ஞாயிறு, 22 ஜூன், 2025

மயில் வாகனம் என்னும் பௌத்த தேர்.



ஸ்டாலின் தி 

முருகனுக்கு மயில் வாகனன் என்றொரு சிறப்புப் பெயருமுண்டு. இந்து புராணங்களில் கூறப்படுவதைப் போல மயில் என்னும் பறவையின் மீது அமர்ந்து உலா வந்ததால் முருகனுக்கு அந்த பெயர் வரவில்லை. அது ஒரு மூடநம்பிக்கை கதை. மயில் பறவை இனமாக இருப்பினும் வெகு தூரத்திற்கு பறக்க முடியாது. அதிகபட்சமாக சுமார் 300 மீட்டர் தூரத்திற்குதான் அதுவால் பறக்க முடியும்.நேரத்தை கணக்கிட்டால் சுமார் 30 நொடிகள்தான் தொடர்ந்து பறக்க முடியும். அதன் உடல் வாகு அப்படியானது . அப்படி இருக்க, ஒரு மனிதரை சுமந்து கொண்டு உலகையே சுற்றி வந்தது என்பது கட்டுக்கதை. அப்படி இருக்கும் போது, முருகனுக்கு மயில் வாகனன் என பெயர் வர காரணம் என்னவாக இருக்கும்.  

மயில் வடிவில் செய்யப்பட்ட தேரில் முருகன் வலம் வந்ததால் மயில் வாகனன் என்று பெயர் வந்தது என்பதுதான் நேரடியான பதில். மயில் வடிவில் செய்யப்பட்ட தேர்களில் பயணிப்பது அன்றைய பௌத்த அரசர்களின் வழக்கமாக இருந்தது. பௌத்த மன்னர்களுக்காக மயில் வடிவ தேர்களை செய்வதற்காக அரக்கு, மெழுகு, நூல் போன்றவற்றை சரியாக கையாளும் முறை மயில் சூத்திரம் என்று கூறப்பட்டது. அச்சூத்திரத்தின்படி செய்யப்பட்ட மயில் வாகனத்தை 'மயில் சூத்திர வாகனம்' என்று அழைத்தனர். கச்சநந்தன் என்னும் பௌத்த அரசனும்கூட மயில் சூத்திர வாகனம் கொண்டிருந்தார் என்று சீவக சிந்தாமணியில் கூறியிருப்பதை பண்டிதர் அயோத்திதாசர் சான்றாகக் கூறியிருக்கிறார். மகாமயூரி என்றொரு பெண் போதிசத்வர் பௌத்த வழிபாட்டில் இடம் வகிக்கிறார். குறிப்பாக வஜ்ரயான பௌத்தம் பரவியுள்ள திபெத், சீனா, ஜப்பான் நாடுகளில் ஞானம், தூய்மை, சாந்தம் ஆகியவற்றின் அடையாளமாக மகா மயூரி வணங்கப்படுகிறார். அவ்வாறு வணங்கப்படும் அவருடைய தோற்றமானது, முருகனைப் போலவே மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் வகையில் காணப்படுகிறது. மயூரி என்னும் பெயர் பாலி மொழியின் மயூரா என்பதில் இருந்து வந்த சொல்லாகும். 

              போதிசத்வா மகாமயூரி‌
  
பௌத்தத்தை வளர்த்த அரச மரபுகளில் மௌரிய மரபு முக்கியமானது. அசோகர் இம்மரபில் வந்தவர்தான். மௌரியா என்னும் சொல்லின் வேர்ச் சொல்லாக இருப்பது பாலி மொழியின் மயூரா என்னும் சொல்தான். மௌரியா என்னும் சொல் மயூரா என்னும் சொல்லில் இருந்து மரபுச் சொல்லாக (Totemic Symbol) வந்திருக்க வேண்டும் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ரொமீலா தாப்பர் தம்முடைய நூலில் (Ashoka and the Decline of the Mauryas) கூறுகிறார். மயூரி என்னும் பாலி மொழிச் சொல்லுக்கு மயில் என்று அர்த்தம். 

பௌத்த கதைகளில் பௌத்த அறவோர்களையும், ஞானம், அகிம்சை, தூய்மை போன்றவற்றையும் உருவகப் படுத்த மயில் உருவம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எனவேதான் பௌத்தர்கள் மயில் உருவத்தை முன்வைத்தார்கள். இந்தியாவின் தொன்மையான பௌத்த சான்றுகளிலும், விகாரைகளிலும் மட்டுமல்லாமல், பௌத்தம் பரவிய பிற நாடுகளிலும் பௌத்த சின்னங்களிலுப் இன்றளவும் மயில் உருவத்தைக் காணமுடியும். அப்படியாகத்தான், மயில் உருவில் பௌத்த அரசர்களுக்கு தேர் செய்யப்பட்டது. அப்படியான மயில் உருவ வாகனத்தில் பயணித்ததால்தான் பௌத்த அரசர் முருகன் மயில் வாகனன் என்று அழைக்கப்பட்டார்.


சனி, 21 ஜூன், 2025

பௌத்த மன்னர் முருகன்.



