வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

அதிகாரத்தின் சுதந்திரமும் சுதந்திரத்தின் அதிகாரமும்.


ஸ்டாலின் தி

சுதந்திரம் என்னும் சொல் மாபெரும் கனவை உருவாக்கும் சொல்; மாபெரும் மனக்கிளர்ச்சியை உருவாக்கும் சொல். மனித சிந்தனையில் உதித்த மகத்தான சொல் சுதந்திரம். அச்சொல்லின் வேர் மனித நாகரீகத்தின் ஈரத்தை தேடியலைகிறது. உண்மையில், சுதந்திரம் என்னும் சொல் சமூகத்தின் முக்கியத்துவமான சொல்லாக இருக்கிறது. ஆனால், அது சொல்லாக மட்டுமே இருப்பதுவும் சமூகத்தின் முக்கியத்துவமான பிரச்சனையாகவும் இருக்கிறது. 

இன்றைய தேசமும் சர்வ தேசமும் சுதந்திரத்தின் அடிப்படையில் கட்டமைப்பட்டுள்ளன என்று பிரகடனப்படுத்தப்படுகின்றன. ஆனால், உண்மையென்ன. தேசமும் சர்வதேசமும் அதிகாரத்தின் களங்களாக உள்ளன. அவ்வதிகாரத்தைக் கொண்ட தரப்புகள் தங்களுடைய அதிகாரத்தால் ஆளப்படும் மண்ணை சுதந்திர மண்ணென்றும், சமூகங்களை சுதந்திர சமூகங்களென்றும் வரையறுக்கின்றன. இந்த போலி வரையறைக்குள் அகப்பட்டுள்ள மண்ணும் சமூகங்களும் சுதந்திரத்தின் அதிகாரத்தை நுகரமுடியாமல் அதிகாரத்தின் சுதந்திரத்தால் வதைபட்டுக் கொண்டிருக்கின்றன.

அதிகாரத்தை குவித்து வைத்திருக்கும் தரப்புகள்தான் இங்கே சுதந்திரமாக இருக்கின்றன. மண்ணைச் சுரண்டுவதற்கு சுதந்திரம், மக்களைச் சுரண்டுவதற்கு சுதந்திரம், தங்களுடைய அதிகாரங்களை குவிக்கவும், அவற்றிற்கான பின்னணிகளையும், காரணிகளையும் பெருக்கவும், பலப்படுத்தவும் சுதந்திரம் என, அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை சர்வ அதிகாரங்களாக வளர்த்துவருகின்றன அதிகாரம் படைத்த தரப்புகள். 

இன்னொருபக்கம் சுதந்திரத்தின் அதிகாரத்தை நுகர அனுமதிக்கப்படாத மக்கள் மண்ணுரிமை இழந்து, தன்னுரிமை இழந்து நெருக்கடியான வாழ்வில் கடந்து கொண்டிருக்கிறார்கள். 

இந்தியாவில் சாதியும் மதமும், பொருளாதார ஆதிக்கமும், ஆணாதிக்கமும் சுதந்திரத்தை கோடானுகோடி மக்களுக்கு கிட்டாமல் தங்களுடைய அதிகாரத்தால் தடுத்துவருகின்றன. இந்த அதிகாரத்தை மக்களுக்கான சுதந்திரம் எனப்படும் ஜனநாயக ஆட்சிமுறையை பயன்படுத்தியே இவர்கள் பெறுவதுதான், கிடைத்துவிட்டதாக பெருமையுடன் கூறப்படும் சுதந்திரத்தின் கேலிச்சித்திரமாகும்.

சுதந்திரம் யாவருக்குமானதாக இருக்கவேண்டுமானால் யாவருக்குமான அதிகாரம் இருக்கவேண்டும். அனைவருக்கும் அதிகாரம் என்பதே அனைவருக்குமான சுதந்திரத்தின் அர்த்தமாக இருக்க முடியும். அத்தகைய அதிகாரமென்பது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் ஒருங்கேக் கொண்டதே சமூகத்திற்கான, சமூக மேம்பாட்டிற்கான அதிகாரமாக இருக்க முடியுமென்றார் அண்ணல் அம்பேத்கர். சமூக மேம்பாட்டிற்கான அவ்வதிகாரமே சமூகங்களின், தேசங்களின் சுதந்திரமாக இருக்க முடியும்.

ஞாயிறு, 20 ஜூலை, 2025

இறப்பில் வாழும் பௌத்தம்.

                                                                           ஸ்டாலின் தி 

மானுட வாழ்வில் பிறப்பு போலவே இறப்பும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இறப்புக் குறித்த எத்தனையோ நம்பிக்கைகள், கதைகள், அவதானிப்புகள், விளக்கங்கள்  உலகெங்கும் நெடுங்காலமாக தொர்ந்து வந்துள்ளன. இந்தியாவில் தோன்றிய பௌத்தமும் இறப்பைக் குறித்து முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. 

சித்தார்த்தர் ஏன் புத்தர் ஆனார் என்கிற கேள்விக்கு, 'பிணி, மூப்பு, மரணம்' ஆகியவற்றைக் கண்டு அவற்றின் துயரத்திலிருந்து விடுபடும் வழியைத் தேடி துறவுபூண்டு பயணித்த சித்தார்த்தனே புத்தராக ஞானம் பெற்றார் என்பதே பரவலான பதிலாக தொன்றுதொட்டு கூறப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர், ரோகிணி நதி பிரச்சனையே சித்தார்த்தர் துறவு போனதற்கான காரணம் என்று புதிய வரலாற்றுத் திருத்தத்தை செய்தார். அதாவது, நதிநீர் தொடர்பான பிரச்சனையில் தான் சார்ந்த நாட்டுக்கும் அண்டை நாட்டுக்கும் யுத்தம் துவங்கியதை எதிர்த்ததால், சாக்கிய சங்கத்தினால் நாடுகடத்தப்பட்டார் சித்தார்த்தர். இவ்வாறு யுத்தத்தை மறுத்து நாட்டை விட்டு வெளியேறிய சித்தார்த்தர், தம்முடைய துறவு வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு விடைகளைத் தேடி ஞானம் பெற்று புத்தரானார். இதுதான் அண்ணல் முன்வைக்கு புத்தர் வரலாறு. காலம் காலமாக கூறப்பட்டுவந்த பிணி, மூப்பு, மரணம் குறித்த பயமோ, தேடலோ சித்தாத்தரை காட்டுக்கு அனுப்பவில்லை, யுத்தம் தவறு என்கிற மானுட நேயமே அவரை துறவு கோலம் புக வழி செய்தது என்பத அண்ணலின் திடமான வாதம். அண்ணலின் கூற்றே சரியாக இருப்பினும், புத்தர் மனித துக்கங்களை பற்றிய உரையாடல்களில் பிணி, மூப்பு, மரணம் குறித்த விளக்கங்களை தொடர்ந்து அளித்துள்ளார். அதனால்தான், புத்தரின் வாழ்க்கை கதையாடலில் அவை மூன்றும் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டன. ஏனெனில், மானிடர்களுக்கு பிணி, மூப்பு, மரணம் குறித்த அச்சங்களும் அறியாமைகளும் அதிகம். எனவே, புத்தரின் வாழ்க்கையில் அம்மூன்றையும் முதன்மை அடையாளமாக ஆக்கிவிட்டனர். அறியாமையை அகற்ற வந்த அண்ணல் அம்பேத்கரே ரோகிணியையும் சாக்கிய சங்கத்தையும் சித்தார்த்தரின் போர் எதிர்ப்பையும் கண்டறிந்தார். ஆகட்டும். 

பிணியானாலும்,மூப்பானாலும், மரணமானாலும் உயிரினங்கள் அணைத்தும் சந்தித்துதான் ஆகவேண்டும். இதில் மனிதர்களுக்கு மட்டும் விதிவிலக்கல்ல என்பதுதான் புத்தரின் போதனை. மரணத்தின் மீதான பேரச்சமும் அறியாமையும் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றார் புத்தர். தம்முடை மரணத்தை மிக எளிமையாக எதிர்கொண்டார் புத்தர்.   தமது வாழ்வின் இறுதி நிமிடங்களை குசிநகர் சால் மரத்தோப்பில் கழித்த வேளையில்,
தான் பரிநிர்வாணமடைந்து,  இயற்கையுடன் கலக்கப்போவதை தம்முடைய  சீடர்களுக்குக் கூறிவிட்டு, தான் போதித்தவற்றில் ஏதும் ஐயமிருந்தால் கேள்வி எழுப்புங்கள் என்று கூறினார்.  அப்போது, புத்தருடைய இறப்புக் குறித்த கவலையில் புத்தரின் சீடரான ஆனந்தர் மூழ்கியிருந்தார்.  "மக்களை வழிநடத்த தாங்கள் மேலும் சில காலம் வாழ வேண்டும்" என ஆற்றாமையில் கூறிக்கொண்டே இருந்த ஆனந்தரிடம், "போதும் ஆனந்தரே! ததாகரிடம் கெஞ்சதீர்கள்" என்று அமர்த்தினார் புத்தர். மேலும், "பழுதான வண்டி பயணத்திலிருந்து ஒதுங்க வேண்டியது இயல்பானது. தம்முடைய உடலுக்கும் அதுதான் நிகழ வேண்டும்" என்று தம்முடைய மரணத்தை இயற்கையின் இயல்பான அங்கமாக விளக்கினார். அப்படியிருந்தும் துக்கம் தாங்கா ஆனந்தர் அங்கிருந்து எழுந்து போய்விட, மற்றொரு பிக்குவை அழைத்து ஆனந்தரை அழைத்துவரும்படி கூறினார் புத்தர். மனம் தளர்வுற்று வந்தமர்ந்த ஆனந்தரிடம், "போதும் ஆனந்தரே! அழாதீர்கள்! முன்னரே சில சமயங்களில், நமக்கு நெருக்கமும் விருப்பமும் உடையவர்கள் தம்மிடையே, தமக்குள் பிரிதலென்பதுவும், விட்டு நீங்குதல் என்பதுவும், நீத்தலென்பதுவும் மிகவும் இயல்பானதென நான் ஏற்கனவே உமக்கு உரைத்துள்ளேன் அல்லவா" என்று கூறி மரணத்தின் இயல்பையும் அதன் மூலம் நிகழும் பிரிவுகளின் இயல்பையும் எடுத்துரைத்தார். "ஆனந்தரே! முயற்சியில் முனைப்புள்ள நீங்களும் சில தீமைகளில் இருந்து விடுபட்டாக வேண்டும்; அதாவது, உணர்ச்சிவயப்படுதல், தன்னிலை தவறுதல், துயரமடைதல், அறியாமை ஆகியவற்றிலிருந்து விடுபட்டாக வேண்டும்" என்று இறப்பின் மீதான மிகையுணர்ச்சியிலிருந்து ஆனந்தர் மீண்டுவர போதித்தார் புத்தர்.  புத்தரின் போதனையிலும் பௌத்தத்தின் உரையாடல்களிலும் மரணம் தவிர்க்க முடியாதது என்பதுவும், மனிதர் உள்ளிட்ட எல்லா உயிர்களும் அதை  எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதுவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டன.  கூடுதலாக, பிக்குகள் பற்று அறுத்தலின் இறுதி நிலையாக மரணத்தைக் கருத வேண்டும் என்றும் பௌத்தம் கூறியது. புத்தர் தம்முடைய மரணத்தை முன்வைத்து ஆனந்தருக்கு கூறியதுவும் அதுதான். இல்லறத்தாருக்கு உச்சபட்ச பற்றறுத்தலை பௌத்தம் வலியுறுத்தாவிட்டாலும் பௌத்தத்தின் தாக்கத்துடன் மரணத்தைக் குறித்த பௌத்தப்  பார்வையையும் சமூகம் உள்வாங்கியதையே இன்றும் காணப்படும்  மரணச் சடங்குகள் பல வெளிப்படுத்துகின்றன. அவற்றில் சில சடங்குகளையும், சொல்லாடல்களையும் குறித்தும் அவற்றின் இன்றைய சில அடையாள திரிபுகளையும் இக்கட்டுரையில் சுருக்கமாக காண்போம். 

