வெள்ளி, 2 மே, 2025

கனிம வள கொள்ளையை அங்கீகரிக்கிறது திமுக அரசு.


ஸ்டாலின் தி 

சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்ட செய்தி  தற்போது வெளியே வந்திருக்கிறது. 2023 மே மாதத்திலேயே பாதுகாப்பை நீக்கியிருக்கிறது திமுக அரசு. 'பாதுகாப்பு இல்லாத சூழலில் தம்மால் கிராணைட் முறைகேடு வழக்கில் சாட்சி கூற வர முடியாது' என்று மதுரை கனிம வள சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கு சகாயம் கடிதம் எழுதியதன் மூலமே தற்போது இந்த உண்மை வெளி வந்திருக்கிறது. சகாயம் அவர்கள் 2012 வாக்கில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது அங்கே நிலவிய கிராணைட்  முறைகேடுகளை ஜெயலலிதா தலைமையிலான அன்றைய அதிமுக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அடுத்த நாளே அவர் கோ-ஆப்டெக்ஸ் துறைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு, டிராபிக் ராமசாமி தொடுத்த பொது நல வழக்கில் 'கனிம முறைகேடுகளை விசாரணை செய்யும் அதிகாரியாக' சகாயத்தை நியமித்தது உயர் நீதிமன்றம். சகாயம் உயிருக்கு கனிம கொள்ளையர்களால் ஆபத்து வரலாம் என்று சகாயம் சார்பில் கூறப்பட்டதால், 2014 அக்டோபரில் சகாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி,  'சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலரை  பாதுகாப்புக்காக சென்னை காவல் ஆணையர் நியமிக்க வேண்டும். சென்னையை விட்டு வெளியே பயணம் செல்லும்போது, காவல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு  சுற்றுப்பயண விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்' என்று காவல்துறை இயக்குநர் பாதுகாப்பு தொடர்புடைய காவல்துறையினருக்க  கடிதம் எழுதினார். 2023 மே மாதம் வரை இந்த பாதுகாப்பு இருந்து வந்துள்ளது. இதற்கிடையில், கனிம முறைகேடுகளை விசாரணை செய்து, சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய முறைகேடுகளையும், குவாரியில் நடத்தப்பட்ட நரபலி உள்ளிட்ட குற்றங்களையும் கண்டறிந்து அறிக்கையும் அளித்துள்ளார் சகாயம். அந்த விசாரணை காலத்தில் விசாரணையை தடுக்கும் வகையில் அன்றைய அதிமுக ஆட்சியாளர்களாலும் அரசு அதிகாரிகளாலும் கடும் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டார் சகாயம். அன்றைக்கு சகாயத்திற்கு ஆதரவாக பேசியது திமுக. ஆனால், இன்றைக்கு அதே திமுகவின் ஆட்சிதான் சகாயம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளது. தம்முடைய பாதுகாப்பை திரும்ப பெற்றது குறித்து மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலருக்கும் பலமுறை கடிதம் எழுதிய பிறகு, காவல்துறை இயக்குநர் அளித்த பதிலில், 'உங்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதால் பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளோம்' என்று கூறப்பட்டிருக்கிறது என்கிறார் சகாயம். எதன் அடிப்படையில் ஆபத்தில்லை என்று திமுக அரசும் அதன் காவல்துறையும் கூறுகிறது என்று தெரியவில்லை. அப்படியான பாதுகாப்பு சூழல் நிலவுகிறது என்று எவராலும் கூறமுடியாது என்பதே நிலவரமாக இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு  கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்கள் அங்கே நடந்த மணல் கொள்ளையை எதிர்த்ததால், கடந்த 2023 ஏப்ரல் 25 ஆம் தேதியன்று, அவரை அலுவலகத்தில் வைத்தே சராமாரியாக  வெட்டிக்கொன்றனர் மணல் கொள்ளையர்கள். அந்த கொலை நடத்தப்பட்ட அடுத்த  மாதமே 'சகாயத்திற்கு கனிம கொள்ளையர்களால் ஆபத்து இல்லை' என்று பாதுகாப்பை திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு. அதன்பிறகு, புதுக்கோட்டை ஜகுபர் அலி கனிமக் கொள்ளையர்களால் கொடூரமாக, கனரக வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். ஆனாலும், கனிம கொள்ளையர்களால் ஆபத்து இல்லை என்பதையே சகாயம் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசால் கூறப்பட்டுள்ளது. எனில், திமுக அரசு கனிம கொள்ளையர்களுக்கு சாதகமாக இயங்குகிறது என்கிற வாதம் வலிமை பெறுகிறது. இந்த விமர்சனம் சகாயம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றதால் மட்டுமல்ல, திமுக அரசின் தொடர் செயல்பாடுகளாலும் எழுகிறது. 

