திங்கள், 26 ஆகஸ்ட், 2024

முருகன் என்னும் பூர்வ பௌத்தர்.




ஸ்டாலின் தி 

முத்தமிழ் முருகன், தமிழ்க் கடவுள் முருகன் என்கிற பெயரில் இந்துத்துவ அரசியலுக்கு துணை போகிறார்கள் பலர். மக்களின் பூர்வ பண்பாட்டை எடுத்துக் கூறமுடியாத கோழைகள் இந்துமய பண்பாட்டு அரசியலுக்கு பலியாகிவிடுவது வரலாற்றில் புதிது அல்லதான். இத்தகைய கோழைகள்தான் பூர்வ பௌத்த வரலாற்றையும் பண்பாட்டையும் தேடிக்கண்டடையும் எம்மைப் பார்த்து 'எதையும் பௌத்தமாக்குகிறார்கள்' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நாம் எதையும் பௌத்தமயாக ஆக்கவில்லை. பௌத்தத்தை திரித்த வரலாற்றையே பேசுகிறோம். இன்னும் பேசுவோம். 

இந்து புராணம் கூறும் முருகனைத்தான் இவர்கள் தமிழ்க் கடவுள் என்கிறார்கள். தமிழ்க் கடவுள் என்று இவர்கள் கூறிவிடுவதால் முருகன் வேறு ஒரு அடையாளத்தை அடையவில்லை. முருகனின் அறுபடை வீடுகளின் கருவறைகளிலிருந்து பிராமணர்கள் வெளியேறவும் இல்லை. வழிபாடு இந்து வழிபாடு. வழிபாட்டை நடத்துபவர்கள் இந்து வர்ணாசிரம முறையிலானவர்கள். ஆனால், கடவுள் மட்டும் தமிழ்க் கடவுள். நகைப்பாக இருக்கிறது இவர்களின் இராஜதந்திரம். 

முருகன் பற்றிய வேறுபட்ட கதைக் கூறலை நூற்றாண்டுகளுக்குப் முன்னரே முன்வைத்திருப்பவர் பண்டிதர் அயோத்தி தாசர். பண்டிதரின் கதையாடலில் முருகன் சிவனின் மைந்தனுமில்லை, அவதாரக் கடவுளுமில்லை, தமிழ் ஒரு மொழிக்குரிய கடவுளுமல்ல. மாபெரும் தத்துவத்தை பின்பற்றி, மற்றவர்களுக்கும் அத்தத்துவத்தை‌‌ போதித்து, தன்னலத்தை முற்றிலும் துறந்த ஆண்டியாக (பிக்குவாக) ஆகி வாழ்ந்தவர் முருகன். அவர் பின்பற்றிய தத்துவம் தம்மம். 

இன்றைக்கு பழனி என்று அழைக்கப்படும் அன்றைய 'பூங்குறிஞ்சி' மலையை ஆண்டு வந்த பௌத்த அரசனான மருகனுக்கும், அவருடைய மனைவியான ராணி கங்கையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முருகன். முருகனின் மனைவி தெய்வானை. மயில் உருவில் செய்யப்பட்ட வாகனத்தில் வலம் வந்த முருகன், புத்த பள்ளியில் பயின்று, அறவாழ்வை மேற்கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றான். முருகன் புத்த தம்மத்தில் பயணித்து, வாழ்க்கையை கடந்து சென்ற பௌத்த சிரமணர் ஆவார். சிரமணன் என்பதே சரவணன் என்று ஆனது. இதுவே பண்டிதரின் பார்வையிலான முருகனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமான வடிவமாகும். அதாவது, முருகன் என்பவன் பௌத்த இளவரசன். அவர் தம்ம நெறியில் வாழ்ந்து, ஞான மார்க்கத்தை மக்களுக்கு போதித்தமையால் போற்றுதலுக்குரியவராக ஆனார், தெய்வமானார். வழிபடப்பட்டார். பௌத்தத்தில் தெய்வ நிலை என்பது பற்றற்ற மனநிலையைக் குறிக்கும் என்பதை நாத்திக இந்துக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்து அருக வழிபாட்டில் இணைக்கப்பட்ட முருக வணக்கம் பற்றியும் பார்ப்போம். அருகர், அருகன் என்பவை புத்தரின் ஆயிரம் பேர்களில் உள்ளவை. 'புத்தன், மால், அருகன், சாத்தன்' எல்லாம் புத்தரின் பெயர்களே என்று, நிகண்டுகளைக் கொண்டு எடுத்துக்கூறியிருக்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். அருகன் மேடு, அருகேரி, அருங்குணம், போன்ற ஊர்களின் பெயர்கள், இன்றளவும் பௌத்த மரபுகளையும் அடையாளங்களையும் கொண்டிருக்கின்றன. புத்த வழிபாடான அருக வழிபாட்டோடு, பூங்குறிஞ்சி மலை மக்கள், அருக நெறியாளன் முருகனையும் இணைத்துக் கொண்டதால், இன்றைக்கும் 'வைசாக கால' வழிபாடு பழனியில் நடக்கிறது. பழனிக்கு சென்று மொட்டை போடும் வழக்கத்தில், புத்த தீட்சை சடங்கு கலந்திருப்பதையும் இத்தோடு இணைத்துக் காணலாம். முருகனின் இன்னொரு பெயர், ஆறுமுகம். முருகனின் உடல் முகத்தோடு, பஞ்ச சீலமான ஐங்குணங்களையும் முகமாகக் கொண்டதால்தான் அவர் ஆறுமுகம். 