இழவும் பரிநிருவாணமும்:

ஒருவரின் இறப்பு சார்ந்த இடம், செயல் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் அடையாளச் சொல்லாக இழவு என்கிறச் சொல் இருக்கிறது. இழவு வீடு, இழவு வாசல், இழவு சடங்கு போன்றவை உதாரணச் சொற்கள். பௌத்தத்தில் ஒருவரின் இறப்பைக் குறிப்பிட பரிநிர்வாணம் எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விரண்டுச் சொல்லுமே பூர்வ பௌத்தர்களிடம் இறப்பை ஒட்டி புழங்கியச் சொற்கள்தான் என்றாலும் வேறுபாடு உள்ளது. பண்டிதர் அயோத்திதாசர் இழவுக்கு விளக்கம் கூறும்போது, தம்ம வழிநின்று பற்றற்ற வாழ்வை வாழாமல் பந்த பாச, ஆசாபாச வாழ்க்கையை வாழ்பழர்கள் இகழ் வாழ்வு வாழ்பவர் என்றும், அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இறப்பது இகழ்வான மரணம் என்றும்,  அதனால் இகழ்வு என்பது மருவி இழவாகி பின் எழவானது என்பதாக கூறுகிறார். அதாவது, பற்றற்ற  வாழ்க்கை புகழ்வானது, பற்றுகளில் சிக்குண்டு துக்கங்களோடு இணைந்த வாழ்க்கை இகழ்வானது. இதிலிருந்து வந்ததே இழவு எனும் சொல். பண்டிதரின் பார்வை ஏற்புடையவைதான். அதே பார்வையில் நாம் இழவு எனும் சொல்லை இழப்பின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ள முயற்சிப்போம். 

இழத்தல், இழப்பு ஆகிய சொற்களிலிருந்து இழவு எனும் சொல் வந்திருக்கலாம். பண்டிதர் கூறுவதைப் போல, பற்றுகளில் மயங்கி இல்வாழ்க்கையில் இயங்குபவர்கள் இறக்கும் போது அவர்கள் பற்று வைத்த உற்றார் உறவினர்களையும், பொருட்களையும், காட்சிகளையும் நுகர்ச்சியையும் இழக்கிறார்கள். அதுபோலவே, இறந்தவர் மீது பற்றுடையவர்கள் அவரை இழக்கிறார்கள். இப்படி இழப்புகளால் ஆன உறவுகளுக்கு அது இழவு என்றாகிறது. இழப்புத் துக்கம் இழவுத்துக்கமாகிறது. பற்றறுத்த பிக்குகள் இறக்கும் போது அவர்கள் எதையும் இழக்கவில்லை. ஏனெனில், அவர்கள் எதன்மீதும், யார் மீதும் பந்த உறவில் பற்று வைக்கவில்லை. அவர்கள் மீதும் எந்த பந்த உறவுகளின் பற்றுச் சுமைகளும் இல்லை. இறுதியிலும் இறுதியாக அவர்களிடம் ஒட்டியிருந்த உயிர் மட்டுமே இழக்கப்படுகிறது. உயிரையும் பற்றில்லாமல் மரணத்தின் மூலம் இழப்பதால் அந்த இழப்பும் இழப்பின்றி போகிறது. எனவே, இல்லத்தாரின் மரணம் போல பிக்குவின் மரணம் இழப்பில்லை. அதனால், அம்மரணம் இழவுமில்லை. அது பரி நிருவாணம். பாலி மொழில் வாணம் என்பது ஆசை, பேராசை, பந்தம் உள்ளிட்டவை நிறைந்த வாழ்க்கையை குறிப்பதாகும். அத்தகைய பற்றுகமை அறுத்து மெய்ஞானம் அடைவது நிருவாணம் ஆகும். இறுதியாக, மெய் எனும் உடலும் ஞானம் எனும் உணர்வும் பிரியும் போது நிருவாணம் பரி-நிருவாணமாகிறது. அதாவது, அவ்வுடலும் மனமும் பற்றுகளை துளியும் துளிர்க்காத நிறைவடைகிறது. 

நீத்தார்- பற்றுகளை அறுத்தவர்: 

இறந்தவர்களின் சடங்குகளை குறிப்பிடும் போது, 'உயிர் நீத்தார்,  நீத்தார் இறுதி சடங்கு, நீத்தார்க் கடன்' போன்ற சொற்களை பயன்படுத்துவது இன்றைய பொதுவழக்காவே இருக்கிறது. இப்படி, இன்றைக்கு இறந்தவரைக் குறிப்பிடும் நீத்தார் என்கிற சொல்லும்  பௌத்த மரபின் தொடர்சியே ஆகும். ஆனால், பௌத்தத்தில் நீத்தார் என்பது இறந்தவர்களை நேரடியாக குறிப்பிடும் சொல்லாக  சுட்டப்படுவதில்லை.

நீத்தார் என்றால் பௌத்தத்தின் விளக்கத்தின்படி பற்றுகளை துறந்தவர் அதாவது பிக்கு என்பதே அர்த்தமாகும். திருக்குறள் எனும் திரிக்குறளில் நீத்தார் என்கிறச் சொல் பற்றுகளை அறுத்த துறவர்களையே குறிப்பிடுகிறது. ஒழுக்கத்தில் நின்று பற்றுகளை அறுத்த நீத்தாரகள் எனும் பிக்குகளின் பெருமைகளை எடுத்துரைப்பவைதான் திரிக்குறளின் நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தான் பத்துக் குறள்களும். அக்குறட்பாக்களில் பத்தாவது குறள், 'அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
-செந்தண்மை பூண்டொழுக லான்' என்கிறது. அதாவது, எவ்வுயிருக்கும்  அறத்தை பேணுவதும் போதிப்பவர் அந்தணர். அந்தணரின் பெருமை என்பதே நீத்தார் பெருமை. வேஷ பிராமணியம் அந்தணரை திரித்து சாதியாக்கிக் கொண்டதைப் போல, அந்தணரின் மற்றொரு அடையாளமான நீத்தார் அடையாளம் திரித்தும், திரிந்தும் சமூக வழக்கத்தில் கலக்கப்பட்டது. வேஷ பிராமணிய ஆதிக்கத்தின் காரணமாக, நீத்தார் எனும் பூர்வ பௌத்த பிக்கு மரபு  ஏறத்தாழ வழக்கழிந்த காலத்தில் நீத்தார் என்பது 'உயிர் நீத்தார்' என்பதாக திரிந்தது. 

தலைவிளக்கும் அறிவொளியும்:

இறந்தவர்களின் தலைமாட்டில் விளக்கொன்று ஏற்றப்படுவதை காணலாம். இவ்விளக்கு ஏற்றுதல் இன்று பரவலாகவே காணப்பட்டாலும் இதுவும் பௌத்தம் தொடர்பான பண்பாட்டிலிருந்தே வந்தது என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். புத்தரும் பௌத்தமும் ஞானத்தை ஒளியுடன் ஒப்பிட்டு வந்ததை வரலாற்றிலும் பண்டைய இலக்கியங்களிலும் அறிந்துகொள்கிறோம். அறியாமையை இருட்டுடனும், அறிவை ஒளியுடனும் உவமைப்படுத்துகிறது பௌத்தம்.

ஒருவரின் மரணம் என்பது அவருடைய மூளையின் செயலிழக்கம்தான் என்கிறது இன்றைய அறிவியல். மூளைச்சாவு என்பதுதான் உறுதிபடுத்தப்பட்ட மரணம். அறிவியலின்படி இரண்டுவகையிலான மரணங்கள் உடலில் நிகழ்கின்றன. ஒன்று மூளைச்சாவு, மற்றொன்று இதய நிறுத்தம். மூளைச்சாவு அடைந்தவர்கள் செயற்கை சுவாசத்தில் இதயத்துடிப்புடன் இருந்தாலும் அது மரணத்திற்கு சமமானதுதான். அதனால்தான், இதயம் துடித்துக்கொண்டிருக்கும் வேளையிலும் ஒருவர் மூளைச்சாவு அடைந்தால் அவருடைய உடல் உறுப்புகளை தானமளிக்க அறிவியலும் சட்டமும் ஒப்புக் கொள்ளுகின்றன. அதுபோலவே, இதயம் நின்று ஒருவர் மரணித்த போதும் அவருடைய மூளை சுமார் முப்பது நிமிடங்களில் இருந்து இரண்டு மணி நேரம்வரை அவருடைய மூளை உயிருடன் இருக்கும். அதுவரையிலுமே அறிவியலின்படி அவர் உயிருள்ள மனிதர். அதாவது, மூளையின் மரணமே ஒருவரின் முழுமையான மரணம். 

இறந்தவர் தலைமாட்டில் விளக்கேற்றுவதைக் குறித்து பண்டிதர் அயோத்திதாசர் கூறுவது என்னவென்றால், இறந்தவரின், குறிப்பாக பரி-நிருவாணமடைந்த பௌத்தரின்  அறிவொளியின் மூலாதாரமான மூளை இனி ஒளிக்கொடுக்காது. அதை உருவகப்படுத்த செயற்கையான ஒளியை அளிக்கும் விளக்கு இறந்தவரின் மூளையடங்கிய தலையின் உச்சிப்பகுதி அருகில் ஏற்றப்படுகிறது.  அதாவது, மூளை இறந்துவிடுவது வெறும் உடலின் இறப்பில்லை, அது அறிவின் இறப்பும் ஆகும. கார்ல் மார்க்ஸ் இறந்ததை அறிவிக்கும் போது, 'மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்' என்று ஏங்கெல்ஸ் கூறியதை இவ்விடத்தில் பொருத்திப்பார்க்கலாம். அதாவது, ஒருவரின் மூளையிலிருந்து வெளிப்படும் அறிவொளி அணைந்துவிடுவதுதான் அவருடைய பௌதீக மரணம் ஆகும். அதைத்தான் பௌத்தர்கள் தலைமாட்டு விளக்காக ஏற்றிக்காட்டினார்கள். இன்று, மரண சடங்காக எங்கும் பரவியுள்ளது அவ்விளக்கு ஒளி.

