதுண்டு. இராணுவத்துறையை அந்தளவுக்கு மதிப்பவராக தம்மைக் காட்டிக் கொண்ட மோடி, அதே இராணுவத்திற்கு விமானத்தை வாங்குவதிலும் ஊழல் செய்து தமது கைவரிசையைக் காட்டினார். அதுதான் ரஃபேல் ஊழல்.

இந்திய இராணுவ செயல்பாடுகளுக்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் இரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்கை மன்மோகன்சிங் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசால் 2012 இல் போடப்பட்டது. மொத்தம் 126 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் அது. அதன்படி, தயாராக உள்ள 18 விமானங்களை இறக்கு மதி செய்துகொண்டு, மற்ற விமானங்களை பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அரசின் 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில்' பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில்தான் மோடியின் ஆட்சியும் வந்தது. மோடியும் ரஃபேல் விமானத்தை வாங்கினார். ஆனால், அதில் முறைகேட்டையும் ஊழலையும் நிகழ்தினார்‌. 126 விமானத்திற்கு பதிலாக 36 விமானங்களை வாங்கியது மோடி அரசு. ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய். ஆனால் மோடி அரசோ இரண்டு மடங்காக 1,670 கோடி ரூபாய் விலைக்கொடுத்து வாங்கியது. விமான தயாரிப்புப் பணிகளை அரசின் பொதுத்துறை நிறுவனமான 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் ' நிறுவனத்திடம் ஒப்படைக்காமல், அதுவரை ஒரே ஒரு விமானத்தைத் கூட தயாரிக்காத அம்பானி நிறுவனத்திடம் ஒப்படைத்தது மோடி அரசு‌. 

இதற்கு முந்தைய அரசுகளைவிட அதிளவில், பல்வேறு கோணங்களில், புது புது வடிவங்களில் மோடி அரசு முறைகேடுகளையும் ஊழல்களையும் செய்து வருகின்றது. கடந்த ஆண்டு ஒடிசாவில் சுமார் 250 பேரை காவு வாங்கிய இரயில் விபத்தின் பின்னணியில் கூட ஊழலே உள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு அறிக்கை கூறியது. 

பொதுத்துறையை தனியார்மயமாக்குவது, அரசு ஒப்பந்தங்களில், ஏலமுறையில் முறைகேடுகளை செய்தல், பெருமுதலாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்குதல், வங்கிகள் மூலம் கடன் அளித்தல், அதே கடன்களை தள்ளுபடி செய்தல், வரிவிலக்கு அளித்தல், பல்லாயிரம் கோடி மோசடி செய்தவர்கள் தப்பிச்செல்ல வாய்ப்பளித்தல் என மோடி- பாஜக அரசு செய்த ஊழல்கள் பலவகைகள். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை ஆயுதங்களாக காட்டி மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பணப் பறிப்புகளும் , தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் குவித்ததுவும் கூட ஊழலின் வகைகள்தான். இவையெல்லாம் மிகச் சுருக்கமாக பாஜகவின் ஊழல் முகத்தை எடுத்துக்கூறும் தகவல்கள்தான்.‌ பாஜகவுக்கு ஊழலே தெரியாது, மோடி ஊழலுக்கு எதிரான அப்பழுக்கற்ற நேர்மையாளர் என்றெல்லாம் கூறப்படும் பொய்களை விளக்க பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்படும் அளவுக்கு உண்மைகள் உள்ளன. ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும் திட்டங்களில் மோடி அரசு செய்துள்ள முறைகேடுகளின் மூலம் சுமார் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்(ரூ.7,50,000,00,00,000)
 அரசுக்கு நட்டம் வந்துள்ளதாக அரசு தலைமை கணக்கு தணிக்கை குழு(CAG)வின் அறிக்கையே கூறுகிறது. 'ஒரு கணக்கெடுப்பின் தகவலின் படி, மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதாக 55 சதவீத மக்களும், ஊழலின் வளர்ச்சிக்கு மோடி அரசுதான் காரணம் என்று 25 சதவீத மக்கள் நம்புவதாகவும் ' ராகுல் காந்தி கூறியதை புறந்தள்ளிவிட முடியாதபடி தான் மோடி ஆட்சியின் இலட்சணம் உள்ளது. மோடியின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதை உள்ளூர் மக்கள் முதல், உலகளாவிய கணக்கெடுப்புகள் வரை கூறிக்கொண்டிருக்க, எந்த கூச்சமும் இல்லாமல் இன்னமும் ஊழல் எதிர்ப்பு என்னும் கேலிச்சித்திர நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர்.

புதன், 10 ஏப்ரல், 2024

சீர்த்திருத்தப் போராளி ஜோதிராவ் புலே.



ஸ்டாலின் தி 

ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகாலத்தில் இந்தியி சமூகங்களில் பல்வேறு சீர்த்திருத்த சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தோன்றினார்கள். அவர்களுள் முதன்மையான வரிசையில் முக்கியமான இடத்தில் இருப்பவர் மகாத்மா என்று மக்களால் அழைக்கப்பட்ட ஜோதிராவ் புலே ஆவார்.

1827 ஏப்ரல் 11 ஆம் நாளில், மகாராஷ்டிரா மாநிலம், வதேரா மாவட்டம் புனா பகுதியில் அமைந்திருந்த கட்கன் என்னும் ஊரில் பிறந்தார் புலே. அவருடைய முழப் பெயர் 'ஜோதிபா கோவிந்த் ராவ் புலே' ஆகும். மாலி என்னும் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்த புலேவின் தந்தை காய்கறி மற்றும் பூக்களை விற்கும் சிறு வணிகராக இருந்தார். ஏழ்மையான குடும்பம் அவருடையது. புலே குழந்தையாக இருக்கும் போதே அவருடைய தாயார் இறந்துவிட்டார்.குடும்பம் வறிய நிலையில் இருந்தாலும் தம்முடைய மகனான புலேவின் கல்விக்கு துணையாக இருந்தார் அவருடைய தந்தை. அந்த தந்தையின் நல்ல நண்பர்களும் அதற்கு ஊக்கமாக பங்களித்தனர். சூத்திர வர்ணத்தார் கல்வி கற்பதில் அப்போது பல்வேறு இடையூறுகள் இருந்தன. குறிப்பாக, ஆங்கிலேயர் கொண்டு வந்த கல்வியில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பிராமணர் மற்றும் உயர் சாதியினர்கள் பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திர சாதியினர் கல்வி பெறுவதை விரும்பவில்லை. பல இடங்களில் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்கள். ஆனாலும், அறிவின் மீதான புலேவின் நாட்டமும் அவருடைய தந்தையின் அக்கறையும் அவரை ஸ்காட்டிஷ் மெட்ரிக் பள்ளியில் சேர்த்தன. 1847 இல் அங்கே பள்ளிப்படிப்பை முடித்தார். இதற்கிடையில் அவருக்கும் சாவித்ரிபாய் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது, புலேவுக்கு வயது 13; சாவித்திரியின் வயது 10. இது அக்காலத்தில் இருந்த குழந்தை திருமண (பால்ய விவாகம்) முறையாகும். சமூக நிர்பந்தத்தால் இளம்பிராயத்தில் திருமணம் செய்துகொண்டாலும், புலேவின் எண்ணம் வேறாக இருந்தது. பெண்கள் கல்விக் கூடத்தில் அனுமதிக்கப் படாத அக்காலத்தில், சாவித்திரிக்கு வீட்டிலேயே பாடம் நடத்தி கல்வியை புகட்டினார் புலே. இந்திய சுதந்திரத்திற்கும் நூறாண்டுக்கும் முன்னவே தம்முடைய வீட்டில் புலே துவக்கிய இந்த சீர்த்திருத்தம்தான் பிறகு, இந்திய சீர்த்திருத்த வரலாற்றில் முக்கிய விளைவுகளை உருவாக்கியது. 

1848 இல் தம்முடன் கல்விக்கூடத்தில் படித்த பிராமண நண்பர் வீட்டு திருமணத்திற்கு புலே சென்றார். அந்த திருமண ஊர்வலத்தில் புலேவை பார்த்த பிராமணர்கள் அவரை கடும் சொற்களால் பேசினர், ஏசினர். ஒரு சூத்திரன் எப்படி பிராமணரோடு ஊர்வலத்தில் வரலாம் என்று கேட்டு புலேவை இழிவுபடுத்தினர்.ஏற்கனவே, சனாதன மனுதர்மத்தால் பெரும்பான்மையான மக்கள் ஒதுக்கப்படுவதை கண்டு சீர்த்திருத்த சிந்தனையை தமக்குள் வளர்த்து வந்த புலேவிற்கு இந்த வன்கொடுமை மேலும் சிந்திக்க தூண்டியது. அவருடைய சீர்த்திருத்த சிந்தனையானது களம் நோக்கி புறப்பட்ட தருணம் அதுதான். 
 
மனு வாதத்தால் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், தலித்துகள், சூத்திரர்கள் ஆகிய தரப்புக்கு கல்வியை போதிப்பதை முதற்கட்டமாக முன்னெடுத்தார். சிந்தியா ஃபெரர் என்னும் அமெரிக்க பெண்மணி மும்பை அகமத்நகரில் பெண்களுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இது இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களுக்காக அமெரிக்க மிஷனரியால் நடத்தப்பட்ட பள்ளியாகும். அங்கே சென்று பார்வையிட்டார் புலே. அதைத் தொடர்ந்து, 1848 இல், தம்முடைய 21 ஆவது வயதில் முதல் பள்ளியை துவக்கினார். இந்திய பெண்களுக்காக, இந்தியரால் துவக்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் அதுதான்.ஜோதிராவ் புலே தான் அதன் முதல் ஆசிரியர்; அவரிடம் வீட்டில் கல்வி கற்ற சாவித்திரி புலேதான் அப்பள்ளியின் முதல் ஆசிரியை. 

ஜோதிராவ்-சாவித்திரிபாய் இணைந்து பெண்களுக்கான பள்ளியைத் துவக்கியதும் இந்து சனாதன கும்பல் வெறிப்பிடித்து கூச்சலிட்டது . பெண்களை படிக்க வைத்து சாஸ்திரத்தை இழிவு செய்ததாக புலேவும் சாவித்திரி புலேவும் கடுமையாக கண்டிக்கப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர். பள்ளிக்கு பாடம் எடுக்கச் செல்லும் வழியில் சாவித்திரி புலே தாக்கப்பட்டார். அவர் மீது சாணத்தை கறைத்து ஊற்றியது சனாதன சாஸ்திர அடிமை கும்பல். ஆனால், கல்வியின் மீது பற்று கொண்ட பெண்களும் தலித்துகளும் சூத்திரர்களும் ஜோதிராவ் புலே-சாவித்திரி புலே ஆகிய இருவரையும் தேடி வந்தனர். அவர்களின் கல்விச் சேவை விரிவடைந்தது.

ஜோகிராவ் புலே கல்வியில் மட்டுமல்ல, சமூகப் பிரச்சினைகளிலும் தீவிர கவனம் செலுத்தினார். கைம்பெண்களுக்காகவும், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்காகவும் காப்பகங்களை துவக்கினார். 1863 இல், புனேவில் பிராமண சாதியில் பிறந்த காஷிபாய் என்னும் கைம்பெண் கருவுற்றார். கைம்பெண்களுக்கு மறமணமே கூடாது என்று இந்து சனாதன கும்பல் உக்கிரமாக இருந்த காலம் அது. அதிலும் பிராமண பெண் என்றால் இம்மியளவும் 'சாஸ்திரத்தை மீறக் கூடாது' என்கிற கட்டுப்பாடு வலிமையாக இருந்தது. இந்நிலையில்தான் காஷிபாய் கருவுற்றார். அவரால் கருச்சிதைவும் செய்துகொள்ள முடியவில்லை. மிக இரகசியமாக குழந்தையை வயிற்றில் சுமந்தார்‌. குழந்தையும் பிறந்தது. சனாதனிகள் மீதான அச்சத்தில் தாம் ஈன்றெடுத்த பச்சிளங் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றார் காஷிபாய். சனாதன ஒடுக்குமுறையை வேடிக்கைப் பார்த்த அன்றைய ஆங்கிலேயே அரசாங்கம் சிசு கொலைக் குற்றச்சாட்டில் காஷிபாயை சிறைக்கு அனுப்பியது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ஜோதிராவ் புலே, 'கைம்பெண்கள் கருவுற்றால் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் குழந்தை பெற்றுக்கொள்ள வசதி உண்டு' என்கிற விளம்பர அறிவுப்புடன் 'சிசு காப்பகம்' ஒன்றை நிறுவி சமூகத்தில் அதிர்வை உண்டாக்கினார். போலவே, கைம்பெண் மறுமணத்திற்கு தொடர்ந்து குரல்கொடுத்தார். அவருடைய முயற்சியால் பல கைம்பெண்களுக்கு மறுமணங்கள் நடத்தப்பட்டன. 