ஸ்டாலின் தி 

முருகன் பற்றிய வேறுபட்ட கதைக் கூறலை நூற்றாண்டுகளுக்குப் முன்னரே முன்வைத்திருப்பவர் பண்டிதர் அயோத்தி தாசர். பண்டிதரின் கதையாடலில் முருகன் சிவனின் மைந்தனுமில்லை, அவதாரக் கடவுளுமில்லை, தமிழ் எனும் ஒரு மொழிக்கேயுரிய கடவுளுமல்ல. மாபெரும் தத்துவத்தை பின்பற்றி, மற்றவர்களுக்கும் அத்தத்துவத்தை‌‌ போதித்து, தன்னலத்தை முற்றிலும் துறந்து ஆண்டியாக (பிக்குவாக) ஆகி வாழ்ந்தவர் முருகன். அவர் பின்பற்றிய தத்துவம் தம்மம்; அதாவது, பௌத்தம்.

இன்றைக்கு பழனி என்று அழைக்கப்படும் அன்றைய 'பூங்குறிஞ்சி' மலையை ஆண்டு வந்த பௌத்த அரசனான மருகனுக்கும், அவருடைய மனைவியான ராணி கங்கையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முருகன். முருகனின் மனைவி தெய்வானை. மயில் உருவில் செய்யப்பட்ட வாகனத்தில் வலம் வந்த முருகன், புத்த பள்ளியில் பயின்று, அறவாழ்வை மேற்கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றான். முருகன் புத்த தம்மத்தில் பயணித்து, வாழ்க்கையை கடந்து சென்ற பௌத்த சிரமணர் ஆவார். சிரமணன் என்பதே சரவணன் என்று ஆனது. இதுவே பண்டிதரின் பார்வையிலான முருகனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமான வடிவமாகும். அதாவது, முருகன் என்பவர் பௌத்த மன்னர், பௌத்த வள்ளல். அவர் தம்ம நெறியில் வாழ்ந்து, ஞான மார்க்கத்தை மக்களுக்கு போதித்தமையால் போற்றுதலுக்குரியவரானார், வழிபடப்பட்டார்.

'வைசாக கால' வழிபாடு பழனியில் நடக்கிறது. அது ஒரு பௌத்த வழிபாடு என்பது வரலாறு கூறும் செய்தி. பழனிக்கு சென்று மொட்டை போடும் வழக்கத்தில், புத்த தீட்சை சடங்கு கலந்திருப்பதையும் இத்தோடு இணைத்துக் காண வேண்டும். முருகனின் இன்னொரு பெயர், ஆறுமுகம். முருகனின் மெய் (உடல்) முகத்தோடு, பஞ்ச சீலத்தை பின்பற்றிய ஐங்குணங்களையும்‌‌ முகமாகக்‌ கொண்டதால்தான் அவர் ஆறுமுகம். பழினியின் பிரசாதம் பஞ்சாமிர்தம். வாழ்விவ் அமிர்தமாய் இனிப்பகு பஞ்ச சீலங்ககள்தான். அதுவே பஞ்சாமிர்தம். பஞ்ச சீலத்தை ஏற்காத வேஷ பிராமணியம் பஞ்சாமிர்தத்தையும் திரித்தது. 

முருகனோடு அடையாளப் படுத்தப்படுபவற்றில், 'வேல்' முக்கியமானது. வேல் முருகன் என்றும் அவரை பார்ப்பனிய கதையாடல் கூறுவதுண்டு. ஆனால், முருகனுக்கு சரியாகப் பொருந்தக் கூடிய அடையாளம் வேல் என்பதைவிடவும் வேள் என்பதுதான். பௌத்தப் பார்வையிலும் அதுதான் சரி.
முருகன் பௌத்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவன். அவனின் அரண்பணியை அடையாளப்படுத்த 'வேல்' தேவைப்படுகிறதுதான். மேலும் சூரசம்காரம் என்பது, 'சுரா பானமருந்திய' சுரர்களுடனான, புத்த அசுரனான(சுரா×அசுரா)முருகன் மோதியதையேக் குறிக்கிறது. இதன்படி சம்கார போர் வீரனாக அடையாளப்படுத்தவும் வேல் அடையாளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதேவேளை, முருகனைப் போற்றும் பெயராக 'வேள் முருகன்' என்பதுவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

வேள் என்றால் கொடை என்று அர்த்தம். கொடை வள்ளல்கள் வேளிர் எனப்பட்டனர். கொடைக்குப் பெயர் பெற்ற மன்னர்களின் பெயருக்கு முன் 'வேள்' என்று இடுவது சங்க இலக்கியங்களிலும் வழக்கமாக இருந்துள்ளது. பாரியை 'வேள்பாரி' என்று கூறியிருக்கிறார் தொல்காலப் புலவர் கபிலர். புத்த தன்மத்தைக் கடைப்பிடித்ததால் கொடை வள்ளலாகவும் இருந்த முருகன் 'வேள் முருகன்' என்றும் அழைக்கப்பட்டார். வேளன் என்பது கொடையாளியை அடையாளப்படுத்துவதால், முருகனுக்கு வேலன் என்பதைவிட, வேளன் என்பதே சரியான அடையாளத்தைக் கொடுக்கிறது.