கடந்த 14.12.2022 அன்று தமிழ்நாடு சிறு கனிம சலுகைச் சட்டவிதிகள் 1959இல் (The Tamilnadu Minor Mineral Concession Rules) பிரிவு 36 உட்பிரிவு 1(A)வில் சட்டத்திருத்தம் செய்து ஓர் அரசாணையை வெளியிடப்பட்டது. 
இந்தச் சட்டத்திருத்தத்தின்படி காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவுக்குள் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டது. அதாவது, காப்புக் காடுகளில் இருந்து 1000 மீட்டடர்களுக்கு (1கி.மீ) குவாரிகள் அமைக்கப்படக் கூடாது என்பதை, காப்புக் காடுகளில் இருந்து 60 மீட்டர் தூரத்தில் குவாரி அமைக்கலாம் என்று திருத்தப்பட்டது.  இந்த சட்டத் திருத்தம் தொடர்பான விளக்க அறிக்கையில், 'பாதுகாக்கப்பட்ட காடுகள் என்பதன் கீழ் சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள் மட்டுமே வருமே தவிர, காப்புக்காடுகள் வராது என அமைச்சர் துரைமுருகன் விளக்கம் கொடுத்தார்.  மாஞ்சோலை தேயிலை தோட்டம் காப்புக் காட்டில் வருவதால் இனி அங்கே தேயிலைத் தொழிலாளர்களின் குடியிருக்கக்  கூடாது என்று இன்றைக்கு கூறும் திமுக அரசு, காப்புக் காட்டுக்கு மிக அருகிலேயே குவாரி அமைக்கலாம் என்று மூன்றாண்டுக்கும் முன்னரே சட்டத் திருத்தம் செய்துள்ளதை பார்க்கும் போது இந்த அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். 

புதுக்கோட்டை ஜகுபர் அலி படுகொலையையொட்டி  எழுந்த விமர்சனங்களைத்  தொடர்ந்து, 
'சுரங்க நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று' புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு தமிழக திமுக அரசு உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் பகுதியில் உள்ள  200 குவாரிகளில் மட்டுமே  ட்ரோன் மூலம் ஆய்வுகள் செய்யப்பட்டன. கணக்கெடுக்கப்பட்ட 200 குவாரிகளில், 36 குவாரிகள் சட்டத்தை மீறியது கண்டறியப்பட்டது. ஆண்டுக்கு 6 லட்சம் கன மீட்டர் கனிமங்களை மொத்தமாக பிரித்தெடுக்க உரிமம் பெற்று,  சட்டவிரோதமாக பத்து மடங்காக 63 லட்சம் கன மீட்டர் அளவுக்கு வெட்டியெடுக்கப்பட்டு கொள்ளை நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. இந்த விசாரணை மாநிலம் முழுக்க நடத்தப்பட்டால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று சமூக அக்கறையாளர்கள் கருதிய சமயத்தில்,  ஜகுபர் அலி கொலை வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டதாகக் கூறி குவாரி ஆய்வுப்  பணிகள் நிறுத்தப்பட்டன. 'இனிமேல் எந்தவொரு ஆய்வும் சிபி-சிஐடியின் தேவைகளின் அடிப்படையில் இருக்கும்' என்று ஆய்வில் ஆய்வை மேற்கொண்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் கூறப்பட்டதாக  செய்திகள் கூறியன.

கனிம வளத்துறையில் நடக்கும் கொடுமைகளை  மேலும் அதிகமாக்கும் வகையில்,  கடந்த மாதம்(2025 ஏப்ரல்), திமுக அரசு  குவாரி  குத்தகை கால திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் (2020), குவாரிகளின்  குத்தகை காலம் ஐந்தாண்டு என்பதை இரண்டு மடங்காக்கி  பத்தாண்டாக  உயர்த்தி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதே வழியில், குத்தகை காலத்தை  மும்மடங்காக உயர்த்தி, குத்தகை காலம் பத்தாண்டு என்பதை  முப்பது ஆண்டாக உயர்த்தி‌ திருத்தம் கொண்டு வந்துள்ளது திமுக அரசு. அதாவது,  புதியதாக குவாரி துவங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே நடத்துபவர்களுக்கு 25 ஆண்டுகள் வரை நீட்டிப்பு; 
10 ஏக்கர் குவாரி வைத்திருப்பவர்களுக்கு 20 வரை நீட்டிப்பு, 10 ஏக்கருக்கு மேல் குவாரி வைத்திருப்பவர்களுக்கு 30 ஆண்டு வரை நீட்டிப்பு என்கிறது இந்த புதிய திருத்தம்.  குவாரி குத்தகை ஆண்டை குறைக்க வேண்டும், அரசே குவாரிகளை நேரடியாக நடத்த வேண்டும் என்றெல்லாம் மக்களும் பல்வேறு இயக்கங்களும் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்க, குவாரி முதலாளிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, கனிமக் கொள்ளைக்கான  இந்த  திருத்தத்தைக்   கொண்டு வந்துள்ளது திமுக அரசு. இப்படியான தொடர் குவாரி முதலாளிகளின் நலனுக்கான அரசாக தொடர்ந்து இயங்கி வரும் அரசு கொடுக்கும் ஆதரவும் ஆட்சியாளர்கள் கொடுக்கும் துணிவும்தான் கனிமக் கொள்ளையர்களின் முறைகேடுகளையும் குற்றங்களையும் வளர்த்து வருகின்றன. இதன் பின்னணியில்தான் கனிம வளத்தை பாதுகாக்க முற்படுவார்கள் கொல்லப்படுவதையும்   பாதுகாப்பு அற்றச்‌   சூழலில் அவர்கள் தள்ளபடுவதையும்  நாம் புரிந்துகொள்ள வேண்டும். கனிம கொள்ளைக்கான பாதையை பாதுக்கும் திமுக அரசு, கனிம கொள்ளைக்கெதிரானவர்களை பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளுகிறது என்பதை  கனிம பாதுகாப்பு சிந்தனை உடையவர்களுக்கான  கொலை மிரட்டல் என்றே நம்மால் கருத முடிகிறது.