முருகனோடு அடையாளப் படுத்தப்படுபவற்றில், 'வேல்' முக்கியமானது.முருகனுக்கு சரியாகப் பொருந்தக் கூடிய அடையாளம் வேல் அல்ல வேள்தான். பௌத்தப் பார்வையில் அதுதான் சரி.
முருகன் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவன். அவனின் அரண்பணியை அடையாளப்படுத்த 'வேல்' தேவைப்படுகிறதுதான். மேலும் சூரசம்காரம் என்பது, 'சுரா பானமருந்திய' சுரர்களுடனான, புத்த அசுரனான(சுரா×அசுரா)முருகன் மோதியதையேக் குறிக்கிறது. இதன்படி சம்கார போர் வீரனாக அடையாளப்படுத்தவும் வேல் அடையாளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதேவேளை, முருகனைப் போற்றும் பெயராக 'வேள் முருகன்' என்பதுவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

வேள் என்றால் கொடை என்று அர்த்தம். கொடை வள்ளல்கள் வேளிர் எனப்பட்டனர். கொடைக்குப் பெயர் பெற்ற மன்னர்களின் பெயருக்கு முன் 'வேள்' என்று இடுவது சங்க இலக்கியங்களிலும் வழக்கமாக இருந்துள்ளது. பாரியை 'வேள்பாரி'என்று கூறியிருக்கிறார் கபிலர். புத்த தன்மத்தைக் கடைப்பிடித்ததால் கொடை வள்ளலாகவும் இருந்த முருகன் 'வேள் முருகன்' என்றும் அழைக்கப்பட்டார். வேளன் என்பது கொடையாளியை அடையாளப்படுத்துவதால், முருகனுக்கு வேலன் என்பதைவிட, வேளன் என்பதே சரியான அடையாளத்தைக் கொடுக்கும்.

 சரி.முருகன் கதையாடலில் வருகின்ற வள்ளி என்பவர் யார்? 
முருகனின் இரண்டாவது மனைவியே வள்ளி என்பார்கள். இதுவும் திரிபுதான் என்றே எண்ணத் தோன்றுகிறது. வள்ளல் என்பதன் பெண்பால்தான் வள்ளி என்பதாகும். வள்ளியம்மை என்றால் தயாளக் குணம் கொண்டப் பெண் என்று பொருள். முருகன் 'வேளன்' என அழைக்கப்பட்டதால், முருகனின் மனைவியான தெய்வானை 'வள்ளி' என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பிற்கால பௌத்த விரோத திரிபுவாதக் கும்பல், 'ரெண்டு கல்யாணக்'கதையை இட்டுக் கட்டிவிட்டது.

இவ்வாறான மாற்று விளக்கங்களைக் கொண்டே நாம் இந்துப் பெருங்கதையாடலை உடைக்க வேண்டும். அதில்லாமல், சமரசம் செய்துகொண்டு, உண்மைகளை மறைத்துக்கொண்டு, பகுத்தறியும் திறனை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு இந்துத்துவத்தை ஒருவழி செய்கிறோம் பாருங்கள் என்பது ஏமாற்றுத்தனம்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

பாதைக் காட்டும் புத்தர் பாதமும் பாதை மாற்றும் கிருஷ்ண பாதமும்.


ஸ்டாலின் தி 

கிருஷ்ண ஜெயந்தி நாளன்று வீடுகளில் பாதங்களை வரைவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள் இந்துக்கள். இந்துக்களின் இந்த வழிமுறை எதையேனும் விளக்குகிறதா? இல்லை. கிருஷ்ணனின் வருகையை எதிர்நோக்கிய ஏக்கத்தின் வெளிப்பாடாகவே இது நடத்தப்படுகிறது. உண்மையில் இந்துக்களுக்கு இந்த பழக்கம் எங்கிருந்து வந்திருக்க வேண்டும். வழக்கம் போல் அது பௌத்தத்திடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்பதை கூற நம்மிடம் மெய்ப்பொருள் இருக்கிறது.

பாதை என்பது பாதத்தின் சுவடுகளைத்தான் குறிக்கிறது. சரியான இலக்கை அடையும் பாதங்கள் தொடர்ந்து பல பாதங்களுக்கு வழிகாட்டுவதால் தொடர்ந்து பாதங்கள் படும் இடங்கள் பாதையாக ஆகிவிடுகிறது. இலக்கற்ற பயணம் பாதையை உருவாக்குவதில்லை. எனவே, ஒற்றையடிப் பாதையும் கூட தேவையற்ற எங்கும் சென்று முடிவது அரிது. அந்த வகையில் மானுடத்திற்கு வழிகாட்டிய புத்தரின் பாதம் பல்லாயிர பாதங்களை வரவழைத்து பெரும்பாதையை உருவாக்கியது. 

புத்தர் சித்தார்த்தராக இருக்கும் போது குதிரைகளில் வலம் வந்தவர். ரோகிணி ஆற்று நீர் பிரச்சனையில் ஏற்பட்ட போர்ச்சூழலை எதிர்த்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். அந்த சமயத்திலிருந்து குதிரையை அவர் துறந்தார். வெகுதூரம் அவரை பின்தொடர்ந்து சென்ற அவருடைய குதிரையை திருப்பி அனுப்பிய சித்தார்த்தர் நடக்கத் துவங்கினார். அந்த நடை பயணம்தான் அவர் ஞானத்தேடலின் துவக்கம். அதிலிருந்து அவர் ஞானம் பெற்றவரை அவர் நடந்த தொலைவு சுமார் 300 கி.மீ. இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஞானம் பெற்ற பின் அந்த ஞான வழியை சக மனிதர்களுக்கும் போதிக்க வேண்டுமென்று மீண்டும் நடக்கத் துவங்கினார். சித்தார்த்தனா தம்முடைய வீடான இராஜகிரகத்திலிருந்து புறப்பட்டு புத்தராக மீண்டும் அதே வீட்டை கடக்கும் போது அவர் சுமார் 1600 கி.மீ.தூரம் நடைபாதையாகவே பயணித்திருந்தார். அவர் போதிக்கும்போதும், சற்று ஓய்வுகளிலும்தான் ஓரிடத்திலிருந்தார். மற்ற நேரங்களில் நடந்துகொண்டே இருந்தார். அவருடைய நடை அன்றைய சராசரி மனித நடையைவிட வேகமாகத்தான் இருந்தது. அது மானுடத்தின் துக்கத்தைத் தீர்க்கும் நடையாக இருந்ததால் அந்த வேகம் சாத்தியப்பட்டது. மக்களைத் தேடித் தேடி அவருடைய பாதங்கள் நடந்தன; அவரைத்தேடித் தேடி மக்களின் பாதங்கள் வந்தாலும் கூட, அவருடைய பாதங்கள் ஓயாமல் மக்களைத் தேடித்தேடி நடந்துகொண்டே இருந்தன. 