கால் கட்டு எனும் பந்தக் கட்டு:

இறந்தவர்களின் கால் கட்டைவிரல்களை இணுத்துக் கட்டும் சடங்கு இன்றளவும் சமூகத்தில் இருக்கிறது. இதன் பின்னணியிலும் பௌத்த பண்பாடே இருக்கிறது என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். பௌத்தம் செழித்திருந்த முந்தைய காலத்தில், இல்லறத்தார் இறக்கும் போது, அவரின் கால் கட்டைவிரல்களை இணைத்துக்கட்டும் வழக்கம் உருவானது.  இல்லறத்தார் என்பவர் வீடு, பந்தபாசம், குடும்ப உறவுகள் போன்றவற்றால் சூழப்பட்ட எல்லைக்குள் கட்டுப்பட்டு இயங்குபவர்கள். துறவறத்தாரோ பற்றுகளை நீக்கி வீடு, ஆசை-பாசம், குடும்ப உறவுகள் எனும் எல்லையிலிருந்து வெளியேறி  யாதும் ஊர் யாவரும் கேளிர் என்று பரந்தவெளியில் வாழ்பவர்கள். அதாவது, இல்லத்திற்குரிய  அறத்துடன் வாழும் இல்லறத்தார் கட்டுக்குள் இருப்பவர். 
துறவத்திற்குரிய அறத்தோடு வாழும் பிக்குகள் பற்றுகளை அறுத்தல் எனும் கட்டறுத்து வாழ்பவர் ஆவார்.இவற்றைக் குறிக்கும் விதமாக, இறந்த இல்லறத்தாரின் கால் கட்டைவிரல்களை கட்டும் வழக்கத்தை பௌத்த இல்லறத்தார்கள் எனும் உபாசகர்கள் பூர்வத்தில் கடைப்பிடித்தார்கள். அதுவே, இன்றளவும் சமூகத்தின் வெகுமக்களிடம் வழக்கில் உள்ளது. இன்றைக்கும் கூட திருமணத்தைக் குறிக்கும் வழக்காற்றுச் சொல்லாக 'கால்கட்டு போடுதல்' என்பது சமூகத்தின் புழக்கத்தில் உள்ளதை இவற்றோடு நாம் ஒப்பிட்டு நோக்கலாம்.

ஒப்பாரி: ஓலமா? வரலாற்றைப் பாடுதலா?

இறந்தவருக்காக பாடப்படும் பாடலாக ஒப்பாரி பாடல்  பாடப்படுகிறது. ஒப்பாரி என்பதற்கு அழுகைப்பாடல் எனறு விளக்கம் தருகிறது சென்னைப் பல்கலைக் கழக அகராதி. இது பொதுவான, மேலோட்டமான விளக்கமாகவே கருதமுடிகிறது. ஒப்பாரி அழுகைக்கான பாடலாக மட்டும் இருப்பதில்லை. அப்பாடல்கள் இறந்தவரை பற்றிய, அல்லது அவரை ஒப்பிடக்கூடிய பொருள், மனிதர்கள் உள்ளிட்ட பிற உயிர்கள், காலம், சூழல், காரண காரியங்கள் என பலவற்றை உள்ளடக்கப்பட்ட பாடலாகவே ஒப்பாரி பாடல்கள் உள்ளன. இன்னும் சுருக்கமாக ஒப்பாரியை விளக்கினால், இறந்தவரின் அருமை(அருமெய்)பெருமை(பெருமெய்)களை ஒப்புநோக்கி பாடலாக கூறப்படுவதே ஒப்பாரி எனலாம். ஆரி என்றால் அருமை(மேன்மை) என்று பொருள். ஆரியை ஒப்புவது ஒப்பாரி ஆகும். இன்றைய, இரங்கல் உரைக்கு ஒப்பான தொன்ம வடிவமாகவே ஒப்பாரியை பார்க்க முடிகிறது. அதேவேளையில், ஒப்பாரி பாடல், பௌத்த தொன்மத்தின் தொடர்ச்சி என்பதையும் நம்மால் கூறமுடியும். 

புத்தரின் மரணம் எனும் பரிநிருவாணத்தை கேள்வியுற்ற தேச மக்கள், புத்தருடைய அருமை பெருமைகளைப் பாடி அழுது ஆற்றியதாக பண்டிதர் அயோத்திதாசர் கூறுகிறார். ஒவ்வொரு ஆண்டிலும், சங்கறாந்தி எனும் போகிப்பண்டிகை  நாளில் பெண்கள் புத்தரின் வரலாற்றையே பாடலாக பாடி அழுதுவடித்துள்ளார்கள் என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறு, மரணம் தொடர்பான அழுகையில் புத்தரின் வரலாற்றை ஒப்பு நோக்கி பாடப்படும் பாடல் கலந்து ஒப்பாரியாக ஆனது  என்கிற பண்டிதரின் கருத்தின்படி, ஒப்பாரி என்பது வெறுமனே ஓலமிடுதல் அல்ல, அது  வரலாற்றைக் கூறுவதில் ஒரு முறையாகும். புத்தரின் பரிநிருவாணத்தைத் தொடர்ந்து பௌத்தர்களிடம் உருவான ஒப்பாரி முறை, சமூக வழக்கத்தில் ஒருவரின் இறப்பை ஒட்டி அவருடைய வாழ்க்கையோடு தொடர்புடைய,  உயிர்களோடும், நிகழ்வுகளோடும், பொருட்களோடும்  ஒப்பிட்டு பாடப்படும் பாடல் முறையாக பிற்காலத்தில் மாறியிருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்.

சாவு ஆட்டமும்-பறை மீதான இழிவும்:

சாவுக்கு ஆடுவது இன்றளவும் பரவலாக காணப்படுகிறது. குறிப்பிட்ட சில சாதியினர், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடம் இவ்வழக்கம் இல்லை என்றாலும் கூட, பரவலாகவே இப்பழக்கம் உள்ளன.  சாவுக்கு ஆடிப்பாடுதல் என்பது உலகின் பல்வேறு பழங்குடி சமூகங்களில் உள்ளனதான் என்றாலும், இந்திய மண்ணில் அதற்கு வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கிறது பௌத்த ரீதியான விளக்கம்.

புத்தர் பரி நிருவாணம் அடைந்த பிறகு, அவருடைய உடலை தகனம் செய்ய பிக்குகளால் கொண்டு செல்லப்படும் போது, ஆனந்த ஆட்டம் ஆடப்பட்டது. புத்தரின் மறைவையொட்டி வெகுமக்கள் ஒப்பாரி பாடி அழுததாக கூறும் பண்டிதர் அயோத்திதாசர்தான் இந்த ஆனந்த ஆட்டத்தையும் கூறுகிறார். அதாவது, புத்தரின் மறைவு இல்லறத்தருக்கு துக்கமாகவும், பற்றுகளை அறுத்து வென்ற புத்தர் மரணத்தையும் பற்றற்று வென்றதை உணர்ந்த பிக்குகளுக்கு ஆனந்தமாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. புத்தர் பரிநிருவாணம் அடைவதற்கும் முன் ஆனந்தர் உள்ளிட்ட பிக்குகள் துக்கமுற்றாலும், புத்தரின் நிலையாமைக் குறித்த தத்துவத்தை உணர்ந்து அவருடைய பரிநிருவாணத்தை துக்கமற்ற, பற்றுகளை முழுமையாக அறுத்த ஆனந்த நிகழ்வாக அவர்கள் கருதியதையே பண்டிதர் கூறும் இந்த ஆனந்த கூத்தாட்டம் காட்டுகிறது. இதே முறை பிறகு, பிக்குகளின் பரிநிருவாணத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. பிக்குகளின் பரிநிருவாணம் பற்றறுத்தலை அடையாளப்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டது. பர்ம தேசத்தில் பரிநிருவாணம் அடைந்த பௌத்த குருமார்களின் உடலை தகனம் செய்ய கொண்டு செல்லும்  இறுதி யாத்திரையின் போது ஆனந்த கூத்தாடுவதும்,  தம்ம கருத்துகளுடைய பாடல்களை பாடுவதும்,   உபதேசம் செய்வதும் நடைபெற்றதை பண்டிதர் அயோத்திதாசர் எடுத்துக்காட்டுகிறார்.

இவ்வாறாக, பற்று அறுத்தவர்களின் பரி நிறுவாணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நடைப்பெற்ற ஆனந்த கூத்தாட்டம் பௌத்தம் குன்றிய காலத்தில் மதிப்பிழந்து, சாவாட்டமாக ஆக்கப்பட்டது. பண்டிதர் அயோத்திதாசர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கூற்றுப்படி பூர்வ பௌத்தர்கள் மீது வேஷ பிராமணியத்தால் திணிக்கப்பட்ட தீண்டாமையின் தொடர்ச்சியாக பரிநிருவாண ஆனந்த கூத்தாட்டமும் தீண்டத்தகாத ஆட்டமாக ஆக்கப்பட்டது. ஆனந்த கூத்தாட்டத்தில் கொட்டப்பட்ட பறை  மேளம் தீண்டத்தகாத கருவியாகவும், பறையடித்த பரிநிருவாண கூத்தாட்டத்தாரை தீண்டத்தகாதவர்களாகவும் வேஷபிராமணியம் ஆக்கியது.

நாம் சாவாட்டம் என்று இழிநிலைக்குத் தள்ளப்பட்ட நடைமுறையின் துவக்கம் இழிவானதல்ல என்பதையும் அதற்கொரு உன்னதமான வரலாறு உள்ளது என்பதையும் கூறவே இக்கருத்துகளைக் கூறுகிறோமேத் தவிர, சாதியாதிக்க வேலைத்திட்டத்தில் உள்ள இழவுக் கூட்டுதல் வகையில் நடத்தப்படும் எந்த சாவாட்டத்தையும் நாம் ஆதரிக்க முடியாது. பரிநிருவாணத்தை கொண்டாடும் ஆனந்த கூத்தாட்டத்தின் தொன்மத்தை நமக்கு எடுத்துரைக்கும் பண்டிதர் அயோத்திதாசரும் கூட, 'புத்த தன்மம் மறைந்து அபுத்த தன்மம் சிறந்து   பொய்யும் களவும், கொலையும் குடியும் நிறைந்துவிட்டபடியால் ஆனந்தக் கூத்து சதா துக்கக் கூத்தாகவே மாறிவிட்டது. இவற்றை நடவாது தடை செய்வதே சுகமாம்' என்று இன்றைய சாவாட்டத்தை கண்டிக்கிறார். பண்டிதரின் இக்கருத்தையே நாம் ஆதரிக்க முடியும். 