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

காலனி என்னும் சொல் நீக்கமும் சாதியின் இருப்பும்.‌

ஸ்டாலின் தி

'அரசு ஆவணங்கள் மற்றும் பொது புழக்கத்தில் இருந்து காலனி என்னும் சொல் நீக்கப்படும் ' என்று இன்றைய(29/4/2025) சட்ட மன்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 'தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் இனி நீக்கப்படும்' என்று அந்த அறிவிப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

காலனி என்னும் சொல் இலத்தீன் மொழியின் 'கொலெர்(Colere)'என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. Colere என்பதற்கு இலத்தினில் வேளாண்மை நடப்பதை குறித்தது. இதிலிருந்து கொலனஸ் (Colonus) என்னும் சொல் வந்தது. அது வேளாணமையில் ஈடுபட்டவர்களை குறித்தது. வேளாண் (Colere) பகுதியில் வேளாண் சார்ந்த மக்களின் (Colonus) அடங்கிய வசிப்பிடத்திற்கும் வேளாண்மக்கள் குடியேற்றப்பட்ட இடங்களுக்கும் 'கலொனியா Colonia ' என்று பெயர் வந்தது. இந்த இலத்தின் சொல் பிரெஞ்ச் மொழியில் 'கொலனீ(Colonie)' என்று மாற்றமடைந்து ,ஆங்கிலத்தில் காலனி(Colony)என்று வழங்கப்பட்டது. பிறகு, ஆங்கிலேயர்கள் தங்களுடைய குடியேற்ற ஆட்சியை நிறுவிய நாடுகளில் காலனி என்கிற சொல்லும் குடியேறியது. (தமிழில் கழனி என்பது வேளாண் பகுதியை குறிக்கும் சொல். காலனியும் அவ்விடத்திலிருந்தே வந்துள்ளமை யால், கழனி | காலனி என்பதைக் குறித்து தனியே விசாரணை செய்யலாம்.)

