வியாழன், 27 ஜூன், 2024

ஐயா அன்பு பொன்னோவியம்.


ஸ்டாலின் தி 


மலேசியாவில் 1923 இல், அன்பு பெருமாள்பிள்ளை-கங்கையம்மாள் தம்பதியருக்கு மகனாய் பிறந்த  பொன்னோவியம் அவர்கள்,1933 இல் தம்முடை தாத்தாவுடன் தமிழகம் வந்தார். சென்னை எழும்பூர் ஓவியக்கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், இளம் வயது முதலே சமூக சிந்தனையில் வளர்ந்துவந்தார். இந்திய தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்து கடமையாற்றி 1951 இல் அருங்காட்சியக பொறுப்பு அலுவலராக உயர்வு பெற்றார். அவருடைய வரலாற்று ஆர்வமும் சமூக விடுதலைத் தாகமும்  தலித் சமூக-அரசியல் தரவுகளை  சேகரிக்கவைத்து. பண்டிதர் மற்றும் அவர் காலத்திய, அதற்கும் பிந்தைய கால சிந்தனையாளர்களின் பணிகள், கருத்துகள் மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதில் பெரும் பங்காற்றினார். தாங்களே சேரியின் ரட்சகர்கள் என்று புளுகிக் கொணடிருந்த இந்து நாத்தீகர்களோடு தமது எழுத்துத் திறனால் கடுமையாக கருத்துப் போரிட்டு வென்றார். 

*தலித் வரலாற்று ஆய்வாளரும் பௌத்த அறிஞருமான அன்பு பொன்னோவியம் அவர்களின் நினைவு நாள்-ஜூலை28.

வி.ஜி.வாசுதேவப்பிள்ளை.





ஸ்டாலின் தி


1878 இல்  தலித்(பறையர்‌) குடும்பத்தில் பிறந்தவர் வி.ஜி.வாசுதேவப் பிள்ளை.‌ இசை,தமிழ், வடமொழி ஆகியவற்றில் புலமைத்துவம் பெற்றவர். இந்தியாவில் நகராட்சியில் பொறுப்பு வகித்த முதல் அட்டவணை சமூகத்தவராவார். சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரலில் உயர்பதவி வகித்து, பிறகு கடப்பாவில் கௌரவ நீதிபதியாக இருந்தவர். சென்னை மாகான சட்டமேலவை உறுப்பினராக இருந்து, பூர்வகுடி மக்களின் கல்வி, சுகாதாரம், நில உரிமை, தொழில் வாய்ப்பு போன்ற தளங்களில் சிறப்புற கடமை ஆற்றியவர். 

முதுபெரும் பூர்வகுடி ஆளுமையும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில், வ.உ.சிதம்பரநாதருக்கும் முன்னவே கப்பல் வைத்து ஏற்றுமதி-இறக்குமதி செய்த வணிகருமான இராவ்பகதூர்‌ பெ.ம.மதுரைப்பிள்ளை அவர்களின் மகளான மீனாட்சி அம்மாளுடன் திருமணம் செய்துகொண்டார் வி.ஜி.வாசுதேவப்பிள்ளை. மீனாட்சி அம்மாள்-வி.ஜி.வாசுதேவப் பிள்ளை இணையரின் அருமை மகள்தான் அன்னை மீனாம்பாள் அவர்கள்; அருமை மருமகன் தந்தை சிவராஜ் அவர்கள்.  

பூர்வகுடி சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஓயாமல் உழைத்த ஐயா வி.ஜி. வாசுதேவபிள்ளை அவர்கள் 1937 ஆம் ஆண்டு, ஜூன் 28 ஆம் நள் தம்முடைய 59 ஆவது வயதில் இயற்கையடைந்தார்!

செவ்வாய், 18 ஜூன், 2024

ஆதிதிராவிடர் எனும் பெயரடையாள வரலாற்றில் நீதிக்கட்சிக்கு எந்த இடம்?



ஸ்டாலின் தி



"ஆதிதிராவிடர் அடையாளத்தை கொடுத்ததே நீதிக்கட்சிதான்" என்று திராவிட இயக்கத்தினர் குறிப்பாக, அதிலுள்ள சாதி இந்து அறிவாளிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். இது உண்மையா? தலித்துகள் நீதிக்கட்சி வரும்வரை அடையாளமற்று கிடந்தார்களா?