இந்து சுதேசிகள் நடத்திய போலியான சுதந்திர அரசியலை புலே ஏற்க மறுத்தார். 1857 சிப்பாய் கலகத்தை முதல் சுதந்திர போராட்டம் என்று மற்றவர்கள் வர்ணித்த போது, 'அது உயர்சாதியினர் அவர்களுக்காக நடத்திய போராட்டமேத் தவிர, இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம் அல்ல' என்கிற உண்மையை எடுத்துக் காட்டியவர் புலே. 

சாதிய சமூக அமைப்பை உடைத்தெரிவதே உண்மையான சுதந்திரம் என்றார் ஜோதிராவ் புலே. வர்ணாசிரமமும் தீண்டாமையும் ஒழித்துக்கட்டப்பட வேண்டிய கேடுகள் என்பதை பரப்புரை செய்து அவர், அத்தகைய முன்னெடுப்புகளை செயல்படுத்த 1873 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாளில் 'சத்ய சோதக் சமாஜ் (உண்மையை நாடுவோரின் சமூகம்)' என்னும் இயக்கத்தைத் துவக்கினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவற்றை கொள்கையாகக் கொண்ட இவ்வியக்கம், பகுத்தறிவை வலியுறுத்தியது, மூட நம்பிக்கைகளை எதிர்த்தது, பிராமண புரோகிதத்தை தேவையற்றது என்று பரப்புரை செய்தது. புத்தர், கபீர், துக்காராம் ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கிய ஜோதிராவ் புலே அக்கருத்துகளின் தாக்கத்தில் சத்ய சோதக் சமாஜை நடத்தினார். இவ்வியக்கத்தின் சார்பில் பல்வேறு சீர்திருத்த கருத்துகளைக் கொண்ட நூல்களும் கல்வி சார்ந்த நூல்களும் வெளியிடப்பட்டன. ஜோதிராவ் புலேவும் பல நூல்களை இயற்றியுள்ளார். தாம் ஒரு கவிஞர் ஆக இருந்த போதும், தம்முடைய நூல்களில் மக்களின் பேச்சு மொழிக்கே அதிகம் முக்கியத்துவம் அளித்தார். வெகுமக்களுக்கு கருத்துகளை சேர்க்க வேண்டும் என்கிற அக்கறையின் வெளிப்பாடு அது.

புலேவின் சமூக செயற்பாட்டை பாராட்டும் வகையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் விட்டல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகர் அவர்கள், 1888 ஆம் ஆண்டு ஜோதிராவ் பிறந்த நாளான ஏப்ரல் 11 ஆம் நாளில், அவருக்கு 'மகாத்மா' பட்டத்தை வழங்கினார். மக்களும் அவரை மகாத்மா என்றே அழைத்தனர். புலேவின் சீர்த்திருத்த செயற்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் மக்களால் கூறப்பட்ட 'மகாத்மா' பட்டத்தை, வர்ணாசிரம விரும்பியான காந்திக்கு அளித்து புலேவின் வரலாற்றை மறைக்க முயற்சித்தனர் இந்து சனாதனிகள். ஆனால், இந்தியாவில் சமூக மாற்றம் வேண்டும் என்கின்ற நோக்கத்தை உடையவர்களால் புலேவின் வரலாறு பாதுகாக்கப்பட்டது.

ஜோதிராவ் புலே தம்முடைய சீர்திருத்த முன்னெடுப்புகளால், அவருக்கு பின் வந்த பல்வேறு சமூக போராளிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தம்முடைய 63 ஆவது வயதில் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட ஜோதிராவ் புலே, 1890 ஆம் ஆண்டில் இயற்கை அடைந்தார். அதற்கும் அடுத்த ஆண்டான 1891 இல் அதே மகாராஷ்டிரா மண்ணில் பிறந்தார் அண்ணல் அம்பேத்கர். காலத்தாலும், எண்ணத்தாலும் புலேவை தொடர்ந்து வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தம்முடைய வழிகாட்டிகளின் பட்டியலில் ஜோதிராவ் புலே அவர்களுக்கு முக்கிய இடமளித்தார். 

(ஏப்ரல் 11: ஜோதிராவ் புலே அவர்களின் பிறந்த நாள்.)



தலித் விவசாயக் குடும்பத்தை மோசடி செய்த பாஜக-அதானி கூட்டு நிறுவன திருட்டுக் கும்பல்.

ஸ்டாலின் தி 


குஜராத்தில் தலித் விவசாயியான ஹரேஷ் சவகரா என்பவரின் குடும்பத்தினர் ஏழு பேருக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தை, வெல்ஸ்பன் என்னும் தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியது. இந்த 11 ஏக்கருக்கும் குஜராத் அரசு நியமித்த விலை ரூ 76 கோடி ஆகும். ஆனால், வெல்ஸ்பன் நிறுவனம் மாவட்ட துணை ஆட்சியர் மெகுல் தேசாய் மூலம், விதிகளுக்குப் புறம்பாக, 16.61 கோடி ரூபாயாக விலையை குறைத்தது. வேறு வழியின்றி அந்த விலைக்கு ஹரேஷ் சவகரா குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.‌ 

அதைத்தொடர்ந்து, வெல்ஸ்பன் நிறுவன விடுதிக்கு 2023 அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 8 ஆகிய தேதிகளுக்குள் நான்கு முறை ஹரேஷ் சவகரா மற்றும் அவருடைய தந்தையான சவகார மான்வர் ஆகியோரை அழைத்து வெல்ஸ்பன் நிறுவன பொது மேலாளர் மகேந்திர சிங் சோதா பேச்சுவார்த்தை நடத்தி, 16.61 கோடி ரூபாய் (16,61,21,877)
க்கு நில விற்பனையை பேசி முடித்து வைத்துள்ளார். அவருடன் அப்போது அங்கே அஞ்சார் நகர பாஜக தலைவர் ஹேமந்த் ரஜினிகாந்த் ஷா என்கிற நபரும் இருந்துள்ளார். அவர் இருவரும், 'இவ்வளவுத் தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருந்தால் வருமான வரித்துறை சோதனையை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தியுள்ளார்கள். என்ன செய்வதென்று தெரியாத அப்பாவி ஹரேஷ் சவகராவை குழப்பி, 'தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்தால் பணமும் பாதுகாப்பாக இருக்கும், ஒன்றரை மடங்காக இலாபமும் கிடைக்கும் ' என்று பொய்யைப் பேசி, ஹரேஷ் சவகரா மற்றும் அவருடைய தந்தை சவகாரா மான்ஸ்டர் ஆகியோரை தம்முடைய வஞ்சக வலையில் சிக்க வைத்துள்ளார்கள். அச்சமும் குழப்பமும் அடைந்த அவர்கள் இருவரும், வெல்ஸ்பன் நிறுவனத்தைச் சார்ந்த மகேந்திர சிங் சோதா மற்றும் பாஜக நகரத் தலைவர் ரஜினிகாந்த் ஷாவின் சொல்படி தேர்தல் பத்திரத்திற்கு ஒப்புதல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, ரூ.2,80,15,000 (இரண்டு கோடியே எண்பது லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்) முன்பணமாக வெல்ஸ்பன் நிறுவனத்தால் ஹரேஷ் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.13,81,09,877 (பதிமூன்று கோடியே எண்பத்தி ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஏழு ரூபாய்) நிலத்தில் பாத்தியமுடைய ஹரேஷ் சவகரா மற்றும் குடும்பத்தினருக்கு மாற்றப்பட்டது. இறுதியாக, மோசடிக் காரர்களின் திட்டப்படி குஜராத் காந்திநகர் கிளை 'SBI வங்கி'யில், 2023 அக்டோபர் 11 ஆம் நாளில் 11 கோடியே 14 ஆயிரம் ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன. அவற்றின் மூலம், 2013 அக்டோபர் 16 ஆம் நாளில் பாஜகவுக்கு 10 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில்(18/10/2023) சிவசேனாவுக்கு 1 கோடியே 14 ஆயிரம் ரூபாயும் பணமாக பரிவர்த்தனை செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் வாங்குவதற்கு செலுத்தப்பட்ட பணம் இலாபத்துடன் திரும்ப வரும் என்று காத்திருந்த ஹரேஷ் சவகரா குடும்பத்தினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டனர். 

எனவே, வெல்ஸ்பன் நிறுவன இயக்குனர்கள் விஸ்வநாதன் கொல்லங்கோடு, சஞ்சய் குப்தா, சிந்தன் தாக்கர், பிரவீன் பன்சாலி, நிறுவன தலைமை பொது மேலாளர் மகேந்திர சிங் சோதா, அஞ்சார் நிலம் கையகப்படுத்துதல் அலுவலர் விமல் கிஷோர் ஜோஷி மற்றும் அஞ்சார் நகர பாஜக தலைவர் ஹேமந்த் ரஜினிகாந்த் ஷா ஆகியோர் மீது அஞ்சார் காவல்நிலையத்தில் கடந்த மார்ச் 18(2024) அன்று வழக்கு தொடுத்தார்கள் ஹரேஷ் சவகரா குடும்பத்தினர்.

இக்குற்றத்தில், பாஜகவுடன் கைக்கோர்த்துள்ள வெல்ஸ்பன் நிறுவனமானது மும்பையை தலைமையாகக் கொண்ட நிறுவனமாகும். ஆடைகள் தயாரிப்பு, ஏற்றுமதி போன்ற தொழில்களில் ஈடுபட்ட இந்நிறுவனம் கடந்த 2005 இல் அதானி குழுமத்துடன் இணைந்து தொழில்துறையில் கோலோச்சத் தொடங்கியது. மோடியின் பாஜக ஆட்சியில் இந்நிறுவனம் அதீத வளர்ச்சியை கண்டு வருகிறது. இதன் வளர்ச்சிக்குப் பின்னணியில் பாஜகவும் பாஜக அரசும் எத்தகைய உதவிக்கரமாக உள்ளன என்பதற்கு ஹரேஷ் சவகரா குடும்பம் ஏமாற்றப்பட்ட நிகழ்வே சாட்சியாக உள்ளது‌. 

அரசுத் துறைகளை பயன்படுத்தி விதிமீறலாக நிலத்தின் விலையைக் குறைத்தல், போலியான தகவலைக் கூறி அப்பாவிகளை மிரட்டுதல், வஞ்சகமாக 11 கோடியே 14 ஆயிரம் ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் அபகரித்தல் என பலக் குற்றங்கள் மூலம் பாஜகவும் வெஸ்பன் நிறுவனமும் ஓர் தலித் விவசாயக் குடும்பத்தின் நிலத்தை வாங்கியதில் அநீதியை செய்திருக்கின்றனர். பெரும் முதலாளிகளை வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை ஈட்டிய பாஜக, ஓர் எளிய தலித் விவயாசக் குடும்பத்திடம் வஞ்சகமாக சுமார் 11 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் திருடியுள்ளது. சிவசேனாவும் இந்த திருட்டில் பங்கு போட்டுள்ளது. இத்தகைய மோசடிக் கும்பலை அரசியல் அதிகாரத்திலிருந்தும், தொழில் துறையிலிருந்தும் அகற்றிடாதவரை இத்தகைய வஞ்சகமும் மோசடித்தனங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.


தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக செய்துள்ள அத்தனை மோசடிகளும், குற்றங்களும் வெளிக்கொண்டுவர பண்பாட்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தை அரசு கையகப்படுத்திட வேண்டும். அதற்கும் முன்னதாக, மோடியின் பாஜக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்.


ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

பாஜகவும் பாஜக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்றவையா?


ஸ்டாலின் தி 

மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்(4/4/2024) பேசிய மோடி, 'பெண்களுக்கு எதிரானக் கொடுமைகளை பாஜவால் மட்டுமே தடுக்க முடியும்' என்று பேசியுள்ளார்.‌ அவருடைய இந்த கருத்து பொய்யானது என்பதையே நிகழ்வுகளும் தரவுகளும் நமக்குக் காட்டுகின்றன.

