வியாழன், 30 மே, 2024

விவேகானந்தர் பாறை என்னும் கட்டுக்கதையும் மோடியின் தியான நாடகமும்.

ஸ்டாலின் தி 

பத்தாண்டுகளாக பல்வேறு வேடங்களை தரித்து நின்ற மோடி, தியான வேடம் போட கன்னியாகுமரி கடலில் உள்ள பாறைத்திட்டுக்கு வந்துள்ளார். முன்பொருமுறை, இமயமலைக் குகையில் இப்படியான தியான நாடகம் நடத்தி கேலியாகிப் போன மோடி இப்போது முக்கடல் கூடும் குமரிக்கு வந்துள்ளார். பக்குவத்திற்கு தயாராகும் மனப்போக்கு உடையவர்களுக்கு தான் தியானம் சாத்தியமாகும். மோடிக்கு அந்த கொடுப்பினை எப்போதும் கிடைக்காது. எந்நேரமும் சூது, சூழ்ச்சி, வன்மம், வன்முறை போன்ற தீயவற்றிலேயே மனத்தை ஆழ்த்தி வைப்பவர்களுக்கு தியானம் எட்டாக்கனியாகும். அதுவொருபுறம் இருக்க, மோடி தம்முடைய தியான நாடகத்திற்கு இப்போது தேர்வு செய்துள்ள இடம் முக்கியமானது. பூர்வகுடி மக்களின் பகவதியம்மன் வழிபாட்டு தலமாகவும், தமிழ் கிறித்தவ மீனவ மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் இருந்துவந்த பாறைத் திட்டை சுமார் அறுபதாண்டுகளுக்கும் முன்பாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் அடாவடியாக ஆக்கிரமித்தது. அந்த ஆக்கிரமிப்புக்கு இந்துத்துவ கும்பல் கையிலெடுத்த ஆயுதம், தியானம். விவேகானந்தர் தியானம் செய்த இடம் என்று கூறித்தான் அந்த இடத்தை ஆக்கிரமித்தது ஆர்.எஸ்.எஸ்.


கல்கத்தாவில் 1863 ஜனவரி 12 இல் பிறந்தவர் நரேந்தர நாத் தத்தா. கிறித்துவ பள்ளியின் மானவனாக இருந்த நரேந்திரனுக்கு மனப்பிறழ்வு நோயாளியான ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிடித்துப்போக, அவரிடம் சீடனாக சேர்ந்தார். மனநோயும் புற்று நோயும் தாக்கியதில் ராமக்கிருஷ்ணர்  1886 இல் உயிரை விட்டார். அதற்கும் அடுத்த ஆண்டான 1887 இல் சன்னியாசம் பெற்ற நரேந்திர நாத் தத்தா விவிதிஷியானந்தா, சச்சிதானந்தா, என்றெல்லாம் பெயர்களை மாற்றிக்கொண்டார். இறுதியாகத்தான் விவேகானந்தர் என்னும் பெயர். இந்தியா முழுவதும் ராமக்கிருஷ்ணரின் கொள்கையை பரப்பிய பின் அமெரிக்காவுக்கு பரப்பச் சென்றார் என்பார்கள் இந்துக்கள். ஆனால், உண்மை வேறு. நாடு முழுவதும் விவேகானந்தா சுற்றினாலும் யாரும் அவரைக் கண்டுகொண்டதாக அவர் கருதவில்லை. 'நாடெங்கும் அலைந்த என்னை இந்தியர் யாரும் கண்டுகொள்ளவேயில்லை' என்று மனம் நொந்துபோய்தான் அவர் அமெரிக்கா சென்றதாக அவரே கூறினார். அவரை அமெரிக்காவுக்கு அனுப்பும் செலவை ஏற்றுக்கொண்டவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி. இந்த பாஸ்கர சேதுபதி 'கமுதி கோயிலில் நாடார்கள் நுழைய நிரந்தர தடைவிதிக்க வேண்டும்' என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்று தீண்டாமையை நிலைநாட்டினார் என்பது தனி வரலாறு. அமெரிக்கா செல்லுவதற்கான கப்பல் பயணத்தில்
கிரேக்கரான டபிள்யூ. ரைட் என்பவரிடம் நட்பு கொண்ட விவேகானந்தர், அவருடைய சிபாரிசில்தான் 1893 இல் அமெரிக்காவில் நடைப்பெற்ற மதபிரதிநிகளின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். இதற்கிடையில்தான் 1892 இல், கன்னியாக்குமரியில் விவேகானந்தர் தியானம் செய்தார் என்பதாக கூறப்படுகிறது. உண்மையில் அது ஒரு கட்டுக்கதை. 

விரக்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றித் திரிந்த விவேகானந்தர் 1892 வாக்கில் தென்னிந்திய பக்கம் வந்து சேர்ந்தார் என்பது உண்மைதான். மைசூர் மகாராஜா, இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி போன்றோரிடம் உதவி கேட்டுதான் அவர் வந்தார். உதவிகளைப் பெற்றுக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தேசங்களில் சுற்றிவிட்டு 1897 இல்தான் அவர் இந்தியா திரும்பினார். அமெரிக்கா புறப்படும் முன்னர் கன்னியாகுமரி கடலில் குதித்து, சுமார் அரைக் கிலேமீட்டர் (சுறா மீன்களைக் கடந்து!) நீந்தி பாறையில் ஏறி, அங்கே மூன்று நாள்கள் தியானத்தில் ஆழ்ந்தார்' என்பது பிற்காலத்தில் இந்துத்துவ கும்பல் கட்டிவிட்ட கதை. விவேகானந்தர் அங்கே தியானம் செய்ததை அறிந்தவர் என்று எவருமில்லை. விவேகானந்தரும் கூட தியானத்தை அறிந்தவர் கிடையாது. அவருடைய பரமார்த்த குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் தம்முடைய நோய்வாய்ப்பட்ட மனம் மற்றும் உடலால் மூர்ச்சை ஆகிவிடுவதையே தியானம் என நம்பினார்.‌ அவரிடம் எந்த இலட்சணத்தில் விவேகானந்தர் தியானத்தைக் கற்றிருக்க முடியும். பௌத்த-சமண மரபான தியான முறையை தங்களுடைய அடையாளமாக ஆக்கும் பிராமணிய மரபை ஏற்றவரானதால் விவேகானந்தருக்கும் தியான அடையாளம் பூசப்பட்டது, அவ்வளவுதான். 

தற்போது விவேகானந்தர் பாறை என்று கூறப்படும் பாறையின் முந்தைய பெயர் 'பகவதியம்மன் பாறை.' பௌத்த பெண் தெய்வ மரபில் பகவதியம்மன் என்பதுவும் ஒன்று. பகவன் புத்தரின் வழியில் சென்ற பெண்பால் அறவோருக்கு 'பகவதி' என்பது பொதுப்பெயர். தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் கண்ணகி உள்ளிட்ட பூர்வகுடி பெண் தெய்வங்கள் பகவதி அம்மன்களாக வழிபடப்படுகின்றனர். கன்னியாகுமரி பாறையிலும் பகவதியம்மன் வழிபாடு இருந்து வந்தது. 'திரி பாதை' அம்மன் பாறை என்னும் அவ்விடத்தை 'ஸ்ரீ பாத அம்மன் பாறை' என்றும் திரிந்தனர். கிறித்துவம் தழுவிய மீனவர்கள் அதே பாறையில் ஒரு பகுதியில் சிலுவையை நட்டு வழிபட்டு வந்தனர். இவற்றையெல்லாம் கவனித்த உள்ளூர் மற்றும் கேரள இந்துத்துவ கும்பல் வெகுமக்கள் வசமிருந்த அந்த பாறையை ஆக்கிரமிப்பு செய்ய முடிவெடுத்தனர். வழக்கம் போலவே கதைக் கட்டினர்; 'விவேகானந்தர் தியானம் செய்து ஞானம் பெற்ற இடம் இது.' அதிலும், அவர்கள் விவேகானந்தர் தியானத்தில் உட்கார்ந்த நாளாக கூறிய தேதி முக்கியமானது. அந்த தேதி டிசம்பர் 25(1892).‌ அதாவது, கிறிஸ்துமஸ் தினம். அந்தக் கதையைத் தொடர்ந்து அங்கே வழிபட்டு வந்த சிலுவை 'மர்மமான முறையில்' கடலில் கிடந்தது. கட்டுக் கதையின் மூலம் மற்றவர்களின் இடத்தை ஆக்கிரமிக்கும் இந்து கலாச்சார மரபின்படி கன்னியாகுமரி பாறையும் ஆக்கிரமிப்பு எல்லைக்குள் கொண்டுவரப்பட்டது.

1863 இல் பிறந்த விவேகானந்தருக்கு 1963 ஆனது நூற்றாண்டு. அதை சாதகமாகக் கையிலெடுத்தார்கள் இந்துத்துவவாதிகள். 'விவேகானந்தர் தியானம் செய்து ஞானம் பெற்ற கன்னியாகுமரி பாறையில் அவருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் ' என்கிற கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்தது. இராமகோபாலன் போன்ற தமிழ்நாட்டு சங்பரிவார கும்பலும், சென்னை ராமகிருஷ்ண மடமும் கைக்கோர்த்தன. ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வால்கர் இந்த கரசேவைக்காகவே மகாராஷ்டிரா பார்ப்பனரான 'ஏக்நாத் இராமக்கிருஷ்ண ராணடே' என்பவரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார். ஏக்நாத் ராணடே ஆர்.எஸ்.எஸ்.இன் தீவிர களப்பணியாளர். ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட அடுத்த ஆண்டே(1926) அதில் தம்மை இணைத்துக் கொண்ட அதிதீவிர இந்து வலதுசாரி அவர். கன்னியாகுமரிக்கு அவர் வந்ததும் பதற்றமும் வந்தது. உள்ளூர் கிறித்துவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.‌ஆனால், காவல்துறை அவர்களை ஒடுக்கியது. மாநில அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு 'கத்தோலிக்கர்களுக்கும் அந்த பாறைக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று பூர்வகுடி மக்களை அந்நியமாக்கி, விவேகானந்தர் பாறை என்னும் கட்டுக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது.  
அதேவேளை, அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டவும் அனுமதிக்கவில்லை. ஏக்நாத் ராணடே, லால்பகதூர் சாஸ்திரி மூலம் நேருவைப் பிடித்து அனுமதி வாங்கினார். ஆர்.எஸ்.எஸ். இன் இந்த திட்டத்தை நிறைவேற்ற அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து ரூ.34 இலட்சத்தை நிதியாக அளித்தன. கூடவே, நாடெங்கிலும் பல இடங்களில் நிதிகளை இந்துத்துவ கும்பல் திரட்டியது.1964 இல் கட்டுமானப்பணி துவங்கியது. 1970 செப்டம்பர் 2 ஆம் நாளில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில், அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை திறந்துவைத்தார். ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தை ஒன்றிய, மாநில, அரசுகளின் துணையுடன் நடத்திக்காட்டிய ஏக்நாத் ராணடே கன்னியாகுமரியில் 'விவேகானந்தா கேந்திரா' என்னும் சங்பரிவார துணை அமைப்பை நிறுவினார். தென் தமிழகத்தில் இந்துத்துவ கருத்தியல் பரவுவதற்கு இந்த அமைப்பு முக்கிய பங்காற்றியது.

இவ்வாறாக, ஒரு கட்டுக்கதையின் மூலம் மற்றோரின் இடத்தை இந்துத்துவ கும்பல் அபகரித்த வரலாற்றை உடைய இடத்தில்தான் இன்றைக்கு, தியான நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் மோடி. நரேந்திர தத்தா என்னும் விவேகானந்தருக்கும் நரேந்திர மோடிக்கும் பெயரில் மட்டுமல்ல, இருவருமே இந்துத்துவ கும்பலால் ஊதிப்பெருக்கி காட்டப்பட்ட பிம்பங்கள்தான் என்பதிலும் பொருத்தமானவர்கள். இந்த பொருத்தத்தை உணர்ந்துதான், மோடி கன்னியாகுமரி பாறைக்கு வந்திருப்பார் என்று தோன்றுகிறது.






ஞாயிறு, 19 மே, 2024

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி 

பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20).

இலங்கை சென்று பௌத்தம் தழுவிய பண்டிதர், இந்திய மண்ணில் பௌத்தத்தின் வேர்களை ஆராயத்துவங்கினார். அந்த ஆராய்ச்சியின் முடிவு, நாகரீகமற்றவர்கள், கீழானவர்கள் என்றெல்லாம் முத்திரைக் குத்தப்பட்ட சேரி மக்களின் வாழ்க்கையில் வந்து நின்றது. அதுநாள் வரை உதிரிமக்காளக கருதப்பட்டுவந்த சேரி மக்களின் வரலாறு இந்திய மண்ணின் தனித்துவமான பௌத்ததில் தொடங்குவதை அவர் கண்டடைந்து மீட்டெடுத்தார். தமது ஆழ்ந்த தேடல் ஞானத்தால் அவர் வரலாறற்ற மக்களாய் கருத்தப்பட்டவர்களுக்கு பூர்வ வரலாற்று மேடையமைத்தார். 