இந்தியாவில், அதிகாரத்திற்காக குடியேறிய(காலனிய) ஆங்கிலேயர்களின் அதிகாரிகளின் வசிப்பிடங்களுக்கு காலனி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. அது பிற தொழிலாளர்கள் குடியிருப்பை குறிக்கும் சொல்லாக நகரப்பகுதிகளில் பயன்பாட்டுக்கு வந்தது. இறுதியாக, கிராமப்புற சேகரிக்கும் வந்தது. இலத்தீனில் நிலத்தில் உழைத்த மக்களின் குடியிருப்புக்கு கூறப்பட்ட காலனி அடையாளம், இந்திய நிலத்தில் உழைத்த மக்களின் அடையாளமாக ஆனது. காலனிக்காரர்கள் ஆனார்கள் சேரி மக்கள். தமிழ் நிலத்தில் சேரி என்னும் சொல் காலனி என்னும் சொல்லுக்கு இணையானச் சொல் என்பதாலும், 'பறைத்தெரு, சக்கிலித் தெரு, பள்ளத்தெரு' என்று இருந்த இழிவான சொல்லாடலை நீக்க தலித்துகளே காலனி என்னும் சொல்லை தேர்வு செய்தனர். ஆனாலும், ஊர்த்தெரு சாதியினரால் தீண்டாமையை அடையாளப்படுத்தும் சொல்லாகவே காலனி ஆக்கப்பட்டது. ஊர்-சேரி என்னும் பூர்வ மொழிச் சுட்டுதலில் காலனி என்னும் அயல் மொழிச் சொல்லை தீண்டப்படாத சொல்லாக வைத்தது சாதிய சமூகம்‌. ரயில்வே காலனி, போலீஸ் காலனி என்றெல்லாம் அரசு குடியிருப்புகள் அழைக்கப்பட்டாலும், காலனி என்றால் அது சேரி மற்றும் சேரி மக்களின் அடையாளமாகவே புரிந்து கொள்ளப்பட்டது. 'ஊர் மக்களுக்கும்-காலனி மக்களுக்கும் மோதல்' என்று அச்சு ஊடகங்களும் கூட காலனி என்பதை தலித்-சேரி- அடையாளமாகவே அமைத்தது. தமிழ்த் திரைப்படங்கள் 'அசுத்தமானவர்கள், கேலிக்குரியவர்கள், குற்றவாளிகள் போன்றோரை அடையாளப்படுத்த காலனி என்பதை பயன்படுத்தியது.
தலித் மக்களுக்கு அரசால் அளிக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் கூட காலனி வீடுகள் என்றே கூறப்பட்டன. தலித் மக்களின் பழைய மனைகள், புதிய மனைகள் முறையெ பழைய காலனி, புதிய காலனி என்றே இன்றும் கூறப்படுகின்றன. இன்றைக்கு தமிழ்நாடு முதல்வர் தீண்டாமை அடையாளமாக காலனி என்னும் சொல் இருப்பதை சட்ட மன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன் வேர்ச்சொல், வழிச்சொல் வழங்கும் பொருள் எதுவாக இருந்தாலும், இங்கே அது தீண்டாமையையே குறிக்கிறது. கடந்த காலங்களில் தலித் செயற்பாட்டாளர்கள் இதை கவனத்தில் எடுத்துள்ளனர். காலனி என்று வந்த இடங்களை 'நகர்' என்று திருத்தியிருக்கிறார்கள். புதிய காலனிகள் அம்பேத்கர் நகர்களாக உருவெடுத்தன. 90 களில் எழுந்த தலித் அரசியல் எழுச்சி பண்டைய சொல்லான சேரியையும் முன்வைத்தது. சேரிப் பண்பாடு, சேரித் தலைமை போன்ற சொல்லாடல்களை தலித் அரசியல்-பண்பாட்டு இயக்கங்கள் முன்வைத்தன. துவக்கக் காலத்தில் 
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பின்னணியில் திட்டக்குடியிலிருந்து 'சேரி' என்னும் இதழ் ஒன்று வெளியாகியுள்ளது. 'தலை நிமிர சேரிதிரளுள்- அன்று தலைகீழாய் நாடு புரளும்' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கொடுத்த முழக்கம் ஒரு காலத்தில் சேரி எனும் சொல்லை ஆயுதமாக ஏந்தி நின்றது. ஆனாலும், சேரி என்னும் சொல் அரசியல் களத்தில் மீண்டும் கைவிடப்பட்டது. இன்னொரு பக்கம், காலனி என்கிற படிமம் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதை மறுக்கும் குரலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே இதில் முக்கியம்‌. கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள், 'ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியை காலனி என்று குறிப்பிடாமத் சான்றோர் குடியிருப்பு அல்லது தொல் தமிழர் குடியிருப்பு என்று மாற்ற வேண்டும் ' என்று கோரிக்கை விடுத்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள F. கீழையூரில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியை 'F. கீழையூர் காலனி' என்று பெயரிட்டு, வருவாய் மற்றும் பஞ்சாயத்து ஆவணங்களில் மாற்றப்பட்டது. அதை எதிர்த்து பிரதீப் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் (2023) வழக்கு தொடுத்தார். கடந்த ஆண்டு(2024) இல், நாமக்கல் மாவட்டத்தில் மல்ல சமுத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பெயர் பலகையில் 'அரிசன காலனி' என்று எழுதப்பட்டிருந்தை கணேசன் என்பவர் கடுமையாக எதிர்த்து போராடினார். அதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக சென்று அந்த பலகையில் இரந்த அரிசன காலனி என்கிற இப்பெயரை அழித்தார். இப்படியான தொடர் நிகழ்வுகளின் தொடர்ச்சிதான் முதல்வரின் இன்றைய அறிவுப்பு. இதை வரவேற்கும் அதே நேரத்தில் நம்மிடம் உள்ள கேள்வி, இது சாதிய மனநிலையில் என்னவகையான மாற்றத்தை நடத்தப் போகிறது என்பதுதான். ஆங்கிலச் சொல்லான காலனி என்பதை தீண்டப்படாத சொல்லாக ஆக்கிய சாதி இந்துக்கள் காலனி என்கிற சொல்லை மறந்துவிட்டால் அவர்களின் சாதிய குணமும் மறந்துபோகுமா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும். தலித் மக்களின் இழிவான அடையாளமாக இருப்பது காலனி என்கிற சொல் மட்டுமல்ல. அவர்கள் நிலமற்றவர்களாக, அதிகாரம் அற்றவர்களாக, உரிமை அற்றவர்களாக இருக்க வைக்கப்பட்டிருப்பதுதான் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பவற்றிலேயே மாபெரும் இழிவான அடையாளங்களாகும். அவற்றைப் போக்க அவர்கள் நெடுங்காலமாக போராடுகிறார்கள், அர்ப்பணிக்கிறார்கள். அத்தகைய போராட்டங்களையும் அர்ப்பணிப்புகளையும் அவற்றின் பின்னுள்ள நியாயங்களையும் இந்த அரசு என்ன மதிப்பீட்டில் வைத்திருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியமான விவாதப் பொருளாக இருக்க வேண்டும். இழி சொற்கள் நீக்கப்பட்டல் இழி வாழ்வு மாறாது‌. மாறாக, இழி வாழ்க்கை மாற்றப்படும் போதுதான் இழி சொல் மாறும்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.




ஸ்டாலின் தி 

சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ராணுவ வீரரான அவர், சமூகக் கொடுமைகளை எதிர்த்து சமர் செய்தவர். இவரது மிடுக்கானத் தோற்றமும், தீரமான சமூகப் பணியும் அவரை மக்களிடத்தில் மாவீரராக ஆக்கியன . சேரி மக்களோடு மட்டுமின்றி, சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருந்த, நரிக்குறவர் மக்களோடும் நெருக்கமாக இருந்தார். அவர்களின் மூத்தோர்களிடமிருந்தே, சிவப்பு நிற முண்டாசுக் கட்டும் பழக்கம் அவருக்கு வந்தது. 

அண்ணலுக்குப் பிறகு எழுந்த, இந்தியக் குடியரசுக் கட்சியின் முன்னோடித் தலைவராக கடமையாற்றிவர். தொடர்ந்து மக்களுக்காக, களத்தில் நின்ற அவர், தேர்தல் களத்தில் 1957 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1967 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் சீர்காழி தொகுதியில் நின்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1957 தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வெற்றி பெற்றார். 

ஊராட்சி மன்றத்தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்த வீரர் கே.பி.எஸ்.மணி அவர்கள் 1980 இல் பெரம்பலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கீழ்வெண்மணி படுகொலையின் போது, சட்டமன்றத்தில் உரக்கக் குரல்கொடுத்தவர் அவர். அவருடைய சட்டமன்ற உரைகள் வீரமிக்கதாக இன்றும் புகழப்படுகின்றன. 