இந்திய அரசியல் கட்சிகளில், பாலியல் குற்றவாளிகள் அதிகம் உள்ள கட்சி பாஜக தான் என்பதை ஆய்வுகளும் செய்திகளும் கூறுகின்றன. ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஒன்று எடுத்த கணக்கெடுப்பின்படி, பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்ட நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்ட கட்சி பாஜகவே ஆகும். வேலைக் கேட்டு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவது, மேடை உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களிடம் அத்துமீறுவது என பலவகையான பாலியல் குற்றங்களை பாஜகவினர் செய்தது அம்பமாகியுள்ளன. பாஜகவின் பாலியல் குற்றவாளிகள் சிறுமிகளையும் கூட விட்டுவைப்பதில்லை என்பதும் ஆதாரமுடைய உண்மையாகும்.


கடந்த 15/12/2023 அன்று, உத்தரப் பிரதேசம் சோன்பத்ரா நீதிமன்றம், 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாஜகவின் உத்தரப் பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்ற உறுப்பினரான ' ராம் துலார் கோண்ட்'க்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 
அண்மையில்(2024 மார்ச்), பாஜகவின் பொருளாதார பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா மீது, இருசக்கர வாகனம் வாங்கித் தருவதாக கூறி 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இப்படியான பாலியல் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கட்சியில் வைத்துக் கொண்டுதான், பாஜகவை பெண்களின் பாதுகாப்புக்கான கட்சியாக மோடி கூறிக் கொண்டிருக்கிறார். பாஜகவின் தனிநபர்களால் மட்டுமல்ல, பாஜகவின் ஆட்சியாலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மோடியின் குஜராத் ஆட்சியிலிருந்தே இந்த அவல வரலாற்றை நம்மால் கூறமுடியும். 


குஜராத்தில் மோடியின் தலைமையிலான பாஜக அரசு நடந்த போது(2002), பாஜக உள்ளிட்ட சங் பரிவார்களால்‌ உருவாக்கப்பட்ட குஜராத் வன்முறையில் நூற்றுக்கும் அதிகமான இஸ்லாமிய பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டனர். சங்பரிவார கும்பலால் பொது இடத்திலும் பிற இடங்களிலும் வைத்து பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பலாத்காரத்திற்கு பிறகு பல பெண்கள் கொல்லப்பட்டனர். கர்ப்பிணி பெண்ணையும் கூட வன்புணர்ந்து வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்து வீதியில் வீசினர். அத்தனையையும் அன்றைய மோடி தலைமையிலான குஜராத் மாநில மோடி அரசும், வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய பாஜக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததை மோடியின் கும்பல் மறந்ததைப் போல நடித்தாலும் வரலாறு ஒருபோழ்தும் மறக்காது. 

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சி இந்தியாவில் அமைந்த பிறகு, பெண்கள் மீதான வன்முறைகள், கொடுமைகள் அதிகரிக்கின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளும் தரவுகளும் எடுத்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, 2018 இல் இந்திய அளவில் பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 3, 78,236. ஒரே ஆண்டில் (2019) இக்குற்றங்களின் எண்ணிக்கை 4,05,861 ஆக உயர்ந்தது. அதாவது, ஓராண்டில் 7.3 சதவீதமாக குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டன. இத்தகவலை கூறுவது மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசால் இயக்கப்படும் 'தேசிய குற்றவியல் ஆவணப் பிரிவு(NCRB)' தான்.‌

உலகப் பொருளாதார மன்றம்(World Economic Forum) 2021 இல் அளித்த 'உலகளாவிய பாலின இடைவெளியை கூறும் அறிக்கை' 156 நாடுகளில் இந்தியா 140 ஆவது இடத்தில் உள்ளது என்று கூறுகிறது. அதற்கும் முன்பு இந்தியா 112 ஆவது இடத்தில் இருந்தது.  


தேசிய குற்றவியல் ஆவணப்பிரிவின் கணக்கின்படி, இந்தியாவில் பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் நடக்கும் மாநிலங்களில் முதல் இடத்தை பிடித்திருக்கும் மாநிலமாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம்தான் உள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு பிறகு கொல்லப்படுதல் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தடுத்த இடங்களை மத்திய பிரதேசமும் அஸ்ஸாமும் பிடிக்கின்றன. இவையும் பாஜக ஆளுகின்ற மாநிலங்களேயாகும். சுமார் ஓராண்டாக கலவரங்களும் அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் மீது வன்முறைகளும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மணிப்பூரை ஆளுவதும் கூட பாஜகதான். 

ஆதித்யநாத் யோகி தலைமையில் 2017 இல் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது‌. யோகி சிறந்த துறவி என்பதால் மாநிலத்தை ஆன்மீக வழியில் வழிநடத்தி குற்றவாளிகள் குறையச் செய்வார் என்றார்கள் பாஜகவினர். 2022 இல் அமித்ஷா 'யோகி ஆட்சியில்தான் உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது. 16 வயது சிறுமிகூட நகைகள் அணிந்தபடி பயமில்லாமல் திரிய முடிகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகுதான் இந்த மாற்றம் சாத்தியமானது' என்று வர்ணித்தார்.


