வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.




ஸ்டாலின் தி 

சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ராணுவ வீரரான அவர், சமூகக் கொடுமைகளை எதிர்த்து சமர் செய்தவர். இவரது மிடுக்கானத் தோற்றமும், தீரமான சமூகப் பணியும் அவரை மக்களிடத்தில் மாவீரராக ஆக்கியன . சேரி மக்களோடு மட்டுமின்றி, சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருந்த, நரிக்குறவர் மக்களோடும் நெருக்கமாக இருந்தார். அவர்களின் மூத்தோர்களிடமிருந்தே, சிவப்பு நிற முண்டாசுக் கட்டும் பழக்கம் அவருக்கு வந்தது. 

அண்ணலுக்குப் பிறகு எழுந்த, இந்தியக் குடியரசுக் கட்சியின் முன்னோடித் தலைவராக கடமையாற்றிவர். தொடர்ந்து மக்களுக்காக, களத்தில் நின்ற அவர், தேர்தல் களத்தில் 1957 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1967 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் சீர்காழி தொகுதியில் நின்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1957 தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வெற்றி பெற்றார். 

ஊராட்சி மன்றத்தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்த வீரர் கே.பி.எஸ்.மணி அவர்கள் 1980 இல் பெரம்பலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கீழ்வெண்மணி படுகொலையின் போது, சட்டமன்றத்தில் உரக்கக் குரல்கொடுத்தவர் அவர். அவருடைய சட்டமன்ற உரைகள் வீரமிக்கதாக இன்றும் புகழப்படுகின்றன. 

(ஐயா கே.பி.எஸ்.மணி அவர்களின் பிறந்த நாள் -பிப்ரவரி 22)


புதன், 19 பிப்ரவரி, 2025

உ.வே.சாமிநாதரின் அக்கிரகாரக் கதை.





ஸ்டாலின் தி 

உ.வே.சாமிநாதர் ஐயர் என்பதில் உ என்னும் எழுத்து அவருடைய ஊரான உத்தமதானபுரத்தைக் குறிக்கிறது. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் இது. இந்த ஊர்க்கதையை தம்முடைய தன்வரலாற்று நூலான 'என் சரித்திரம்' நூலின் முதல் அத்தியாயமான 'எங்கள் ஊர்' என்னும் தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார் உ.வே.சா. அதாவது, சற்றேரக்குறைய இருநூறாண்டுகளுக்கும் முன்பாக தஞ்சையை ஆண்டுவந்த அரசர் ஒருவர் தம்முடைய படைபரிவாரங்களோடு நாட்டை சுற்றிப்பார்க்க பயணப்பட்டார். இயற்கை காட்சிகளையும் கோயில் குளங்களையும் கண்டுகளித்த அரசர் தஞ்சைக்கு கிழக்குப்பகுதியில் உள்ள பாபநாசம் அருகில் ஓரிடத்தில் ஓய்வு எடுத்த போது, உணவை உண்டுகளித்து தாம்பூலம் (வெற்றிலைப்பாக்கு) போட்டு குதப்பிய போதுதான் அன்றைய நாள் ஏகாதசி நாள் என்று தெரிந்து கொண்டாராம். ஏகாதசி அன்றைக்கு விரதம் இருக்க வேண்டிய தாம் இப்படி விருந்துணவில் களித்ததோடு தாம்பூலத்தையும் போட்டுவிட்டோமே என விசனப்பட்ட அரசர், அருகில் அரண்மனை புரோகிதர்களும் இல்லாததால் 'வேறு சில பெரியவர்களை' அழைத்து பரிகார ஆலோசனையைக் கேட்டுள்ளார். அந்த கெட்டிக்காரப் பெரியவர்கள், 'ஓர் அக்கிரகார பிரதிஷ்டை செய்து, வீடுகள் கட்டி, வேதவித்துகளான அந்தணர்களுக்கு(பார்ப்பனர்களுக்கு) வீடுகளோடு நிலத்தையும் தானமாக அளித்தால் இந்த தோஷம் நீங்கும் ' என்று பரிகாரம் கூறியுள்ளனர். 'இதென்ன பிரமாதம்.இதோ செய்கிறேன்' என்று துள்ளிக்குதித்த அரசர் அதே இடத்தில் உடனடியாக 48 வீடுகளையும் இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு என்கிற விகிதத்தில் 24 கிணறுகளையும் அமைத்துக் கொடுத்து நாற்பத்தியெட்டு புரோகித பார்ப்பனர்களின் குடும்பங்களை குடியேற்றி தலா ஒரு குடும்பத்திற்கு நான்கு ஏக்கர் (12 மா) நன்செய் நிலத்தையும் அதற்கான புன்செய் நிலத்தையும் பங்கிட்டு கொடுத்தார். இப்படி உருவாக்கப்பட்ட அக்கிரகாரமே 'உத்தம தானபுரம்' என்று அழைக்கப்படும் சிற்றூராக ஆனது என்று கூறுகிறார் உ.வே.சா. 

அவருடைய ஊர்க்கதை என்பது அந்த ஊரின் வரலாற்றை மட்டுமல்ல, வரலாற்றில் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் மலிவான வழிகளில் கூட நிலத்திலும் நிலத்தின் மீதான அதிகாரத்தில் வேரூன்றினார்கள் என்பதையும், பார்ப்பனர்களின் வழிகாட்டுதலில் எவ்வளவு மூடத்தனமாக தமிழ்நாட்டின் மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. 

(பிப்ரவரி 19: உ.வே.சா.பிறந்த நாள்)

சனி, 15 பிப்ரவரி, 2025

கோட்டையை பாதுகாத்த பறையர்கள்.




ஸ்டாலின் தி 

இந்தியாவை பங்கிட்டுக் கொள்வதற்கான போட்டியில் இங்கிலாந்தும், பிரான்ஸும் மோதிக்கொண்ட காலம் 18 ஆம் நூற்றாண்டுகாலம். அத்தகைய மோதலின் தொடர்ச்சியாக, 
கோரேகான் யுத்தத்திற்கு முன்பாக அறுபதாண்டுகளுக்கும் முன்பாகவே, அதாவது 1758 ஆம் ஆண்டு, சென்னை ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சு படை முற்றுகையிட்டது. பிரெஞ்சுப் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பிரிட்டன் படை, சென்னையின் பறையர் சமூகத் தலைவர்களை சந்தித்து துணைக் கோரியுள்ளது.  போரில் ஈடுபட்டு உயிர் சேதமடைந்தால், நிலமும் உதவித் தொகையும் அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

சேரி மக்கள் சென்னை கோட்டை மீதான தாக்குதலை தங்களின் மீதான தாக்குதலாகவே நினைத்து திரண்டனர். அதற்கு காரணம் அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள் என்பதே ஆகும். ஆங்கிலேயர்கள் கூட 1911வரையிலும்,  சென்னையை பறையர் நகரம், கறுப்பர் நகரம் என்றே  அழைத்து வந்தனர். அன்றைக்கு சுமார் 1400 சேரிகள் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, கோட்டையைக் காப்பதே சேரிகளையும் காப்பதற்காக வழியாகும் என்பதால் பிரிட்டன் படைக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டனர்.இவ்வாறு, பறையர்கள் திரட்சியாகத் திரண்டு, பிரிட்டன் படைக்கு துணை நின்றார்கள். பீரங்கிகள் உள்ளிட்ட  ஆயுத பலமிக்க பிரெஞ்சுப் படையோடு தீரமாக மோதினார்கள் சேரி வீரர்கள். போரில் பல நூறு சேரி வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஆனாலும், யுத்தத்தில் வென்று, பிரெஞ்சுப்படையை சென்னையை விட்டே விரட்டியடித்து, கோட்டையையும் சென்னையையும் மீட்டார்கள்.  இந்திய மண்ணில் பிரிட்டிஷ் வலுவாக காலூன்ற வகைச் செய்துகொடுத்தவர்கள் அந்த பறை வீரர்கள்தான். பறையர்களின் வீரம் கொண்டு கோட்டையில் அமர்ந்த பிரிட்டிஷ் அரசு, வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, வீரத்தைப் பறைசாற்றவுமில்லை. 

இந்த வீரம் செறிந்த நாள் பிப்ரவரி 16 ஆம் தேதியாகும்.

குடைசாய்ந்த வண்டிக் கதை.



ஸ்டாலின் தி


மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் மு.க.ஸ்டாலின் நடித்து 1987 இல் வெளிவந்த திரைப்படம் 'ஒரே ரத்தம்.' ஸ்டாலின் இதில் தலித் சமூகத்து இளைஞராக நடித்திருப்பார். அவருடைய அறிமுக காட்சியில், கல்வி கற்றறிந்த அவர் தமது கிராமத்திற்கு வருவார். அப்போது அவரின் நடை, உடைய, மொழியை வைத்து அவரை உயர் சாதிக்காரராக கருதி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொள்வார் சூத்திர சாதியைச் சார்ந்த பாத்திரத்தில் நடிக்கும் ராதாரவி. பேச்சுவாக்கில் ஸ்டாலின் தானொரு 'தாழ்த்தப்பட்டவர்' என்று கூறுவதைத் தொடர்ந்து அவரை கீழே இறங்கச் சொல்லுவார் ராதாரவி. ஸ்டாலின் மறுப்பார். சாதிவெறி முற்றிப்போய் வண்டியை குடைசாய்த்து ஸ்டாலினை விழச்செய்வார் ராதாரவி; கீழே வீழ்ந்து காயப்படுவார் ஸ்டாலின். 

இத்தகையக் காட்சி இந்திய சாதியக் கிராமத்தில் எங்கும் காணக்கிடைப்பதுதான். ஆனால், இத்திரைப்படத்தில் வந்த இந்தக் காட்சி அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதையாடலில் இருந்தே உருவாக்கப்பட்டிருப்பதை எளிதாக யூகித்துவிட முடியும். நாம் இதை முன்வைத்து சுட்டிக்காட்ட வந்தது வேறு. அதாவது, அண்ணலின் வாழ்க்கையில இந்த வண்டி குடை சாய்த்த கொடுமை நடந்ததா? அவர் அதனால் படுகாயம்பட்டாரா? 

அண்ணலின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகளை கலந்து உருவாக்கப்பட்டதுதான் இந்த வண்டி குடைசாய்க்கப்பட்டக் கதை என்பதே உண்மை. அந்த இரண்டு நிகழ்வுகளை அண்ணல் தமது 'ஒரு விசாவுக்கு காத்திருத்தல்' குறிப்புகளில் குறிப்பிட்டுமிருக்கிறார். 

நிகழ்வு 1:
   
அண்ணல் அம்பேத்கர் பள்ளி சிறுவனாக இருந்த போது இது நடந்தது. கோரேகானில் பணியாற்றி வந்தார் அண்ணலின் தந்தை ராம்ஜி சக்பால் அம்பேத்கர். அவரைக் காணுவதற்காக தம்முடைய அண்ணன் மற்றும் அத்தை மகன்கள்(எல்லோருமே சிறுவர்கள்தான்.) பயணப்படுகிறார்கள். அப்போது ரயில் நிலையத்தில் வந்திறங்கிய இச்சிறுவர்களை அழைத்துவர தந்தையும் வரவில்லை அவர் அனுப்பி வைப்பதாக கடிதத்தில் கூறியிருந்த பணியாளரும் வரவில்லை. ரயில் நிலைய வளாகத்தில் இருந்த மாட்டுவண்டியில் போகாலாம் என்றால் சிறுவர்கள் மகர்கள் என்பது தெரிந்து வண்டியோட்டிகள் வர மறுத்துவிட்டார்கள். சிறுவர்கள் படும் அவதியை பார்த்து மனம் இளகிய ரயில் நிலைய அதிகாரி மாட்டுவண்டிக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக, இருமடங்கு கட்டணம் தரவேண்டும் என்றும், வண்டியை சிறுவர்களே ஓட்டவேண்டும், வண்டிக்காரர் நடந்தே வருவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறே பயணம் புறப்பட்டது. ஆனால், பல மைல் தூரத்திற்கு பிறகு(தாங்கமுடியாத கால்வலி வந்திருக்கலாம்!), வண்டிக்காரன் வண்டியில் ஏறிக்கொண்டு வண்டியோட்டினான். பல சிரமங்களைக் கடந்து, மறுநாள் காலை பதினோரு மணியளவில் ராம்ஜி சக்பால் அம்பேத்கரை அடைந்தனர். அந்த இரவின் துயரத்தையும் சாதியின் வன்மத்தையும் இந்த நிகழ்வில் அண்ணல் விவரித்திருப்பார். இந்த நிகழ்வில் அண்ணலை வண்டிக்காரன் குடைசாய்த்து தள்ளவில்லை என்பது தெரிகிறது.

நிகழ்வு 2: 

1929 ஆம் ஆண்டு பம்பாய் அரசு தலித்துகளின் மீதான வன்கொடுமைகள், புறக்கணிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய ஓர் குழுவை அமைத்தது. அணணல் அம்பேத்கர் அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு பிரித்தளிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் விசாரணைகளை நடத்தச் சென்றார். அப்படி போகும் நாளொன்றில், வழியே ஓரிடத்தில் அவரை தங்களுடைய சேரியில் ஓர் நாள் தங்க வேண்டுமென்று மக்கள் அண்ணலிடம் கோரிக்கை வைத்தனர். முதலில் பயணத்தில் இடையில் தங்கும் திட்டம் அவருக்கு இல்லை என்றாலும், மக்களின் அன்பை மதித்து தங்குவதாக கூறிவிட்டு தான் விசாரிக்க வந்த கிராமத்திற்கு சென்றார். விசாரணையை முடித்துவிட்டு மீண்டும் தான் தங்கவிருந்த சாலிஸ்காவோன் மகார்வாடா சேரிக்கு செல்லுவதற்காக சாலிஸ்காவோன் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார் அண்ணல். அருகேயிருந்த மகார் வாடாவுக்கு அவரை அழைத்துச் செல்ல ஒரு ஒற்றைக் குதிரைவண்டி வந்தது. அண்ணல் அதில் ஏறிக்கொள்ள திரளாக வந்திருந்த மற்றவர்கள் குறுக்கே வயல் வழியாக புறப்பட்டனர். அண்ணலோடு புறப்பட்ட குதிரை வண்டி கொஞ்ச தூரத்திலேயே ஒரு மோட்டார் வாகனத்தில் மோதும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டு அண்ணல் பெருமூச்சுவிட்டார். வண்டியோட்டியின் மீதும் கோவம்கொண்டார். ஆனால் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அடுத்ததாக குறுக்கே ஒரு வாய்க்கால் பாலம் வந்தது. அதில் தடுப்புச் சுவரில்லை, இடையிடையே குத்துக் கற்கள் மட்டுமே இருந்தன. பாலத்திலிருந்து திரும்பும் நிலையில் வண்டியின் சக்கரம் குத்துக்கல்லொன்றில் மோதவும் வண்டி குடை சாய்ந்து, அண்ணல் தூக்கியெறிப்பட்டார்; அண்ணலின் காலெலும்பும் முறிந்தது. 

விபத்துக்கு காரணம் பிறகுதான் அண்ணலுக்கு தெரியவந்தது. அதாவது அந்த வண்டியை ஓட்டிவந்தவர் மகார்வாடாவைச் சார்ந்த ஓர் தலித். வண்டியோ ஜாதி இந்துவுடையது. ரயில் நிலைய வளாகத்தில் இருந்த வண்டிக்காரர்கள் "மகாரான அம்பேத்கருக்கு நாங்கள் வண்டி ஓட்ட மாட்டோம். வாடகைக்கு வண்டி மட்டும் தருகிறோம், நீங்களே ஓட்டிக்கொள்ளுங்கள்" என்று கூறியதால், முன் அனுபவமற்ற தலித் ஒருவரே வண்டியோட்டும் நிலை வந்தது. அதுவே விபத்திற்கு காரணம். சிறுவனாக இருந்த போதும் சரி, ஒரு மாநில அரசின் பிரதிநிதியாக இருந்தபோதும் சரி அண்ணலுக்கு நேர்ந்த இரண்டு நிகழ்வுகளுமே ஒரேத் தன்மையுடைய, ஒரேக் காரணமுடையவைதான். காலங்கள் மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதைக் கூறும் நிகழ்வுகள் அவை. அவைதான் அண்ணலின் வாழ்வில் நடந்ததாக அவரால் கூறப்படும் முக்கியத்துவமான வண்டிப்பயண நிகழ்வுகளாகும். அவற்றில், அவரை எங்கும் வண்டியிலிருந்து யாரும் கீழேத் தள்ளவில்லை.  

அண்மையகாலத்தில் வாழ்ந்த ஓர் அதிமுக்கிய தலைவரின் வாழ்க்கையிலும் கூட இப்படி புனைவுகளை நிகழ்த்திவிட முடியும் என்பதற்கு அண்ணலை குடைசாய்த்த கதையின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த புனைவு ஓர் நல்ல நோக்கத்திற்கானது என்றும் கூட யாரேனும் வாதாடலாம். அதாவது, வண்டியிலிருந்து அண்ணல் தள்ளப்பட்டார் என்கிற புனைவு சாதியின் கோரத்தை காட்ட உதவும்தானே என்று கேட்கலாம். ஆனால், அந்த புனைவைவிட உண்மையான நிகழ்வில்தான் அதிகம் நாம் பேசமுடியும். புனைவில் வண்டியோட்டியை ஓர் அறியாமையான ஆளாகவும் காட்ட முடியும். ஆனால், அண்ணலின் பதிவில் உள்ள அசல் வடிவமோ, அந்த வண்டியோட்டிகள் விவரமுள்ள சாதியவாதிகளாக உள்ளதைக் காட்டுகின்றன. ஆம். அந்த இரண்டு வண்டிக்காரரகளும் அப்பாவிகள் அல்லர். சாதியை காரணமாக வைத்து இருமடங்கு கட்டணத்தை பெற்றுக்கொள்கிறான் ஒருவன்; கட்டணத்தை பெற்றுக்கொண்டு வண்டியை மட்டும் அனுப்பி பிழைக்கிறான் இன்னொருவன். முதல் நிகழ்வில் வரும் வண்டியோட்டி தன் உடல் நோகும் போது நேக்காக தமது வாக்குறுதியை மீறி வண்டியில் ஏறிக்கொள்கிறான். அந்தளவுக்கு அவர்கள் விவரமானவர்கள், சுரண்டல்வாதிகள் என்பதைத்தான் உண்மையான நிகழ்களின் விவரிப்புகள் கூறுகின்றன. புனைவைவிட அதுவே வலிமையானது என்பதைக் கூறவே இதுக்குறித்து இங்கே பேசுகிறோம்.


(16/2/2022- முகநூலில் எழுதியது?

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.

ஸ்டாலின் தி  சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ர...