ஞாயிறு, 31 டிசம்பர், 2023

மகார் வீர தினம்.


ஸ்டாலின் தி



 மராட்டியதில் ஆண்டுவந்தவர்கள் பேஷ்வா பிராமணர்கள்.அவர்களின் ஆட்சியானது அப்பட்டமன சாதி இந்துக்களின் ஆட்சியாகவே இருந்தது. தமிழ் மன்னர்களின் ஆட்சியில் எப்படி பறையர்கள் உள்ளிட்ட தலித்துகள் ஒடுக்கப்பட்டார்களோ அப்படித்தான் பேஷ்வாகளின் ஆட்சியிலும் மகார்கள் உள்ளிட்ட தலித்துகள் ஒடுக்கப்பட்டார்கள்.  பேஷ்வாக்களின் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான கொடிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. ஓர் சாதி இந்து தெருவில் வரும்போது எதிரில் ஓர் தலித் வரக்கூடாது. ஏனெனில், தலித்தின் நிழல் சாதி இந்துவின் மீது பட்டு தீட்டாகிவிடும். பொது இடங்களில் தலித்துகளை அடையாளாம் காண வசதியாக, தலித்துகளின் மணிக்கட்டிலோ கழுத்திலோ கருப்பு நிற சரடு அணியவேண்டும். தலித்துகளின் பாதங்களின் சுவட்டில் சாதி இந்து பாதங்கள் பட்டால் தீட்டாகிவிடும் என்பதால் தலித்துகள் தங்களின் பாத சுவட்டை அழிக்கும் வகையில் தங்களின் இடுப்பில் துடைப்பட்தைக்கட்டிக்கொண்டு செல்லவேண்டும். தலித்துகளின் எச்சில் பட்டால் தெருக்கள் தீட்டாகிவிடும் என்பதால் அவர்களின் கழுத்தில் மண்சட்டியைக் கட்டிக்கொண்டு அதில் மட்டுமே எச்சிலைத்துப்ப வேண்டும். இப்படியான ஒடுக்குமுறைகளை பேஷ்வாக்களின் ஆட்சி நடைமுறையில் இருந்த்தது. இப்படியொரு சூழலில்தான் பிரிட்டிஷ் ஆட்சிவந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தில் மகார்கள் சேர்ந்த காலமும் வந்தது.

‘தீண்டப்படாதவன்களைக் கொண்ட படைதானே’ எனும் இறுமாப்புடன் பிரிட்டிஷ் படையைத் தாக்க, பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் தமது பேஷ்வா படைகளை அனுப்பினான். பேஷ்வா படையில் 20000 குதிரைப்படை வீர்ரகளும் 8000 காலாட்படை வீரர்களும் இருந்தனர். ஆனால் அவர்களை எதிகொண்ட, கேப்டன் ஸ்டான் டவுனின் தலைமையிலான பிரிட்டிஷ் படையிலோ 500 பேர்களைக்கொண்ட சிறு காலாட்படையும், 250 பேர்களைக் கொண்ட தற்காலிக குதிரைப்படையும், இரண்டு பீரங்கிகளைக்கொண்ட 24 பேர்கள் அடங்கிய சென்னை படையினரும்தான் இருந்தனர். இப்படையில் இருந்தவர்களில் பெரும்பான்மையினரும் வீரமாக போரிட்டவர்களும் மகார்கள்தான். யுத்தம் கோரேகானில் நடந்தது.

யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு வெற்றியைக்குவிக்க வேண்டும் என்பதைவிட, தங்களை மனிதராக மதிக்காமல் ஒடுக்கிய பேஷ்வா ராஜ்ஜியம் ஒழியவேண்டும் எனும் வேட்கையே மகார்களிடம் மேலோங்கியிருந்ததால் மகார்கள் கடும் தீரத்துடன் போரிட்டனர்.யுத்தக் களத்திற்கு முன்னிரவில் சுமார்  45கி.மீ நடந்துவந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் போரிட்டனர்  மகார்கள். 
1817 டிசம்பர் 31 அன்று துவங்கிய யுத்தம் மறுநாள்  1818 ஜனவரி 1இரவு 9மணிக்கு முடிவுக்குவந்தபோது களத்தில் இருந்தவர்கள் மகார்களைக்கொண்ட பிரிட்டிஷ் படையினரே! பேஷ்வாக்கள் போனதிசை தெரியவில்லை.
இதன்மூலம் 1818 ஜனவரி 1 ஆம் தேதி நவீன இந்தியாவின் வரலாற்றில் மகார்கள் தலித் போர்குணத்தை பதிவு செய்தார்கள். இந்த 1818 (மே-5)ஆம் ஆண்டில்தான் கார்ல் மார்க்ஸ் பிறந்தார்.அதாவது மார்க்ஸ் பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் நடந்த யுத்தம் கோரேகான் யுத்தம். 

யுத்தம் நடந்த கோரேகானில் முதல் குண்டு சுடப்பட்ட இடத்தில் 32 சதுர அடித்தளம் கொண்ட கல்மேடையின்மீது 65 அடி உயர நினைவுத்தூண் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டு 1821 மார்ச் 26ஆம் தேதி அடிக்கல் நடப்பட்டு பிறகு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. அந்த இடத்திற்கு மகார்கள் பெரும் பேரணியாக அண்ணலின் தலைமையில் 1927 ஜனவரி 1 ஆம் தேதி சென்றனர்.அங்கு, யுத்தத்தில் பலியான 20 மகார்கள் மற்றும் படுகாயமடைந்த 3 மகார்களின் பெயர்களை பொறித்த கல்வெட்டை திறந்துவைத்து அண்ணல் அம்பேத்கர் வீர உரையாற்றினார். 

யுத்தத்தில் உயிர்கொடுத்த மகார்கள்:

1.சோமனாக் கமலநாக் நாயக், 2. ராம்னாக் ஏம்னாக் நாயக், 3.கோடனாக் கோதேனாக், 4.ராம்னாக் யேசனாக், 5.போகனாக் ஹர்னாக்,6.அம்பானாக் கண்ணானாக், 7.கண்ணாக் பாலனாக், 8பால்னாக் கோண்டனாக், 9.ரூபனாக் லாகனாக், 10.வேப்னாக் கிராம்னாக், 11. விட்னாக் தாம்னாக், 12.ரங்னாக் கண்ணனாக், 13 வேப்னாக் ஹர்னாக், 14.ராய்னாக் வான்னாக், 15.கஜனாக் தர்மனாக், 16.தியோனான் ஆன்னாக்,17.கோபால்னாக் பால்னாக், 18.ஹர்னாக் ஹிர்னாக், 19.ஜேட்னாக் தாய்னாக், 20.கன்னாக் லாக்னாக்.

காயமடைந்த மகார்கள்:

1.ஜனனாக் ஹிர்னாக், 2.பாய்னாக் ரத்தன்னாக், 3.ரத்தன்னாக் தான்னாக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...