இல்லை. ஆதிதிராவிடர் என்கிற அடையாளத்தை ஆதிதிராவிடர்கள்தான் உருவாக்கினார்கள். 1881 இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேரி மக்களை தனி அடையாளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்கிற குரல் சேரி ஆளுமைகளிடம் எழுந்தது. அவ்வாளுமைகளில் முதன்மையானவர் பண்டிதர் அயோத்திதாசர். சாதியற்ற தமிழர், சாதியற்ற திராவிடர், ஆதிதிராவிடர் போன்ற அடையாளங்கள் முன்வைக்கப்பட்டன. சாதியின் பெயரால் தமிழ் சாதி இந்துக்கள் அடையாளமிட்டுக்கொண்டிருந்த அன்றைய காலக்கட்டத்தில் சாதி பேத அடையாளத்தை ஒதுக்க நினைத்த தலித் தலைவர்களும், தலித் அறிஞர்களும் சாதி பெயரற்ற ஓர் அடையாளத்தை விரும்பினார்கள். அவ்வகையில்தான் தமிழர், திராவிடர்போன்ற அடையாளங்களை அவர்கள் தேர்வு செய்தனர். மொழிரீதியான சொல்லாடலில் தமிழர் என்பதும் அரசியலில் சொல்லாடலில் திராவிடர் என்பதும் அடையாளச் சொற்களாக எடுத்தாளப்பட்டன. பண்டிதர் தாம் நடத்திய இதழுக்கு தமிழன் என்றும் அமைப்புக்கு ஆதிதிராவிட மகாசபை என்றும் பெயரிட்டது உதாரணம்.

இதைத் தொடர்ந்து 1882 இல் ஜான் ரத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்கிற அமைப்பை உருவாக்கினார். தொடர்ந்து அவர் திராவிட பாண்டியன் என்னும் பத்திரிக்கையை கொண்டுவந்தார்; பண்டிதர் அதன் துணை ஆசிரியராக பணியாற்றினார். சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகு, நீலகிரியில் 1891 ஆம் ஆண்டு திராவிடர் மகாசபை சார்பில் மாநாடு நடைபெற்றது. பத்தம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற இம்மாநாட்டின் தலைவர் திராவிட மகாசபையின் தலைவர் பண்டிதராவார். திராவிட மகாசபையானது 1892 இல் ஆதிதிராவிட மகாசபை என்று பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆதிதிராவிட அடையாளம் சேரி மக்களிடம் குறிப்பாக, கற்றோர் தரப்பில் புதிய அடையாளமாக வளர்ந்துவந்தது. 1907 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையிலிருந்து
வெளிவந்த ஓர் பத்திரிக்கையின் பெயர் ஆதிதிராவிட மித்ரன். அதே இலங்கையிலிருந்து
1919 இல் வந்த இன்னொரு பத்திரிக்கைக்கு 
'ஆதிதிராவிடன்' என்று பெயரிடப்பட்டது. இவ்விரண்டும் தலித்துளால் நடத்தப்பட்ட பத்திரிக்கைகள்.

மாண்டேகு-சேம்ஸ்போடு ஆணையத்திடம்1917 இல் தலைவர்கள் எம்.சிராஜா, வி.பி.வேணுகோபால் பிள்ளை, கே.முனுசாமி பிள்ளை, வி.பி.வாசுதேவபிள்ளை, வி.ராஜரத்னம்பிள்ளை, எம்.சண்முகம்பிள்ளை உள்ளிட்டோர் கையொப்பமிட்டு அளித்த அறிக்கையிலும் ஆதிதிராவிடர் என்கிற அடையாளமே வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கும் அடுத்தாண்டான 1918 இல் ஆதிதிராவிடர் மகாஜன சபையானது, ஆதிதிராவிடர் அடையாளத்தைக் கோரி அரசிடமும் மக்களிடமும் தொடர் பிரச்சாரம் செய்துவந்தது.

இவற்றைத் தொடர்ந்து 1921 மக்கள் தொகை கணக்கெடுப்பில், சென்னை மகாணத்தின் அன்றைய சுமார் 63 இலட்சம் தலித்துகளில் சுமார் 15 ஆயிரம் பேர் தங்களை ஆதிதிராவிடர் என்று கூறி பதிவு செய்தனர்.

இவ்வரலாற்றின் தொடர்ச்சியாக, நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள், சேரிமக்களின் பொது அடையாளப்பெயராக 'ஆதிதிராவிடர்' என்கிற பெயரை சூட்ட வேண்டுமென்று சென்னை சட்டமன்றத்தில் 1922 ஜனவரி 20 இல் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். நம்பெருமாள் செட்டியார் அவர்கள் தீர்மானத்தை வழிமொழிந்தும் எம்.சி.மதுரைப்பிள்ளை அவர்கள் தீர்மானத்தை ஆதரித்தும் உரையாற்றினார்கள். இறுதியில் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. அதன்படி 1922 மார்ச் 22 இல், ஆதிதிராவிடர் பெயரை அங்கீகரித்து அரசு ஆணையிட்டது.  

அதாவது ஆதிதிராவிடர் எனும் அடையாளப்பெயர் தலித்துகளிடம் உருவாகி சுமார் நாற்பதாண்டுகளாக தலித் அறிஞர்களால் தொடர்ந்து பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்ட பிறகுதான் அரசின் ஒப்புதலை பெறமுடிந்தது. இவற்றுக்குப் பின்னால், தலித் சுயமரியாதை உணர்வும், சாதி இழிவுமீதான எதிர்ப்புக்குணமும், விடாமுயற்சியும், தீர்க்கமான பார்வையும் இருந்திருக்கின்றன.
இத்தனை அம்சங்களைக் கொண்ட சுமார் அரைநூற்றாண்டு வரலாற்றை மறைக்கும் விதமாக, நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தாமாகவே முன்வந்து ஆதிதிராவிடர் அடையாளத்தைக் கொடுத்தது என்பது போன்ற பிரச்சாரமானது தலித் வரலாற்றின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, சுயமரியாதைக்கான போராட்டத்தின் மீதான அலட்சியமும் ஆகும்.  

சரி.நீதிக்கட்சி ஆதிதிராவிடர் என்பதை விரும்பியதேயில்லையா என்று யாரேனும் கேட்கலாம்.
நீதிக்கட்சி எப்போது ஆதிதிராவிடர் என்பதை முக்கியமானதாக கருதியது என்றால், வட்டமேசை மாநாடுகளில் அண்ணலிடம் நிலைகுலைந்து போயிருந்த காந்தி அவர்கள் 'ஹரிஜன்' எனும் அடையாளத்தை எடுத்துக்கொண்டு தலித்துகளிடம் வந்தார். அப்போது அந்த அடையாளத்தை அண்ணல் போன்றவர்கள் ஏற்கவில்லை. காந்தியின் ஹரிஜன அடையாள அரசியலுக்கு எதிரான சிந்தனைகள் இந்தியா முழுவதும் தலித்துகளிடம் எழுந்தன. அதேநேரத்தில், தமிழகத்தில் தலித்துகளை தங்களுடைய பார்ப்பரனல்லாதோர் அரசியலுக்கு பலமாக பயன்படுத்த வேண்டுமென்கிற கட்டாயமும் நீதிக்கட்சிக்கு வந்திருந்தது. 

அந்நிலையில்தான், 1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு 4 இல், பெரியார் ஈ.வெ.ரா தலைமையில் திருவாரூரில் நீதிக்கட்சியின் 16வது மாகாண மாநாடு நடைபெற்றது. அம்மாநாடு 'அரிஜன்' எனும் வார்த்தைக்கு மாற்றாக 'ஆதிதிராவிடர்' என்ற பெயரை பயன்படுத்த வேண்டுமென்று அரசாங்கத்தையும், மக்களையும் கேட்டுக்கொண்டது. அதாவது, ஏற்கனவே தலித்துகளிடம் அறுபதாண்டுகளாக புழக்கத்திலிருந்த, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ஒப்புதல் அளித்த அடையாளத்தையே பெரியாரின் நீதிக்கட்சியும் பரிந்துரை செய்தது என்பதே வரலாறு. 

(முகநூலில் 2019 ஜூன் 17 இல் எழுதப்பட்ட பதிவு)

திங்கள், 17 ஜூன், 2024

மாவீரர் ஐயன்காளி.

  
ஸ்டாலின் தி 


கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் வெங்கனூர் என்னும் சிறுகிராமத்தில் 1863-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி அய்யன்-மாலா தம்பதிகளுக்கு காளி பிறந்தார்.  காளி, அப்பாவினுடைய பெயரைச் சேர்த்துக் கொண்டு அய்யங்காளி ஆனார்.

அய்யங்காளி பலம் பொருந்தியவாராவும், உற்சாகம் மிகுந்தவராகவும் இருந்தார். நாட்டுப்புறக் கலைகளிலும், கால்பந்து, மட்டைப்பந்து விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர் சிறந்த உடற்பயிற்சி வீரராகவும் இருந்தார்.

ஒடுக்கபட்ட மக்கள் பொது இடங்களில் நடமாடக் கூடாது என தடுக்கபட்டிருந்த காலம் அது. அதே போல் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலாடையோ, தோள் துண்டோ, தலைப்பாகையோ அணியக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் அன்று விதிக்கபட்டிருந்தது. 

அய்யங்காளின் முதல் புரட்சி இந்த மாதிரி ஆடைகளுடன் பொது இடங்களில் செல்வது தான். அக்காலத்தில் வெளுத்த வேட்டி கட்டுவதே சமூக எதிர்பை காட்டுவதின் அடையாளம் தான். வெள்ளை அரைக்கை பணியன் அணிந்து, தோளில் துண்டும், தலையில் வட்டக்கட்டுமாக எப்போதும் தோற்றமளித்தார் அய்யங்காளி அவர்கள்.

சமூகத்தில் நிகழும் தீண்டாமை கண்டு மனம் நொந்து, ஓய்வில்லாமல் உழைத்த அய்யங்காளி அவர்களுக்கு அவருடைய பெற்றோர் 1888ஆம் ஆண்டில் மச்சாங்குழியைச் சேர்ந்த செல்லம்மாவைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகளும் (பொன்னு, செல்லப்பன், கொச்சுகுஞ்நு, சிவதாணு) ஒரு பெண் குழந்தை தங்கம்மாவும் பிறந்தனர். 

1898 இல் அய்யங்காளி அவர்கள் ஒரு வில் வண்டி வாங்கி, காளைகள் பூட்டி, ஆதிக்க சாதியர் தெருக்களில் சுற்றித்திரிய தொடங்கினார். காளைகளின் வெண்கலக் கழுத்து மணிகள் தெருக்களில் அவர் வருகையை கம்பீரமாக அறிவித்தன. இது ஆதிக்க சாதிக்காரர்களுக்கு படுங்கோபத்துக்குள்ளாக்கியது. தீண்டாமைக்கு எதிராக அவருடைய திட்டமிட்ட முதல் நடவடிக்கை இது.

கண்ணுக்கு புலப்படாத தீண்டாமைச் சுவர் அய்யன் காளியின் காளைகளின் வெண்கல மணியோசையால் நடுங்குவதை பொறுக்காத ஆதிக்க சாதிகாரர்கள், அவர் வண்டியைத் தடுத்தார்கள். "தோளில் போட்டிருக்கும் துண்டை எடுடா?" என்று அதட்டினார்கள். தான் மறைத்து வத்திருந்த கத்தியை தூக்கினார் அய்யன்காளி 'இந்த கத்தியும், என் உடம்பில் உயிரும் இருக்கும்வரை  காளியிடம் உங்கள் வேலை எதுவும் எடுபடாது' என்றார்.
காளியின் இந்தப் பதில் கேரளம் முழுவதும் எதிரொலித்தது.

சமுதாய சுதந்திரத்திற்கான போராட்டங்களில் அய்யங்காளி மிகுந்த வீரத்துடன் பங்கு கொண்டார். சுதந்திரம் என்று அவர் சொல்லியிருந்தது சமத்துவமும் மரியாதையுமாகும். சமூகத்தின் தீமைகளுக்கு எதிராக, அதற்கிடையில் சிக்கிநசுங்கிக் கொண்டிருந்த பட்டியலின மக்கள் பயன்பெறும் வகையில் ஒன்றுதிரட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் புரிந்து கொண்டிருந்தார். அவர்களை ஒரு கொடிக்குக் கீழ் கொண்டு வருவதற்காக 1907-ல் "சாது ஜன பரிபாலன சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார்.  பட்டியலின மக்கள் அனைவரையும் விடுதலைபடுத்தும் சங்கமாகவே அமைந்தது. வெகு விரைவில் திருவிதாங்கூர் முழுவதும் சங்கத்தின் கிளைகள் உருவாகின. தீண்டாமை, சாதி ஒழிப்பு, சமூகத்தில் நிலவிய மற்ற மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக சக்திவாய்ந்த பிரச்சாரம் செய்தார்.

நிலைமை இப்படி இருந்தாலும் புலையர் குழந்தைகள் அரசு பள்ளிகளில் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. அய்யன் காளி அதற்கான முயற்சியில் இறங்கினார். ஆதிக்க சாதிகாரர்கள், குறிப்பாக அன்றைய நாயர்கள் இதற்க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். தன் சொந்த முயற்ச்சியால் ஒரு திண்ணைப் பள்ளிகூடம் ஆரம்பித்தார் அய்யன்காளி. அதையும் அவர்களால் நடத்த முடியவில்லை. ஆதிக்க சாதி எதிர்ப்பு ஒரு பக்கமென்றால் ஆசிரியர் இல்லாப் பஞ்சம் இன்னொரு பக்கம்.

இந்த சூழ்நிலையில்தான் அய்யன்காளி அன்றைய தலைமைக்கல்வி அதிகாரியைச் சந்தித்து தன் கோரிக்கையை சமர்ப்பித்தார் அதிகாரி ஒரு இஸ்லாமியர். அய்யங்காளின் வேண்டுகோளை ஏற்று, புலையர்களையும் பள்ளிகூடத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கலாம் என்று பரிந்துரை செய்து, மகாராஜாவுக்கு குறிப்பு அனுப்பினார். அய்யங்காளி அவர்கள் திவானையும், மகாராஜாவையும் பல முறை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

இம்மாதிரியான முயற்ச்சிகளின் பலனாக திருவிதாங்கூர் அரசு, பட்டியல் மக்களை அரசு பள்ளிகூடங்களில் சேர்த்துக்கொள்ளலாம் என்று ஒரு அறிக்கையை 1910-ல் வெளியிட்டது.

பல போராட்டங்களுடைய பலனாய் 1911 டிசம்பர் 5ஆம் நாள் "சாது ஜனபரிபாலன சங்கத்"தினுடைய தலைவர் என்னும் நிலையில் தலித்துகளினுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக சிறீமூலம் சட்டசபைக்கு அய்யங்காளி பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அமைப்பினுடைய செயல்பாடுகளுக்காக புதிய முறைகள் பின்பற்றப்பட்டன. 1916ஆம் ஆண்டு சாது ஜன பரிபாலினி  என்னும் பெயரில் சங்கனாசேரியிலிருந்து மாத இதழ் தொடங்கப்பட்டது. 

கையெழுத்து மட்டுமே போடதெரிந்த அய்யன்காளி. தன் சமூகத்தில் உள்ள படித்த இளைஞர்களை திரட்டி அவர்களின் உதவியோடு பத்திரி்கையை நடத்தினார். இந்த பத்திரிக்கை மக்களிடையே கல்வி கற்க தூண்டியது. அதைவிட முக்கியமாக பட்டியல் மக்களின் பல்வேறு பிரச்சனைகளை புரிந்துகொள்ள உதவியது.

புலயைர்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மேலாடை அணியும் உரிமை பெறவில்லை. மார்புகளை மறைக்கும் வகையில் பெரிய பெரிய பாசி பவளங்களாலும், துளையிடபட்ட சிறிய கற்களான மாலைகளை மார்பு நிறைய அணிந்து மானம் காத்து வந்தார்கள். இந்தக் கல் மாலை அணியும் வழக்கத்தை நிறுத்தி, புலையர் பெண்களும் மேலாடை அணிய ஏற்பாடு செய்ய விரும்பினார் அய்யன்காளி.  பெண்களை திரட்டி அவர்களை தங்கள் கல் மாலைகளை அறுத்து எரிந்துவிட்டு, மார்பைத் துணியால் மறைக்கச்சொல்லி போராட்டம் தொடங்கினார். 1915-16 ஆகிய இரு ஆண்டுகள் நடந்தது இந்தப்போர், பிறகு "இச்சம்பவம் கல் மாலை போர்" என்று வரலாற்றாளர்களால் புகழபட்டது.

அய்யங்காளி அவர்களாலும், நாராயண குரு அவர்களாலும் தென்கேரளவில் நடந்த நீண்ட போராட்டங்கள் இந்துக்களிடையே சில மாற்றங்களை ஏற்படுத்தியது. தலித்துக்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் அதிக காலம் அடக்கியாள முடியாது என்பதைப் புரிந்து கொண்ட மன்னரும் அவருடைய பணியாளர்களும் அவர்களுடன் ஒத்துப் போகும் எண்ணத்தை வெளிப்படுத்தினர். அதனுடைய பலனாய் 1946 நவம்பர் 12ல் கோவில் நுழைவு விளம்பரம் வெளியிடப்பட்டது. 

ஏழை மக்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட. சாது ஜன பரிபாலன சங்கம் அய்யங்காளி அவர்களாலும் மற்ற தலைவர்களாலும் தொடர்ச்சியான முயற்சியால் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செயல்ப்பட்டது.

அய்யங்காளியின் சமூக போராட்டத்தை  காந்தி நேரில் வந்து பாராட்டினார். மேலும் ரவிந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இதர தலைவர்களும் கடித தொடர்பில் இருந்தனர்.