இறுதிகாலத்தில் வயோதிகத்தால் அவருடைய நடையின் வேகம் குறைந்தது. அப்போது அவர் சுமார் 90 கி.மீ.தூரத்தை கடக்க ஏழுமாதங்கள் பிடித்தது. ஆனாலும் அவர் நடப்பதை நிறுத்தவே இல்லை. தன் சிந்தனையாலும் அது வழிநடத்திய பாதத்தாலும் புத்தர் மாபெரும் பாதையை வகுத்தளித்தார். அவருடை வாழ்காலத்தில் சுமார் 200,000 ச.கி.மீ.அவர் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக இன்றைய ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். புத்தர் வகுத்தளித்த பாதப் பயணம் புத்தருக்குப் பிறகு, புத்த மார்க்கத்தின் அடையாளமாக ஆனது. 'மக்களிடம் உலாவுங்கள்' என்று பிக்குகளுக்கு புத்தர் அறிவுரைத்தார். இயேசுவின் சீடர்களுக்கும் முன்னவே கொள்கைப் பரப்ப நடைபயணத்தைத் துவங்கியவர்கள் புத்தரின் சீடர்கள். இயேசுவேக் கூட அப்படி நடந்து வந்து புத்தம் கற்று, நடந்து சென்று புத்தம் போதித்தார் என்கிற கூற்றும் உண்டு. 

புத்தருக்கு பிறகு, பிக்குகளை அதிகம் நடக்க வைத்தவர் அசோகர். தம்முடைய மகனையும் மகளையும் இலங்கைவரை நடக்க(நடுவேக் கடலில் அவர்கள் எந்தக் குரங்கையும் வைத்து பாலம் கட்டவில்லை.) வைத்தவர் அசோகர். அண்ணல் அம்பேத்கர் மடங்களில் முடங்கி(மக்களை நோக்கி நடக்காமல்) இருக்கும் பிக்குகளைக் கண்டித்தார். ஏனெனில், மக்களை நோக்கி, துக்கத்திற்கான தீர்வுகளை நோக்கி நடப்பதையே புத்தர் வழியாகக் காட்டினார். அவருடைய புத்தமும் அதையே வலியுறுத்துகிறது. அதனால், பிக்குகளை நடக்கச் சொன்னார் அண்ணல்.

எனவே, பாதக் குறியீடு என்பது பௌத்தத்தின் அடையாளம். அசோகர் காலத்திலிருந்து பாத சின்னங்கள் பௌத்த தொடர்பானவையாகவே கிடைக்கின்றன. ஆசியாவில் சுமார் 3000 தொன்மையான பௌத்த பாதச்சின்னங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் மட்டும் ஆயிரம் பாதச் சின்னங்கள் கிடைத்துள்ளன. தம்மச் சக்கரம், முச்சரண அடையாளம் ஆகியவற்றை அச்சின்னங்கள் கொண்டுள்ளன. 

"...மாணடி சேர்ந்தார்" என்று திரிக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுவதும் கூட மாண்புடைய புத்தரின் அடியை(பாதத்தை) சார்ந்தோர் என்பதுதான். பாதம் என்பதை பாதையின் உருவகமாகவே பௌத்தம் கூறுவதற்கு இதுவும் ஓரு சான்றாகும்.

எனவே, புத்தரின் பாதையை போற்றும் வகையிலேயே பாதவழிபாடு வந்திருக்கிறது; இருந்திருக்கிறது. இவ்வுண்மையை மறைக்கவும் திரிக்கவும்தான், பார்ப்பனியம் கிருஷ்ணன் எனும் திரிபுவாதக் கதையின் ஊடாக போலி பாதவழிபாட்டை உருவாக்கியது என்கிற உண்மையை நம்மால் அறிய முடிகிறது.


இந்துத்துவ கரசேவையில் திராவிட மாடலின் கல்வித் திட்டம்.



ஸ்டாலின் தி 

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை பழனியில் இருதினங்களாக (ஆகஸ்ட் 24 மற்றும் 25) நடத்தி முடித்திருக்கிறது திமுக அரசு. இம்மாநாட்டில் இயற்றப்பட்ட 21 தீர்மானங்களில் கல்வித்துறையில் இந்துத்துவத்தை திணிக்கும் திட்டங்களும் உள்ளன. 

'முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது' என்கிறது ஐந்தாவது தீர்மானம். 'விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது' என்கிறது எட்டாவது தீர்மானம். பன்னிரெண்டாவது தீர்மானம், 'முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம்' என்று கூறுகிறது. 

இவை அனைத்துமே கல்வித்துறையை இந்துமயப் படுத்தும் வேலைத்திட்டங்கள் என்பது அப்பட்டமான உண்மை. கடந்த 2018 ஆண்டில் கேரளாவில் நடைப்பெற்ற ஒரு போராட்டத்தில் உரையாற்றும் போது, "பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் கல்வித் துறையையும் இளைஞா்களின் சிந்தனைத் திறனையும் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநா் அலுவலகங்கள் களமிறங்கியுள்ளன" என்று பேசினார் மார்க்ஸிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராமன் யெச்சூரி. ஆனால், பாஜக ஆளாத தமிழ்நாட்டில் திமுக அரசே அந்த வேலையில் இறங்கிவிட்டது என்பதையே முத்தமிழ் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் காட்டுகின்றன. 2018 இல் கர்நாடகாவைச் சார்ந்த பாஜக ஆதரவாளரான சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தபோது, 'தமிழக பல்கலைகழக வளாகங்களை காவி மயமாக்க வேண்டாம்' என்று கண்டித்துப் பேசிய ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் முருகனின் பெயரில் கல்வியை காவிமயமாக்கும் பணி செவ்வனே நடக்கிறது. 

இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக சார்பிலான அரசுகள் கல்வியில் இந்துத்துவ திணிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் கூட தனியார் கல்வி நிறுவனங்களின் மூலம் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகள், பாதபூஜை வழிபாடுகள், பள்ளி விழாக்கள் போன்றவற்றின் மூலம் இந்துத்துவ பண்பாட்டு அரசியல் ஏற்கனவே பயிற்றுவிக்கப்படுகிறது. அதற்கெல்லாம் துணைபோகும் வகையில், அரசு சார்பிலான கல்விக் கூடங்களில் 'தமிழ் பக்தியின்'பெயரில் கல்வியை இந்துத்துவ மயமாக்க முயற்சிக்கிறது திமுக அரசு.  

முருகனின் பெயரிலான இந்து புராணங்களையும் பண்பாட்டையும் மாணவர்களுக்கு கல்வியின் மூலம் புகட்டுவது இந்துத்துவ அரசியலுக்கு வலுசேர்க்கும் வேலையல்லாமல் வேறல்ல. 'கல்வி அமைப்பை தங்களின் கருத்தியலுக்குத் தக்க வடிவமைப்பதன் வழியாகத்தான் மாணவர்கள் மத்தியில் இந்துத்துவ பண்பாட்டை திணிக்க முடியும் என்பதில் அவர்கள் (இந்துத்துவவாதிகள்) மிகத் தெளிவாக உள்ளார்கள்' என்று கூறுவார் மறைந்த மனித உரிமை செயற்பாட்டாளரான எழுத்தாளர் கே.பாலகோபால் அவர்கள். கல்வி சேவையை இந்துத்துவ கரசேவையாக ஆக்குவதன் மூலம் திமுக அரசு பாஜகவின் வேலைத் திட்டத்தையே செயல்படுத்துகிறது. இதை துவக்கத்திலேயே தடுக்காவிட்டால் பால்வாடி பள்ளிவரை இந்துத்துவ கல்வித்திட்டம் பரவி, சமூகத்தை மேலும் நாசமாக்க வழிவகுக்கும்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

தங்கலான் ரவிக்கைக் காட்சியும் சாதிய மனநோயும்.

ஸ்டாலின் தி 

தங்கலான் திரைப்படத்தில் பெண்கள் ரவிக்கையை கொண்டாடும் காட்சியை கேலியாகவும், வக்கிர எண்ணத்துடன் சமூக ஊடகங்களில் சிலர் சித்தரிக்கும் நிலையை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு வரலாற்று அறிவுமில்லை, சமூக அக்கறையும் இல்லை என்பதே உண்மை. இங்கே ஆண்/ பெண் உடை நாகரீகத்தில் பண்டைய பௌத்த பண்பாடு முக்கிய பங்காற்றியிருக்கிறது. கீழாடை, மேலாடை, வெளி ஆடை  ஆகியவற்றை பௌத்தம் மக்களுக்கு வரையறுத்தது. இவை பாலியில் முறையே அண்டர்வாஸகா, உட்டரசங்கா மற்றும் சங்காதி என்று அப்போது அழைக்கப்பட்டன. இம்மூன்றையும் சேர்த்து கூறப்பட்ட பாலிச் சொல் 'கசாயா.' கசாயா என்பதிலிருந்துதான் 'கச்சை' என்னும் சொல் வந்தது. பிறகு அச்சொல் பெண்களின் மேலாடை அல்லது மேல் உள்ளாடையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. பெண்கள் அணியும் வெளியாடைக்கு சேலை என்று பெயர் இருப்பது தெரியும். சேலை என்பதே சீலை என்பதிலிருந்து வந்தச் சொல்லாகும். சீலை என்பது சீலம் என்பதிலிருந்து வந்தச் சொல்லாகும். பெண்களின் வெளியாடை   மட்டுமல்ல ஆண் பிக்குகள் அணிந்த சீவர வெளியாடையும் சீலை தான். சீலர்களின் ஆடை சீலை. இன்றும் நெசவுக்கு பெயர்பெற்று வடக்கில் வாரணாசியும்  தெற்கில் காஞ்சீவரமும் முன்னொரு காலத்தில் பௌத்தர்களின் நெசவு நகரங்கள். 
அப்படியான நாகரீக பண்பாட்டில் தான் வைதீக கும்பல் தலையீடு செய்தது.சூழ்ச்சிகள், வன்முறைகள் என பலவகையான தாக்குதல்களை பௌத்தர்கள் மீது செலுத்தி தம்மை நிறுவிக் கொண்டது பார்ப்பனியம். பௌத்தர்களின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டன; ஆடை சுதந்திரமும் அவற்றில் ஒன்று. 

இந்து அரசாட்சிகளில் மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் நாடு இருந்த போதும் கூட, பூர்வகுடிகள் மீதான உடைக் கட்டுப்பாடுகளை சுதந்திரமாக கடைப்பிடித்தனர் சாதி இந்துக்கள். கேரள திருவிதாங்கூர் சமஸ்தானம் தலித் மற்றும் சில சூத்திர சாதியினருக்கு(மொத்தம் 18 சாதிகளுக்கு) உடைக்கட்டுப்பாட்டை கடுமையாக விதித்திருந்தது. குறிப்பாக, இச்சாதிகளைச் சார்ந்த பெண்கள் ரவிக்கையை மட்டுமல்ல, சீலையால் மாராப்பும் கூட அணிய தடை செய்யப்பட்டது. அந்த அரசாணையை சமஸ்தானத்தின் ராணியான பார்வதி பாய் மூலமே வெளியிட்டது அந்த பிராமணிய சமஸ்தானம். இவ்விதியை கடைப்பிடிக்காக பெண்கள் பொது இடங்களில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டார்கள்; வெற்றுடம்பாக நிற்க வைத்து சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். தோள்சீலைப் போராட்டம் வெற்றிபெரும்வரை அப்படியான கொடுமைகள் நடந்தேறின.