ஆனால், யோகி ஆட்சியில்தான் கூடுதலானது குற்றங்கள். குறிப்பாக, பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள். பாலியல் வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரத்திற்கு பிறகு கொல்லப்படுதல் , தாக்கப்படுதல், கூட்டு பலாத்காரம், கடத்தப்படுதல், அச்சுறுத்தப்படுதல் என பலவகையில் உத்தரப்பிரதேச பெண்கள் வன்முறைகளை நாட்டின் பிற மாநிலப் பெண்களைவிட அதிகம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வயலுக்குப் போகும் பெண்கள், இயற்கை உபாதைக்கு ஒதுங்கும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள் என பலதரப்பட்ட பெண்களும் எந்நேரத்திலும் வன்கொடுமைக்கோ பலாத்காரத்திற்கோ ஆட்படுத்தப்பட நேரிடும் அச்சுறுத்தலான மாநிலமாகவே பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளது. கழுத்தெலும்பை உடைத்துக் கொல்லுவது, தூக்கில் தொங்கவிடுவது, கோடாரியால் வெட்டிக் கொல்லுவது என பலவகையான கொடூரங்களை அங்கே பெண்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் குற்றவாளிகள். கடந்த மாதத்தில் கூட(2024 மார்ச்) உத்தரப் பிரதேசம் கான்பூரில் செங்கல் சூளையில் வேலை செய்துவந்த இரண்டு சிறுமிகள் இயற்கை உபாதைக்கு வயல்வெளிக்கு சென்றபோது, அந்த செங்கல் சூளை உரிமையாளர் ராம்ரூப் நிஷாத் (வயது48) உள்ளிட்ட மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டனர். மாநில பாஜக அரசின் காவல்துறை அலட்சியம் செய்தது. கொல்லப்பட்ட சிறுமிகள் இருவரில் ஒருவருடைய தந்தையும் அதே செங்கல் சூளையில் பிணமாக கிடந்தார். பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 

தலித் பெண்கள் மீதான சாதி வெறிக் குற்றங்களும் கொலைகளும் யோகி ஆட்சியில் தங்குதடை இன்றி தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக, 2022 பிப்ரவரியில் 22 வயதுடை உன்னாவ் மாவட்ட தலித் பெண் கழுத்தெலும்பு உடைக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரும் பாஜக அரசியல்வாதியுமான ஃபாதே பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங்குகிற்கு சொந்தமான இடத்தின் முன்பாக கிடந்தார். அப்பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கடத்தப்பட்டார். ஆனால், பாஜக அரசின் காவல்துறை அலட்சியம் காட்டியது. விளைவாக, அப்பெண் பிணமாகத்தான் கிடைத்தார். காணாமல் போன 
மற்றொரு தலித் சிறுமி மதுபானக் கடை ஒன்றின் ஓரமாக சடலமாகக் கிடந்தார். அவருடைய உடல் சிதைக்கப்பட்டிருந்தது. பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக பெண்ணின் குடும்பத்தினர் போராடிப் பார்த்தனர். ஆனால், யோகியின் பாஜக அரசு அதை விபத்து மரணமாக முடித்து வைத்தது.

உத்தர பிரதேச உன்னாவ் மாவட்டத்தில் கெடா கிராமத்தில், தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் பிணையில் வந்து கும்பல் சேர்த்து, அப்பெண்ணையும் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தையும் குடிசையில் வைத்துக் கொளுத்தினார்கள். குற்றவாளிகளை விரைவாக பிணையில் உத்தரப் பிரதேசம் பாஜக அரசு விடுவதன் கெடுவிளைவாக இந்த வன்கொடுமை எடுத்துக்காட்டுகிறது.

2023 ஜூன் மாதத்தில், உத்தரப் பிரதேசம் பாரபங்கி மாவட்டத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுக்குறித்த புகாரை அவர் காவல்துறையிடம் அவர் அளித்தார். மாநில பாஜக அரசின் காவல்துறையோ குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டு, சமரசத்திற்கு வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவருடைய குடும்பத்தினரையும் அச்சுறுத்தியது. இதில் மனம் உடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்டார். அதே மாதத்தில், ஜலான் மாவட்டம், அகோதி கிராமத்தில் தம்முடைய மகளான சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மீது பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மனம் நொந்துபோன தந்தை தற்கொலை செய்து கொண்டார். 
2023 அக்டோபர் 31 இல், உத்தரப் பிரதேசம் பண்டா மாவட்டம் படவுரா கிராமத்தில், மாவு ஆலையில் பணியாற்றிய 40 வயது தலித் பெண்மணி, அதே ஆலையில் தலைவேறு உடல் வேறாக வெட்டி வீசப்பட்டுக் கிடந்தார். அவருடைய ஒரு கையைத் துண்டித்து அவருடைய நிர்வான உடலில் வைக்கப்பட்டது. 'கொலையாளிகள் உயர்சாதியினர் என்பதால், யோகியின் அரசு நடவடிக்கை எடுக்க அக்கறைக் காட்டவில்லை ' என்று கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் கூறினார். 

 இதே ஆண்டு டிசம்பர் 29 இல், உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஆக்ரா நகரில் 22 வயது தலித் பெண் உத்தரப் பிரதேச காவலரால்(Constable) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச பாஜக அரசும் உத்தரப் பிரதேச நீதித்துறையும் எவ்வளவு மோசமாக பெண் மீதான வன்கொடுமை குற்ற வழக்குகளை கையாளுகிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் 'ஹகத்ராஸ் வன்கொடுமை வழக்கு.' 

உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்கர்கி (Bhulgarhi) என்னும் கிராமத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாளில், வயல்பகுதியில் கால்நடைகளுக்கான தீவனப்புல் அறுவடைக்கு சென்ற 19 வயது தலித் பெண்ணை, அதே ஊரின் தாகூர் சாதியைச் சார்ந்த சந்தீப் சிங் தாகூர், ராம் தாகூர், லவகுச தாகூர், ரவி தாகூர் என்னும் நான்கு சாதிய-பாலியல் வெறியர்கள் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணை கடுமையாகத் தாக்கி தூக்கியெறிந்தனர். முள்ளந்தண்டு (Spinal cord) உடைக்கப்பட்டு, பிறப்புறப்பு பகுதி சிதைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு அலிகாரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் பிறகு, புது டெல்லியில் உள்ள சப்தார்ஜங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த போது தம்மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய நான்கு பேர்களையும் குறிப்பிட்டு மரணவாக்குமூலம் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண், வன்கொடுமை நடந்த பதினைந்தாவது நாளில் மருத்துவ மனையிலேயே உயிரிழந்தார்.  