பயிர்முளைத்தல் எனும் மறுமலர்ச்சி:

இன்றளவும் கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, பசுஞ் சாணத்தில் நவதானியங்களை சேர்த்துப் பிசைந்து, அதை இறந்தவரின் உள்ளங்களையில் அழுத்தி அச்செடுத்து, இறந்தவருக்கு படையலிடும் இடத்தில் உள்ள சுவரில் சாத்திவிடுவார்கள். பதினாறாம் துக்க நீக்க நாளுக்குள் அந்த பசுஞ்சாணத்திலிருந்து பயிர்கள் முளைவிட்டிருக்கும். இறந்தவரின் உள்ளங்கை அச்சில் உள்ள அந்த முளைவிட்ட பயிர்கள் அடங்கிய சாண வறட்டியை எடுத்துச் சென்று வயல் அல்லது தோட்டத்தில் பயிரோடு பயிராக போட்டுவிடுவார்கள். 

பலகாலமாக தொடரும் இப்பழக்கம் பௌத்தக் கருத்துகளை ஒட்டி வந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது. இல்லறத்தார் சந்ததி சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பவர். அவருடைய இறப்பால் அவர் அந்த சங்கிலியிலிருந்து விலகிச் செல்கிறார் என்றாலும், அவருடைய சந்ததியின் சங்கிலியில் அவருடைய மரபினத் தொடர்ச்சி இருக்கிறது. இன்றைய மரபியல் அறிவியல் இத்தொடர்ச்சியை மரபணு தொடர்ச்சயாக விளக்குகிறது. இதைத்தான் பௌத்தம் பிறப்புத் தொடர்ச்சி என்கிறது. மறுபிறப்பு என்று வைதீக பார்வையிலான அர்த்தத்தில் இதை புரிந்துகொள்ளக் கூடாது. எனவே, இல்லறத்தார் இறந்தாலும் அவருடைய சந்ததித் தொடர்ச்சி துளிர்த்துக் கொண்டு இருக்கிறது என்பதைக் கூறுவதையே, இந்த பயிர் முளைத்தல் சடங்கு நமக்குக் காட்டுகிறது. அதாவது, இறந்தவரின் உள்ளங்கை அச்சு வார்க்கப்பட்ட சாணத்தில் பயிர் முளைப்பது என்பது அவருடைய சந்ததியினர் அவரின் சுவட்டில் முளைப்பார்கள். அதுவொரு, மறைதலும் தோன்றுதலும் கொண்ட சுழற்சி ஆகும் என்பதையே இதன்மூலம் அறிகிறோம்.

மழித்தலும்  விரதமும்:

இறப்புச் சடங்கில் முக்கியமானதாக, தேசம் முழுக்க பரவலாக உள்ள ஒரு வழக்கம் மழித்தல் ஆகும். ஒருவரின் இறப்பை ஒட்டி அவருடைய உறவினர்கள் தலை முடி, மீசை உள்ளிட்டவற்றை  மழித்துக்கொள்ளுவார்கள். அவ்வாறு மழித்துக்கொண்டவர்கள் பதினாறாம் நாள்வரை விரமிருப்பதுவும் பரவலாக காணப்படுகிறது.  இவை பௌத்த தொன்மத்தின் தொடர்ச்சியே ஆகும். 

பௌத்தத்தில் பிக்குகள் மழித்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்கள். பற்றுகளை கைவிடுதல் என்பதன் குறியீடு அது. பற்றுகளை கைவிடுதல் என்பது துக்கங்களையும் துறப்பதாகும். இல்லறத்தாரின் இறப்பில் துக்கமுறும் உறவினர் துக்கத்திலிருந்து விடுபட பற்றுகளை அறுத்த பிக்கு கோலம் பூண்டு, குறிப்பிட்ட காலத்திற்கு(16 நாட்கள்) பிக்குகளின் விரதமுறையில் ஒழுக்கத்திலும் உணவுமுறைகளிலும்  கட்டுபாடுகளை பின்பற்றி துக்கத்திலிருந்து மீளும் நடைமுறையை பௌத்த இல்லறத்தார் கடைப்பிடித்து வந்ததன் தொடர்ச்சியே இன்றும் தொடரும் மழித்தலும் விரதமுறையும் ஆகும். அதாவது, பிக்குவாக ஆகி முற்றிலும் துக்கமற்ற வாழ்வை வாழாவிட்டாலும், உறவினரின் இறப்பின் காரணமாக உண்டாகும் துக்கத்திலிருந்து மீளும் பயிற்சியாகவும், 
உயிர்களும் உடல்களும் உறவுகளும் நிலையானவை அல்ல, பிரிவுகளால் உண்டாகும் துக்கமும் நிலையானதல்ல என்பதை துக்கமுற்றோர்கள் உணரும் வகையிலும் பிக்கு வாழ்க்கை முறையை பின்பற்ற பௌத்த இல்லறத்தாருக்கு ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடுதான் இறப்பை ஒட்டி நிகழும் மழித்தலும்  விரதமும். 

பூத்தூவுதலும்  நிலையாமைக் கோட்பாடும்: 

இறப்பு சடங்கில் பூக்களுக்கு முக்கிய இடமிருப்பதை உலகெங்கும் காணலாம். பௌத்தத்தின் அர்த்தத்தில் அதுக்குறித்து பார்ப்போம். பௌத்தம் நிலையாமையை உணர்த்தும் கோட்பாடாகும். நிலையாமை, மாயத்தோற்றங்கள் ஆகியவைக் குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான் அனைத்து துயரங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது என்கிறார் புத்தர். நிலையாமைக் கோட்பாட்டை சுருக்கமாகக் கூறினால், இவ்வுலகில் தோன்றும் எதுவும் நிலையானது அல்ல; நிலையாமை என்பதே நிலையானது. எனவே, உடலுக்கும் உடல் தாங்கியிருக்கும் உயிருக்கும் அதுவே பொருந்தக்கூடியதாகும். 'பிறத்தலும், முதுமை அடைதலும், நோயுற்று வருந்துதலும், பின் இறத்தலும் உடையது இவ்வுடல்' என்று உடலின் நிலையாமை பற்றி கூறுகிறது பௌத்தக் காப்பியமான மணிமேகலை. 
உடலில் தங்கியிருக்கும் உயிருக்கு நிலையான இடம் இல்லை என்கிறது நிலையாமை அதிகாரத்தின் குறளொன்று. இவ்வாறு, உடலும் உயிரும் நிலையாமையின் எடுத்துக்காட்டுகளாக பௌத்தம் கூறுகிறது.

பௌத்த வழிபாட்டிலும் பௌத்தர்களின் சடங்குகளிலும் மலர்கள் நிலையாமைக்கான குறியீடாகவே கருதப்படுகிறது. மலர்கள் வண்ணங்களையும் கவர்ந்திழுக்கும் தோற்றங்களையும் மனத்தை மகிழச்செய்யும் மணங்களையும் கொண்டவை. ஆனால், வெகு விரைவாக மலரின் வண்ணமும் தோற்றமும் மணமும் மாறக்கூடியவை. கவர்ந்திழுக்கும் மலர் உதிர்ந்து சருகாகும். இவையனைத்தும் நிலையாமையைக் கூறும் காட்சிகள். எனவேதான், நிலையாமையை எடுத்துக் காட்டும் எளிதான பொருளாக பூக்களை பௌத்தர்கள் கருதுகிறார்கள். நிலையாமையைக் கூறவே பௌத்த வழிபாட்டிலும் சடங்குகளிலும் பூக்களை பௌத்தர்கள் பயன்படுத்தி வந்தனர். நிலையாமையை போதித்து பரிநிருவாணம் அடைந்த பிக்குகளின் உடல் கொண்டு செல்லும்  பாதைகளில் உதிரிப் பூக்களை தூவும் வழக்கத்திலிருந்தே இன்று இறுதி யாத்திரைகளில் பூத்தூவிச் செல்லும் பழக்கம் வந்திருக்கிறது.

வாய்க்கரிசியும்  குடம் உடைதலும்: 

இடுகாட்டில் நடத்தப்படும் சடங்கு வாய்க்கரிசி இடுதலும் குடம் உடைத்தலும் ஆகும். வாய்க்கரிசி முறையானதைப் பற்றி கூறும் போது, 'இறந்தவர் மறு உலகிற்கு பயணிக்கும் போது பட்டிணியோடு செல்லக்கூடாது என்பதால் வாய்க்கரிசி போடப்படுகிறது' என்று நாட்டுப்புறவியல் கட்டுரையாளர்கள் சிலர் கூறுவதுண்டு. இது  வெகுமக்களிடம் திணிக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஆராயும் போக்கற்ற மேலோட்டமானக் கூற்றே ஆகும். பௌத்தத்தின் இல்லறவியலின்படியும் பண்டிதர் அயோத்திதாசரின் வழிகாட்டுதலிலும் இதன் மெய்ப்பொருளை நாம் அறியலாம். 

இல்லறம் பின்பற்றி வாழ்ந்தவர் உற்றார், உறவினர்களின் பந்தங்களுக்கு உரியவராவார். பற்றற்ற வாழ்வின் உச்ச நிலையான பரி நிருவாணத்தை அடையாதவர். எனவே, அவர் இல்லறக் கட்டுக்குள் வாழ்ந்தவர் என்பதை எடுத்துரைக்கவே அவருக்கு உற்றார் உறவினர் வாய்க்கரசி இடுகின்றனர்.  பிக்குகளுக்கு இந்த வாய்க்கரிசி சடங்கு தேவையில்லை. ஏனெனில் அவர்கள் உற்றார் உறவின்முறையில் யாரோடும் இல்லை.

இறுதியாக, இடுகாட்டில் இறந்தவரின் உறவினர்(பங்காளிகள்) மண்பானையில் நீர் நிறைத்து, அதை தோளில் சுமந்தபடி கிடத்தப்பட்டிருக்கும்   உடலை மூன்று முறை சுற்றிவருவார். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் சடங்கு செய்பவர் பானையில் துளையிடுவார். அதைத்தொடர்ந்து அடுத்த சுற்றுத் துவங்கும். இவ்வாறாக, மூன்று முறை சுற்றிவரும் போதும் வரிசையாக மூன்று துளைகளிடப்படும். பானை சுமப்பவரை பின்தொடரும் மற்ற உறவினர், துளைவழியே கொட்டும் நீரை மாவிலையால் இறந்தவரின் உடல் மீது தெளிப்பார். இறுதி சுற்று முடிந்தவுடன் பானையை பின்பக்கமாக நழுவவிட, அது கீழே விழுந்து உடையும். தண்ணீர் தெறிக்கும். உடைந்த பானையின் சில்லுகளில் வழிந்தோடும் தண்ணீரைப் பிடித்து இறந்தவரின் வாயில் உறவினர்கள் ஊற்றுவார்கள்.

