வியாழன், 25 ஜூலை, 2024

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா எச்.எம்.ஜெகநாதன் அவர்களின நினைவு தினம்- ஜூலை 25.


ஸ்டாலின் தி

தாத்தா எச்.எம்.ஜெகநாதன், சென்னையில் 1894 ல் அக்டோபர் 25ம் நாள் முனுசாமி என்பவரின் மகனாக பிறந்தார்.

தந்தையார் பிரிட்டிஷ் இந்திய அரசின் ராணுவத்திற்கான கருவிகளைச் செய்யும் தோல் ஒப்பந்ததாராக இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் ஜெகநாதன் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஆங்கில மொழிப்புலமை மிக்கவவராகவும், சிறந்த ஆளுமைப் பண்புள்ளவராகவும் வளர்ந்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், 1914 ல் துவங்கப்பட்ட நீதிக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பால் ஆர்வம் காரணமாக ராவ் சாகிப் எல்.சி. குருசாமி அவர்களுடன் இணைந்து சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்தை நிறுவி, அதன் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று களப்பணியாற்றினார்.

சென்னை அருந்ததியர் சங்கம் சார்பாக, பெரிய மேடு, ராயபுரம், கல்மேடு, மக்டூன் செரீப் தெரு, ஒட்டேரி, பெரம்பூர், அருந்ததியர் புரம், செங்கல்பட்டு மற்றும் பொன்னேரி ஆகிய இடங்களில் இரவுப் பாடசாலைகளை 1921 முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.

இப்பள்ளிகள் அருந்ததியர் மக்களுக்காக திறக்கப்பட்டாலும் பிற ஒடுக்கப்பட்ட சமூக குழந்தைகளும் சேர்ந்து பயின்றனர். பிற்காலத்தில், இப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்தியது. சில இடங்களில், இப்பள்ளிகள் இன்றும் அரசுப் பள்ளிகளாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பால் அக்கறை கொண்டதால் தன் சமகால தலித் தலைவர்களான தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மற்றும் M.C.ராஜா ஆகியோரிடம் இணைந்தே பணியாற்றினார். தலைவர்
M.C. ராஜா அவர்கள் நிறுவிய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார்.

1921 முதல் 1929 வரை சென்னை மாமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். பதவியில் இருந்த போது, பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை அமலாக்கம் செய்வதில் தீவிர அக்கறை காட்டினார். நகர சுத்திப் பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக வரன் முறைப்படுத்தி பணிப் பாதுகாப்பை ஏற்படுத்தினார்.

1927 ல் சைமன் கமிஷன் தமிழகம் வந்தபோது, குழுவைச் சந்தித்து பட்டியலின மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிய வரைவை சமர்ப்பித்தார்.
அரசியல் பகிர்வு குறித்த ராயல் கமிஷனிடம் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகளையும் வைத்தார்.

1931 ல் லோதல் குழுவிடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் வாக்குரிமை கோரி வரைவொன்றை எழுதி சமர்ப்பித்தார். பின்னர், இக்கோரிக்கை பிரிட்டீஷாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக வசிக்கும் இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களே பிரதிநிதிகளாக வரவேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்தார்.

1921 ல் புளியந்தோப்புக் கலவரம் ஏற்பட்டபோது ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. தலைவர் MC ராஜா அவர்களை அருந்ததியர் சங்கத்தின் நிர்வாகிகள் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டனர்.
செங்கல்பட்டு மற்றும் பொன்னேரி கிராமங்களில் பட்டியலின மக்கள் மீது ஆதிக்க சாதிகள் தாக்குதல் நடத்திய போது, ஜெகநாதன் அவர்கள் நேரில் களமிறங்கி, தனது தொண்டர் படையை மக்களுக்கு அரணாக மாற்றினார்.

1932, 1935 மற்றும் 1937 ம் ஆண்டுகளில் சக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் 
இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து, நெல்லூர், பெல்லாரி மற்றும் அனந்தபுரி மாவட்டங்களில் பஞ்சமி நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கே அளிக்கச் செய்தார்.

ஒடுக்கப்பட்டமக்களின் முன்னேற்றத்திற்காக ஜெயப்பேரிகை என்ற மாத இதழை நடத்தினார்.

1932 முதல் சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தின் கெளரவ நீதிபதியாக பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவிலும் பதவி வகித்தார்.

இந்தியா விடுதலைக்குப்பின் அகில இந்தியக் காங்கிரசில் இணைந்து 1952 ல் நடந்த முதல் தேர்தலில் வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், முதலமைச்சர் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டுவந்த போது, சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்தார்.

தான்பிறந்த சமூகத்திற்காகவும், ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விடுதலைக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தாத்தா எச்.எம். ஜெகநாதன் அவர்கள் 1966 ஜூலை 25ல் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார்.

தகவல்:
ராவ் சாகிப் எல்சி குருசாமி கல்வி மையம், தமிழ்நாடு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தீட்சா தின குறிப்புகள்.

ஸ்டாலின் தி 1  1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில்...