(ஐயா கே.பி.எஸ்.மணி அவர்களின் பிறந்த நாள் -பிப்ரவரி 22)


புதன், 19 பிப்ரவரி, 2025

உ.வே.சாமிநாதரின் அக்கிரகாரக் கதை.





ஸ்டாலின் தி 

உ.வே.சாமிநாதர் ஐயர் என்பதில் உ என்னும் எழுத்து அவருடைய ஊரான உத்தமதானபுரத்தைக் குறிக்கிறது. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் இது. இந்த ஊர்க்கதையை தம்முடைய தன்வரலாற்று நூலான 'என் சரித்திரம்' நூலின் முதல் அத்தியாயமான 'எங்கள் ஊர்' என்னும் தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார் உ.வே.சா. அதாவது, சற்றேரக்குறைய இருநூறாண்டுகளுக்கும் முன்பாக தஞ்சையை ஆண்டுவந்த அரசர் ஒருவர் தம்முடைய படைபரிவாரங்களோடு நாட்டை சுற்றிப்பார்க்க பயணப்பட்டார். இயற்கை காட்சிகளையும் கோயில் குளங்களையும் கண்டுகளித்த அரசர் தஞ்சைக்கு கிழக்குப்பகுதியில் உள்ள பாபநாசம் அருகில் ஓரிடத்தில் ஓய்வு எடுத்த போது, உணவை உண்டுகளித்து தாம்பூலம் (வெற்றிலைப்பாக்கு) போட்டு குதப்பிய போதுதான் அன்றைய நாள் ஏகாதசி நாள் என்று தெரிந்து கொண்டாராம். ஏகாதசி அன்றைக்கு விரதம் இருக்க வேண்டிய தாம் இப்படி விருந்துணவில் களித்ததோடு தாம்பூலத்தையும் போட்டுவிட்டோமே என விசனப்பட்ட அரசர், அருகில் அரண்மனை புரோகிதர்களும் இல்லாததால் 'வேறு சில பெரியவர்களை' அழைத்து பரிகார ஆலோசனையைக் கேட்டுள்ளார். அந்த கெட்டிக்காரப் பெரியவர்கள், 'ஓர் அக்கிரகார பிரதிஷ்டை செய்து, வீடுகள் கட்டி, வேதவித்துகளான அந்தணர்களுக்கு(பார்ப்பனர்களுக்கு) வீடுகளோடு நிலத்தையும் தானமாக அளித்தால் இந்த தோஷம் நீங்கும் ' என்று பரிகாரம் கூறியுள்ளனர். 'இதென்ன பிரமாதம்.இதோ செய்கிறேன்' என்று துள்ளிக்குதித்த அரசர் அதே இடத்தில் உடனடியாக 48 வீடுகளையும் இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு என்கிற விகிதத்தில் 24 கிணறுகளையும் அமைத்துக் கொடுத்து நாற்பத்தியெட்டு புரோகித பார்ப்பனர்களின் குடும்பங்களை குடியேற்றி தலா ஒரு குடும்பத்திற்கு நான்கு ஏக்கர் (12 மா) நன்செய் நிலத்தையும் அதற்கான புன்செய் நிலத்தையும் பங்கிட்டு கொடுத்தார். இப்படி உருவாக்கப்பட்ட அக்கிரகாரமே 'உத்தம தானபுரம்' என்று அழைக்கப்படும் சிற்றூராக ஆனது என்று கூறுகிறார் உ.வே.சா. 

அவருடைய ஊர்க்கதை என்பது அந்த ஊரின் வரலாற்றை மட்டுமல்ல, வரலாற்றில் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் மலிவான வழிகளில் கூட நிலத்திலும் நிலத்தின் மீதான அதிகாரத்தில் வேரூன்றினார்கள் என்பதையும், பார்ப்பனர்களின் வழிகாட்டுதலில் எவ்வளவு மூடத்தனமாக தமிழ்நாட்டின் மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. 

(பிப்ரவரி 19: உ.வே.சா.பிறந்த நாள்)

சனி, 15 பிப்ரவரி, 2025

கோட்டையை பாதுகாத்த பறையர்கள்.




ஸ்டாலின் தி 

இந்தியாவை பங்கிட்டுக் கொள்வதற்கான போட்டியில் இங்கிலாந்தும், பிரான்ஸும் மோதிக்கொண்ட காலம் 18 ஆம் நூற்றாண்டுகாலம். அத்தகைய மோதலின் தொடர்ச்சியாக, 
கோரேகான் யுத்தத்திற்கு முன்பாக அறுபதாண்டுகளுக்கும் முன்பாகவே, அதாவது 1758 ஆம் ஆண்டு, சென்னை ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சு படை முற்றுகையிட்டது. பிரெஞ்சுப் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பிரிட்டன் படை, சென்னையின் பறையர் சமூகத் தலைவர்களை சந்தித்து துணைக் கோரியுள்ளது.  போரில் ஈடுபட்டு உயிர் சேதமடைந்தால், நிலமும் உதவித் தொகையும் அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