பானை என்பது உடலைக் குறிக்கும். தண்ணீர் உயிரைக் குறிக்கிறது. குழந்தை, இளமை, முதுமை ஆகிய  மூன்று பருவங்களை உடலும் உயிரும்  கடந்து வருகின்றன. அதைக்குறிப்பிடவே இறந்தவரின் உடலை மூன்று முறை  சுற்றுகிறார்கள் உறவினர். ஒவ்வொரு சுற்று முடியும் போது ஒரு துளை இடப்பட்டு நீர் கொட்டுகிறது. அதாவது, ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும் ஒரு பருவம் வழிந்தோடுகிறது. முதுமை பருவத்தை குறிக்கும் மூன்றாம் சுற்றுடன் பானை உடைக்கப்படுகிறது. தேங்கியிருந்த நீர்  முற்றிலும் வெளியேறுகிறது. அதாவது, பானையும் அதுதாங்கிய நீரும் மூன்று சுற்று முடிந்து பிரிவதைக் காட்டுவதென்பது, முப்பருவங்களை கடந்து உடலும் அதுதாங்கிய உயிரும் பிரிகிறது என்பதைக் காட்டுவதற்குதான். 

இவ்வாறு, இல்லறத்தாரின் இறப்புச் சடங்குகளில் பௌத்தத பண்பாடு நிறைந்திருப்பதை நம்மால் அறியமுடிகிறது.  மேலும், மரண சடங்குகளில் குறிப்பிட்ட சமூகங்களை முன்னிலைப்படுத்தும் வழக்கம் இன்றைய சாதிய படிநிலையின் ஒரு அங்கமாக  இருப்பினும், அத்தகைய சமூகங்களின் பண்பாட்டில் பௌத்தமே உயிர்த்திருப்பதைப் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக,  இறந்தவர் உடலை போர்த்தியிருக்கும் கோடித் துணியில்(கோடி=கடைசி; கடைக்கோடி.) ஒருபகுதியை கிழித்து, இறுதி சடங்கு செய்பவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுவும் பௌத்த முறையை நினைவூட்டுகிறது. பரிநிருவாணம் அடைந்த பிக்குவின் உடைகளும் உடைமைகளும் சங்கத்தாரான மற்ற பிக்குகளுக்கு சேர்கின்றன. பிக்குகள் கிடைத்தவற்றை வைத்து எளிமையாக வாழ வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு.  இறப்பு சடங்கு செய்பவர்களுக்கும் இதே முறை இருப்பதற்கு காரணம் பௌத்த பண்பாட்டின் தாக்கம்தான். ஆனால், பௌத்த காலம் வீழ்ந்து சாதிய காலம் ஓங்கிய சமயத்திலிருந்து பௌத்தர்களின் இறப்புச் சடங்கும் மதிப்புக் குறைந்து இழித்தொழிலாக ஆக்கப்பட்டது என்பதையே இன்றைய இடுகாட்டு கூலி எனும் சாதிய செயல்முறை காட்டுகிறது என்பது வெளிப்படையானது.

(ஜூன் 2022 'போதி முரசு'  இதழில் வந்த என்னுடைய 'இறப்பில் வாழும் பௌத்தம்'    கட்டுரையின் விரிவான வடிவம் இது.)

புறக்கணிக்கப்பட்டவர்களின் அவை/ உதயசூரியன் சின்னம்/ கற்பி, கலகம்செய், ஒன்று சேர்.‌

 

ஸ்டாலின் தி



1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி மும்பை தாமோதரர் அரங்கத்தில் சமூகப் போராளிகளின் கூட்டமொன்றை ஒருங்கிணைத்தார் அண்ணல் அம்பேத்கர். சமூகக் கொடுமைகளை எதிர்க்கவும், சமூகத் தேவைகளை அரசாங்கத்திடம் எடுத்துரைக்கவும், சமூகத்தை ஒருங்கிணைக்கவும் ஓர் அமைப்பு வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அண்ணல் அம்பேத்கரின் தலைமையில் 1924 ஜுலை 20 ஆம் நாளன்று 'பகிஷ்கிர்த் ஹிதகரனி சபா(புறக்கணிக்கப்பட்டவர்கள் அவை)' துவக்கப்பட்டது. 

அண்ணல் துவங்கிய இவ்வவையின் இலச்சினையில் உதய சூரியன் சின்னம் உள்ளதைக் காணமுடிகிறது. 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-18 தேதிகளில் செங்கல்பட்டில் பெரியார் தலைமையில், அன்றைய சென்னை மாகாண முதல்வர் சுப்புராயன் முன்னிலையில் நடைப்பெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் சூரியன் சின்னம் திராவிட அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பார்கள். இப்போதிருக்கும் திமுக சின்னமான இரட்டைமலையில் உதிக்கும் சூரியன் சின்னத்தை 1936 இல் தாத்தா இரட்டமலை சீனிவாசனாரின் சென்னை மாகாண ஷெட்யூல்ட் ஃபெடரேசன் அமைப்பினர் அறிமுகம் செய்தனர். ஆனால், இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக அண்ணல் அம்பேத்கர் தம்முடைய அமைப்பின் சின்னத்தில் உதய சூரியன் சின்னத்தை அமைத்திருக்கிறார் என்பது வரலாறு. விடியலைக் குறிக்கும் விதத்தில் அண்ணலும் இரட்டமலையாரும் உதய சூரியனை முன்னிறுத்தியிருந்தாலும், ஞானத்தின் ஒளியாக உவமைப்படுத்தப் பட்ட 'ஆதி‌பகவன்' புத்தரையும் சூரிய அடையாளம் குறிப்பிடுவதால் இவையெல்லாம் வரலாற்றின் உன்னத பக்கங்களாக விளங்குகின்றன.

அதேபோல, புறக்கணிக்கப்பட்டவர்கள் சபையின் இலச்சினையில் அண்ணல் முன்வைத்துள்ள முழக்கங்களின் வரிசை அமைப்பையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. Educate(கற்பி), Agitate(கலகம் செய்), Organize(ஒன்று சேர்) என்பதே அண்ணல் வகுத்த அடையாள‌ முழக்கத்தின் சரியான வரிசை அமைப்பு என்பதை இந்த இலச்சினையின்‌ மூலம் அறிய முடியும். இன்னமும் கூட, கற்பி/ஒன்று சேர்/ கலகம் செய் என்கிற வரிசையில் பலர் முழங்கி வருகின்றனர். உண்மையில், இது அம்பேத்கரிய செயற்பாட்டை குழப்பும் முறை என்பதை நாம் உணர வேண்டும்.

(ஜூலை 20: பகிஷ்கிர்த் ஹிதகிரனி சபா -புறக்கணிக்கப்பட்டவர்கள் அவை-துவக்கப்பட்ட நாள்.

#BahishkritHitakariniSabha


சனி, 5 ஜூலை, 2025

சென்னகரம்பட்டி படுகொலை நாள்!


ஸ்டாலின் தி 

மதுரை மாவட்டத்தில் அம்பலக்காரர்கள் எனப்படும் முக்குலச்சாதியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கிராமம் சென்னகரம்பட்டி. அங்கு 1991 ஜூலை 30 ஆம்தேதி அம்மச்சி அம்மன் கோயிலுக்கான நிலம் ஏலம் விடப்பட்டது. 1987 முதலே குத்தகை உரிமைக்கேட்டு வந்தார்கள் தலித்துகள். அதனாலேயே அம்பலத்தார்கள் ஏலத்தை தள்ளிப்போட வைத்து வந்தனர். 1991 ஆம் ஆண்டிலும் தலித்துகள் ஏலம் எடுப்பதில் முனைந்தனர்.
இதைக் கண்டித்து அம்பலக்காரர்கள் ஏலத்திலிருந்து விலகிப்போனார்கள். ஆனாலும் பூர்ண பிரகாஷ் என்னும் அம்பலக்காரர் மட்டும் கலந்துகொண்டார். தலித்துகள் தரப்பில் பெருமாள் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் ஏலம் கேட்டனர். பெருமாள் மற்றும் ஆறுமுகதிற்கே ஏலமும் கிடைத்தது. 'கீழ்ச்சாதிகாரன், நம் நிலத்திலே பண்ணையடிப்பவன் நிலத்தில் உரிமைக் கொண்டாடுவதா?' என்று அம்பலக்காரர்கள் கடும் கோபமடைந்தனர். பெருமாள் மற்றும் ஆறுமுகம் எடுத்த ஏலம் செல்லாது என்று நீதி மன்றத்திற்கு சென்றனர் அம்பலச்சாதிக்காரர்கள். ஆனால், சென்னை உயர் நீதி மன்றமோ தலித்துகள் எடுத்த ஏலம் செல்லும் என்று 1991 நவம்பர் 22 ஆம்தேதி தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தில் தோற்றுப்போன அம்பலச்சாதியினர் கிராமத்தில் தலித்துகளை ஒடுக்குவதை தீவிரப்படுத்தினார்கள். 

தங்களின் நிலத்தில் இனி வேலைசெய்யக்கூடாது என்று தலித்துகளுக்கு தடைப்போட்டனர் சாதிவெறியினர். இதனால் பக்கத்து ஊர்களுக்கு உழைக்கப்போனார்கள் தலித்துகள். இதனால் மேலும் வெறியடைந்த சாதிவெறியர்கள் 1992 ஜூலை 3 ஆம்தேதி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குச் சென்று வந்த அழகி, ராஜேந்திரன், சேவி, நல்லமணி போன்றவர்களை வெட்டித்தாக்கினார்கள். கொலை முயற்சி பிரிவு மற்றும் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கெல்லாம் போட்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை அன்றைய ஜெயலலிதா அரசின் காவல்துறை. காவல்துறையின் இந்த கையாலாகாத்தனம்தான் சாதிவெறியர்களை இன்னும் தீவிரமாக இயங்கக் காரணமாகவும் ஆனது.

மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சமாதானப் பேச்சுக்காக 1992 ஜூலை 5 ஆம் தேதி இரு தரப்பையும் அரசு அழைத்தது. தலித்துகள் மட்டும் வந்தார்கள். சாதி இந்துக்கள் வரவில்லை. அப்போதாவது அவர்களின் திட்டம் அறிந்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் எடுக்கவில்லை. அல்லது திட்டமே ஆளும் தரப்பின் ஆசியுடன் நடந்திருக்கலாம்தான். இரவு எட்டு மணியளவில் அதுவரைக் காத்திருந்த தலித்துகளை போகச்சொன்னார்கள் அதிகாரிகள். சுமார் பத்து மணி அளவில் சுந்தர்ராஜபுரத்தில் தலித்துகள் வந்த பேருந்தை வழிமறித்தது ராமர் என்னும் சாதிவெறியனின் தலைமையிலான சாதிவெறிக்கூட்டம். எல்லோர் கையிலும் ஆயுதங்கள். பேருந்தில் இருந்த காவலர்களும் தப்பி ஓடினார்கள். மற்றவர்களெல்லோரும் தாக்குதல் துவங்கியவுடன் இருட்டில் ஓடி தப்பித்துக்கொள்ள அம்மாசியும் வேலுவும் மட்டும் சாதிவெறிக்கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். பேருந்திலிருந்து இழுத்துப்போடப்பட்ட அந்த இருவரையும் சராமாரியாக வெட்டினார்கள் சாதிவெறியர்கள். ரத்தச் சகதியில் பலியானார்கள் அந்த நிலவுரிமைப் போராளிகள்.