துவக்கத்திலிருந்து இந்த மாபெரும் வன்கொடுமையை மறைப்பதிலும் குற்றவாளிகளை பாதுகாப்பதிலுமே யோகி ஆதித்ய நாத் தலைமையிலான மாநில பாஜக அரசும் உள்ளூர் காவல்நிலையமும் செயல்பட்டன. இக்கொடுமையை சமூக வலைதளத்தில் பகிர்ந்த தலித் சமூகத்தினர் நீதி கோரிய போது, உத்தர பிரதேச பாஜக அரசும் அதன் காவல்துறையும் 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அது ஒரு வதந்தி' என்றும் 'சாதிய மோதலை உருவாக்க சிலர் அப்படி வதந்தியை பரப்புகிறார்கள்' என்றும் கூசாமல் பொய்ப் பேசியன. வன்கொடுமை நடந்த ஆறுநாள் கழித்து (20/9/2020)தான் புகாரை எடுத்துக்கொண்டது காவல்துறை. புகாரைப் பெற்ற இரண்டாம் நாளில் (22/9/2020) தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வன்கொடுமை நடந்த 15 ஆம் நாளான 29/9/2020 அன்று அப்பெண் சிகிச்சையின் போதே உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்காமல், அக்குடும்பத்தை வீட்டுக் காவலில் முடக்கி வைத்துவிட்டு, மறுநாள் பின்னிரவு சுமார் 2.30 மணியளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி தகனம் செய்தன. குடும்பத்தாரிடம் அனுமதி பெற்றுதான் தகனம் செய்தோம் என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் பிரசாந்த் குமார் அப்பட்டமாக பொய்ப் பேசினார். அதுபோலவே, இக்கொடுமையை எதிர்த்தவர்கள் மீது அரச அடக்குமுறையை யோகியின் பாஜக ஏவியது. உண்மையை கண்டறிய வந்த ஊடகத்தவர்களும் விரட்டப்பட்டனர். இராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை காணச் சென்ற போது, அவர்களின் வாகனங்களை மறித்த காவல்துறை, நடைபயணமாக அவர்கள் சென்றபோது வழிமறித்து நெட்டித் தள்ளியது. 2020 அக்டோபர் மாதத்தில் இக்கொடுமைப் பற்றி தாமாகவே முன்வந்து விசாரித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். 'அப்பெண்ணுக்கு நடந்த கொடுமைகளும், அவருடைய உடலை அரசு கையாண்ட மரியாதையற்றத் தனமும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது' என்று அலகாபாத் நீதிமன்ற அமர்வு கண்டித்து, அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டப் பிறகுதான், அக்கொடுமையைப் பற்றிய விசாரணை மத்திய புலனாய்வு பிரிவு(CBI)க்கு மாற்றப்பட்டது. 

விசாரணையை நடத்திய மத்திய புலனாய்வு பிரிவு 19/12/2020 அன்று சுமார் இரண்டாயிரம் பக்கத்திற்கான குற்றப்பத்திரிக்கையை சமர்ப்பித்தது. அதில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைப் பிரிவுகள் 376 (வன்புணர்வு), 376 (D) (கூட்டு வன்புணர்வு), 302 (கொலை) மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிற குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது மத்திய புலனாய்வு பிரிவு. பிணக்கூறாய்வு முடிவும், அப்பெண் பாலியல் வன்புணர்வுக்காட்படுத்தப்பட்டதையும், தண்டுவடத்தின் முள்ளம்தண்டு பகுதியும் கருப்பை வாய்ப்பகுதியும் கடுமையாகத் தாக்கப்பட்டதும்தான் மரணத்திற்கு காரணம் என்றும் உறுதிபடுத்தியிருந்தது. நாடறிந்த இந்த வன்கொடுமையின் நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்து, கடந்த 3/3/2023 அன்று, ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றம் 'நான்கு பேரில் எவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது நிரூபிக்கப்படவில்லை. மரணம் ஏற்படும் வகையில் தாக்கிய குற்றத்திற்காக மட்டும் சந்தீப் சிங் தாகூருக்கு ஆயுள்தண்டனை அளித்து, மற்ற மூவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்' என்று தீர்ப்பளித்தது. 

இதுதான் பாஜக மற்றும் பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பின் இலட்சணம். ஆனால், மோடியோ பாஜக ஆட்சிதான் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று கதையடிக்கிறார். 2012 இல் டெல்லியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவுக்கு நீதிக்கேட்டு அப்போது பேசிய மோடி, தம்முடைய ஆட்சியிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசுவதே இல்லை. 2014 பொதுத் தேர்தல் பரப்புரையில், நிர்பயா மீதான வன்கொடுமையை முன்னிறுத்தி, 'கற்பழிப்புத் தலைநகரம்' என்று டெல்லியை குறிப்பிட்ட மோடி, தம்முடைய ஆட்சியில் பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதைப் பற்றியோ, பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் பாலியல் குற்றங்களில் முன்னிலை வகிப்பதைப் பற்றியோ இப்போழ்து பேசவேயில்லை.  

பாஜக சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி. சனாதனமோ பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும், பாலியல் வக்கிரங்களையும் சமூக வழக்கமாக ஆக்கும் நோக்கத்தைக் கொண்டது. எனவே, பாஜகவும் சரி, பாஜகவின் ஆட்சியும் சரி, ஒருபோழ்தும் பெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுக்க வாய்ப்பே இல்லை என்பதே உண்மையாகும். பாஜகவும் மோடியும் அளிக்கும் 'பெண்களுக்குப் பாதுகாப்பு ' என்னும் வாக்குறுதி அவர்களின் மற்றைய வாக்குறுதி போலவே பொய்யானது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ளுவது நலமாகும்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

ராவ்பகதூர் பெ.மா.மதுரைப்பிள்ளை

ஸ்டாலின் தி 

சென்னையில் 1858, டிசம்பர் 26 இல் பிறந்தவர் மதுரைப்பிள்ளை. இவரது அப்பா பெயர் மார்கண்டன். துவக்கக்கல்வியை வேப்பேரி எஸ்.பி.ஜி.பள்ளியிலும் உயர்கல்வியை ரங்கூன் செயின்ட்பால்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும் கற்று, கல்லூரிப்படிப்பை சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் முடித்தார். 1877 இல் அன்றைய சென்னை கவர்ணர் பக்கிங்ஹாம் அவர்களிடம் எழுத்தராக பணீயில் சேர்ந்தார். பிறகு அவருக்கு வியாபார நோக்கம் வர, வணிகத்தொழிலில் ஈடுபட்டு, கப்பல் வாங்கி, துபாஷ் ஸ்டீவ்டேன் என்னும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தை நடத்தினார். இதன்மூலம் முதன் முதலில் சொந்தக் கப்பல் கொண்டு தொழில் செய்த பறையராக இவர் விளங்கினார். 