சேரி மக்கள் சென்னை கோட்டை மீதான தாக்குதலை தங்களின் மீதான தாக்குதலாகவே நினைத்து திரண்டனர். அதற்கு காரணம் அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள் என்பதே ஆகும். ஆங்கிலேயர்கள் கூட 1911வரையிலும்,  சென்னையை பறையர் நகரம், கறுப்பர் நகரம் என்றே  அழைத்து வந்தனர். அன்றைக்கு சுமார் 1400 சேரிகள் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, கோட்டையைக் காப்பதே சேரிகளையும் காப்பதற்காக வழியாகும் என்பதால் பிரிட்டன் படைக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டனர்.இவ்வாறு, பறையர்கள் திரட்சியாகத் திரண்டு, பிரிட்டன் படைக்கு துணை நின்றார்கள். பீரங்கிகள் உள்ளிட்ட  ஆயுத பலமிக்க பிரெஞ்சுப் படையோடு தீரமாக மோதினார்கள் சேரி வீரர்கள். போரில் பல நூறு சேரி வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஆனாலும், யுத்தத்தில் வென்று, பிரெஞ்சுப்படையை சென்னையை விட்டே விரட்டியடித்து, கோட்டையையும் சென்னையையும் மீட்டார்கள்.  இந்திய மண்ணில் பிரிட்டிஷ் வலுவாக காலூன்ற வகைச் செய்துகொடுத்தவர்கள் அந்த பறை வீரர்கள்தான். பறையர்களின் வீரம் கொண்டு கோட்டையில் அமர்ந்த பிரிட்டிஷ் அரசு, வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, வீரத்தைப் பறைசாற்றவுமில்லை. 

இந்த வீரம் செறிந்த நாள் பிப்ரவரி 16 ஆம் தேதியாகும்.

குடைசாய்ந்த வண்டிக் கதை.



ஸ்டாலின் தி


மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் மு.க.ஸ்டாலின் நடித்து 1987 இல் வெளிவந்த திரைப்படம் 'ஒரே ரத்தம்.' ஸ்டாலின் இதில் தலித் சமூகத்து இளைஞராக நடித்திருப்பார். அவருடைய அறிமுக காட்சியில், கல்வி கற்றறிந்த அவர் தமது கிராமத்திற்கு வருவார். அப்போது அவரின் நடை, உடைய, மொழியை வைத்து அவரை உயர் சாதிக்காரராக கருதி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொள்வார் சூத்திர சாதியைச் சார்ந்த பாத்திரத்தில் நடிக்கும் ராதாரவி. பேச்சுவாக்கில் ஸ்டாலின் தானொரு 'தாழ்த்தப்பட்டவர்' என்று கூறுவதைத் தொடர்ந்து அவரை கீழே இறங்கச் சொல்லுவார் ராதாரவி. ஸ்டாலின் மறுப்பார். சாதிவெறி முற்றிப்போய் வண்டியை குடைசாய்த்து ஸ்டாலினை விழச்செய்வார் ராதாரவி; கீழே வீழ்ந்து காயப்படுவார் ஸ்டாலின். 

இத்தகையக் காட்சி இந்திய சாதியக் கிராமத்தில் எங்கும் காணக்கிடைப்பதுதான். ஆனால், இத்திரைப்படத்தில் வந்த இந்தக் காட்சி அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதையாடலில் இருந்தே உருவாக்கப்பட்டிருப்பதை எளிதாக யூகித்துவிட முடியும். நாம் இதை முன்வைத்து சுட்டிக்காட்ட வந்தது வேறு. அதாவது, அண்ணலின் வாழ்க்கையில இந்த வண்டி குடை சாய்த்த கொடுமை நடந்ததா? அவர் அதனால் படுகாயம்பட்டாரா? 

அண்ணலின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகளை கலந்து உருவாக்கப்பட்டதுதான் இந்த வண்டி குடைசாய்க்கப்பட்டக் கதை என்பதே உண்மை. அந்த இரண்டு நிகழ்வுகளை அண்ணல் தமது 'ஒரு விசாவுக்கு காத்திருத்தல்' குறிப்புகளில் குறிப்பிட்டுமிருக்கிறார். 

நிகழ்வு 1:
   
அண்ணல் அம்பேத்கர் பள்ளி சிறுவனாக இருந்த போது இது நடந்தது. கோரேகானில் பணியாற்றி வந்தார் அண்ணலின் தந்தை ராம்ஜி சக்பால் அம்பேத்கர். அவரைக் காணுவதற்காக தம்முடைய அண்ணன் மற்றும் அத்தை மகன்கள்(எல்லோருமே சிறுவர்கள்தான்.) பயணப்படுகிறார்கள். அப்போது ரயில் நிலையத்தில் வந்திறங்கிய இச்சிறுவர்களை அழைத்துவர தந்தையும் வரவில்லை அவர் அனுப்பி வைப்பதாக கடிதத்தில் கூறியிருந்த பணியாளரும் வரவில்லை. ரயில் நிலைய வளாகத்தில் இருந்த மாட்டுவண்டியில் போகாலாம் என்றால் சிறுவர்கள் மகர்கள் என்பது தெரிந்து வண்டியோட்டிகள் வர மறுத்துவிட்டார்கள். சிறுவர்கள் படும் அவதியை பார்த்து மனம் இளகிய ரயில் நிலைய அதிகாரி மாட்டுவண்டிக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக, இருமடங்கு கட்டணம் தரவேண்டும் என்றும், வண்டியை சிறுவர்களே ஓட்டவேண்டும், வண்டிக்காரர் நடந்தே வருவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறே பயணம் புறப்பட்டது. ஆனால், பல மைல் தூரத்திற்கு பிறகு(தாங்கமுடியாத கால்வலி வந்திருக்கலாம்!), வண்டிக்காரன் வண்டியில் ஏறிக்கொண்டு வண்டியோட்டினான். பல சிரமங்களைக் கடந்து, மறுநாள் காலை பதினோரு மணியளவில் ராம்ஜி சக்பால் அம்பேத்கரை அடைந்தனர். அந்த இரவின் துயரத்தையும் சாதியின் வன்மத்தையும் இந்த நிகழ்வில் அண்ணல் விவரித்திருப்பார். இந்த நிகழ்வில் அண்ணலை வண்டிக்காரன் குடைசாய்த்து தள்ளவில்லை என்பது தெரிகிறது.