சமாதானத்திற்கு என நம்பி வந்த இரண்டு மனிதர்களை சுமார் முப்பது சாதிவெறி மிருகங்கள் வெறித்தீர வெட்டிக்கொன்ற நாள் இன்று(ஜூலை 5).

எம் நிலவுரிமைப் போராளிகளுக்கு வீரவணக்கம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தலித் அடையாளம், பண்பாடு, நோக்கத்தின் மீதான வன்முறை.


ஸ்டாலின் தி 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் தென்னிந்திய பௌத்த பண்பாட்டு செயல்பாட்டாளருமான   கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த 5/7/2024 அன்று  சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு 'இதுதான் காரணம்' என ஒரு கதையும், 'இது காரணம் அல்ல' என்று ஒரு கதையும் உடனடியாக கூறப்பட்டன. இரண்டு கதைகளும் தமிழ்நாடு அரசு காவல்துறையிலிருந்தே  கூறப்பட்டன. 

பிரபல ரவுடியின்  கொலைக்கு பழிக்குப்பழியாகவே   ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது' எனக்  கூறியது காவல்துறை. 'கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் மற்றும் சாதி ரீதியான காரணம் ஏதுமில்லை' என்கிற கதையைக் கூறினார் சென்னை காவல் ஆணையராக அப்போது இருந்த சந்தீப் ராய் ரத்தோர்.

இவ்விரண்டு கதைகளையும், அவை வந்த வேகத்தையும் வைத்துப் பார்க்கும் போது, இக்கதைகள் முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்டன  என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது. ஆம்ஸ்ட்ராங் என்னும் தலைவரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இக்கதைகளின்  முடிவாக, 'ஆம்ஸ்ட்ராங் தலைவரே இல்லை, அவர் ஒரு ரவுடி, கட்டப் பஞ்சாயத்துக்காரர்' என்கிற தோற்றத்தையும் காவல்துறையும் அதுவரை அவரை கண்டுகொள்ளாத  ஊடகங்களும் உருவாக்கியன . ஆனால், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வெறும் உடல் மீதான வன்முறை மட்டுமானதல்ல  என்பதையும், அவர் முன்னெடுத்த அடையாளம், பண்பாடு, நோக்கம் ஆகியவற்றின் மீதான வன்முறையும் தான் என்பதையும் நம்மால் உறுதியாகக் கூற முடியும்.

பொது சமூகம் எனும் அடையாளத்தில் உள்ள சாதி இந்து தரப்பினர்,  தலித் சமூகத்தின் மீது வலிந்து திணித்த அடையாளங்களுக்கு  நேரெதிரான அடையாளங்களை  உருவாக்குவதில் தம்மளவில்  தீவிரமாக செயல்பட்டவர் ஆம்ஸ்ட்ராங். துவக்கமாக, தம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அத்தகைய மாற்று அடையாளங்களை அவர் உருவாக்கினார். வடசென்னை தலித் இளைஞர்கள் மீது  'அடியாள், ஊதாரிகள், கிரிமினல்கள், அழுக்கானவர்கள்' போன்ற அடையாளங்களை அரசியல்.  கட்சிகளும் கழகங்களும்,  முதலாளிகளும், திரைப்படம் மற்றும் செய்தி ஊடகங்களும் பூசி வைத்திருந்தனர். அவற்றுக்கிடையில்தான்  சமூக முன்னேற்றத்திற்கான பணியில் ஈடுபட்ட இளைஞர் என்னும் அடையாளத்தோடு மேலெழுந்து வந்தார் ஆம்ஸ்ட்ராங்.மறைந்த தலித் தலைவரான பூவை மூர்த்தி அவர்களின் செயல்பாடுகளிலிருந்து  தாக்கம் பெற்று சமூகப் பணியில் இறங்கிய ஆம்ஸ்ட்ராங், தம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட இழி  அடையாளத்திற்கு  மாற்றான 'கலகக் கார' அடையாளத்தை தம்முடையதாக   ஆக்கிக் கொண்டார். தலித்துகளின் ஆண்டைகளாக  தங்களை நிறுவிக் கொண்டவர்கள்தான்  தலித்துகளின் பிரச்சனைகளைப் பேச வேண்டும், அவர்களை வழிநடத்த வேண்டும் என்கிற நிலைக்கு மாற்றாக, எங்களுக்குள்ளான பிரச்சனைகளையும், எங்களைச் சூழும் பிரச்சனைகளையும் நாங்களே பேசித்  தீர்க்கிறோம், எங்களை நாங்களே வழிநடத்திக்கொள்ளும்‌ அறிவும் ஆற்றலும் எங்களுக்கு உள்ளன  என்கிற தலித் கலக நடைமுறையை கையிலெடுத்தார் ஆம்ஸ்ட்ராங். அதைத்தான் கட்டப்பஞ்சாயத்து என்று கரித்துக் கொட்டியது சாதிய தரப்பிலான பொது சமூகம் என்னும் தலித் வெறுப்பு சமூகம்.

படிக்காதவர்கள், கெட்ட வார்த்தை பேசக்கூடியவர்கள், குற்றவாளிகள் போன்ற படிமங்கள் மற்றப் பகுதிகளில் உள்ள தலித்துகள் மீது சுமத்தப்பட்டதைப்  போலவே, 'மெட்ராஸ் பறையர்' என்னும் தலைநகர் தலித்குடிகள் மீதும் சுமத்தப்பட்டன. ஆம்ஸ்ட்ராங் அத்தகைய அடையாளங்களை தலைகீழாக்கினார். ஏழை -எளிய உழைக்கும் தலித் குடும்பங்களில் படிப்பவர்களை உருவாக்கினார்,  உருவாகி வந்தவர்களை  ஊக்கப்படுத்தினார். தலித் விளையாட்டு வீரர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உறுதுணையாக இருந்தார். தலித்துகளிடையே சமூக நீதி பேசும் பேச்சாளர்களையும்,  கலைஞர்களையும் வளர்த்தெடுத்தார். அவ்வாறு வளர்ந்து கொண்டிருந்தவர்களை ஆதரித்தார்.  குற்றப் பின்னணி உடையவர்கள் எனக் கருதப்பட்ட தலித்துகளிடமிருந்து நீதிக்கு குரல் கொடுக்கும் குணமுடைய  நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கினார்; முன்மாதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சட்டம் படித்து வழக்கறிஞராகவும்  ஆனார். சேரி மக்களை அழுக்கு என்னும் படிமத்தில் புறத்தார் கண்டதை  மறுக்கும் வகையில் தூய்மையின் சின்னமான 'வெள்ளுடை' அணிந்து கவனம் பெற்றார். 

இவ்வாறு, கல்வி அற்றவர்களாக கருதப்பட்டவர்களிடமிருந்து  கல்வியாளர்களையும், பேசத் தெரியாதவர்கள் எனப்பட்டவர்களிடமிருந்து  துணிந்து பேசக் கூடியவர்களையும், காவல் நிலையங்களின் பலியாடுகளாக  ஆக்கப்பட்டவர்களிடமிருந்து வழக்கறிஞர்களையும்  அவர் உருவாக்கியதும், தம்மையும் மாற்று அடையாள உருவாக ஆக்கிக் காட்டியதும் மாபெரும் அடையாள மாற்றப் போராட்டம். அவருடைய அடையாள மீட்டுருவாக்கப் போக்கை புரிந்துகொள்ள, தலித் மீதான இழி அடையாளத் திணிப்பை புரிந்துகொள்ளும் அறிவு வேண்டும் என்பது நிர்பந்தமாக இருப்பதாலேயே பொது சமூகம் எனும் தரப்புக்கு இன்னமும் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அடையாள அரசியலை புரிந்துகொள்ளும் பக்குவம் கிட்டவில்லை. 

தலைநகரின் வழமையான பரபரப்பான அரசியல் களத்தில் பண்பாட்டு அரசியலை முன்னெடுப்பது எவ்வளவு சிரமமான செயல்பாடு என்பதை பண்பாடு குறித்த புரிதல் உள்ளவர்களால்தான்  புரிந்துகொள்ள முடியும். மாற்று அடையாளம் என்பது மாற்று பண்பாடாக உருத்திரளும். ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மாற்று அடையாள அரசியல் அதற்கான பண்பாட்டுத் தளத்தை இயல்பாகவே அடைந்தது. அவர் பகுதியில் இயங்கிய அவரின் முன்னோடி தலித் செயற்பாட்டாளர்கள் வழியே கிடைக்கப்பெற்ற சமூக ஆர்வத்தின் தொடர்ச்சியாக  அண்ணலின் எழுத்துகளை வாசிக்கத் துவங்கி, பண்டிதர் அயோத்திதாசர் வரை கற்றுணர்ந்து, தம்முடைய சமூக பண்பாட்டு அரசியல் பார்வையை வளர்த்துக் கொண்டார். இவையெல்லாம் சேர்ந்து அவரை தலித் சமூகத்தின் பூர்வ பண்பாட்டில் கொண்டுவந்து நிறுத்தியது. 