சரி.முருகன் கதையாடலில் வருகின்ற வள்ளி என்பவர் யார்? 
முருகனின் இரண்டாவது மனைவியே வள்ளி என்பார்கள். இதுவும் திரிபுதான். வள்ளல் என்பதன் பெண்பால் தான் வள்ளி என்பதாகும். வள்ளியம்மை என்றால் தயாளக் குணம் கொண்டப் பெண் என்று பொருள். முருகன் 'வேளன்' என அழைக்கப்பட்டதால், முருகனின் மனைவியான தெய்வானை 'வள்ளி' என்று அழைக்கப்பட்டார். பிற்கால பௌத்த விரோத திரிபுவாதக் கும்பல், 'ரெண்டு கல்யாணக்'கதையை இட்டுக் கட்டிவிட்டது.

முருகனுக்கு வாழ்த்துப் பாட அரோகரா என்பது முழக்கமாக உள்ளது. இதுவும் கூட, பௌத்த சங்க அறவோர் என்பதை குறிக்கும் அறகரர் என்பதிலிருந்தே வந்தது என்பது உண்மை.‌

பழனிக்கு காவடி துக்கி செல்வது இன்றைக்கு நேர்த்திக் கடன். கடன் என்றால் அக்காலத்தில் கடமை என்றும் பொருள். பழனி மலையில் சிரமணர்(சரவண) பொய்கையிலும் பூங்குறிஞ்சி விகாரிலும் பள்ளி நடத்தி வந்த பௌத்த அறவோர்களுக்கு தானப் பொருட்களை தூக்கி சென்றதே காவடி தூக்கிச் செல்லும் வழக்கம். இதையே 'அன்னக்காவடி' (சோற்றுக்கு காவடி தூக்குதல்) என்றும் வேஷ பிராமணியர்கள் கேலி பேசினார்கள்.


இப்படியாக, 
காலம் காலமாக பௌத்த அடையாளங்கள் மீது பூசப்பட்ட போலி அடையாளங்கள் இன்னமும் முன்வைக்கப்படுகின்றன. அதன் மூலம் வேஷ பிராமணிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் தொடர்கிறது. அவற்றை முறியடித்து, உள் மெய் எண்ணும் உண்மையை வெளிக்கொண்டு வருவது நல்லோரின் கடமையாகும்.

வெள்ளி, 2 மே, 2025

கனிம வள கொள்ளையை அங்கீகரிக்கிறது திமுக அரசு.


ஸ்டாலின் தி 

சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்ட செய்தி  தற்போது வெளியே வந்திருக்கிறது. 2023 மே மாதத்திலேயே பாதுகாப்பை நீக்கியிருக்கிறது திமுக அரசு. 'பாதுகாப்பு இல்லாத சூழலில் தம்மால் கிராணைட் முறைகேடு வழக்கில் சாட்சி கூற வர முடியாது' என்று மதுரை கனிம வள சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கு சகாயம் கடிதம் எழுதியதன் மூலமே தற்போது இந்த உண்மை வெளி வந்திருக்கிறது. சகாயம் அவர்கள் 2012 வாக்கில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது அங்கே நிலவிய கிராணைட்  முறைகேடுகளை ஜெயலலிதா தலைமையிலான அன்றைய அதிமுக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அடுத்த நாளே அவர் கோ-ஆப்டெக்ஸ் துறைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு, டிராபிக் ராமசாமி தொடுத்த பொது நல வழக்கில் 'கனிம முறைகேடுகளை விசாரணை செய்யும் அதிகாரியாக' சகாயத்தை நியமித்தது உயர் நீதிமன்றம். சகாயம் உயிருக்கு கனிம கொள்ளையர்களால் ஆபத்து வரலாம் என்று சகாயம் சார்பில் கூறப்பட்டதால், 2014 அக்டோபரில் சகாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி,  'சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலரை  பாதுகாப்புக்காக சென்னை காவல் ஆணையர் நியமிக்க வேண்டும். சென்னையை விட்டு வெளியே பயணம் செல்லும்போது, காவல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு  சுற்றுப்பயண விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்' என்று காவல்துறை இயக்குநர் பாதுகாப்பு தொடர்புடைய காவல்துறையினருக்க  கடிதம் எழுதினார். 2023 மே மாதம் வரை இந்த பாதுகாப்பு இருந்து வந்துள்ளது. இதற்கிடையில், கனிம முறைகேடுகளை விசாரணை செய்து, சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய முறைகேடுகளையும், குவாரியில் நடத்தப்பட்ட நரபலி உள்ளிட்ட குற்றங்களையும் கண்டறிந்து அறிக்கையும் அளித்துள்ளார் சகாயம். அந்த விசாரணை காலத்தில் விசாரணையை தடுக்கும் வகையில் அன்றைய அதிமுக ஆட்சியாளர்களாலும் அரசு அதிகாரிகளாலும் கடும் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டார் சகாயம். அன்றைக்கு சகாயத்திற்கு ஆதரவாக பேசியது திமுக. ஆனால், இன்றைக்கு அதே திமுகவின் ஆட்சிதான் சகாயம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளது. தம்முடைய பாதுகாப்பை திரும்ப பெற்றது குறித்து மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலருக்கும் பலமுறை கடிதம் எழுதிய பிறகு, காவல்துறை இயக்குநர் அளித்த பதிலில், 'உங்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதால் பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளோம்' என்று கூறப்பட்டிருக்கிறது என்கிறார் சகாயம். எதன் அடிப்படையில் ஆபத்தில்லை என்று திமுக அரசும் அதன் காவல்துறையும் கூறுகிறது என்று தெரியவில்லை. அப்படியான பாதுகாப்பு சூழல் நிலவுகிறது என்று எவராலும் கூறமுடியாது என்பதே நிலவரமாக இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு  கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்கள் அங்கே நடந்த மணல் கொள்ளையை எதிர்த்ததால், கடந்த 2023 ஏப்ரல் 25 ஆம் தேதியன்று, அவரை அலுவலகத்தில் வைத்தே சராமாரியாக  வெட்டிக்கொன்றனர் மணல் கொள்ளையர்கள். அந்த கொலை நடத்தப்பட்ட அடுத்த  மாதமே 'சகாயத்திற்கு கனிம கொள்ளையர்களால் ஆபத்து இல்லை' என்று பாதுகாப்பை திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு. அதன்பிறகு, புதுக்கோட்டை ஜகுபர் அலி கனிமக் கொள்ளையர்களால் கொடூரமாக, கனரக வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். ஆனாலும், கனிம கொள்ளையர்களால் ஆபத்து இல்லை என்பதையே சகாயம் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசால் கூறப்பட்டுள்ளது. எனில், திமுக அரசு கனிம கொள்ளையர்களுக்கு சாதகமாக இயங்குகிறது என்கிற வாதம் வலிமை பெறுகிறது. இந்த விமர்சனம் சகாயம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றதால் மட்டுமல்ல, திமுக அரசின் தொடர் செயல்பாடுகளாலும் எழுகிறது. 

கடந்த 14.12.2022 அன்று தமிழ்நாடு சிறு கனிம சலுகைச் சட்டவிதிகள் 1959இல் (The Tamilnadu Minor Mineral Concession Rules) பிரிவு 36 உட்பிரிவு 1(A)வில் சட்டத்திருத்தம் செய்து ஓர் அரசாணையை வெளியிடப்பட்டது. 
இந்தச் சட்டத்திருத்தத்தின்படி காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவுக்குள் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டது. அதாவது, காப்புக் காடுகளில் இருந்து 1000 மீட்டடர்களுக்கு (1கி.மீ) குவாரிகள் அமைக்கப்படக் கூடாது என்பதை, காப்புக் காடுகளில் இருந்து 60 மீட்டர் தூரத்தில் குவாரி அமைக்கலாம் என்று திருத்தப்பட்டது.  இந்த சட்டத் திருத்தம் தொடர்பான விளக்க அறிக்கையில், 'பாதுகாக்கப்பட்ட காடுகள் என்பதன் கீழ் சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள் மட்டுமே வருமே தவிர, காப்புக்காடுகள் வராது என அமைச்சர் துரைமுருகன் விளக்கம் கொடுத்தார்.  மாஞ்சோலை தேயிலை தோட்டம் காப்புக் காட்டில் வருவதால் இனி அங்கே தேயிலைத் தொழிலாளர்களின் குடியிருக்கக்  கூடாது என்று இன்றைக்கு கூறும் திமுக அரசு, காப்புக் காட்டுக்கு மிக அருகிலேயே குவாரி அமைக்கலாம் என்று மூன்றாண்டுக்கும் முன்னரே சட்டத் திருத்தம் செய்துள்ளதை பார்க்கும் போது இந்த அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். 

புதுக்கோட்டை ஜகுபர் அலி படுகொலையையொட்டி  எழுந்த விமர்சனங்களைத்  தொடர்ந்து, 
'சுரங்க நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று' புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு தமிழக திமுக அரசு உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் பகுதியில் உள்ள  200 குவாரிகளில் மட்டுமே  ட்ரோன் மூலம் ஆய்வுகள் செய்யப்பட்டன. கணக்கெடுக்கப்பட்ட 200 குவாரிகளில், 36 குவாரிகள் சட்டத்தை மீறியது கண்டறியப்பட்டது. ஆண்டுக்கு 6 லட்சம் கன மீட்டர் கனிமங்களை மொத்தமாக பிரித்தெடுக்க உரிமம் பெற்று,  சட்டவிரோதமாக பத்து மடங்காக 63 லட்சம் கன மீட்டர் அளவுக்கு வெட்டியெடுக்கப்பட்டு கொள்ளை நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. இந்த விசாரணை மாநிலம் முழுக்க நடத்தப்பட்டால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று சமூக அக்கறையாளர்கள் கருதிய சமயத்தில்,  ஜகுபர் அலி கொலை வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டதாகக் கூறி குவாரி ஆய்வுப்  பணிகள் நிறுத்தப்பட்டன. 'இனிமேல் எந்தவொரு ஆய்வும் சிபி-சிஐடியின் தேவைகளின் அடிப்படையில் இருக்கும்' என்று ஆய்வில் ஆய்வை மேற்கொண்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் கூறப்பட்டதாக  செய்திகள் கூறியன.

கனிம வளத்துறையில் நடக்கும் கொடுமைகளை  மேலும் அதிகமாக்கும் வகையில்,  கடந்த மாதம்(2025 ஏப்ரல்), திமுக அரசு  குவாரி  குத்தகை கால திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் (2020), குவாரிகளின்  குத்தகை காலம் ஐந்தாண்டு என்பதை இரண்டு மடங்காக்கி  பத்தாண்டாக  உயர்த்தி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதே வழியில், குத்தகை காலத்தை  மும்மடங்காக உயர்த்தி, குத்தகை காலம் பத்தாண்டு என்பதை  முப்பது ஆண்டாக உயர்த்தி‌ திருத்தம் கொண்டு வந்துள்ளது திமுக அரசு. அதாவது,  புதியதாக குவாரி துவங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே நடத்துபவர்களுக்கு 25 ஆண்டுகள் வரை நீட்டிப்பு; 
10 ஏக்கர் குவாரி வைத்திருப்பவர்களுக்கு 20 வரை நீட்டிப்பு, 10 ஏக்கருக்கு மேல் குவாரி வைத்திருப்பவர்களுக்கு 30 ஆண்டு வரை நீட்டிப்பு என்கிறது இந்த புதிய திருத்தம்.  குவாரி குத்தகை ஆண்டை குறைக்க வேண்டும், அரசே குவாரிகளை நேரடியாக நடத்த வேண்டும் என்றெல்லாம் மக்களும் பல்வேறு இயக்கங்களும் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்க, குவாரி முதலாளிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, கனிமக் கொள்ளைக்கான  இந்த  திருத்தத்தைக்   கொண்டு வந்துள்ளது திமுக அரசு. இப்படியான தொடர் குவாரி முதலாளிகளின் நலனுக்கான அரசாக தொடர்ந்து இயங்கி வரும் அரசு கொடுக்கும் ஆதரவும் ஆட்சியாளர்கள் கொடுக்கும் துணிவும்தான் கனிமக் கொள்ளையர்களின் முறைகேடுகளையும் குற்றங்களையும் வளர்த்து வருகின்றன. இதன் பின்னணியில்தான் கனிம வளத்தை பாதுகாக்க முற்படுவார்கள் கொல்லப்படுவதையும்   பாதுகாப்பு அற்றச்‌   சூழலில் அவர்கள் தள்ளபடுவதையும்  நாம் புரிந்துகொள்ள வேண்டும். கனிம கொள்ளைக்கான பாதையை பாதுக்கும் திமுக அரசு, கனிம கொள்ளைக்கெதிரானவர்களை பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளுகிறது என்பதை  கனிம பாதுகாப்பு சிந்தனை உடையவர்களுக்கான  கொலை மிரட்டல் என்றே நம்மால் கருத முடிகிறது.

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

காலனி என்னும் சொல் நீக்கமும் சாதியின் இருப்பும்.‌

ஸ்டாலின் தி

'அரசு ஆவணங்கள் மற்றும் பொது புழக்கத்தில் இருந்து காலனி என்னும் சொல் நீக்கப்படும் ' என்று இன்றைய(29/4/2025) சட்ட மன்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 'தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் இனி நீக்கப்படும்' என்று அந்த அறிவிப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

காலனி என்னும் சொல் இலத்தீன் மொழியின் 'கொலெர்(Colere)'என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. Colere என்பதற்கு இலத்தினில் வேளாண்மை நடப்பதை குறித்தது. இதிலிருந்து கொலனஸ் (Colonus) என்னும் சொல் வந்தது. அது வேளாணமையில் ஈடுபட்டவர்களை குறித்தது. வேளாண் (Colere) பகுதியில் வேளாண் சார்ந்த மக்களின் (Colonus) அடங்கிய வசிப்பிடத்திற்கும் வேளாண்மக்கள் குடியேற்றப்பட்ட இடங்களுக்கும் 'கலொனியா Colonia ' என்று பெயர் வந்தது. இந்த இலத்தின் சொல் பிரெஞ்ச் மொழியில் 'கொலனீ(Colonie)' என்று மாற்றமடைந்து ,ஆங்கிலத்தில் காலனி(Colony)என்று வழங்கப்பட்டது. பிறகு, ஆங்கிலேயர்கள் தங்களுடைய குடியேற்ற ஆட்சியை நிறுவிய நாடுகளில் காலனி என்கிற சொல்லும் குடியேறியது. (தமிழில் கழனி என்பது வேளாண் பகுதியை குறிக்கும் சொல். காலனியும் அவ்விடத்திலிருந்தே வந்துள்ளமை யால், கழனி | காலனி என்பதைக் குறித்து தனியே விசாரணை செய்யலாம்.)

இந்தியாவில், அதிகாரத்திற்காக குடியேறிய(காலனிய) ஆங்கிலேயர்களின் அதிகாரிகளின் வசிப்பிடங்களுக்கு காலனி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. அது பிற தொழிலாளர்கள் குடியிருப்பை குறிக்கும் சொல்லாக நகரப்பகுதிகளில் பயன்பாட்டுக்கு வந்தது. இறுதியாக, கிராமப்புற சேகரிக்கும் வந்தது. இலத்தீனில் நிலத்தில் உழைத்த மக்களின் குடியிருப்புக்கு கூறப்பட்ட காலனி அடையாளம், இந்திய நிலத்தில் உழைத்த மக்களின் அடையாளமாக ஆனது. காலனிக்காரர்கள் ஆனார்கள் சேரி மக்கள். தமிழ் நிலத்தில் சேரி என்னும் சொல் காலனி என்னும் சொல்லுக்கு இணையானச் சொல் என்பதாலும், 'பறைத்தெரு, சக்கிலித் தெரு, பள்ளத்தெரு' என்று இருந்த இழிவான சொல்லாடலை நீக்க தலித்துகளே காலனி என்னும் சொல்லை தேர்வு செய்தனர். ஆனாலும், ஊர்த்தெரு சாதியினரால் தீண்டாமையை அடையாளப்படுத்தும் சொல்லாகவே காலனி ஆக்கப்பட்டது. ஊர்-சேரி என்னும் பூர்வ மொழிச் சுட்டுதலில் காலனி என்னும் அயல் மொழிச் சொல்லை தீண்டப்படாத சொல்லாக வைத்தது சாதிய சமூகம்‌. ரயில்வே காலனி, போலீஸ் காலனி என்றெல்லாம் அரசு குடியிருப்புகள் அழைக்கப்பட்டாலும், காலனி என்றால் அது சேரி மற்றும் சேரி மக்களின் அடையாளமாகவே புரிந்து கொள்ளப்பட்டது. 'ஊர் மக்களுக்கும்-காலனி மக்களுக்கும் மோதல்' என்று அச்சு ஊடகங்களும் கூட காலனி என்பதை தலித்-சேரி- அடையாளமாகவே அமைத்தது. தமிழ்த் திரைப்படங்கள் 'அசுத்தமானவர்கள், கேலிக்குரியவர்கள், குற்றவாளிகள் போன்றோரை அடையாளப்படுத்த காலனி என்பதை பயன்படுத்தியது.
தலித் மக்களுக்கு அரசால் அளிக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் கூட காலனி வீடுகள் என்றே கூறப்பட்டன. தலித் மக்களின் பழைய மனைகள், புதிய மனைகள் முறையெ பழைய காலனி, புதிய காலனி என்றே இன்றும் கூறப்படுகின்றன. இன்றைக்கு தமிழ்நாடு முதல்வர் தீண்டாமை அடையாளமாக காலனி என்னும் சொல் இருப்பதை சட்ட மன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன் வேர்ச்சொல், வழிச்சொல் வழங்கும் பொருள் எதுவாக இருந்தாலும், இங்கே அது தீண்டாமையையே குறிக்கிறது. கடந்த காலங்களில் தலித் செயற்பாட்டாளர்கள் இதை கவனத்தில் எடுத்துள்ளனர். காலனி என்று வந்த இடங்களை 'நகர்' என்று திருத்தியிருக்கிறார்கள். புதிய காலனிகள் அம்பேத்கர் நகர்களாக உருவெடுத்தன. 90 களில் எழுந்த தலித் அரசியல் எழுச்சி பண்டைய சொல்லான சேரியையும் முன்வைத்தது. சேரிப் பண்பாடு, சேரித் தலைமை போன்ற சொல்லாடல்களை தலித் அரசியல்-பண்பாட்டு இயக்கங்கள் முன்வைத்தன. துவக்கக் காலத்தில் 
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பின்னணியில் திட்டக்குடியிலிருந்து 'சேரி' என்னும் இதழ் ஒன்று வெளியாகியுள்ளது. 'தலை நிமிர சேரிதிரளுள்- அன்று தலைகீழாய் நாடு புரளும்' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கொடுத்த முழக்கம் ஒரு காலத்தில் சேரி எனும் சொல்லை ஆயுதமாக ஏந்தி நின்றது. ஆனாலும், சேரி என்னும் சொல் அரசியல் களத்தில் மீண்டும் கைவிடப்பட்டது. இன்னொரு பக்கம், காலனி என்கிற படிமம் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதை மறுக்கும் குரலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே இதில் முக்கியம்‌. கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள், 'ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியை காலனி என்று குறிப்பிடாமத் சான்றோர் குடியிருப்பு அல்லது தொல் தமிழர் குடியிருப்பு என்று மாற்ற வேண்டும் ' என்று கோரிக்கை விடுத்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள F. கீழையூரில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியை 'F. கீழையூர் காலனி' என்று பெயரிட்டு, வருவாய் மற்றும் பஞ்சாயத்து ஆவணங்களில் மாற்றப்பட்டது. அதை எதிர்த்து பிரதீப் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் (2023) வழக்கு தொடுத்தார். கடந்த ஆண்டு(2024) இல், நாமக்கல் மாவட்டத்தில் மல்ல சமுத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பெயர் பலகையில் 'அரிசன காலனி' என்று எழுதப்பட்டிருந்தை கணேசன் என்பவர் கடுமையாக எதிர்த்து போராடினார். அதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக சென்று அந்த பலகையில் இரந்த அரிசன காலனி என்கிற இப்பெயரை அழித்தார். இப்படியான தொடர் நிகழ்வுகளின் தொடர்ச்சிதான் முதல்வரின் இன்றைய அறிவுப்பு. இதை வரவேற்கும் அதே நேரத்தில் நம்மிடம் உள்ள கேள்வி, இது சாதிய மனநிலையில் என்னவகையான மாற்றத்தை நடத்தப் போகிறது என்பதுதான். ஆங்கிலச் சொல்லான காலனி என்பதை தீண்டப்படாத சொல்லாக ஆக்கிய சாதி இந்துக்கள் காலனி என்கிற சொல்லை மறந்துவிட்டால் அவர்களின் சாதிய குணமும் மறந்துபோகுமா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும். தலித் மக்களின் இழிவான அடையாளமாக இருப்பது காலனி என்கிற சொல் மட்டுமல்ல. அவர்கள் நிலமற்றவர்களாக, அதிகாரம் அற்றவர்களாக, உரிமை அற்றவர்களாக இருக்க வைக்கப்பட்டிருப்பதுதான் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பவற்றிலேயே மாபெரும் இழிவான அடையாளங்களாகும். அவற்றைப் போக்க அவர்கள் நெடுங்காலமாக போராடுகிறார்கள், அர்ப்பணிக்கிறார்கள். அத்தகைய போராட்டங்களையும் அர்ப்பணிப்புகளையும் அவற்றின் பின்னுள்ள நியாயங்களையும் இந்த அரசு என்ன மதிப்பீட்டில் வைத்திருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியமான விவாதப் பொருளாக இருக்க வேண்டும். இழி சொற்கள் நீக்கப்பட்டல் இழி வாழ்வு மாறாது‌. மாறாக, இழி வாழ்க்கை மாற்றப்படும் போதுதான் இழி சொல் மாறும்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.