மேலும் அய்யங்காளியைப் பொருத்தவரை, மானமும் சுயமரியாதையும் இல்லாத ஒரு மனிதன் உயிருடன் இருக்க வேண்டி வருவதை விட அவமான கரமான ஒன்று வேறில்லை என்பார். 1980ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி  "இந்தியாவினுடைய மகானான புத்திரன்" என்று இந்திராகாந்தி அவருடைய சிலையை திறந்து வைத்து சிறப்பித்து கூறினார்.

தொடர்ந்து போராட்டங்கள், மோதல்கள், எதிர்தாக்குல்கள் இவைகளிலேயே வாழ்வின் பெரும்பகுதியை கழித்த அய்யன்காளியின் உடல் நிலை படிப்படியாக மோசமடைந்து 1941 ஜூன் 18 ஆம் நாள் அவர் தன் 77ஆவது வயதில் இயற்கையடைந்தார்.


(ஜூன் 18: மாவீரர் ஐயன்காளி நினைவு நாள்)

ஞாயிறு, 16 ஜூன், 2024

எம்.சி.ராஜா எனும் கல்வியாளர்.

 

ஸ்டாலின் தி 


'எம்.சி.ராஜா அவர்கள்தான், அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள் உருவாகக் காரணமாக இருந்தார்' என்பது பரவலாக அறிந்த தகவல். இதன் மூலம் அவர் தலித் மாணவர்களுக் காக மட்டுமே சிந்தித்தார், உழைத்தார் என்கிற தோற்றத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் உண்மை என்ன? அவர் அப்படி ஒரு சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்குத்தான் பாடுபட்டாரா?

அன்றைக்கு உருவான தலித் சமூகத்தலைவர்கள் போலவே, கல்வி மீது கவனமும் வளரும் தலைமுறைகள் மீது அக்கறையும் கொண்டவர் தான் பெருந்தலைவர் ராஜா. சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் சிறந்த ஆசிரியராக பணியாற்றினார். அவர் வெறுமனே கற்பிக்கும் ஆசிரியரிக அல்லாமல் கல்வி சிந்தனையாளராக திகழ்ந்தார். எல்லோருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்று செயல்பட்டு பல பாடநூல்களை இயற்றினார். அவரது கல்வி சிந்தனையை வரவேற்று பிரிட்டீஷ் ஆளுநரான திரு. பெனட்லான்ட் அவர்கள், பெருந்தலைவரை ஆரம்பக் கல்விக் குழுவில் 1919 இல் இணைத்தார். அதன்பிறகு, தமது அறிவார்ந்த பணிகளால் 1924 இல், சென்னைப் பல்கலைக் கழத்தின் ஆட்சிமன்றக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டார். மாணவர்களுக்கான விடுதிகளின் தேவையை அரசுக்கு எடுத்துரைத்தார். அப்போதுதான் மாணவர் விடுதிகள் நிறுவப்பட்டன. மேலும், 1926 இல் பாடிசன் விடுதிக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டார். தொடர்நது அவர் கல்விப்பணிக்கு ஆற்றிய பெருந்தொண்டை மதிக்கும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் 1927 இல் அவரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவிற்கு இரண்டாம் பருவ காலத்திற்கும் நியமித்தார் ஆளுநர் திரு. கோஷென் பிரபு அவர்கள். இவ்வாறு கல்விப்பணியாற்றிய பெருந்தலைவர் அத்தோடு நிற்காமல் மாணவர்களின் சமூக பற்றையும், சேவை மனப்பான்மையையும், தன்னம்பிக்கை உணர்வையும் ஊக்குவிக்கும் விதமாக 'சாரணர் இயக்கத்தை' தலைமையேற்று வடிவமைத்தார். பள்ளிகளின் சாரணர் இயக்குனராகவும் பணியாற்றி மாணவர்களை சீர்படுத்தினார். வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையின் போது இளவரசரின் பெயரிலேயே சாரணர் அணியை துவக்கினார். ஆளுநர் பென்ட்லான்ட் பிரபுவின் அழைப்பில் அரசினர் மாளிகையில் நடந்த சாரணர் இயக்கம் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பெருந்தலைவர் செங்கல்பட்டு மாவட்டத்தின் சாரணர் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். பள்ளிகளில் அமைக்கப்பட்ட சாரணர் இயக்கத்தில் மட்டுமல்ல அதற்கும் வெளியே ஒரு பொது சாரணர் இயக்கத்தின் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய சிறந்த, புகழ்மிக்க கல்வியாளரான பெருந் தலைவர் எம்.சி.ராஜா அவர்களை நம் பள்ளி பாட நூல்களில் பாடமாக வைக்காமல் தமது தீண்டாமையை கடைப்பிடிக்கிறது தமிழக கல்வித்துறை!