தலித்துகள் பூர்வகுடி மக்கள் என்பதை புரிந்துணர்ந்த ஆம்ஸ்ட்ராங், தலித்துகளின் பூர்வ பண்பாடு என்பதே  பௌத்தம்தான்  என்கிற பண்பாட்டு வரலாற்றை அடியொற்றி  பௌத்தத்தை தம்முடைய  செயல்பாடுகளில் முன்னிறுத்தினார். சபரி மலை, திருப்பதி போன்ற  இந்துக் கோயில்களுக்கு பயணம் சென்று கொண்டிருந்த தலித்துகளின் மத்தியில் அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாக்பூர் தீட்சா  பூமியைப் பற்றி பேசினார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில், அண்ணல் பௌத்தம்  தழுவிய தீட்சா தினத்தை கொண்டாடும் விதமாக, தம்முடைய பொறுப்பில் தீட்சா பூமிக்கு நூற்றுக்கணக்கானவர்களை 'பௌத்த யாத்திரை'யாக  அழைத்தும் சென்றார். 2016 மார்ச் 3 ஆம் நாளில் நடைப்பெற்ற தம்முடைய திருமணத்தை 'பௌத்த திருமணம்' என்னும் அடையாளத்தில் பிக்குகள் சூழ நடத்திக் காட்டினார். சுமார் 125 ஆண்டுகளுக்கும் முன்பாக  பெரம்பூரில் பண்டிதர் அயோத்திதாசரால் 'தென்னிந்திய சாக்கைய புத்த விகார்' துவக்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பிறகும் அது பல்லாண்டுகள் இயங்கிவந்தது. 1954 ஜூலை மாதத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்  வந்து பார்வையிட்டுச்  சென்ற  அவ்விகார் காலப்போக்கில் வழக்கொழிந்தது. பல்வேறு நில அபகரிப்புகளில் சிக்கி,   விகார் அமைக்க பண்டிதர் அயோத்திதாசருக்கு பெரம்பூரைச் சார்ந்த 'சாக்கிய பறையர் குடும்பங்கள்' அளித்த 31,204 சதுர அடி  நிலமும் காணாமல் போயிருந்தது. இவ்வரலாற்றை அறிந்து,  அவ்விடத்தில் தம்முடைய முயற்சியால் மீட்கப்பட்ட சிறிதளவிலான இடத்தில் மீண்டும் 'தென்னிந்திய புத்த விகாரை' 2018 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாளில், பல்வேறு நாடுகளிலிருந்து  வரவழைக்கப்பட்ட பௌத்த பிக்குகளைக்  கொண்டு திறந்துவைத்து, பண்டிதர் அயோத்திதாசரும் அண்ணல் அம்பேத்கரும் துவக்கிவைத்க 'பூர்வ பௌத்த' பண்பாட்டின் மறுமலர்ச்சியை சாத்தியப்படுத்தினார் ஆம்ஸ்ட்ராங். நான்கு அடுக்குகளைக் கொண்ட தென்னிந்திய புத்த விகாரில் பௌத்த வழிபாடுகள், தியானம் போன்ற சமய உள்ளொளி செயற்பாடுகள்  மட்டுமல்லாமல்,  சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த உரையாடல்களையும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் முன்னெடுத்தார். நீட் தேர்வு என்னும் மோசடிக்கெதிரான  போராட்டத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட தலித் மாணவியான அனிதா பெயரில், 'அனிதா அறிவுசார் மையம்' என்னும் பயிலகத்தை  விகாரின் இரண்டாம் தளத்தில் நடத்திவந்தார். இதன் மூலம் பௌத்த விகாரை வெறுமனே 'கோயில்' என்றில்லாமல் பண்டைய 'பௌத்த -சமண பள்ளி' வடிவில் இயக்கிக்காட்டினார்.  அவரின் இதுபோன்ற பௌத்த அறம் சார்ந்த களப்பணிகள், தலித்துகளின் இளம்  தலைமுறையிடம் பௌத்த பண்பாட்டு மீட்சிக்கான  சிந்தனையை  விதைத்தது.இன்னொருபக்கம்,  சேரி மக்களுக்கு மதிப்புடைய பண்பாட்டு வாழ்க்கையேக்  கிடையாது என்று கருதிவந்த  பொது சமூகத்திற்கு  ஆம்ஸ்ட்ராங் அவர்கள் முன்னெடுத்த 'பூர்வ பௌத்த பண்பாட்டு மீட்சி'யானது மனரீதியான ஒவ்வாமையை உருவாக்கியது. 

அண்ணல் அம்பேத்கர் அவர்களை சமூக அரசியலுக்கும், பண்டிதர் அயோத்திதாசரை பண்பாட்டு மீட்சிக்கும்  முன்னோடிகளாக பின்பற்றிய ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அரசியல் நோக்கத்திற்கு தாதா சாகிப் மான்யவர் கன்ஷிராம் அவர்களே  முன்னோடியாகத் தெரிந்தார். 'அம்பேத்கரிய தலித்' தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் உள்ளடக்கிய 'பகுஜன் அரசியலை' முன்னெடுத்த கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியை உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஆட்சியில் அமரச் செய்த வரலாற்று சாதனையை  தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவெங்கும் சாத்தியப்படுத்த  முடியும் என்று ஆம்ஸ்ட்ராங் நம்பினார். ஆனாலும்,  தமிழகத்தில்-ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் கூட- தலித்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை என்பது பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்களின் தலைமையிலான அரசியல் நோக்கத்திற்கான  செயல்திட்டமாகவே இருப்பதால், அம்பேத்கரியத்தை தலைமையாகக்  கொண்ட  பகுஜன் அரசியல் தலித் அரசியல் என்பதாகவே பார்க்கப்பட்டது. தலித் தலைமை என்பதயே  ஏற்க விரும்பாத சாதி இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் 'அம்பேக்கரிய தலித் தலைமை' என்பதை நினைத்துக்கூட பார்க்க வாய்ப்பில்லை என்பதை புரிந்துகொண்ட 
ஆம்ஸ்ட்ராங் அவர்களும் தலித்துகளிடமே  கட்சியை கொண்டு சென்றார். கள யதார்த்தம் எவ்வாறாயினும்  'அம்பேத்கரியர்கள் ஆள வேண்டும்' என்கிற சிந்தனையை அவரால் உறுதி குலையாமல், தொடர்ந்து பேசமுடிந்தது. அவருடைய அனைத்து மேடைகளிலும் தலித்துகளை நோக்கி  'நாம் ஆள வேண்டும்' என்பதையே விடாமல் முழங்கிவந்தார். மற்றவர் ஆளுவதற்கு  அரசியல் எடுபிடிகளாக  தலித் சமூகக்கினர்  இருப்பது அவமானம் மட்டுமல்ல சமூக துரோகமும் கூட  என்று இடித்துரைத்தார். 'உங்கள் வாக்குரிமையை உங்களை ஆட்சியாளர்களாக ஆக்குவதற்கான திறவுகோலாக  ஆக்குங்கள்' என்று அவர் கூறியதெல்லாம் தலித் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியன. தலித் சமூகம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டவகையில் அமைந்த   அவருடைய  இத்தகைய தொடர் பேச்சுகள், ஆட்சிகளில்  கோலோச்சும்   சாதியினர்களுக்கும்  அச்சாதியினரின்   அரசியல் அதிகாரக் கனவுகளை நிறைவேற்றும் கட்சிகளுக்கும்   கடும் எரிச்சலைக்  கொடுத்தன. முற்போக்கு பேசிய இந்துக்களும் கூட வெளிப்படையாக ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவருடைய அரசியல் நோக்கத்தின் மீது கடும் வன்மத்தை உமிழ்ந்ததற்கான  காரணம், 'அம்பேத்கரிய தலித் தலைமையில் ஆட்சி வர வேண்டும்' என்பதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்ததுதான். 

இப்படியாக, 
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வாழ்வும் அரசியலும் இந்த மண்ணில்  தொடர்ந்து மறுக்கப்படுகின்ற   பூர்வகுடி மக்களின்  அடையாளங்களையும், பண்பாட்டையும், அரசியல் உரிமைகளையும் மீட்பதிலேயே கவனம் கொண்டிருந்தன. அதுவே அவர் மீதான வன்மங்களுக்கும்  அடிகோலியன. அவர் முன்னெடுத்த  மாற்று அடையாளம், மாற்று பண்பாடு, மாற்று அரசியல் ஆகியவற்றை சீரணித்துக்கொள்ள  முடியாத பொது சமூகம் என்னும் பெயரிலான  தரப்புகள் ஆம்ஸ்ட்ராங் அவர்களை கண்டும் காணாமல் கடந்து போயின‌.  சாதி இந்து அதிகார மயக்கத்தில் திளைத்தபடி சமூக ஊடகங்களில் எழுதி வந்தவர்கள் அவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் 'ஜெய்பீம் கோஷ்டி' என்று எள்ளி நகைத்தனர், 'நீல சங்கிகள்'  என்று  வசைபாடினர்.  ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு இரங்கல் வாசித்த  அரசியல் கட்சிகளில் பல அவர் வாழ்ந்த காலத்தில் அவரை ஓர்  தலைவராக பார்த்ததே இல்லை.  அவர் வெட்டுப்படும் காட்சியை நிமிடத்திற்கு நிமிடம் இன்றைக்கு காட்டும் ஊடகங்கள் அவரை தலைவராக, சிந்தனையாளராக, களப்பணியாளராக என்றைக்குமே காட்டியதில்லை. படுகொலையை முன்கூட்டியே தடுத்திருக்க வேண்டிய அரசோ எல்லாம் முடிந்த பிறகு சாவகாசமாக வந்து நின்றது. 'சென்னையின் மைந்தன்' என மக்களால் போற்றப்பட்ட  அவரின் உடலை சென்னைக்கு வெளியே அனுப்பி வைத்தது நீதித்துறை. அவர் மீது நிகழ்த்தப்பட்ட  இத்தகைய வன்மங்களும் புறக்கணிப்புகளுமே   அவருடைய படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களாகும்.

(நீலம் பதிப்பகம் கேட்டு, 2024/ஜூலையில் எழுதப்பட்ட கட்டுரை)

ஞாயிறு, 22 ஜூன், 2025

மயில் வாகனம் என்னும் பௌத்த தேர்.



ஸ்டாலின் தி 

முருகனுக்கு மயில் வாகனன் என்றொரு சிறப்புப் பெயருமுண்டு. இந்து புராணங்களில் கூறப்படுவதைப் போல மயில் என்னும் பறவையின் மீது அமர்ந்து உலா வந்ததால் முருகனுக்கு அந்த பெயர் வரவில்லை. அது ஒரு மூடநம்பிக்கை கதை. மயில் பறவை இனமாக இருப்பினும் வெகு தூரத்திற்கு பறக்க முடியாது. அதிகபட்சமாக சுமார் 300 மீட்டர் தூரத்திற்குதான் அதுவால் பறக்க முடியும்.நேரத்தை கணக்கிட்டால் சுமார் 30 நொடிகள்தான் தொடர்ந்து பறக்க முடியும். அதன் உடல் வாகு அப்படியானது . அப்படி இருக்க, ஒரு மனிதரை சுமந்து கொண்டு உலகையே சுற்றி வந்தது என்பது கட்டுக்கதை. அப்படி இருக்கும் போது, முருகனுக்கு மயில் வாகனன் என பெயர் வர காரணம் என்னவாக இருக்கும்.  