பண்டிதரின் வருகை இந்திய பௌத்த மீட்டுருவாக்க வரலாற்றின் புதிய அத்தியாங்களை உருவாக்கியது; அவரின் சிந்தனையாலும் செயற்பாட்டாலும் பௌத்தம் மறுஉயிர் பெற்றது.

பண்டிதரை வரலாறு உருவாக்கியது; வரலாற்றை பண்டிதர் மீளப்பெற்றார். அவர் பெற்ற ஞானத்தின் வழியே ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான புதிய வெளிச்சம் பிறந்தது. வேஷபிராமணியத்தின் கண்களைக் கூசவைத்த அப்பேரொளி, அதுவரை இருண்டிருந்த இந்திய அறத்தினை மிளிரச் செய்தது. 

பண்டிதரின் பணிகள் பண்டிதரோடு நிற்கவில்லை; இன்றும் பண்டிதரின் பேரொளி இருளைத் தேடித் தேடி விழுங்கிக் கொண்டிருக்கிறது. இருள் அகற்றி விடிவைக் கொடுக்கும் வல்லமைக் கொண்ட அப்பேரொளியில் இச்சமூகம் விடுதலையைக் காணும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


#மே20
#பண்டிதர்அயோத்திதாசர் #பிறந்தநாள் 
#பௌத்தமறுமலர்ச்சி.

ஞாயிறு, 5 மே, 2024

ஃப்ராய்டும் பௌத்தமும்.



ஸ்டாலின் தி 


சுமார் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கும் முன் இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் மனித மனத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை நிகழ்த்தியது. துன்பங்களை களைவதற்கு மனமே மையப்புள்ளி என்பதை பௌத்தம் நிரூபித்தது. ஆழ்மன விழிப்புணர்வே துன்பங்களை உணரவும் தீர்க்கவும் செய்யும் என்பதை தமது சுய ஆராய்ச்சியின் மூலம் புத்தர் கண்டடைந்தார்.

ஆஸ்திரியாவில் 1856 இல் பிறந்தவர் சிக்மன்ட் ஃப்ராயுட். உளவியல் மருத்துவரான ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு முறையை நவீன அறிவியலில் கொண்டுவந்தார். (இந்த உளப்பகுப்பாய்வைத் தான் ஈராயிரமாண்டுகளுக்கும் முன் புத்தரும் பௌத்தர்களும் உருவாக்கினார்கள்.)
ஃப்ராய்ட் தம்முடைய தந்தையின் இறப்பின் சமயத்தில் கடும் மன நெருக்கடிக்காளாகினார். அப்போதுதான் அவர் தம் மனதை உற்று நோக்கினார். அதுவரை அவரால் காணப்படாமல் இருந்த அவரது ஆழ்மன உலகிற்குள் நுழைந்தார். உள்ளத்தை பகுத்தாய்வு செய்ததன் மூலம் தமது துயரத்திலிருந்து அவர் விடுபட்டார். அதன் மூலம் "உற்று நோக்குதலே, துயரங்களிலிருந்து விடுபட வழிக் கொடுக்கும்" என்பதை தமது சுய பரிசோதனை மூலம் கண்டறிந்தார். இந்த, 'மனத்தை உற்று நோக்குதல் முறை'யை பௌத்தம் நெடுங்காலத்திற்கும் முன்னவே இங்கே பயிற்றுவித்திருந்தது.

பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனியம் தகுதிகளை வரையறுத்துக் கொண்டிருந்த போது, அதை தமது தத்துவத்தால் உடைத்தது பௌத்தம். "பார்ப்பனரோ பறையரோ, அவர்களின் மனம் தான் அவர்களின் அறிவை தீர்மானிக்கிறது. அறிவே ஒருவரின் குணங்களையும் இருப்பையும் தீர்மாணிக்கிறது" என்பதே பௌத்தம். மனம் என்பதோ புற உலகின் கற்பித்தலில், புற உலகை உணர்தலில் உருவாகிறது. கற்பித்தலோ உணர்தலோ இல்லாமல் மனம் இல்லை. இதையே- பௌத்த தத்துவத்தின்- நவீன உளப்பகுப்பாய்வுக் குரலில் "மனிதர்கள் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றார்கள். இவ்வுலகில் அவர்கள் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல நல்லது, கெட்டது எனப் பகுத்தறியும் திறன் பெறுகிறார்கள்" என்று கூறுகிறார் ஃபராய்ட்.

(மே 6: சிகமன்ட் ஃப்ராய்டின் பிறந்த நாள்.)


புதன், 1 மே, 2024

அண்ணலும் தொழிலாளர் வெற்றியும்.

ஸ்டாலின் தி 


முதன் முதலில் மே 1 ஆம் தேதி உலகத் தொழிலாளர்களுக்கான தினமாக வழி மொழியப்பட்டது 1890 ஆண்டில். அதாவது அண்ணல் பிறப்பதற்கும் முதல் ஆண்டு. அதற்கும் முதலாம் ஆண்டில்தான் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சோசலிச கொள்கையுடைய 'சர்வதேச தொழிலாளர் பேரவை' கூடியது. 1820களுக்குப் பிறகு உலகெங்கும் தோன்றிய தொழிலாளர் போராட்டங்களில் மையக்கோரிக்கையாக 'வேலை நேரம்' குறிப்பிடப்பட்டிருந்தது. 12 மணி முதல் 18 மணிநேரங்கள் வரை தொழிலாளர்கள் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்துதான் இப்போராட்டங்கள் வலுத்தன. சரியாகச் சொல்லவேண்டுமானால் வேலை நேரத்திற்கான போராட்டங்களே உலகத்தொழிலாளர்களை அணித்திரட்டியதில் முக்கிய பங்காற்றியது. ஏனெனில், உலகெங்கும் தொழிலாளர்கள் நேரகாலம் இல்லாமல் உழைக்க வைக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.  

இங்கிலாந்தில் 10 மணிநேரம் வேலை நேரமாக ஆக்கப்படவேண்டுமென்று போராட்டம் எழுந்தது. பிரான்சில் நெசவுத்தொழிலாளிகள் 1830 களில் பெரும் போராட்டங்களில் இறங்கினர். தொடர்ந்து அமெரிக்க கண்டங்கள், ஐரோப்பா, ஆசிய, ஆஸ்திரேலிய பிரதேசங்களிலும் போராட்டங்கள் வலித்தன. சிகாக்கோவில் 1886, மே 3 ஆம் நாள் நடந்த போராட்டத்தில் காவல்துறையால் நடத்தப்பட்ட வன்முறையில் நான்கு தொழிலாளர்கள் பலியாக்கப்பட்டார்கள். அப்போராட்டத்தை நடத்தியவர்களாக கைது செய்யப்பட்ட  தொழிலாளர்களின் முக்கியத்தலைவர்களுக்கு மரணதண்டனைக் கொடுக்கப்பட்டது.  அதற்கும் அடுத்த ஆண்டான 1887 நவம்பரில் அமெரிக்காவின் தொழிலாளர் தலைவர்கள் நான்கு பேருக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டது. போராட்டக்களங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டார்கள். இதனையெல்லாம் தொடர்ந்துதான் 1889 ஜூலை 14 ஆம் தேதி பாரிசில் சர்வதேச தொழிலாளர் காங்கிரஸ் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அறிஞர் ஏங்கெல்ஸும் பங்கேற்றார்.

தொழிலாளர் தலைவர் கார்ல் மார்க்ஸால் கோரப்பட்ட எட்டு மணிநேர வேலை நேரத்திற்கான போராட்டத்தை உலகெங்கும் எடுத்துச் செல்வது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அந்த போராட்ட இயக்கம் 1890 மே 1 ஆம்தேதி துவக்கப்படவேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. அதுவே மே தினத்தின் தோற்றுவாய் ஆனது. 

இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் முதல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக 1942 இல் தேர்வு செய்யப்பட்டார் அண்ணல். அப்போதுதான் அவர் எட்டுமணி நேர வேலைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். பெரும் போராட்டங்களால், ஏராளமான உயிர் இழப்புகளால்,  உலகில் கிடைக்கப்பட்ட உரிமை அண்ணலின் கூர்மையான ஞானத்தாலும், தொழிலாளர்குறித்த அக்கறையினாலும் இங்கே எளிதாக ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் கொண்டுவந்தார். 

மேலும், தொழிற்சங்க அங்கீகரம், தொழிலாளர்களுக்கான மருத்துவ விடுப்பு, வார விடுமுறை, கூடுதல் நேர(Over Time) உழைப்புக்குத் தனி ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, பணி உத்தரவாதம், குறைந்த பட்ச ஊதிய சட்டம் போன்ற பல உரிமைகள் அண்ணலின் வழியாக வந்தன. 

 அண்ணல் 'தொழிலாளர்கள் அதிகாரம் பெறாமல் அவர்களின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை' என்றார். இந்திய தொழிலாளர்களின் வெற்றி ஜாதியத்தையும் முதலாளித்துவத்தையும் வீழ்த்துவதில்தான் இருக்கிறது என்பதை எப்போதோ சொன்ன தீர்க்க தரிசிதான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.

மேதினம்: அண்ணலின் அடிச்சுவட்டில்.


ஸ்டாலின் தி

1800 களில் ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்களின் வேலை நேரத்தை குறைக்கவேண்டுமென்று போராடிக்கொண்டு இருந்தனர். ஆஸ்திரேலிய, ஆசியத்தொழிலாளர்களிடமும் இது பரவியது. தொழிலாளர்கள் உற்பத்திக்கான கருவிகள் எனவே அவர்களுக்கு ஓய்வு முக்கியமல்ல என்பதையே கருத்தாய்க்கொண்டிருந்தது முதாலாளிச்சமூகம். சுமார் 18 மணி நேரம் கூட தொழிலாளர்கள் தொழிச்சாலைகளில் உழைக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், தொழிலாளர்கள் வேலை நேரத்தைக்குறைத்தே ஆக வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்கள். சிக்காக்கோவில் பெரும் போராட்டம் வெடித்தது.   முக்கிய தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். மார்க்ஸ் இறந்த ஆறு ஆண்டுகள் கழித்து 1889, ஜூலை 14 அன்று பாரீஸ் நகரில் சர்வதேசியத் தொழிலாளர்களின் சர்வதேசிய தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.இதில் 18 நாடுகளிலிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஏங்கெல்ஸ் அதில் முக்கியமானவர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டுமணிநேரமாக ஆக்கவேண்டுமென்ற முழக்கத்தை1890 மே 1 அன்று அனைத்துலக தொழிலாளர்கள் இயக்கமாக முன்னெடுக்கவேண்டுமென்று அறைக்கூவல் விடப்பட்டது.அதுவே சர்வதேசிய தொழிலாளர்தினம் எனப்பட்டது. 

தொழிலாளர்களின் வேலைநேரம் அவ்வளவு எளிதாகக் குறைக்கப்படவில்லை. இம்முழக்கம் ஒலித்த இடங்களிலெல்லாம் ரத்தம் கொட்டியது. தொழிலாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். ரத்தக்கறையுடன்தான் பல இடங்களிலும் வேலைநேரம் குறைக்கப்பட்டது ஆனால் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் எட்டு மணிநேரமாக சட்டமாக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு ஜனநாயக நாயகரின் சிந்தனையும் செயலும் இருந்தன; ஆம், ஓர் மேதையின் கையெழுத்து இதை சாத்தியமாக்கியது. அப்படி, தொழிலாளர் வேலை நேரத்தை சட்டமாக்கிய  மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள்தான்.

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் 1942 லிருந்து 1946 வரை தொழிலாளர் அமைசராக இருந்தார் அண்ணல். இப்போதும் கூட சிலர் அவரை முதலாளித்துவ ஆதரவாளர் என்று உளறிக் கொட்டுவதுண்டு. ஆனால் அவர் தொழிலாளர்களின் மேல் எவ்வளவு அக்கறைக்கொண்டிருந்தார் என்பதை அவரின் வரலாற்றை அறிந்தவர்களே அறிவார்கள். அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்த போது, 1945 ஆம் ஆண்டு நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்த முத்தரப்பு மாநாட்டில் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேரம் வேலை நேரத்தை சட்டமாக்கினார். 1946 பிப்ரவரி 26 இல் தொழிற்சங்கங்களுக்கு கட்டாய அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை கொண்டுவந்தார். 

அவர் தீண்டப்படாதவர்களுக்கு மட்டுமே சிந்தித்தார், உழைத்தார் என்று சொல்லி அவரை நிராகரிக்கப் பார்ப்பவர்கள் இவ்வரலாற்றையெல்லாம் அறியாதவர்கள் அல்லது உண்மையான வரலாற்றை திரிப்பவர்கள்.
அண்ணலை ஜாதிப்பாராட்டும் தொழிலாளர்கள் விரும்பவாய்ப்பில்லை. ஆனால் அண்ணல் அவர்களுக்குமான உரிமையை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.

ஸ்டாலின் தி  சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ர...