*ஜூன்17: பெருந்தலைவர் எம்.சி.ராஜா பிறந்தநாள்.

சனி, 1 ஜூன், 2024

சுபவீயின் கட்டுக்கதைகள்: தலித் வரலாற்றின் மீதான சாதிய ஆத்திரம்.

ஸ்டாலின் தி 

பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார் அடுப்பெரிக்கும் போது தற்செயலாகக் கிடைத்த ஓலைச் சுவடிகளில் ஒன்றுதான் திருக்குறள் என்று ஒரு கதையை விசிகவின் மாநாட்டிலேயே இறக்கிவிட்டு, பண்டிதர் குடும்பத்தின் அறிவு சேகரிப்புப் பணியை அவமானப்படுத்தியவரான திமுகவின் பிரச்சாரகர் சுபவீ அவர்கள், தற்போது இன்னொருக் கதையை கட்டிவிட்டிருக்கிறார். 

அவர் புதியதாக அவிழ்த்துவிட்டக் கதை இதுதான். அதாவது, அண்ணல் அம்பேத்கர் பௌத்த அறிஞர் பொ.லட்சுமி நரசு அவர்களை சந்தித்ததாகவும், அப்போது பண்டிதர் அயோத்தி தாசரை சந்திக்காமல் போய்விட்டதாகவும் கதையைக் கூறியிருக்கிறார். இந்தக் கதையின் மூலம் சுபவீ முன்வைக்கும் கேள்வி என்னவென்றால், "பெரியார் அயோத்திதாசரை மறைத்ததாக கூறுகிறீர்களே. இதோ அம்பேத்கரே அயோத்திதாசரை தவிர்த்துவிட்டுதான் போனார். அப்படியானால் அயோத்திதாசரை அம்பேத்கர் மறைத்தார் என்று கூறமுடியுமா?" என்பதுதான். நல்லக் கேள்விதான். ஆனால் இந்தக் கேள்விக்காக சுபவீயால் கூறப்பட்ட கதையின் உண்மை தன்மை என்ன? 

பண்டிதர் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20 தேதி பிறக்கிறார். தமது 46 ஆவது வயதான 1891 ஆம் ஆண்டில் பண்டிதர் ஊட்டியில் பத்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆதிதிராவிடர் மாநாடு நடத்துகிறார்.  அதே ஆண்டில் பிறக்கிறார் அண்ணல். பண்டிதர் இங்கே பெரும் ஆளுமையாக இயங்கிக்கொண்டிருந்த போது அண்ணல் மழலை பருவத்திலும்,  மாணவப்பருவத்திலும் வளர்கிறார்.  1912 ஆம் ஆண்டில் இளம்கலை  கல்வியை பம்பாய் பல்கலைக்கழத்தில் முடிக்கிறார் அண்ணல். அடுத்த ஆண்டான 1913 பிப்ரவரி 2 ஆம் தேதி அண்ணலின் தந்தை காலமாகிறார். அதே ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி,  அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை கல்வியைப் பெறுவதற்கு புறப்பட்டுச் செல்கிறார். அப்போது அண்ணலுக்கு வயது 22. அடுத்த ஆண்டான 1914 இல் பண்டிதர் அயோத்திதாசர் இயற்கையடைகிறார். அதாவது பண்டிதர் இறப்பதற்கும் ஓராண்டுக்கு முன்னவே அண்ணல் அமெரிக்காவிற்கு கல்வி கற்க சென்றுவிடுகிறார். மேலும் அவருக்கு பண்டிதர் அயோத்திதாசர் என்பவரைப் பற்றியும் எதுவும் அப்போது தெரியாது. 

எனவே, 'அம்பேத்கர் தமிழகம் வந்த போது அயோத்திதாசரை பார்க்காமல் போய்விட்டார்' என்று சுபவீ கூறுவது அப்பட்டமான கட்டுக்கதையைத் தவிர வேறொன்றும் இல்லை. இந்தக் கட்டுக்கதையின் இன்னொரு கிளைக்கதையையும் பற்றியும் பார்த்துவிடுவோம்.

அதாவது, "லட்சுமி நரசுவை அம்பேத்கர் பார்த்தார்" என்கிறார் சுபவீ. மேலும் அதை "அம்பேத்கரே சொல்கிறார்" என்றும் கதையை நீட்டுகிறார்.  இவையும் உண்மை இல்லை.சரி உண்மை என்ன? 

பௌத்த அறிஞரும் பேராசிரியருமான பொ.லட்சிமி நரசு அவர்கள் 1861 இல் பிறந்தவர். பண்டிதரோடு இணைந்தும், விலகியும் நின்று பௌத்தத்தை மீட்டுருவாக்கம் செய்த ஆளுமை. பண்டிதரின் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கத்தாருடன் நெருக்கமாகவும் இருந்தவர். தமது 73 ஆவது வயதில் 1934, ஜூலை 14 ஆம் தேதியில் நரசு இயற்கையடைந்தார். அதற்கும் அடுத்த ஆண்டு 1935 அக்டோடபர் 13 ஆம் தேதி,மகாராஷ்டிரா மாநில,  நாசிக் மாவட்டத்தின் இயாலோவில் நடந்த மாநாட்டில் "நான் இந்துவாக இறக்கமாட்டேன்" என்று முழங்கினார் அண்ணல். 

அதன்பிறகுதான் அண்ணலின் பிரவேசம் மதத்தின் பக்கம் வேகமெடுக்கிறது. பட்டியலின வரலாறு அவரை பௌத்தத்தில் கொண்டு போய் நிறுத்தியது. அதைத் தொடர்ந்து பௌத்தம் குறித்த ஆய்வுகளை மேலும் விரிவாக்குகிறார் அண்ணல். பல்வேறு இடங்களுக்கும் பௌத்தத்தின் தடம் தேடிச் சென்ற அண்ணல், தென்னிந்திய பௌத்த தகவல்களை சேகரிக்க தமிழகமும் வந்தார். அப்போது  லட்சுமி நரசு அவர்கள் இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. நரசுவின் குடும்பத்தினரை மட்டும் சந்தித்துப் பேசினார் அண்ணல். அதைத் தொடர்ந்து, லட்சுமி நரசு அவர்களின்  The Essence Of Buddhism  என்னும் ஆங்கில நூலை 1948 ஆம் ஆண்டு தமது முன்னைரையுடன் மீண்டும் கொண்டுவந்தார் அண்ணல்.

இவைதான் உண்மை. பண்டிதர் இறந்து பல ஆண்டுகள் கழித்துதான் அண்ணல் தமிழகம் வந்தார். அண்ணல் நரசுவையும் நேரடியாகப் பார்க்கவுமில்லை. நரசுவின் நூல் ஆங்கிலத்தில் இருந்ததால் அதன் மூலம்தான் நரசுவின் அறிவை அடையாளம் கண்டார் அண்ணல். பண்டிதரின் நூட்கள் தமிழிலே இருந்ததால் அதிகம் அவர் பற்றிய விரிவான அறிதலுக்கு அண்ணலால் வரமுடியவில்லை. ஆனால், பண்டிதரை அண்ணல் அறிந்திருந்தார். இவ்வுண்மைகளின் மீதுதான் திராவிடப் போர்வையை வீசி கண்கட்டு வித்தையை  நிகழ்த்துகிறார் சுபவீ.

சுபவீ தம்மை ஒரு பகுத்தறிவாளராக அடையாளப்படுத்தி வருகிறார். இன்னொருபக்கம் தலித் வரலாற்றின் மீது இத்தகைய திரிபு வேலைகளை எந்த கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாக செய்து வருகிறார். இது அவருடைய தனிப்பட்ட குணமாகப் பார்க்க முடியவில்லை. தலித் வரலாற்றின் மீது கடும் ஆத்திரமும் பொறாமையும் கொண்ட சாதி இந்துச் சமூகத்தின் விளைச்சலாகவே பார்க்கமுடிகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் சுபவீ போன்றவர்கள் தலித்திய கேள்விகளாலும் வரலாற்று மீட்புகளாலும் கடும் பதற்றமடைகிறார்கள். பதற்றம் அதிகமாக, அதிகமாக அவர்களின் கட்டுக்கதைகளும் அதிகமாகின்றன. 

கட்டுக்கதைகளால் ஆகும் இருளை மெய்யொளி நீக்கும்.

(2018/டிசம்பர் 11 இல், முகநூலில் எழுதப்பட்ட எதிர்வினைக் கட்டுரை)

தீட்சா தின குறிப்புகள்.

ஸ்டாலின் தி 1  1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில்...