மயில் வடிவில் செய்யப்பட்ட தேரில் முருகன் வலம் வந்ததால் மயில் வாகனன் என்று பெயர் வந்தது என்பதுதான் நேரடியான பதில். மயில் வடிவில் செய்யப்பட்ட தேர்களில் பயணிப்பது அன்றைய பௌத்த அரசர்களின் வழக்கமாக இருந்தது. பௌத்த மன்னர்களுக்காக மயில் வடிவ தேர்களை செய்வதற்காக அரக்கு, மெழுகு, நூல் போன்றவற்றை சரியாக கையாளும் முறை மயில் சூத்திரம் என்று கூறப்பட்டது. அச்சூத்திரத்தின்படி செய்யப்பட்ட மயில் வாகனத்தை 'மயில் சூத்திர வாகனம்' என்று அழைத்தனர். கச்சநந்தன் என்னும் பௌத்த அரசனும்கூட மயில் சூத்திர வாகனம் கொண்டிருந்தார் என்று சீவக சிந்தாமணியில் கூறியிருப்பதை பண்டிதர் அயோத்திதாசர் சான்றாகக் கூறியிருக்கிறார். மகாமயூரி என்றொரு பெண் போதிசத்வர் பௌத்த வழிபாட்டில் இடம் வகிக்கிறார். குறிப்பாக வஜ்ரயான பௌத்தம் பரவியுள்ள திபெத், சீனா, ஜப்பான் நாடுகளில் ஞானம், தூய்மை, சாந்தம் ஆகியவற்றின் அடையாளமாக மகா மயூரி வணங்கப்படுகிறார். அவ்வாறு வணங்கப்படும் அவருடைய தோற்றமானது, முருகனைப் போலவே மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் வகையில் காணப்படுகிறது. மயூரி என்னும் பெயர் பாலி மொழியின் மயூரா என்பதில் இருந்து வந்த சொல்லாகும். 

              போதிசத்வா மகாமயூரி‌
  
பௌத்தத்தை வளர்த்த அரச மரபுகளில் மௌரிய மரபு முக்கியமானது. அசோகர் இம்மரபில் வந்தவர்தான். மௌரியா என்னும் சொல்லின் வேர்ச் சொல்லாக இருப்பது பாலி மொழியின் மயூரா என்னும் சொல்தான். மௌரியா என்னும் சொல் மயூரா என்னும் சொல்லில் இருந்து மரபுச் சொல்லாக (Totemic Symbol) வந்திருக்க வேண்டும் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ரொமீலா தாப்பர் தம்முடைய நூலில் (Ashoka and the Decline of the Mauryas) கூறுகிறார். மயூரி என்னும் பாலி மொழிச் சொல்லுக்கு மயில் என்று அர்த்தம். 

பௌத்த கதைகளில் பௌத்த அறவோர்களையும், ஞானம், அகிம்சை, தூய்மை போன்றவற்றையும் உருவகப் படுத்த மயில் உருவம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எனவேதான் பௌத்தர்கள் மயில் உருவத்தை முன்வைத்தார்கள். இந்தியாவின் தொன்மையான பௌத்த சான்றுகளிலும், விகாரைகளிலும் மட்டுமல்லாமல், பௌத்தம் பரவிய பிற நாடுகளிலும் பௌத்த சின்னங்களிலுப் இன்றளவும் மயில் உருவத்தைக் காணமுடியும். அப்படியாகத்தான், மயில் உருவில் பௌத்த அரசர்களுக்கு தேர் செய்யப்பட்டது. அப்படியான மயில் உருவ வாகனத்தில் பயணித்ததால்தான் பௌத்த அரசர் முருகன் மயில் வாகனன் என்று அழைக்கப்பட்டார்.


சனி, 21 ஜூன், 2025

பௌத்த மன்னர் முருகன்.



ஸ்டாலின் தி 

முருகன் பற்றிய வேறுபட்ட கதைக் கூறலை நூற்றாண்டுகளுக்குப் முன்னரே முன்வைத்திருப்பவர் பண்டிதர் அயோத்தி தாசர். பண்டிதரின் கதையாடலில் முருகன் சிவனின் மைந்தனுமில்லை, அவதாரக் கடவுளுமில்லை, தமிழ் எனும் ஒரு மொழிக்கேயுரிய கடவுளுமல்ல. மாபெரும் தத்துவத்தை பின்பற்றி, மற்றவர்களுக்கும் அத்தத்துவத்தை‌‌ போதித்து, தன்னலத்தை முற்றிலும் துறந்து ஆண்டியாக (பிக்குவாக) ஆகி வாழ்ந்தவர் முருகன். அவர் பின்பற்றிய தத்துவம் தம்மம்; அதாவது, பௌத்தம்.

இன்றைக்கு பழனி என்று அழைக்கப்படும் அன்றைய 'பூங்குறிஞ்சி' மலையை ஆண்டு வந்த பௌத்த அரசனான மருகனுக்கும், அவருடைய மனைவியான ராணி கங்கையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முருகன். முருகனின் மனைவி தெய்வானை. மயில் உருவில் செய்யப்பட்ட வாகனத்தில் வலம் வந்த முருகன், புத்த பள்ளியில் பயின்று, அறவாழ்வை மேற்கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றான். முருகன் புத்த தம்மத்தில் பயணித்து, வாழ்க்கையை கடந்து சென்ற பௌத்த சிரமணர் ஆவார். சிரமணன் என்பதே சரவணன் என்று ஆனது. இதுவே பண்டிதரின் பார்வையிலான முருகனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமான வடிவமாகும். அதாவது, முருகன் என்பவர் பௌத்த மன்னர், பௌத்த வள்ளல். அவர் தம்ம நெறியில் வாழ்ந்து, ஞான மார்க்கத்தை மக்களுக்கு போதித்தமையால் போற்றுதலுக்குரியவரானார், வழிபடப்பட்டார்.

'வைசாக கால' வழிபாடு பழனியில் நடக்கிறது. அது ஒரு பௌத்த வழிபாடு என்பது வரலாறு கூறும் செய்தி. பழனிக்கு சென்று மொட்டை போடும் வழக்கத்தில், புத்த தீட்சை சடங்கு கலந்திருப்பதையும் இத்தோடு இணைத்துக் காண வேண்டும். முருகனின் இன்னொரு பெயர், ஆறுமுகம். முருகனின் மெய் (உடல்) முகத்தோடு, பஞ்ச சீலத்தை பின்பற்றிய ஐங்குணங்களையும்‌‌ முகமாகக்‌ கொண்டதால்தான் அவர் ஆறுமுகம். பழினியின் பிரசாதம் பஞ்சாமிர்தம். வாழ்விவ் அமிர்தமாய் இனிப்பகு பஞ்ச சீலங்ககள்தான். அதுவே பஞ்சாமிர்தம். பஞ்ச சீலத்தை ஏற்காத வேஷ பிராமணியம் பஞ்சாமிர்தத்தையும் திரித்தது. 

முருகனோடு அடையாளப் படுத்தப்படுபவற்றில், 'வேல்' முக்கியமானது. வேல் முருகன் என்றும் அவரை பார்ப்பனிய கதையாடல் கூறுவதுண்டு. ஆனால், முருகனுக்கு சரியாகப் பொருந்தக் கூடிய அடையாளம் வேல் என்பதைவிடவும் வேள் என்பதுதான். பௌத்தப் பார்வையிலும் அதுதான் சரி.
முருகன் பௌத்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவன். அவனின் அரண்பணியை அடையாளப்படுத்த 'வேல்' தேவைப்படுகிறதுதான். மேலும் சூரசம்காரம் என்பது, 'சுரா பானமருந்திய' சுரர்களுடனான, புத்த அசுரனான(சுரா×அசுரா)முருகன் மோதியதையேக் குறிக்கிறது. இதன்படி சம்கார போர் வீரனாக அடையாளப்படுத்தவும் வேல் அடையாளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதேவேளை, முருகனைப் போற்றும் பெயராக 'வேள் முருகன்' என்பதுவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

வேள் என்றால் கொடை என்று அர்த்தம். கொடை வள்ளல்கள் வேளிர் எனப்பட்டனர். கொடைக்குப் பெயர் பெற்ற மன்னர்களின் பெயருக்கு முன் 'வேள்' என்று இடுவது சங்க இலக்கியங்களிலும் வழக்கமாக இருந்துள்ளது. பாரியை 'வேள்பாரி' என்று கூறியிருக்கிறார் தொல்காலப் புலவர் கபிலர். புத்த தன்மத்தைக் கடைப்பிடித்ததால் கொடை வள்ளலாகவும் இருந்த முருகன் 'வேள் முருகன்' என்றும் அழைக்கப்பட்டார். வேளன் என்பது கொடையாளியை அடையாளப்படுத்துவதால், முருகனுக்கு வேலன் என்பதைவிட, வேளன் என்பதே சரியான அடையாளத்தைக் கொடுக்கிறது.

சரி.முருகன் கதையாடலில் வருகின்ற வள்ளி என்பவர் யார்? 
முருகனின் இரண்டாவது மனைவியே வள்ளி என்பார்கள். இதுவும் திரிபுதான். வள்ளல் என்பதன் பெண்பால் தான் வள்ளி என்பதாகும். வள்ளியம்மை என்றால் தயாளக் குணம் கொண்டப் பெண் என்று பொருள். முருகன் 'வேளன்' என அழைக்கப்பட்டதால், முருகனின் மனைவியான தெய்வானை 'வள்ளி' என்று அழைக்கப்பட்டார். பிற்கால பௌத்த விரோத திரிபுவாதக் கும்பல், 'ரெண்டு கல்யாணக்'கதையை இட்டுக் கட்டிவிட்டது.

முருகனுக்கு வாழ்த்துப் பாட அரோகரா என்பது முழக்கமாக உள்ளது. இதுவும் கூட, பௌத்த சங்க அறவோர் என்பதை குறிக்கும் அறகரர் என்பதிலிருந்தே வந்தது என்பது உண்மை.‌

பழனிக்கு காவடி துக்கி செல்வது இன்றைக்கு நேர்த்திக் கடன். கடன் என்றால் அக்காலத்தில் கடமை என்றும் பொருள். பழனி மலையில் சிரமணர்(சரவண) பொய்கையிலும் பூங்குறிஞ்சி விகாரிலும் பள்ளி நடத்தி வந்த பௌத்த அறவோர்களுக்கு தானப் பொருட்களை தூக்கி சென்றதே காவடி தூக்கிச் செல்லும் வழக்கம். இதையே 'அன்னக்காவடி' (சோற்றுக்கு காவடி தூக்குதல்) என்றும் வேஷ பிராமணியர்கள் கேலி பேசினார்கள்.


இப்படியாக, 
காலம் காலமாக பௌத்த அடையாளங்கள் மீது பூசப்பட்ட போலி அடையாளங்கள் இன்னமும் முன்வைக்கப்படுகின்றன. அதன் மூலம் வேஷ பிராமணிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் தொடர்கிறது. அவற்றை முறியடித்து, உள் மெய் எண்ணும் உண்மையை வெளிக்கொண்டு வருவது நல்லோரின் கடமையாகும்.

அதிகாரத்தின் சுதந்திரமும் சுதந்திரத்தின் அதிகாரமும்.

ஸ்டாலின் தி .  சுதந்திரம் என்னும் சொல் மாபெரும் கனவை உருவாக்கும் சொல்; மாபெரும் மனக்கிளர்ச்சியை உருவாக்கும் சொல். மனித சிந்தனைய...