கொடையளிப்பதிலும் மதுரைப்பிள்ளை புகழ்பெற்றவராக இருந்தார். இந்துக்கோயில்களுக்கும், இஸ்லாமிய, கிறித்துவ நிறுவனங்களுக்கும் நன்கொடைகளை வழங்கிக்கொண்டிருந்ததால் இவரை எல்லாதரப்பினரும் வாழ்த்தும் நிலை இருந்தது. 1500 பக்கங்களைக்கொண்ட 'மதுரை பிரபந்தம்' என்னும் நூலில் இவரைப் புகழ்ந்து 500க்கும் அதிகமான புலவர்கள் பாடியிருக்கிறார்கள். 
உயர்நிலைப் பள்ளியைக் கட்டி கல்விக்கொடுத்த மதுரைப்பிள்ளை நீதிக்கதைகளையும், நற்சிந்தனைகளையும் நூட்களாக அச்சிட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகித்தார். 

1906 இல் ஜார்ஜ் மன்னரிடம் 'சிறந்த பொதுநலத்தொண்டர்' என்று அறிமுகம்
செய்துவைக்கப்பட்டார். மதுரைப்பிள்ளையின் மகளான மீனாட்சி அவர்களுக்கும் பூர்வகுடி தலித் மக்களின் தலைவரான வி.ஜி.வாசுதேவப் பிள்ளை அவர்களுக்கும் மகளாக பிறந்தவர்தான் அண்ணலின் போர்ப்படையின் வீராங்கணையாக விளங்கிய அன்னை மீனாம்பாள் சிவராஜ்.

#ஏப்ரல்
#தலித்வரலாற்று_மாதம்.

ஏப்ரல் 5- முன்னாள் துணை பிரதமார் பாபு ஜகஜீவன் ராம் பிறந்க நாள்.

ஸ்டாலின் தி 

பீகாரில் தலித் (சமார்) குடும்பத்தில் சோபிராம்-வசந்தி தேவி ஆகியோருக்கு 1908 ஏப்ரல் 5 இல் மகனாக பிறந்தார் ஜகஜீவன் ராம். தந்தை சோபிராம் அன்றைய பிரிட்டிஷ் படையில் பெஷாவரில் பணியாற்றிவந்தார். பள்ளியில் பயிலும் போது அங்கிருந்த 'தீண்டாமை குடிநீர் பாணையை' உடைத்தெரிந்தார். 1927 மெட்ரிகுலேஷன் தேர்ச்சிப்பெற்ற ஜகஜீவன் வாரணாசி பனராஸ் இந்து பல்கலைக்கழத்திலும், கல்கத்தா பல்கலைக்கழத்திலும் பட்டம் பெற்றார். இக்காலங்களில் கல்லூரி விடுதிகளில் நிலவிய தீண்டாமையை கடுமையாக எதிர்கொண்டார். 

ஆங்கிலேயர்களுக்கெதிராக எழுந்த போராட்டங்களில் பங்கேற்ற ஜகஜீவன் அதன் தொடர்ச்சியாக காங்கிரசில் 1931 இல் சேர்ந்தார். 1936 இலிருந்து சுமார் 50 ஆண்டுகள் சட்டமன்ற,உறுப்பினர் பதவிகளில் இடம்பெற்ற அரசியல் பிரபலமாக இருந்த அவர் நேருவின் அமைச்சரவையில் தொடங்கி மொரார்ஜி தேசாய் அமைச்சரவை வரை 'தொலை தொடர்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, செய்தித்துறை, போக்குவரத்து துறை, ரயில்வேத்துறை, வேலைவாய்ப்புத்துறை, உணவு-வேளாண்துறை, பாதுகாப்புத்துறை என பலத்துறைகளில் அமைச்சராக பணியாற்றிவர். பாதுகப்பு அமைச்சராக இருக்கும்போதுதான் பங்களாதேஷ் உருவாக இந்திய படை போரிட்டு வென்றது. உணவு மற்றும் வேளாண் அமைச்சராக இவர் இருந்தகாலத்தில்தான் 'பசுமைப் புரட்சி'யின் மூலம் உணவு உற்பத்தியை பெருக்கியது இந்தியா.

பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது சம்பூர்ணனின் சிலையை ஜெகஜீவன் திறந்துவைத்தார். அப்போது அந்த இடம்தீட்டு பட்டுவிட்டது என்று கூறி அவர் சென்ற பிறகு இந்துக்கும்பல் அவ்விடத்தில் தண்ணீர் ஊற்றிக்கழுவி தீட்டுக்கழித்தது.

அண்ணலின் அரசியலை எதிர்கொள்ள காங்கிரசு ஜகஜீவன் ராம் அவர்களை வளர்த்துவிட்டதாக கூறப்படும். ஆனால் அண்ணல் மீது மிக்க மதிப்பைக் கொண்டிருந்தவராகவே அவர் திகழ்ந்தார். அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார். காங்கிரசில் இருந்தாலும் அவர் தலித்துகளுக்கானவராகவும் இருந்தார். கோயில் நுழைவு, தீண்டாமை எதிர்ப்பு என்று களம் கண்டார். அவருடைய வளர்சிக்கு காங்கிரசு மட்டுமல்ல, அவருடைய ஒழுக்கம், சீர்த்திருத்த சிந்தனையுமே அவரை உயர்த்தியது.

காமராஜர் திட்டம் என்னும் கட்சிப்பணிக்காக அமைச்சரவையிலிருந்து வெளியேறிய பாபு ஜகஜீவன் இந்திரா காலத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி ஜனதாவில் இணைந்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் (1977-79) துணை பிரதமராக பதவி வகித்த பாபு ஜகஜீவன் பிறகு ஜனதாவிலிருந்து விலகி 'காங்கிரசு(ஜகஜீவன் ராம்)' என்ற கட்சியையும் ஆரம்பித்தார். 1986 இல் ஜூலை மாதம் 6 ஆம் நாள் காலமானார் பாபு ஜகஜீவன் ராம்.

(ஏப்ரல்: தலித் வரலாற்றியல் மாதம்) 

ஃப்ராய்டும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை ...