ஸ்டாலின் தி
முருகனுக்கு மயில் வாகனன் என்றொரு சிறப்புப் பெயருமுண்டு. இந்து புராணங்களில் கூறப்படுவதைப் போல மயில் என்னும் பறவையின் மீது அமர்ந்து உலா வந்ததால் முருகனுக்கு அந்த பெயர் வரவில்லை. அது ஒரு மூடநம்பிக்கை கதை. மயில் பறவை இனமாக இருப்பினும் வெகு தூரத்திற்கு பறக்க முடியாது. அதிகபட்சமாக சுமார் 300 மீட்டர் தூரத்திற்குதான் அதுவால் பறக்க முடியும்.நேரத்தை கணக்கிட்டால் சுமார் 30 நொடிகள்தான் தொடர்ந்து பறக்க முடியும். அதன் உடல் வாகு அப்படியானது . அப்படி இருக்க, ஒரு மனிதரை சுமந்து கொண்டு உலகையே சுற்றி வந்தது என்பது கட்டுக்கதை. அப்படி இருக்கும் போது, முருகனுக்கு மயில் வாகனன் என பெயர் வர காரணம் என்னவாக இருக்கும்.
மயில் வடிவில் செய்யப்பட்ட தேரில் முருகன் வலம் வந்ததால் மயில் வாகனன் என்று பெயர் வந்தது என்பதுதான் நேரடியான பதில். மயில் வடிவில் செய்யப்பட்ட தேர்களில் பயணிப்பது அன்றைய பௌத்த அரசர்களின் வழக்கமாக இருந்தது. பௌத்த மன்னர்களுக்காக மயில் வடிவ தேர்களை செய்வதற்காக அரக்கு, மெழுகு, நூல் போன்றவற்றை சரியாக கையாளும் முறை மயில் சூத்திரம் என்று கூறப்பட்டது. அச்சூத்திரத்தின்படி செய்யப்பட்ட மயில் வாகனத்தை 'மயில் சூத்திர வாகனம்' என்று அழைத்தனர். கச்சநந்தன் என்னும் பௌத்த அரசனும்கூட மயில் சூத்திர வாகனம் கொண்டிருந்தார் என்று சீவக சிந்தாமணியில் கூறியிருப்பதை பண்டிதர் அயோத்திதாசர் சான்றாகக் கூறியிருக்கிறார். மகாமயூரி என்றொரு பெண் போதிசத்வர் பௌத்த வழிபாட்டில் இடம் வகிக்கிறார். குறிப்பாக வஜ்ரயான பௌத்தம் பரவியுள்ள திபெத், சீனா, ஜப்பான் நாடுகளில் ஞானம், தூய்மை, சாந்தம் ஆகியவற்றின் அடையாளமாக மகா மயூரி வணங்கப்படுகிறார். அவ்வாறு வணங்கப்படும் அவருடைய தோற்றமானது, முருகனைப் போலவே மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் வகையில் காணப்படுகிறது. மயூரி என்னும் பெயர் பாலி மொழியின் மயூரா என்பதில் இருந்து வந்த சொல்லாகும்.
பௌத்தத்தை வளர்த்த அரச மரபுகளில் மௌரிய மரபு முக்கியமானது. அசோகர் இம்மரபில் வந்தவர்தான். மௌரியா என்னும் சொல்லின் வேர்ச் சொல்லாக இருப்பது பாலி மொழியின் மயூரா என்னும் சொல்தான். மௌரியா என்னும் சொல் மயூரா என்னும் சொல்லில் இருந்து மரபுச் சொல்லாக (Totemic Symbol) வந்திருக்க வேண்டும் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ரொமீலா தாப்பர் தம்முடைய நூலில் (Ashoka and the Decline of the Mauryas) கூறுகிறார். மயூரி என்னும் பாலி மொழிச் சொல்லுக்கு மயில் என்று அர்த்தம்.
பௌத்த கதைகளில் பௌத்த அறவோர்களையும், ஞானம், அகிம்சை, தூய்மை போன்றவற்றையும் உருவகப் படுத்த மயில் உருவம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எனவேதான் பௌத்தர்கள் மயில் உருவத்தை முன்வைத்தார்கள். இந்தியாவின் தொன்மையான பௌத்த சான்றுகளிலும், விகாரைகளிலும் மட்டுமல்லாமல், பௌத்தம் பரவிய பிற நாடுகளிலும் பௌத்த சின்னங்களிலுப் இன்றளவும் மயில் உருவத்தைக் காணமுடியும். அப்படியாகத்தான், மயில் உருவில் பௌத்த அரசர்களுக்கு தேர் செய்யப்பட்டது. அப்படியான மயில் உருவ வாகனத்தில் பயணித்ததால்தான் பௌத்த அரசர் முருகன் மயில் வாகனன் என்று அழைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக