ஸ்டாலின் தி
முருகன் பற்றிய வேறுபட்ட கதைக் கூறலை நூற்றாண்டுகளுக்குப் முன்னரே முன்வைத்திருப்பவர் பண்டிதர் அயோத்தி தாசர். பண்டிதரின் கதையாடலில் முருகன் சிவனின் மைந்தனுமில்லை, அவதாரக் கடவுளுமில்லை, தமிழ் எனும் ஒரு மொழிக்கேயுரிய கடவுளுமல்ல. மாபெரும் தத்துவத்தை பின்பற்றி, மற்றவர்களுக்கும் அத்தத்துவத்தை போதித்து, தன்னலத்தை முற்றிலும் துறந்து ஆண்டியாக (பிக்குவாக) ஆகி வாழ்ந்தவர் முருகன். அவர் பின்பற்றிய தத்துவம் தம்மம்; அதாவது, பௌத்தம்.
இன்றைக்கு பழனி என்று அழைக்கப்படும் அன்றைய 'பூங்குறிஞ்சி' மலையை ஆண்டு வந்த பௌத்த அரசனான மருகனுக்கும், அவருடைய மனைவியான ராணி கங்கையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முருகன். முருகனின் மனைவி தெய்வானை. மயில் உருவில் செய்யப்பட்ட வாகனத்தில் வலம் வந்த முருகன், புத்த பள்ளியில் பயின்று, அறவாழ்வை மேற்கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றான். முருகன் புத்த தம்மத்தில் பயணித்து, வாழ்க்கையை கடந்து சென்ற பௌத்த சிரமணர் ஆவார். சிரமணன் என்பதே சரவணன் என்று ஆனது. இதுவே பண்டிதரின் பார்வையிலான முருகனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமான வடிவமாகும். அதாவது, முருகன் என்பவர் பௌத்த மன்னர், பௌத்த வள்ளல். அவர் தம்ம நெறியில் வாழ்ந்து, ஞான மார்க்கத்தை மக்களுக்கு போதித்தமையால் போற்றுதலுக்குரியவரானார், வழிபடப்பட்டார்.
'வைசாக கால' வழிபாடு பழனியில் நடக்கிறது. அது ஒரு பௌத்த வழிபாடு என்பது வரலாறு கூறும் செய்தி. பழனிக்கு சென்று மொட்டை போடும் வழக்கத்தில், புத்த தீட்சை சடங்கு கலந்திருப்பதையும் இத்தோடு இணைத்துக் காண வேண்டும். முருகனின் இன்னொரு பெயர், ஆறுமுகம். முருகனின் மெய் (உடல்) முகத்தோடு, பஞ்ச சீலத்தை பின்பற்றிய ஐங்குணங்களையும் முகமாகக் கொண்டதால்தான் அவர் ஆறுமுகம். பழினியின் பிரசாதம் பஞ்சாமிர்தம். வாழ்விவ் அமிர்தமாய் இனிப்பகு பஞ்ச சீலங்ககள்தான். அதுவே பஞ்சாமிர்தம். பஞ்ச சீலத்தை ஏற்காத வேஷ பிராமணியம் பஞ்சாமிர்தத்தையும் திரித்தது.
முருகனோடு அடையாளப் படுத்தப்படுபவற்றில், 'வேல்' முக்கியமானது. வேல் முருகன் என்றும் அவரை பார்ப்பனிய கதையாடல் கூறுவதுண்டு. ஆனால், முருகனுக்கு சரியாகப் பொருந்தக் கூடிய அடையாளம் வேல் என்பதைவிடவும் வேள் என்பதுதான். பௌத்தப் பார்வையிலும் அதுதான் சரி.
முருகன் பௌத்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவன். அவனின் அரண்பணியை அடையாளப்படுத்த 'வேல்' தேவைப்படுகிறதுதான். மேலும் சூரசம்காரம் என்பது, 'சுரா பானமருந்திய' சுரர்களுடனான, புத்த அசுரனான(சுரா×அசுரா)முருகன் மோதியதையேக் குறிக்கிறது. இதன்படி சம்கார போர் வீரனாக அடையாளப்படுத்தவும் வேல் அடையாளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதேவேளை, முருகனைப் போற்றும் பெயராக 'வேள் முருகன்' என்பதுவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
வேள் என்றால் கொடை என்று அர்த்தம். கொடை வள்ளல்கள் வேளிர் எனப்பட்டனர். கொடைக்குப் பெயர் பெற்ற மன்னர்களின் பெயருக்கு முன் 'வேள்' என்று இடுவது சங்க இலக்கியங்களிலும் வழக்கமாக இருந்துள்ளது. பாரியை 'வேள்பாரி' என்று கூறியிருக்கிறார் தொல்காலப் புலவர் கபிலர். புத்த தன்மத்தைக் கடைப்பிடித்ததால் கொடை வள்ளலாகவும் இருந்த முருகன் 'வேள் முருகன்' என்றும் அழைக்கப்பட்டார். வேளன் என்பது கொடையாளியை அடையாளப்படுத்துவதால், முருகனுக்கு வேலன் என்பதைவிட, வேளன் என்பதே சரியான அடையாளத்தைக் கொடுக்கிறது.
சரி.முருகன் கதையாடலில் வருகின்ற வள்ளி என்பவர் யார்?
முருகனின் இரண்டாவது மனைவியே வள்ளி என்பார்கள். இதுவும் திரிபுதான். வள்ளல் என்பதன் பெண்பால் தான் வள்ளி என்பதாகும். வள்ளியம்மை என்றால் தயாளக் குணம் கொண்டப் பெண் என்று பொருள். முருகன் 'வேளன்' என அழைக்கப்பட்டதால், முருகனின் மனைவியான தெய்வானை 'வள்ளி' என்று அழைக்கப்பட்டார். பிற்கால பௌத்த விரோத திரிபுவாதக் கும்பல், 'ரெண்டு கல்யாணக்'கதையை இட்டுக் கட்டிவிட்டது.
முருகனுக்கு வாழ்த்துப் பாட அரோகரா என்பது முழக்கமாக உள்ளது. இதுவும் கூட, பௌத்த சங்க அறவோர் என்பதை குறிக்கும் அறகரர் என்பதிலிருந்தே வந்தது என்பது உண்மை.
பழனிக்கு காவடி துக்கி செல்வது இன்றைக்கு நேர்த்திக் கடன். கடன் என்றால் அக்காலத்தில் கடமை என்றும் பொருள். பழனி மலையில் சிரமணர்(சரவண) பொய்கையிலும் பூங்குறிஞ்சி விகாரிலும் பள்ளி நடத்தி வந்த பௌத்த அறவோர்களுக்கு தானப் பொருட்களை தூக்கி சென்றதே காவடி தூக்கிச் செல்லும் வழக்கம். இதையே 'அன்னக்காவடி' (சோற்றுக்கு காவடி தூக்குதல்) என்றும் வேஷ பிராமணியர்கள் கேலி பேசினார்கள்.
இப்படியாக,
காலம் காலமாக பௌத்த அடையாளங்கள் மீது பூசப்பட்ட போலி அடையாளங்கள் இன்னமும் முன்வைக்கப்படுகின்றன. அதன் மூலம் வேஷ பிராமணிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் தொடர்கிறது. அவற்றை முறியடித்து, உள் மெய் எண்ணும் உண்மையை வெளிக்கொண்டு வருவது நல்லோரின் கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக