செவ்வாய், 7 மார்ச், 2023

வடக்கும் தெற்கும்: தொழிலாளர் நலன் காக்கத் தவறும் அரசுகள்.



பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பீகார் சட்டமன்றத்தில் 3/3/2023 அன்று எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் சின்கா(பாஜக) கேள்வி எழுப்பினார்.  அனைத்துக் கட்சிக் குழு ஒன்று தமிழகத்திற்கு செல்ல வேண்டும் என்று விஜய்குமார் சின்கா கோரிக்கை வைத்தார். அதை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்தார். 'இருமாநில அரசுகளின் பதில்கள் திருப்தியளிக்காவிட்டால் எதிர்க்கட்சி(பாஜக) மத்திய அரசை நாடலாம்' என்றும் அவர் கூறினார். பிறகு, முதல்வர் நிதிஷ்குமாரை அவருடைய அறையில் விஜய்குமார் சின்கா உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்த பிறகு, அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 4/3/2023 அக்குழு தமிழ்நாடு வந்ததாக செய்திகளில் காண முடிகிறது. அதுபோலவே, ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திலும் இது விவாதமாகி அங்கிருந்தும் ஒரு குழு வந்ததுள்ளது.


திருப்பூரில் ஒரு தேநீர் கடையில் வடமாநில தொழிலாளர் ஒருவருக்கும், தமிழ்நாட்டு தொழிலாளர் ஒருவருக்கும் நடைப்பெற்ற சிறு சச்சரவை ஊதிப்பெருக்கிய சிலர் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்குவதாக வதந்திகளை பரப்பினர். தமிழ் உணர்வின் பெயரில் பிற்போக்கு அரசியல் பேசும் பலரும் இதுபோன்ற வதந்திகளை விரும்புவதால் அது பரவியது. இந்த வதந்தியை பயன்படுத்திக்கொண்ட இந்துத்துவ கும்பலும் வட மாநில தொழிலாளர்கள் இந்தி பேசுவதாலேயே தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தியை பரப்பியது. குறிப்பாக, பாஜக கூட்டம் இந்த வதந்தியை பரவலாக்கியது. தற்போது, வதந்திகளை பரப்புவதற்கெதிரான எச்சரிக்கையை தமிழக அரசு செய்திருந்தாலும், பாஜக அண்ணாமலை, சீமான் போன்றோரை கைது செய்யாதது தமிழக அரசின் எச்சரிக்கை என்பது வடமாநில அரசியல் நண்பர்களை திருப்திபடுத்தத்தானோ என்கிற ஐயம் எழுகிறது. 


வடமாநிலத்திற்கு தமிழர்களும் தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்களும் வேலைத் தேடி போவதும் வருவதும் புதிய நிகழ்வுகள் அல்ல. ஆனால், வடக்கே நிலவும் மிகக் கடுமையான பொருளாதார பின்னடைவும் அதற்கு காரணமான சாதி-மதவாதம், ஊழல் மிக்க அரசியல் ஆகியவையும் தற்போது அவர்களை முன்னைவிட கூடுதலாக விரட்டுகின்றன. குறிப்பாக, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்தே தமிழகத்திற்கு அதிகம் தொழிலாளர்கள் வருகிறார்கள். இதைத் தொடர்ந்து  சென்னை,கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் சிறு நகரங்கள் வரை வடமாநிலத்தவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


பீகாரும் சரி அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஜார்கண்டும் சரி. சாதிய பண்ணை முறையிலிருந்து இன்னமும்  விடுபடாத மாநிலங்கள் ஆகும். நிலவுடைமை ஆதிக்க சாதிகளும் அவர்களிலிருந்து வரும் ஆட்சியாளர்களும் நிலச்சீர்த்திருத்தம், கல்வி போன்றவற்றிற்கு எதிராகவே சிந்திப்பதால் அங்கே அதீத வறிய நிலையில் வெகுமக்கள்  தள்ளப்படுகிறார்கள். முதலில் பீகாரிலிருந்து கல்வி கற்க பிற மாநிலங்ளுக்கு சென்ற சிறு விவசாயக்  குடும்பங்கள் தங்களிடம் இருந்த சிறு சிறு நிலங்களை விற்றே சென்றனர். கல்விக்கான வேலையும் கிடைக்காமல், இருந்த வாழ்வாதரமும் பறிபோய் நிர்கதியில் அவர்கள் தள்ளப்பட்டார்கள். சொத்துடைமை அற்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சில சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு சாதிய பண்ணை அடிமை முறையும், ஊழல் அரசியலும் கூடுதல் சுமைகளைக் கொடுத்தன. பலரும் பிற்படுத்தப்பட்டவர்களின் நாயகர்களாகள் போற்றும் லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் போன்றவர்களின் ஆட்சியில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செல்வச் செழிப்பில் திளைத்தார்கள். எளிய மக்களோ வாழ்வாதாரம் தேடி நாடெங்கும் ஓடினார்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரசும் பாஜகவும் இப்பிரச்சனைகளை கண்டுகொண்டதே இல்லை. மாறாக, எளிய மக்களுக்கு துணை நின்ற தலித் மற்றும் இடதுசாரிய போராளிகளை அங்கே வேட்டையாட மாநில அரசில்வாதிகளுடன் கைக்கோர்த்தன. இன்று தமிழகத்திற்கு சாரை சாரையாக பீகார் மாநில தொழிலாளர்கள் வருதற்கு பின்னணியில் இப்படியான உண்மைகள் இருக்கின்றன. இப்படி இங்கே பிழைக்க வரும் ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களின் பின்னணியிலும் பல உண்மைகள் உள்ளன. அத்தனையையும் மூடி மறைத்துவிட்டு வடமாநில தொழிலாளர்களின் வருகையை 'படையெடுப்பு' என்று தமிழ் சாதிதேசியவாதிகளும், வட இந்திய தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் ஆபத்து இருக்கிறது என்று இந்து தேசியவாதிகளும் பொய்களைப் பரப்பி வருகின்றனர். 


மேலும், தமிழகத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் வட இந்திய தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுக்கொண்டு, சொற்பத் தொகையையே ஊதியமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, 'வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்' என்று அறிக்கை வாசிக்கும் தமிழக திமுக அரசு இந்த உழைப்புச் சுரண்டல் பற்றியோ, ஊதியக் கொள்ளைக் குறித்தோ பேசுவதில்லை. வதந்திகளை பரப்புகிறவர்களை எச்சரிக்கை செய்யும் திமுக அரசு, வட மாநில தொழிலாளர்களின் ஊதியத்தை குறைத்துக் கொடுக்கும் முதலாளிகளை எச்சரிக்கை செய்யவில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்படவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்கள் உழைப்புச் சுரண்டலால் தாக்கப்படுவதும் உண்மைதான். அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு தொழிலாளர்களை பாதுகாக்கும் அரசு என்று எப்படிக் கூறிக்கொள்ள முடியும். தமிழக தொழிலாளர்களுக்கும் இதே உழைப்புச் சுரண்டலும் ஊதியக் கொள்ளையும் நிகழ்வதை வேடிக்கைப்பார்த்து இவர்களுக்கு பழகிவிட்டதால், வடமாநில தொழிலாளர்களுக்கு நேரும் அதே கொடுமையையும் வேடிக்கைப்பார்க்கிறார்கள் என்றுதான் இதை புரிந்துகொள்ள முடியும்.


எனவே, வடக்கும் சரி, தெற்கும் சரி. தொழிலாளர் நலன் காக்கும் அரசுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...