நிகழ்வு 2: 

1929 ஆம் ஆண்டு பம்பாய் அரசு தலித்துகளின் மீதான வன்கொடுமைகள், புறக்கணிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய ஓர் குழுவை அமைத்தது. அணணல் அம்பேத்கர் அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு பிரித்தளிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் விசாரணைகளை நடத்தச் சென்றார். அப்படி போகும் நாளொன்றில், வழியே ஓரிடத்தில் அவரை தங்களுடைய சேரியில் ஓர் நாள் தங்க வேண்டுமென்று மக்கள் அண்ணலிடம் கோரிக்கை வைத்தனர். முதலில் பயணத்தில் இடையில் தங்கும் திட்டம் அவருக்கு இல்லை என்றாலும், மக்களின் அன்பை மதித்து தங்குவதாக கூறிவிட்டு தான் விசாரிக்க வந்த கிராமத்திற்கு சென்றார். விசாரணையை முடித்துவிட்டு மீண்டும் தான் தங்கவிருந்த சாலிஸ்காவோன் மகார்வாடா சேரிக்கு செல்லுவதற்காக சாலிஸ்காவோன் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார் அண்ணல். அருகேயிருந்த மகார் வாடாவுக்கு அவரை அழைத்துச் செல்ல ஒரு ஒற்றைக் குதிரைவண்டி வந்தது. அண்ணல் அதில் ஏறிக்கொள்ள திரளாக வந்திருந்த மற்றவர்கள் குறுக்கே வயல் வழியாக புறப்பட்டனர். அண்ணலோடு புறப்பட்ட குதிரை வண்டி கொஞ்ச தூரத்திலேயே ஒரு மோட்டார் வாகனத்தில் மோதும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டு அண்ணல் பெருமூச்சுவிட்டார். வண்டியோட்டியின் மீதும் கோவம்கொண்டார். ஆனால் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அடுத்ததாக குறுக்கே ஒரு வாய்க்கால் பாலம் வந்தது. அதில் தடுப்புச் சுவரில்லை, இடையிடையே குத்துக் கற்கள் மட்டுமே இருந்தன. பாலத்திலிருந்து திரும்பும் நிலையில் வண்டியின் சக்கரம் குத்துக்கல்லொன்றில் மோதவும் வண்டி குடை சாய்ந்து, அண்ணல் தூக்கியெறிப்பட்டார்; அண்ணலின் காலெலும்பும் முறிந்தது. 

விபத்துக்கு காரணம் பிறகுதான் அண்ணலுக்கு தெரியவந்தது. அதாவது அந்த வண்டியை ஓட்டிவந்தவர் மகார்வாடாவைச் சார்ந்த ஓர் தலித். வண்டியோ ஜாதி இந்துவுடையது. ரயில் நிலைய வளாகத்தில் இருந்த வண்டிக்காரர்கள் "மகாரான அம்பேத்கருக்கு நாங்கள் வண்டி ஓட்ட மாட்டோம். வாடகைக்கு வண்டி மட்டும் தருகிறோம், நீங்களே ஓட்டிக்கொள்ளுங்கள்" என்று கூறியதால், முன் அனுபவமற்ற தலித் ஒருவரே வண்டியோட்டும் நிலை வந்தது. அதுவே விபத்திற்கு காரணம். சிறுவனாக இருந்த போதும் சரி, ஒரு மாநில அரசின் பிரதிநிதியாக இருந்தபோதும் சரி அண்ணலுக்கு நேர்ந்த இரண்டு நிகழ்வுகளுமே ஒரேத் தன்மையுடைய, ஒரேக் காரணமுடையவைதான். காலங்கள் மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதைக் கூறும் நிகழ்வுகள் அவை. அவைதான் அண்ணலின் வாழ்வில் நடந்ததாக அவரால் கூறப்படும் முக்கியத்துவமான வண்டிப்பயண நிகழ்வுகளாகும். அவற்றில், அவரை எங்கும் வண்டியிலிருந்து யாரும் கீழேத் தள்ளவில்லை.  

அண்மையகாலத்தில் வாழ்ந்த ஓர் அதிமுக்கிய தலைவரின் வாழ்க்கையிலும் கூட இப்படி புனைவுகளை நிகழ்த்திவிட முடியும் என்பதற்கு அண்ணலை குடைசாய்த்த கதையின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த புனைவு ஓர் நல்ல நோக்கத்திற்கானது என்றும் கூட யாரேனும் வாதாடலாம். அதாவது, வண்டியிலிருந்து அண்ணல் தள்ளப்பட்டார் என்கிற புனைவு சாதியின் கோரத்தை காட்ட உதவும்தானே என்று கேட்கலாம். ஆனால், அந்த புனைவைவிட உண்மையான நிகழ்வில்தான் அதிகம் நாம் பேசமுடியும். புனைவில் வண்டியோட்டியை ஓர் அறியாமையான ஆளாகவும் காட்ட முடியும். ஆனால், அண்ணலின் பதிவில் உள்ள அசல் வடிவமோ, அந்த வண்டியோட்டிகள் விவரமுள்ள சாதியவாதிகளாக உள்ளதைக் காட்டுகின்றன. ஆம். அந்த இரண்டு வண்டிக்காரரகளும் அப்பாவிகள் அல்லர். சாதியை காரணமாக வைத்து இருமடங்கு கட்டணத்தை பெற்றுக்கொள்கிறான் ஒருவன்; கட்டணத்தை பெற்றுக்கொண்டு வண்டியை மட்டும் அனுப்பி பிழைக்கிறான் இன்னொருவன். முதல் நிகழ்வில் வரும் வண்டியோட்டி தன் உடல் நோகும் போது நேக்காக தமது வாக்குறுதியை மீறி வண்டியில் ஏறிக்கொள்கிறான். அந்தளவுக்கு அவர்கள் விவரமானவர்கள், சுரண்டல்வாதிகள் என்பதைத்தான் உண்மையான நிகழ்களின் விவரிப்புகள் கூறுகின்றன. புனைவைவிட அதுவே வலிமையானது என்பதைக் கூறவே இதுக்குறித்து இங்கே பேசுகிறோம்.


(16/2/2022- முகநூலில் எழுதியது?

வெள்ளி, 24 ஜனவரி, 2025

புதுப்பிக்கப்படும் பழைய பொய்.

ஸ்டாலின் தி.

புதுப்பிக்கப்பட்ட 'தாளமுத்து-நடராசன் நினைவிடம்' இன்று (25/1/2025) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது. மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனைப் பெற்ற போராளி நடராசன் அவர்கள் 1939 ஆம் ஆண்டு ஜனவரி 15 இல் உயிரிழந்தார்‌‌. அதே மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனையில் இருந்த மற்றொரு போராளி தாளமுத்து அவர்கள் 1939 மார்ச் 11 இல் உயிரிழந்தார். அதாவது, நடராசன் உயிரிழந்த பிறகு, சுமார் 50 நாள்களுக்கும் பின்னரே தாளமுத்து அவர்கள் உயிரிழந்திருக்கிறார். ஆனால், இவர்களைப் பற்றிய அரசு அறிவுப்புகளிலும் , பெயர் சூட்டல்களிலும் எப்போதும் உயிர்நீத்த முதல் போராளி நடராசன் பெயர் இரண்டாம் இடத்திலேயே வைக்கப்படுகிறது. நடராசன் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்; தாளமுத்து சாதி இந்து சமூகத்தில் பிறந்தவர் என்பதுதான் இங்கே குறிப்பிடத் தக்கது. 

தாளமுத்துவின் தியாகத்தை நாம் மறுக்கவில்லை. ஆனால், மொழிப்போராட்டத்தில் முதல் களப்பலி ஆன பட்டியல் சமூகத்தைச் சார்ந்த நடராசனின் பெயர் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவதில் உள்ள 'சாதிய சூத்திர'த்தையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம்‌. 

குறிப்பாக திமுக இந்த பெயர் வரிசையில் அறத்தைக் கடைப்பிடிக்க விரும்புவதாக தெரியவில்லை. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி காலத்திலிருந்தே இந்த பிடிவாதம் அவர்களிடம் தொடர்கிறது.1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் 'நியாயத்தராசு.' இந்த படத்தில் நாயக கதாபாத்திரத்தின் பெயர் தாளமுத்து. தம்முடைய பெயரை நாயகியிடம் அறிமுகம் செய்யும் போது, 'மொழிப்போராட்டத்தில் முதல் முதலாக செத்துப்போன தியாகிப் பெயரை எனக்கு வைத்திருக்கிறார்கள் ' என்பார் நாயகன். இதன் மூலம், முதல் களப்பலியாளர் நடராசன் பெயர் வெகுமக்களுக்கு அறிமுகம் ஆகாமல் ஆக்கப்பட்டது. இப்படத்திற்கு திரைக்கதை- வசனம் எழுதியவர் மு.கருணாநிதி அவர்கள். படத்தின் துவக்கத்தில் தோன்றி பேசும் அவர், 'எனக்கு மனநிறைவை தந்த படம் இது' என்று குறிப்பிடுவார். அவர் மனம் நிறைந்து எழுதிய திரைப்படம், ஒரு வரலாற்று பிழையை அங்கீகரிக்கும் காட்சியை மட்டும் அல்லாமல், தலித் தியாகத்தை மறுக்கும், மறைக்கும் தன்மையையும் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சிதான் இன்றளவும் தொடர்கிறது. 

எனவே, இதெல்லாம் எதோ கவனக்குறைவாக நடைபெறவில்லை. கவனமாகவே நடத்தப்படும் பாரபட்சம் இது. இந்த பாரபட்சம் ஒருவகையான தீண்டாமை என்பதுதான் உண்மையான சமூக நீதி பார்வையாக இருக்க முடியும். இதை ஏற்காமல், எத்தனை முறை நினைவு கட்டடங்களை புதுப்பித்தாலும், அது புதுப்பிக்கப்பட்ட பழைய பொய்யின் சாட்சியாகவே இருக்கும்.

கனிம வள கொள்ளையை அங்கீகரிக்கிறது திமுக அரசு.

ஸ்டாலின் தி  சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்ட செய்தி  தற்போது வெளியே வந்திருக்கிற...