தமிழ்நாட்டிலும் பூர்வ பௌத்தர்கள் மீதான உடைக் கட்டுப்பாடுகள் பிராமணிய கும்பலால் நடைமுறைப்படுத்தப்பட்டது. முகவை ஜில்லா எனப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பகுதி கல்லல்  என்னும் ஊரில்  1919 ஆம் ஆண்டு சாதி இந்துக்கள் கூடி தலித் மக்கள் மீது எட்டு வகையான தடைகளை விதித்தனர். அவற்றில், 'ஆண்கள் முழங்காலுக்குக் கீழும்  இடுப்புக்கும்  மேலும் உடையணிவதற்கும், பெண்கள் ரவிக்கை அணிவதற்கும்   மார்பை மறைத்துக் கொள்வதற்கும் விதிக்கப்பட்டன. இத்தடைகளை  நீதி மன்றம் சென்று உடைத்தனர் தல்லித்துகள். ஆனால், தேவக்  கோட்டையில் 1930 இல் கூடிய சாதி இந்துக்கள் மீண்டும் அந்த எட்டு தடைகளையும் அறிவித்தனர். 1931 இல் மேலும் சில தடைகளையும் சேர்த்து மொத்தம் 17 தடைகளைக்  கொண்டுவந்தனர் சாதி வெறியினர். 'சேரிப்பிள்ளைகள் படிக்கக்கூடாது, செம்பு பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது, திருமணம் போன்ற சடங்குகளில் மேளதாளம் இருக்கக்கூடாது" என்றெல்லாம் இத்தடைகள் நீண்டன.தலித் போராட்டங்களும் ஆங்கிலேய அரசின் சட்டங்களும் படிப்படியாக அவற்றை போக்கின. ஆனாலும் உடைரீதியான அதிகாரம் தலித் சமூகத்தின் மீது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இந்த வரலாற்றையெல்லாம் அறியாதவர்கள், அறிந்தும் வன்கொடுமைகளை அங்கீகரிக்க நினைப்பவர்கள், பெண்கள் மீதான ஆண்களின் பாலியல் ஆதிக்கத்தை விரும்புகிறவர்கள்தான் தங்கலான் காட்சியில் பெண்கள் ரவிக்கையை கொண்டாடும் காட்சியின் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள். இதற்கும் முன்பு மண்வாசனை அடையாளத்துடன் வந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட/ வறிய நிலை நாயகிகளை ரவிக்கை அணியாமல் காட்சிப்படுத்தப்பட்ட போது மெய்சிலிர்த்து பரவசமானவர்கள், தங்கலானில் ரவிக்கையின் மீதான உரிமையை கொண்டாடும் பூர்வகுடி பெண்களின் கதாபாத்திரங்களை காண தயங்குகிறார்கள், பதறுகிறார்கள். ஒருவகையில் இதுவொரு மனப்பிறழ்வு நிலை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், சாதியம் உருவாக்கிய கொடும் மனநோயின் வெளிப்பாடுதான் இது. 





திங்கள், 19 ஆகஸ்ட், 2024

அண்ணலும் பெருந்தலைவரும்: ஒரே திசையின் இரு பயணிகள்.


ஸ்டாலின் தி 

இந்திய சேரிமக்களின் மாபெரும் தலைவர்களில் அண்ணலும் பெருந்தலைவர் அவர்களும் முக்கியமானவர்கள். அவர்களை எதிரெதிராக நிறுத்தும் செயலை அவர்கள் காலத்திலிருந்தே பலர் செய்திருக்கிறார்கள். இப்போதும் அது தொடர்கிறது. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி காரணம் ஒன்றுதான். அது, இந்திய தலித் சமூகம் ஒருங்கிணைந்துவிடக் கூடாது என்பதுதான். 

அண்ணலைவிட சுமார்
எட்டுவயது மூத்தவர் பெருந்தலைவர். 1908 ஆம் ஆண்டிலேயே அரசியல் களத்துக்கு வந்துவிட்டவர் தலைவர் ராஜா. இந்திய அளவில் தலித் சமூகத்தின் முதல் மாநில சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர், முதல் சட்டமன்ற உறுப்பினர், முதல் நாடாளுமன்ற உறுப்பினர், முதல் (தற்காலிக) சபாநாயகர் என பல அரசியல் பொறுப்புகளை வகித்தவர். ஆசிரியராக, கல்வியாளராக, நீதிபதியாக, எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர். அத்தகைய பெருமைக்குரியவரை வட்டமேஜை மாநாட்டுக்கு அழைக்காதது அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் கொந்தளிப்பைக் கொடுத்தது. அதற்கு காரணம் அண்ணல்தான் என்று திசை திருப்பப்பட்டது. உண்மையில் அவ்வாறு தலைவர் ராஜா புறக்கணிக்கப்பட்டதற்கு பின்னணியில் இருந்தது காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிராமணர்களான சத்திய மூர்த்தி அய்யரும், ராஜ கோபாலாச்சாரியும் தான் என்கிறார் அறிஞர் அன்பு பொன்னோவியம். எப்படியானாலும் வட்டமேஜை மாநாடு இருபெரும் தலைவர்களை பிரித்துப்போட பார்ப்பனியத்துக்கு உதவியது. அதைத்தொடர்ந்து ஓரிரு ஆண்டுகள் இரு தரப்புகளும் கசப்புடனே காலம் கடந்தனர். ஆனால் மீண்டும் அந்த இரு தலைவர்களும் ஒன்றாகி தமது சமூகத்துக்காக உழைத்தனர். சமூகத்தின் முன்னேற்றத்தை உணர்ந்து செயல்பட்டனர்.

1941 ஜூலையில் இந்திய வைஸ்ராய் தமது பாதுகாப்புக் கவுன்சிலை விரிவாக்கம் செய்தார். அப்போது பாதுகாப்புக் குழு ஒன்றும் ஏற்படுத்தினார். அக்குழுவில அண்ணலும் பெருந்தலைவரும் இணைந்து பணியாற்றினர்.

கிரிப்ஸ் ஆணைக்குழுவில், 1942 மார்ச் 30 இல் தங்களது சமூக மக்களுக்காக இருவரும் ஒன்றாக இணைந்து சென்று மக்களின் தேவைகளை எடுத்துரைத்தனர். 

'தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தாங்களே முன்வந்து ஏற்காத, அவர்களது பாதுகாப்புக்கு தேவையான விதிமுறைகளைக் கொண்டிருக்காத ஓர் அரசியல் அமைப்பை அவர்கள் மீது திணிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்யுமானால் அதனை நம்பிக்கை துரோகமாகவே கருதுவோம்' என்று இருவரும் சேர்ந்தே 1942 ஏப்ரல் 1 இல், 
 சர்.எஸ்.கிரிப்ஸூக்கு கடிதம் எழுதினார்கள். மேலும், அண்ணல் இந்திய தலித் தலைவர்களை ஒருங்கிணைத்து 1942 இல் மாநாடு ஒன்றை நடத்தினார். அப்போது அண்ணலோடு பெருந்தலைவரும் கைக்கோர்த்தார்.

1942 ஏப்ரல் 14 இல் அண்ணலின் ஐம்பதாவது பிறந்தநாள் நாட்டின் பல இடங்களில் கொண்டாடப் பட்டது. மராட்டிய மாநிலத்தில் பூனே வில் உள்ள வரலாற்று இடமான ஷனிவார்வடாவில் பேரா.எஸ்.எம்.மத்தே தலைமையில் நடந்த அண்ணல் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் பங்கேற்று வாழ்த்துரை ஆற்றினார் பெருந்தலைவர் எம்.சி.ராஜா.

அண்ணலும் பெருந்தலைவரும் சமூக விடுதலைக்கான பாதையில் பயணித்தவர்கள். பயண முறைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இலக்கு ஒன்றுதான். அண்ணலும் பெருந் தலைவரும் மாறுபடும் இடம் மதம் சார்ந்த இடம்தான். நமது தொடர் விவாதங்களில் அதை நேர்செய்ய முடியும்.
*


ஆகஸ்ட் 20:
பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் நினைவுநாள்.


வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

ஆடி பதினெட்டாம் நாள்; மாரியம்மன் எனும் பௌத்த அம்மனின் பரி நிப்பான நாள்.

ஸ்டாலின் தி 

மாரியம்மன்,மாரியாத்தாள்,ஆத்தா, அம்மன், என்றெல்லாம் அழைக்கப்படும் மாரியம்மனை வணங்குவோர்க்கு ஆடி மாதம் புனிதமாதமாக திகழ்கிறது. விரதம், மாவிளக்கு, பால்குடம், கூழூற்றுதல், பொங்கலிடுதல் என்று ஆடிமாதம் முழுவதும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். மாரியம்மன் கோயில்கள் சேரிகளின் முதன்மையான கோயிலாக இருக்கின்றன. சேரியல்லாத இடங்களில் இருக்கும் அம்மன் கோயில்களுக்கு பல பெயர்கள் உண்டு. ஆனால் சேரியில் உள்ள அம்மன் கோயிலெல்லாம் அல்லது பெரும்பான்மையான கோயில்கள் மாரியம்மன் கோயில் என்ற பெயரிலேயே இருக்கின்றன. 

அதாவது தலித்துகளுக்கு மாரியம்மன் பொது தெய்வமாக இருக்கிறது. தங்களின் இன்ப,துன்பங்களை சொல்லி மனதை சீர்படுத்தி, தங்களின் எந்த நற்காரியங்களை மாரியம்மனை வழிப்பட்டபின்பே செய்கிறார்கள். நோய்ப்பட்டாலோ கஷ்டப்பட்டாலோ மாரியம்மனை மனத்தில் ஏற்றி விரதமிருக்கிறார்கள். இதையெல்லாம் மூடநம்பிக்கை, முட்டாள்தனம் என்றெல்லாம் சொல்லி ஒதுக்கிவிடலாமா? நாத்திகம் பேசுவோர் சொல்வதைப்போல் மாரியாத்தாள் வெறும் மூட நம்பிக்கையால் வணங்கப்படும் தெய்வமா? பகுத்தறிவு என்னும் போர்வையில் நாத்திகம் பேசுவதை ஒதுக்கிவைத்து விட்டு உண்மையான பகுத்தறிவைக் கொண்டு மக்கள் பண்பாட்டை ஆராயவேண்டும். அதைத்தான் பௌத்தப் பேரறிஞர் பண்டிதர் க.அயோத்திதாசர் செய்தார். மாரியம்மன் என்பதே பொய் என்றவர்கள் அதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டுவதில்லை. ஆனால் மக்களின் பண்பாட்டையும் இலக்கியத்தரவுகளையும் ஆராய்ந்து மாரியம்மன் யார்? மாரியம்மன் கோயில் ஏன் சேரியில் இருக்கிறது? மாரியம்மன் எதைப் போதித்தார்? மாரியம்மனை ஆடிமாதத்தில் சிறப்பாக பூஜிக்கவேண்டியதன் பின்னனியென்ன? போன்ற கேள்விகளை ஆராய்ந்து விளக்கினார். இன்று பண்டிதரின் பார்வையில் மாரியம்மன் புதுப்பொலிவைப் பெறுகிறார்.

ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய கண்டத்தில் இருந்த நாடு புந்நாடு. அந்நாட்டை ஆண்டுவந்த சாக்கிய  மன்னன் சுந்திரவாகு. அவருக்கு பிறந்த அழகிய பெண்குழந்தைக்கு அம்பிகாதேவி என்று பெயரிட்டு வளர்த்தார். அம்பிகாதேவி தனது ஏழாம் வயதிற்குள் பௌத்தம் கொடுத்த தமிழ் மொழியிலும் அதன் அட்சரங்களையும் கற்று தேர்ந்தார். அக்காலத்தில் இத்தேசமெங்கும் பௌத்தம் செழித்திருந்தது. பௌத்த மன்னன் சுந்திரவாகுவின் அருமைப் புதல்வியாம் அம்பிகைதேவியும் புத்தமார்க்கத்தில் ஆர்வம்கொண்டு வளர்ந்தார். அன்றைய காலத்தில் இருந்த வழக்கத்தின்படி அம்பிகாதேவியின் பதின்மூன்றாம் வயதில் அவருக்கு திருமணம்செய்ய முடிவு செய்தார் தந்தை சுந்திரவாகு.இதையறிந்த அம்பிகாதேவி தந்தை சுந்திரவாகுவிடம் சென்று “தந்தையே நான் நம் குலக்குருவாம் புத்தரின் வழியில் சென்று மக்களுக்கு அறம் கூறி நல்வழிக்காட்டி பணி செய்யவிரும்புகிறேன். 

எனவே புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட பிக்குணிகள் சங்கமென்னும் பெண் துறவிகளின் ஞானசங்கத்தில் சேரவிரும்புகிறேன்.தாங்கள் அதற்கு தடைசெய்யாமல் உத்திரவளிக்க வேண்டுகிறேன்” என்றார். தன் அன்புக்குரிய மகள் இல்லறம் வேண்டாமல் துறவறம் தேடிப்போவதைக் கேட்டறிந்த சுந்திரவாகு மனம் கலங்கி நின்றாலும் ஞானத்தின் பாதையை தேர்வு செய்த தன் மகளை நினைத்து தேறுதலடந்தார். இருந்தும் அவர் ஓர் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருந்தது. அதாவது, பிக்குணி சங்கத்தில் சேரும் பெண் பேதையாக இருக்கவேண்டும் அல்லது இல்லறவாழ்வில் சிலகாலம் இருந்திருக்கவேண்டும் என்பதே சங்கத்தின் விதி. இங்கே அம்பிகாதேவியோ பேதைப் பருவத்தைக் கடந்தவர். திருமணமாகாத கன்னிப் பெண். இப்பிரச்சனையை சொல்லியபிறகும் தான் துறவு போவதில் மாற்றுக் கருத்திலை என்று பிடிவாதமாகவே சொல்லி விட்டார் அம்பிகாதேவி. மன்னன் சுந்தரவாகுவுக்கோ என்ன செய்வதென்றக் குழப்பம். இதைப்பற்றி ஆராய அவர் அமைச்சர் பெருமக்களை அழைத்து ஆலோசனைக்கேட்டார். அவர்கள் ஆலோசித்து முடிவாக ஒருவழியை தீர்வாகச் சொன்னார்கள். அதன்படி அம்பிகாதேவியின் கழுத்தில் தாய்மாமனால் ஓர் பொட்டு (தாலி)க்கட்டி அறஹத்துக்கள் என்றழைக்கப்பட்ட சங்கத்தின் குருக்களுக்கு அறிவித்துவிட்டு பெண்களுக்கான சங்கத்தில் சேர்த்துவிடவேண்டும். இதுவே விதியென்று கூறினார்கள் அமைச்சர்பெருமக்கள்.

 உடனடியாக அம்பிகாதேவியின் தாய்மாமனான கந்தருவத்தனை வரவழைத்து நடந்தவற்றையும் நடக்கவேண்டியவற்றையும் தெளிவுபடக்கூறினார் மன்னன் சுந்தரவாகு. அனைத்தையும் அறிந்து உணர்ந்துகொண்ட கந்தருவத்தன் தன் கரங்களால் அம்பிகா தேவியின் கழுத்தில் பொன்னினால் ஆன தாலியைக்கட்டினார்.பின் புத்தப்பெரியார்களின் உத்திரவுப் பெற்று புத்தம் வளர்த்த பிக்குணிகளின்  சங்கத்தில் சேர்ந்தார் அம்பிகாதேதி.
புத்தம் போதித்து அறப்பணிச் செய்ய சங்கத்தில் சேர்ந்த அம்பிகாதேவி, வேம்பு மரத்தடியில் அமர்ந்து  புத்தத்திருமறையாம் திரிபிடகங்களை, பெரியவர்,சிறியவர் என எல்லாத்தரப்பினரும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் போதித்து வந்தார். பிடகத்தை போதித்தமையால் பிடகக்காரி என்று அழைக்கப்பாட்டார்.இதுவே மக்களிடம் கிடைத்த முதல் பட்டப்பெயராகும். பிடகக்காரி என்பதே பிடாறி என்று திரிந்தது. 

 வேம்பு மரநிழலில் அமர்ந்து அம்பிகாதேவி என்னும் பிடாறியம்மன் அறத்தையும் பிரச்சனைகளுக்குத் தீர்வையும், நோய்நாடிகளுக்கு மருந்தையும் அளித்துவந்தார். இதனால் அவர் வேம்படியாள் என்றும் அழைக்கப்பட்டார். அதேவேளை, அம்பிகாதேவி வெறும் நிழலுக்காகமட்டும் வேம்புமரத்தினை தேர்வு செய்தார் என்று கருதமுடியவில்லை. இன்றைய அறிவியல் வேம்புவை முக்கியமான மருத்துவ தாவரமாக கருதுகிறது. எனவே வேம்புவின் குணமறிந்துதான் அம்பிகா தேவி வேம்புவைத் தேர்வு செய்திருக்க வேண்டும். மேலும் வேம்புவுக்கும் அம்பிகாதேவிக்கும் இன்றளவும் ஓர் தொடர்பு இருப்பதை மக்களின் வழிபாட்டின் மூலம் காணலாம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒரு நோயாகும்.

 இன்றைக்கு அம்மை என்று அழைக்கப்படும் நோய்தான் அந்நோயாகும்.அம்பிகாதேவி தம்மப்பணியில் இருந்தகாலத்தில், நாகைநாடு என்ற பிரதேசத்தில் மழை குன்றி, வெக்கை மிகுந்ததால் சாமளை என்னும் நச்சுக்கிருமிகளின் தாக்குதல் வலுவடைந்திருந்தது. அதன் காரணமாக வைசூரி என்னும் மாறி நோய் பரவி, மக்களும் விலங்குகளும் துன்புற்றுவந்தனர். அம்பிகாதேவியின் அருமையறிந்த மக்கள் திரண்டுவந்து வேம்படியில் இருந்த அவரிடம் வந்து வணங்கி, தங்களின் துன்பத்தைச் சொல்லி நின்றனர். அனைத்தையும் கேட்டறிந்து தியானித்த அம்பிகாதேவி “மக்களிடம் அன்பும் அறமும் குறைந்து, வஞ்சகம், பொறாமை, பேராசை, கெட்டப்புத்தி ஆகியவை மிகும்போது துன்பம் உண்டாகிறது.மழைக்குன்றி வெப்பம் மிகும்போது வைசூரி என்னும் மாறி நோய் பரவி உயிர்களை பலிக்கொள்ளுகிறது” என்றார். மேலும் அம்பிகாதேவி மக்களை நோக்கி “உங்கள் உள்ளங்களில் உள்ள கள்ளங்களை அகற்றி மனத்தைச் சுத்தஞ்செய்வதுடன் வீதிகளையும் வீடுகளையும் சுத்தஞ்செய்து வாசனைமருத்துவ மரமான மட்டிப்பால் வர்த்தி புகை,கற்பூரப் புகைகளை வீடுகள் முழுவதும் கமழச்செய்து, வேப்பிலைத் தோரணத்தை வாசலில் கட்டி,கூறைகளிலும் வேப்பிலையை சொருகி,தானியங்களை உப்பிடாமல் அவித்து மக்களுக்கு தானங்கொடுப்பதுடன், பச்சரிசிமாவும் கூழும் தானமளிப்பீர்களேயானால் இதன் மூலம் மனச்சுத்தத்தாலும் தேசச்சுத்தத்தாலும் வேப்பிலை மணத்தாலும்,கற்பூரப் புகையாலும்,அவுரிப்புகையாலும் சாமளைப் புழுக்கள் அகன்று மாறியென்னும் கொடிய நோய் அகன்று குணம் அடைவீர்கள்” என்று தீர்வு சொன்னார். அம்பிகா தேவியின் சொல்படி நாகைநாட்டு மக்கள் மனச்சுத்தம், தேசச் சுத்தம் செய்து அன்பையும் தானகுணத்தையும் பெருக்கி நோய் நீங்கி துயர் நீங்கி உள்ளம் குளிர்ந்தனர். மாறி என்னும் நோயை தீர்க்கவழி சொன்னதால் அம்பிகாதேவி அன்றுமுதல் மாறியை ஆற்றியவள் என்று மக்களால் புகழப்பட்டார். மாறியை ஆற்றியவள் என்பது மாறியாற்றாள் என்று திரிந்து பின் அதுவே மாரியாத்தாள் என்று ஆனது.

மக்களிடம் மட்டுமல்லாமல் அரசர்களும் அம்பிகாதேவியிடம் வந்து அறவுரையையும் அறிவுரையையும் கேட்டு அவர் சொல்வழியில் நடந்து மகிழ்வுற்றனர். இவ்வாறு மக்களை நல்வழிப்படுத்தி தம்மப் பணிசெய்த சாக்கியக்குலத்தலைவி அம்பிகாதேவி, அரசர்களையும் குடிமக்களையும் வேம்படிக்கு வரவழைத்து “திரிபிடக வாக்கியங்களாகும் திரிசீலமே தத்துவம், திரிசீலமே சத்தியம்,திரிசீலமே உத்தமம். அதுவே உங்களைக் காக்கும் தெய்வம் என்று கூறி, கொல்லா நோன்பு,குறளா நோன்பு,கள்ளா நோன்பு ஆகிய திரிநோன்புகளையும் மனத்தில் பதித்து, வாக்கு,மனம்,தேகம் ஆகியவற்றைக்காக்கும் திரிவிரதங்களையும் ஓதி தான் பரி நிருவானம்(இறப்பு) அடையும் நாளையும் அறிவித்தார். 

அதன்படி ஆடிமாதம் பதினெட்டாம் நாள், பௌர்ணமி தினத்தில் வேப்பமரத்தடியில் புத்தரின் தியான வடிவாமான பத்மாசணத்தில் அமர்ந்து கண்கள் மூடி தியாண அமைதியுடன் பரி நிர்வாணமடைந்தார். அதனைக்கண்ட அரசர்களும் குடிமக்களும் பதறிக்கண்ணீரைத்தாரைத் தாரையாகவடித்து தலைக்குமேல் இருகரம் கூப்பி “வாலாம்பிகையே, அறமுதற்செல்வியே, ஆதி தேவியே, எங்கள் ஆயியே, உள்ளக்குறையகற்றும் சீலியே,பச்சைப்பருவ பகவதியே, உன் பரி நிருவாணம் கண்டு நிலைக்குலைந்தோமே! இனி எவரால் அறவுரைக்கேட்டு மகிழ்வோம்? ஆபத்துகாலத்தில் யாரை நாடி நிற்போம்?” என்று கதறினார்கள்.

வடபாரதத்தில் சாக்கா அல்லது சாக்கியரென்றும் தென்பரதத்தில் வள்ளுவரென்றும் அழைக்கப்பட்ட கர்மஞானம் கொண்ட குருக்களும், அரசர்களும் மக்களும் குடும்பத்தோடு வந்து அவ்வை என்னும் அம்பிகா தேவியின் உடலை தகனம் செய்து சாம்பலை காவிரிநீரில் விடுத்து நீராடி, தங்களிடங்களுக்குச் சென்று அன்னதானங்களுக்கான உணவுப் பொருட்களை சேகரித்து, அம்மன் பரி நிருவணமடைந்த வேப்பமரத்தடியில் வந்து, பொங்கல் வைத்து எல்லோர் சோற்றையும் ஓர் போராகக் குவித்து எல்லாமக்களுக்கும் வயிறு நிரம்ப சோறளித்தனர். அன்றுமுதல் ஆடி மாதத்தை அம்மனை மனம் உருகி வணங்கும் மாதமாக மக்கள் கடைப்பிடிக்கிறார்கள். அம்மன் பரி நிருவாணமடைந்த ஆடி பதினெட்டாம் நாளை பெரு நாளாகக் கொண்டாடுகிறார்கள். பௌத்தத் தலைவியான அம்பிகா தேவியெனும் மாரியாத்தாளை பூர்வ பௌத்தக் குடிகளான சேரிமக்கள் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.



#தமிழ்ப்பெளத்தம்

நினைவில் நிற்கும் ஆசிரியப் பெருமக்கள்.

ஸ்டாலின் தி  1 எங்கள் ஊர் டேனிஷ் மிஷன் பள்ளிதான் இறையூர், பெண்ணாடம் அம்பேத்கர் நகர் ஆகியபகுதியினருக்கும் அப்போது பள்ளியாக இருந்தது. இதில் பண...