ஸ்டாலின் தி 

சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ராணுவ வீரரான அவர், சமூகக் கொடுமைகளை எதிர்த்து சமர் செய்தவர். இவரது மிடுக்கானத் தோற்றமும், தீரமான சமூகப் பணியும் அவரை மக்களிடத்தில் மாவீரராக ஆக்கியன . சேரி மக்களோடு மட்டுமின்றி, சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருந்த, நரிக்குறவர் மக்களோடும் நெருக்கமாக இருந்தார். அவர்களின் மூத்தோர்களிடமிருந்தே, சிவப்பு நிற முண்டாசுக் கட்டும் பழக்கம் அவருக்கு வந்தது. 

அண்ணலுக்குப் பிறகு எழுந்த, இந்தியக் குடியரசுக் கட்சியின் முன்னோடித் தலைவராக கடமையாற்றிவர். தொடர்ந்து மக்களுக்காக, களத்தில் நின்ற அவர், தேர்தல் களத்தில் 1957 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1967 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் சீர்காழி தொகுதியில் நின்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1957 தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வெற்றி பெற்றார். 

ஊராட்சி மன்றத்தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்த வீரர் கே.பி.எஸ்.மணி அவர்கள் 1980 இல் பெரம்பலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கீழ்வெண்மணி படுகொலையின் போது, சட்டமன்றத்தில் உரக்கக் குரல்கொடுத்தவர் அவர். அவருடைய சட்டமன்ற உரைகள் வீரமிக்கதாக இன்றும் புகழப்படுகின்றன. 

(ஐயா கே.பி.எஸ்.மணி அவர்களின் பிறந்த நாள் -பிப்ரவரி 22)


புதன், 19 பிப்ரவரி, 2025

உ.வே.சாமிநாதரின் அக்கிரகாரக் கதை.





ஸ்டாலின் தி 

உ.வே.சாமிநாதர் ஐயர் என்பதில் உ என்னும் எழுத்து அவருடைய ஊரான உத்தமதானபுரத்தைக் குறிக்கிறது. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் இது. இந்த ஊர்க்கதையை தம்முடைய தன்வரலாற்று நூலான 'என் சரித்திரம்' நூலின் முதல் அத்தியாயமான 'எங்கள் ஊர்' என்னும் தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார் உ.வே.சா. அதாவது, சற்றேரக்குறைய இருநூறாண்டுகளுக்கும் முன்பாக தஞ்சையை ஆண்டுவந்த அரசர் ஒருவர் தம்முடைய படைபரிவாரங்களோடு நாட்டை சுற்றிப்பார்க்க பயணப்பட்டார். இயற்கை காட்சிகளையும் கோயில் குளங்களையும் கண்டுகளித்த அரசர் தஞ்சைக்கு கிழக்குப்பகுதியில் உள்ள பாபநாசம் அருகில் ஓரிடத்தில் ஓய்வு எடுத்த போது, உணவை உண்டுகளித்து தாம்பூலம் (வெற்றிலைப்பாக்கு) போட்டு குதப்பிய போதுதான் அன்றைய நாள் ஏகாதசி நாள் என்று தெரிந்து கொண்டாராம். ஏகாதசி அன்றைக்கு விரதம் இருக்க வேண்டிய தாம் இப்படி விருந்துணவில் களித்ததோடு தாம்பூலத்தையும் போட்டுவிட்டோமே என விசனப்பட்ட அரசர், அருகில் அரண்மனை புரோகிதர்களும் இல்லாததால் 'வேறு சில பெரியவர்களை' அழைத்து பரிகார ஆலோசனையைக் கேட்டுள்ளார். அந்த கெட்டிக்காரப் பெரியவர்கள், 'ஓர் அக்கிரகார பிரதிஷ்டை செய்து, வீடுகள் கட்டி, வேதவித்துகளான அந்தணர்களுக்கு(பார்ப்பனர்களுக்கு) வீடுகளோடு நிலத்தையும் தானமாக அளித்தால் இந்த தோஷம் நீங்கும் ' என்று பரிகாரம் கூறியுள்ளனர். 'இதென்ன பிரமாதம்.இதோ செய்கிறேன்' என்று துள்ளிக்குதித்த அரசர் அதே இடத்தில் உடனடியாக 48 வீடுகளையும் இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு என்கிற விகிதத்தில் 24 கிணறுகளையும் அமைத்துக் கொடுத்து நாற்பத்தியெட்டு புரோகித பார்ப்பனர்களின் குடும்பங்களை குடியேற்றி தலா ஒரு குடும்பத்திற்கு நான்கு ஏக்கர் (12 மா) நன்செய் நிலத்தையும் அதற்கான புன்செய் நிலத்தையும் பங்கிட்டு கொடுத்தார். இப்படி உருவாக்கப்பட்ட அக்கிரகாரமே 'உத்தம தானபுரம்' என்று அழைக்கப்படும் சிற்றூராக ஆனது என்று கூறுகிறார் உ.வே.சா. 

அவருடைய ஊர்க்கதை என்பது அந்த ஊரின் வரலாற்றை மட்டுமல்ல, வரலாற்றில் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் மலிவான வழிகளில் கூட நிலத்திலும் நிலத்தின் மீதான அதிகாரத்தில் வேரூன்றினார்கள் என்பதையும், பார்ப்பனர்களின் வழிகாட்டுதலில் எவ்வளவு மூடத்தனமாக தமிழ்நாட்டின் மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. 

(பிப்ரவரி 19: உ.வே.சா.பிறந்த நாள்)

சனி, 15 பிப்ரவரி, 2025

கோட்டையை பாதுகாத்த பறையர்கள்.




ஸ்டாலின் தி 

இந்தியாவை பங்கிட்டுக் கொள்வதற்கான போட்டியில் இங்கிலாந்தும், பிரான்ஸும் மோதிக்கொண்ட காலம் 18 ஆம் நூற்றாண்டுகாலம். அத்தகைய மோதலின் தொடர்ச்சியாக, 
கோரேகான் யுத்தத்திற்கு முன்பாக அறுபதாண்டுகளுக்கும் முன்பாகவே, அதாவது 1758 ஆம் ஆண்டு, சென்னை ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சு படை முற்றுகையிட்டது. பிரெஞ்சுப் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பிரிட்டன் படை, சென்னையின் பறையர் சமூகத் தலைவர்களை சந்தித்து துணைக் கோரியுள்ளது.  போரில் ஈடுபட்டு உயிர் சேதமடைந்தால், நிலமும் உதவித் தொகையும் அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

சேரி மக்கள் சென்னை கோட்டை மீதான தாக்குதலை தங்களின் மீதான தாக்குதலாகவே நினைத்து திரண்டனர். அதற்கு காரணம் அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள் என்பதே ஆகும். ஆங்கிலேயர்கள் கூட 1911வரையிலும்,  சென்னையை பறையர் நகரம், கறுப்பர் நகரம் என்றே  அழைத்து வந்தனர். அன்றைக்கு சுமார் 1400 சேரிகள் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, கோட்டையைக் காப்பதே சேரிகளையும் காப்பதற்காக வழியாகும் என்பதால் பிரிட்டன் படைக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டனர்.இவ்வாறு, பறையர்கள் திரட்சியாகத் திரண்டு, பிரிட்டன் படைக்கு துணை நின்றார்கள். பீரங்கிகள் உள்ளிட்ட  ஆயுத பலமிக்க பிரெஞ்சுப் படையோடு தீரமாக மோதினார்கள் சேரி வீரர்கள். போரில் பல நூறு சேரி வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஆனாலும், யுத்தத்தில் வென்று, பிரெஞ்சுப்படையை சென்னையை விட்டே விரட்டியடித்து, கோட்டையையும் சென்னையையும் மீட்டார்கள்.  இந்திய மண்ணில் பிரிட்டிஷ் வலுவாக காலூன்ற வகைச் செய்துகொடுத்தவர்கள் அந்த பறை வீரர்கள்தான். பறையர்களின் வீரம் கொண்டு கோட்டையில் அமர்ந்த பிரிட்டிஷ் அரசு, வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, வீரத்தைப் பறைசாற்றவுமில்லை. 

இந்த வீரம் செறிந்த நாள் பிப்ரவரி 16 ஆம் தேதியாகும்.

மயில் வாகனம் என்னும் பௌத்த தேர்.

ஸ்டாலின் தி  முருகனுக்கு மயில் வாகனன் என்றொரு சிறப்புப் பெயருமுண்டு. இந்து புராணங்களில் கூறப்படுவதைப் போல மயில் என்னும் பறவைய...